எம்.ஐ.அப்துல் நஸார்
காஸாவின் தெற்கு நகரமான ரபாவை துண்டித்து, அப் பிரதேசத்தை பல பகுதிகளாகப் பிரிக்கும் மற்றுமொரு இராணுவ நடவடிக்கையினை பூர்த்தி செய்துள்ளதாக இஸ்ரேல் கடந்த வார இறுதியில் அறிவித்தது.
காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, குண்டுவீச்சுகள் தொடரும் அதே வேளை, காசாவின் 2.3 மில்லியன் மக்களில் அதிகமானோர் எப்போதும் மிகவும் சனநெரிசலுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியதாகக் தெரிவித்தார்.
ரபா மற்றும் கான் யூனிஸ் இடையே காஸாவைக் கடக்கும் மொராக் பகுதியை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தற்போது கையகப்படுத்தியுள்ளது, இது பிலடெல்பியா மற்றும் மொராக்கிற்கும் இடையிலான முழுப் பகுதியையும் இஸ்ரேலிய பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறது’ என்று காட்ஸ் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவில் ‘காசா சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மாறும், மேலும் அதன் குடியிருப்பாளர்களில் அதிகமானோர் சண்டை நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார். யுத்தத்தை நிறுத்துவதற்கு ஹமாஸை அகற்ற வேண்டும்’ என பாலஸ்தீனர்களை அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய அரசாங்கம் அதன் தாக்குதலை தீவிரப்படுத்தவும், காஸாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றவும் உறுதிபூண்டுள்ளதாக பல நாடுகளால் பயங்கரவாதக் குழுவாக பெயரிடப்பட்டுள்ள ஹமாஸ், மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்கவும், அவர்களில் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் புதிய போர்நிறுத்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவும் அழுத்தம் கொடுத்துள்ளது.
பாதிக்கப்படும் பொதுமக்கள்
மீண்டும், காஸாவின் பொதுமக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தத்திற்கு முன்னர், காஸாவின் தென் பகுதியிலுள்ள ரபா ஆளுநர் பிரதேசத்தில் சுமார் 200,000 பேர் வசித்து வந்தனர்.
ஜனவரி மாதம் தற்காலிக யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் அப்துல் ரஹ்மான் தாஹா ரபாவில் உள்ள தனது பகுதிக்குத் திரும்பியபோது, ‘வீட்டின் ஒரு சிறிய பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டார்’ அந்தக் குடும்பம் அவர்களின் முந்தைய வீட்டின் இடிபாடுகளுக்குள் தங்கியிருந்தது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில், இஸ்ரேலிய இராணுவம் குடியிருப்பாளர்களுக்கு இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்தது, மேலும் தாஹாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ரபா கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த வீடுகளே எஞ்சியுள்ளன. தெருக்கள் ஏற்கனவே இடிந்து போயுள்ளன, அவை மீண்டும் கட்டப்பட வேண்டும். தற்போது அவர்கள் தேவை முடிந்த பின்னர் மீதமுள்ளவற்றை அழிக்கப் போகிறார்கள்,’ என்று தாஹா கூறினார், அவர் தற்போது கான் யூனிஸில் ஒரு கூடாரத்தில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வசித்து வருகிறார்.
மார்ச் மாத ஆரம்பத்தில் யுத்த நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்ததன் பின்னர், இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவிற்கு எரிபொருள், உணவு, வர்த்தக மற்றும் மனிதாபிமான விநியோகங்களை நிறுத்தியது. ‘யுத்தம் ஆரம்பமானதிலிருந்து 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மனிதாபிமான நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கலாம்’ என்று ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று எச்சரித்தது.
‘யுத்தம் முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைத்தோம் ஆனால், அது பழிவாங்கலுடன் மீள ஆரம்பமாகியுள்ளது, 24 மணி நேரமும் இடைவிடாமல் இரத்தம் சிந்தப்படுகின்றது,’ என் அபூ தாஹா தெரிவித்தார். ‘ தொடர்ந்தும் குழப்ப நிலை காணப்படுகின்றது. உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மோசமடையத் தொடங்குகிறது. இது ஒரு பயங்கரமான உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.’ எனவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய இராணுவம் தாக்கும்போது பாலஸ்தீன மக்கள் ரபாவிலிருந்து கான் யூனிஸுக்கு ஓடினார்கள்.
51 வயதான பாலஸ்தீனர் ஒருவர் தனது சொந்த ஊர் தற்போது ஒரு ‘பாதுகாப்பு சூனிய வலயத்தின்’ ஒரு பகுதியாக மாறிவிட்டதாக கவலைப்படுகிறார். புதிதாக உருவாக்கப்பட்ட மொராக் நுழைவுப் பிரதேசம், கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 12 கிலோமீட்டர் (7 மைல்) நீளமுள்ள ஒரு நில வழித்தடமாகும். இது கான் யூனிஸிலிருந்தும் ரபாவையும் அதன் அண்டை நாடான எகிப்துடனான எல்லைக் கடவையையும் துண்டிக்கிறது.
மொராக் என்பது 2005 இல் அகற்றப்பட்ட முந்தைய இஸ்ரேலிய குடியேற்றமொன்றின் பெயராகும். அதேபோல் மத்திய காஸாவில் உள்ள நெட்சாரிம் நுழைவுப் பிரதேசம், இது வடக்கு காசாவிலிருந்து தெற்குப் பகுதியைப் பிரிக்கிறது. சோதனைச் சாவடிகள் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையிலான மக்கள் நடமாட்டத்தினை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கட்டுப்படுத்துகிறது. யுத்த நிறுத்தத்தின் போது இராணுவம் இப்பகுதியை விட்டு வெளியேறியது, ஆனால் மார்ச் மாதத்தில் மீண்டும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எங்களை எமது வீடுகளுக்கு மீளத் திரும்புவதைத் தடுப்பதற்காக ‘மிரட்டவும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும்’ விரும்புகிறது என அபு தாஹா நம்புகிறார். இருப்பினும், ‘பிரச்சனை என்னவென்றால், காஸாவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது தெரியவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவில் அடுத்த நாளுக்கான எந்தத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை, மேலும் அதன் நகர்வுகளை ஹமாஸ் மீதான அதன் அதிகபட்ச அழுத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சித்தரித்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் நீண்டகால இராணுவக் கட்டுப்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்து வருவதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன. இஸ்ரேலுடனான காஸா எல்லைப் பகுதியை பல்வேறு பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம், ஏற்கனவே உள்ள சூனியப் பிரதேசத்தை விரிவுபடுத்துகின்றது.
மக்களின் புதிய இடம்பெயர்வு
அண்மைய தாக்குதலால் புதிதாக இடம்பெயர்ந்த சுமார் 400,000 பேரில் அபு தாஹாவும் ஒருவர் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UNOCHA) தெரிவித்துள்ளது. ஜனவரியில் யுத்த நிறுத்தத்தின் போது லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்ப முடிந்தாலும், தற்போது பலர் மேற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 70 வீதமான பிரதேசங்கள் ‘இடