எஸ்.ஏ.எம். றிஸ்வி (SLEAS)பிரதிக்கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்விப் பணிமனை, மாகோ
இன்றைய உலகம் 5.0 கைத்தொழில் புரட்சியின் (industry 5.0 revolution) புதுமைகளின் மாற்றங்களோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் Global citizen ஆகவும், சமூகம் Online community ஆகவும் மாறியிருக்கிறது. இன்று வளரும் பரம்பரை Alpha Gen கடந்து Beta Gen என தற்போது அறிமுகமாயிருக்கிறது. அவர்களது நடத்தைகளும் இயல்புகளும் வித்தியாசமானவை. இன்றைய உலகம் phygital world என அழைக்கப்படுகிறது. 5.0 கைத்தொழில் புரட்சியின் விளைவால் Artificial intelligence (AI செயற்கை நுண்ணறிவு) என்பது இன்று அனைத்து துறையிலும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மாறியிருக்கிறது.
இதன் விளைவாக உலகம் அனைத்து துறைகளிலும் பெருந்தரவுத் தொகுதிகளை (Big Data) மையப்படுத்தி Human- robotic Combination இணைந்து இயங்க துவங்கியிருக்கிறது. இவ்வாறான தொழிநுட்ப வளர்ச்சி ஒரு புறம் சாதகமான நிலையினை ஏற்படுத்தும் அதே வேளையில் மறுபுறம் மனித குலத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவருகிறது.
அவுஸ்திரேலிய நாட்டின் நீரிழிவு நோய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் போல் ஸிம்மிட் (paul zimmet professor of Monash university)உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் நீரிழிவு நோயின் காரணமாக தற்போது வாழும் பரம்பரை தமது பெற்றோருக்கு முன்னால் இறந்து மடியும் (This is the first generation where children may die before their parents) அபாய நிலையினை எதிர்கொள்ளும் என அவரது ஆய்வில் அடையாளப்படுத்தியிருக்கிறார். இது இன்றைய வளரும் பிள்ளைகளின் ஆரோக்கியம் ஆயுள் தொடர்பில் பெரும் அவதானத்துக்குரிய விடயமாகும்.
எனவே இவ்வாறான பின்னணியுடன் எமது வளரும் பிள்ளைகள் மாணவ பரம்பரையின் உடலாரோக்கியம் உள ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது பெரும் ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஆய்வின் முடிவுகள் எமது அவதானத்துக்குரியது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) குடும்ப சுகாதார பணியகம் மற்றும் கல்வி அமைச்சின் இணை முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட Global School-based Student Health Survey – 2024 (GSHS 2024) அறிக்கை, இந்த துறையில் முக்கியமான புள்ளிவிவரங்களையும், சவால்களையும் வெளிக்கொணர்கிறது.
இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களின் உடல்நிலை, மனநிலை, உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் விழிப்புணர்வு, சமூக ஊடக பயன்பாடு மற்றும் பெற்றோர் பங்கேற்பு போன்ற பல துறைகளை ஆராய்வதாகும். இந்த ஆய்விற்கான மாதிரிகளாக 40 அரச பாடசாலைகளிலிருந்து 2,912 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் 2,585 மாணவர்களின் தரவுகள் ஆய்வுக்குப் பயன்பட்டன. இந்த ஆய்வில் முக்கிய விடயங்கள் தொடர்பில் எமது அவதானத்திற்கு கொண்டுவருவது நாளைய எமது வளரும் பரம்பையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ அறிக்கை 2023 இன் (2024) பிரகாரம் இலங்கையில் உள்ள 10,096 அரச பாடசாலைகளில் 3,882, 688 மாணவர்கள் கற்வி கற்று வருகின்றனர். எனவே இவர்களது ஆரோக்கியம் உடல் நிலை என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அனைவரினதும் தலையாய கடமையாகும். இலங்கை மக்கள்தொகையான 2.14 கோடியில், சுமார் ஐந்தில் ஒரு பகுதி (33 இலட்சம்) 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மையவயது (adolescent) வயதினரைக் கொண்டுள்ளனர் (இலங்கை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம், 2015). இவர்களில் 71% பாடசாலைக்கு செல்வோராக காணப்படுகின்றனர்.
இலங்கையின் அரசு மருத்துவமனைகளில் பதிவாகும் மொத்த இறப்புகளில் சுமார் பாதி தொற்றா நோய்கள், நீண்டகால நோய்கள் (NCDs) மூலம் ஏற்படுபவை. இதய நோய்கள், புற்றுநோய், நுரையீரல் நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை இதில் பிரதானமானவை. குறிப்பாக, இரத்த ஓட்டக் குறைபாடு காரணமான இதய நோய் இறப்புகளில் 15.3% ஆகவும், புற்றுநோய் 12.3% ஆகவும், மூளைத்துடிப்புக் குறைபாடு 8.5% ஆகவும், இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் 1.2% ஆகவும், நீரிழிவு நோய் 1.4% ஆகவும் பதிவாகியுள்ளது. ஒன்றரை வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தவிர, அனைத்துவயதினரிடையே காயமடைதல் (traumatic injuries) என்பது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கான முதன்மை காரணமாக அமைகிறது. எனவே இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கு அவற்றை தடுப்பதற்கு பாடசாலை காலத்திலேயே மாணவர்கள் அறிவூட்டப்பட வேண்டும். பாடசாலை இதற்கான ஒழுங்குகளை சரியாக மேற்கொண்டால் எதிர்காலத்தில் இவ்வாறான ஆபத்துக்களை விட்டு இளம் சமூகத்தை பாதுகாக்க முடியும். அந்த வகையில் GSHS 2024 ஆய்வில் சொல்லப்பட்ட சில விடயங்கள் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
உணவு பாதுகாப்பும் ஊட்டச்சத்து குறைபாடும்
(Food security Malnutrition)
பாடசாலைக்குச் செல்லும் தரம் 8–13 வரைக்குட்பட்ட ஆய்விற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் உணவு பெறுவதற்கு வசதியின்மையினால் 4.3 வீதமான மாணவர்கள் தொடராக அல்லது விட்டுவிட்டு உணவின்றி (பசியான நிலையில்) பாடசாலைக்கு சமுகமளிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு இந்நிலை 3.1% என்ற நிலையில் இருந்து 2024 இல் அதிகரித்த நிலை காணப்படுகிறது. 13–15 வயதுக்குட்பட்ட ஆண் மாணவர்களிடமே உணவு உண்ணாத, உணவை பெறுவதற்கு வசதியற்ற நிலை அதிகரித்துக் காணப்படுகிறது.
4.3 வீதமான மாணவர்கள்
தொடராக அல்லது விட்டுவிட்டு உணவின்றி (பசியான நிலையில்) பாடசாலைக்கு சமுகமளிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு இந்நிலை 3.1% என்ற நிலையில் இருந்து 2024 இல் அதிகரித்த நிலை
காணப்படுகிறது.
இதன் காரணமாக மாணவர்களின் வயதிற்கேற்ப காணப்பட வேண்டிய உடல் திணிவுச்சுட்டியில் (BMI) மாற்றங்கள் காணப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 21.4% மாணவர்கள் குறைந்த உடல் எடையுடன் (underweight)இருந்தனர், மேலும் 12.1% அதிக உடல் நிறையுடன் (overweight) இருந்தனர். இதில் 3% மாணவர்கள் அதீத உடற் பருமனுடன் இருந்தனர். ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளை விட அதிக அளவில் குறைந்த எடையுடன் காணப்பட்டனர். இதற்கு காரணமாக மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக ஆய்வுக்குட்பட்ட காலத்தில், 24.9% மாணவர்கள் கடந்த வாரத்தில் ஒரு பழமேனும் சாப்பிடவில்லை. 3.1% மாணவர்கள் காய்கறி சாப்பிடவில்லை. அத்தோடு, 28% மாணவர்கள் தினமும் சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 40.9% மாணவர்கள் அதிக சர்க்கரை உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொண்டனர். 70.4 வீதமான மாணவர்கள் உணவகங்களில், வீதியோரக்கடைகளில் உணவை எடுத்து வருகின்றனர். 1.8 வீதமான பிள்ளைகள் உணவின்மை காரணமாக காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை, மாணவர்களின் ஆரோக்கியம் உட்பட கல்வி நடவடிக்கைகளிலும் பெரும் தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உடற்பயிற்சி மற்றும் செயலிழப்பு
(Physical inactivity)
மாணவர்களின் உடல், உள வளர்ச்சிக்கு தேவையான வயதிற்கு ஏற்றாற் போல உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை அவர்களது ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருப்பதை மேற்படி ஆய்வின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 88.1% மாணவர்கள் பரிந்துரைக்கப்படும் தினசரி 60 நிமிட உடற்பயிற்சியைச் செய்திருக்கவில்லை.
பெண்கள் 90.5% உடற்பயிற்சிகளில் ஈடுபடவில்லை. 22.5 வீத மாணவர்கள் மாத்திரமே வாரத்தில் இரண்டு தடவை அல்லது மூன்று தடவை மேற்படி உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். 2016ஆம் ஆண்டில் 69.4% ஆக இருந்த நிலையில், வாரந்தோறும் உடற்கல்வி வகுப்புகளில் பங்கேற்பது 2024ஆம் ஆண்டில் 50.6%ஆக குறைந்துள்ளது. இளைய மாணவர்கள் (13–15 வயதினர்கள்) 54.6% என்ற உயர்ந்த பங்கேற்பை காட்டினாலும், வயது அதிகமான மாணவர்கள் (16–17 வயதினர்கள்) 39.8% மட்டுமே பங்கேற்றனர். இது ஒன்பதாம் தரத்திற்கு பிந்தைய காலத்தில் கட்டாய உடற்கல்வி வகுப்புகள் நிறுத்தப்படுவதால் ஏற்பட்டதாகும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 43.9% மாணவர்கள் தினமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் அமர்ந்த நிலையிலேயே இருக்கின்றனர். மொத்த மாணவர்களில் 43.9% பேர் (பாடசாலை நேரம், வீட்டு வேலை மற்றும் தூக்க நேரத்தைத் தவிர்த்து) தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேல் அமர்ந்தோ அல்லது படுத்த நிலையிலேயோ இருக்கின்றனர். இதில் 16–17 வயதுடைய மாணவர்கள் 56.8% என மிக அதிக அளவில் அமர்ந்த நிலையிலிருந்துள்ளனர், 13–15 வயதுடைய மாணவர்கள் 39.2% மட்டுமே sedentary நிலையில் இருந்தனர் மேலும், மாணவர்களில் 88.7% பேர் தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரத்தியேக வகுப்புகளில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது வயதான மாணவர்கள் (93.6%) மத்தியில் சிறிய வயதினரை (86.7%) விட முக்கியமான நிலைமையாகக் காணப்படுகிறது.
கை வாய் சுகாதார தூய்மை
பழக்கவழக்கங்கள் (Hygiene and Oral health practices)
இந்த ஆய்வு, உணவு உண்பதற்கு முன்னர் கைச்சுத்தம் மற்றும் வாய்ச் சுத்தம் தொடர்பான பழக்கங்களை வெளிக்கொணர்கிறது. ஆய்வுக்குட்பட்ட கடந்த 30 நாட்களில் பாடசாலையில் சாப்பிடும் முன் ஒருபோதும் கைகளைக் கழுவவில்லை என 10.1% மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கைகளை சுத்தம் செய்தவர்கள் மத்தியில் 68.9% மட்டுமே ஓடும் நீரை பயன்படுத்தியுள்ளனர், இது சரியான தூய்மையான பழக்கங்களில் குறைபாடுகளை காட்டுகிறது. மேலும் கவலைக்கிடமான விஷயமாக, 5.9% மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு ஒருபோதும் கைகளைச் சுத்தம் செய்வதில்லை என தெரிவித்துள்ளனர்; இது 2016 இல் பதிவான 2.7% அளவைவிட இருமடங்கு அதிகம். கூடுதலாக, 4.3% மாணவர்கள் தங்கள் பாடசாலைகளில் கழிப்பறைகள் இல்லையென தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 நாட்களில்
பாடசாலையில் சாப்பிடும் முன் ஒருபோதும்
கைகளைக் கழுவவில்லை என 10.1% மாணவர்கள்
தெரிவித்துள்ளனர்.
மாணவர்களில் 95% பேர் தினமும் குறைந்தது ஒருமுறையாவது பல் துலக்குவதாகக் கூறினாலும், பரிந்துரைக்கப்பட்ட இருமுறை துலக்கும் பழக்கத்தை 47.8% மட்டுமே பின்பற்றுகிறார்கள். பல் துலக்கும் மாணவர்களில் 66.1% பேர் மட்டும் பளபளப்பான பல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது எனக் கருதப்படும் fluoride பற்பசை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
வாய்ச் சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக 6.6% மாணவர்கள் பாடசாலைக்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர், இதில் ஆண்கள் (7.6%) பெண்களை (5.6%) விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில், குறைந்தது ஒருமுறை தினமும் பல் துலக்கிய மாணவர்களின் விகிதம் சற்று அதிகமாக (97%) இருந்தது.
உளநல நெருக்கீடுகள் மற்றும்
உளவியல் சவால்கள் (Mental health)
வயதிற்கு ஏற்றாற்போல் நண்பர்கள் இல்லாத மாணவர்களின் சதவிகிதம் 2016ஆம் ஆண்டில் 5.6% இலிருந்து, 2024ஆம் ஆண்டில் 7.5% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் தனிமை உணர்ந்த மாணவர்கள் 2016 இல் 9% இருந்த நிலையில், 2024இல் தனிமையில் இது 22.4% ஆக உயர்ந்துள்ளது. உள நெருக்கீடுகள் மனச்சோர்வின் காரணமாக தூங்க முடியாத நிலைமை 11.9% மாணவர்களிடம் காணப்படுகிறது. இது 2016 இல் இருந்த 4.6% அளவுடன் ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது. மேலும், 18% மாணவர்கள் மனச்சோர்வு குறித்த அறிகுறிகளை (Depressive symptoms) தெரிவித்துள்ளனர். இதில், 16–17 வயதுப் பிரிவில் அதிகமானோர் (26.3%) பாதிக்கப்பட்டுள்ளனர்.
துன்புறுத்தல் மற்றும் தற்கொலை சிந்தனை முயற்சி
(Bullying, Suicidal ideation and attempts)
கடந்த 12 மாதங்களில் பாடசாலை வளாகத்திற்குள் 18.9% மாணவர்கள் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர், பாடசாலை சூழலுக்கு வெளியே 8.8% மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 21.9% மாணவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். தற்கொலை சிந்தனை (Suicidal ideation) மற்றும் முயற்சிகள் தற்கொலை குறித்து சிந்தித்த மாணவர்களின் சதவிகிதம் 2016 இல் 9.4% இருந்து, 2024 இல் 15.4% ஆக உயர்வடைந்துள்ளது. தற்கொலை முயற்சி செய்தவர்கள் 6.8% இருந்து 9.1% ஆக உயர்ந்துள்ளனர்.
பெண்கள் 17.1% என்ற அளவில் தற்கொலை சிந்தனையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர், இது ஆண்களை விட (13.6%) குறிப்பிடத்தக்களவு உயர்வாக உள்ளது.16–17 வயதுப் பிரிவில் உள்ள மாணவர்கள் 20.7% ஆக தற்கொலை சிந்தனையில் தூண்டப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர், இது 13–15 வயதுப் பிரிவில் உள்ளவர்களின் 13.4% என்ற அளவுடன் ஒப்பிட்டால் மிக அதிகமாக உள்ளது. மாணவர்கள் (36.2%) தீவிர மன அழுத்தம் மற்றும் உளவியல் நெருக்கடிகளுக்கு உட்பட்டுள்ள நிலையிலும் சரியான உள ஆற்றுப்படுத்தல் சேவைகளைப் பெறாத நிலை காணப்படுகிறது.
போதைப் பொருள் மற்றும்
புகையிலை பாவனை
2016- ஆம் ஆண்டில் 6.4% இருந்த சிகரெட் புகைத்துப் பார்த்த மாணவர்கள் வீதம், 2024- இல் இருமடங்காக 12.8% அதிகரித்துள்ளது. ஆண்கள் (21.3%) சிகரெட் புகைத்த பங்கு பெண்களுடன் (5.1%) ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. சிகரெட் புகைத்துப் பார்த்த மாணவர்களில் 34.7% பேர் 14 வயதுக்கு முன்னே புகைத்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மின்னணு சிகரெட் (e-–cigarette) பாவிப்பதாக 5% மாணவர்கள் கூறியுள்ளனர். 7.3% மாணவர்கள் புகையில்லா புகைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 5% மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியுள்ளனர். 5.3% மாணவர்கள் கடந்த 30 நாட்களில் மதுபானம் அருந்தியுள்ளனர். 3.1% மாணவர்கள் கஞ்சா போன்ற போதை மருந்துகளை பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய பழக்கங்கள், மாணவர்களின் கல்வி, உடல்நலம், சமூக உறவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கையை மிகப்பெருமளவில் பாதிக்கக் கூடியவை.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் இணையவழி பாலியல்
வன்முறைகள் (Sexual harassment and dating violence)
23.8 வீதமான மாணவர்கள் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாலியல் துன்புறுத்தலும் காதல் தொடர்பான வன்முறையும் குறித்து பதிலளித்த மாணவர்களில் 6.1% பேர் வேண்டாத (unwanted) பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் (7.5%) பெண்களை (4.7%) விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 10.1% பேர் காதல் தொடர்பான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் ஆண்கள் (12.7%) மற்றும் இளைய மாணவர்கள் (11.8%) பெண்கள் (7.5%) மற்றும் மூத்த வயதினர் (6.5%) ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இணையம் மூலம் பாலியல் துன்புறுத்தல் – மாணவர்களில் 6.9% பேர் இந்த வகையான துன்புறுத்தலை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் தளங்களுடன் தொடர்புடைய ஆபத்துகள் அதிகரித்திருக்கிறது. இதில் ஆண்கள் (9.2%) பெண்களை (4.7%) விடவும், இளைய வயது மாணவர்கள் (7.3%) மூத்தவர்களை (6%) விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 47.9% மாணவர்கள் ஆசிரியர்களால் உடல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் (59.3%) பெண்களை (37%) விட முக்கியமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசி மற்றும்
சமூக ஊடக பயன்பாடு
கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது இணைய தொடர்பு மற்றும் இணைய உலாவலுக்காக தினமும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதாக 28.4% மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் (31.3%) பெண்களை (25.5%) விட அதிகமாக பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. 16–17 வயதுடைய மாணவர்கள் (40.6%) 13–15 வயதுடையவர்களை (23.3%) விட அதிகமாக பயன்படுத்துகிறார்கள் ஆனால், 74.7% மாணவர்கள், சமூக ஊடக பயன்பாட்டிற்கு பெற்றோர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று கூறியுள்ளனர். இதில் பெண்கள் (76.9%) ஆண்களை (72.4%) விட குறுகிய அளவில் அதிக கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் இளைய மாணவர்கள் (75.3%) 16–17 வயது மாணவர்களை (73.1%) விட அதிகமாக பெற்றோர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
எனவே மேற்படி ஆய்வின் முடிவுகளை வைத்து நோக்குகையில் எமது பாடசாலைகளில் மாணவர்களின் உடல் உள ரீதியான ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாயிருப்பது அவதானத்துக்குரிய விடயமாகும். மேற்படி புள்ளி விபரங்களின் வெளிப்பாடுகள் எமது பாடசாலை மாணவர்களிலும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது. எனவே அதிபர் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலையின் ஏனைய பங்காளிகள் இது குறித்து சிந்திப்பதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறே பாடசாலையின் கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் பாடசாலையின் முறைசாராக் கலைத்திட்டங்களின் ஊடாக மாணவர்களின் உளரீதியான விருத்திக்கான பங்களிப்புக்களை அதிகம் மேற்கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இது குறித்து கல்விச் சமூகம் விரிவான கலந்துரையாடல்கள் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியது இன்றியாமையாது என்பது எனது அபிப்பிராயம்.- Vidivelli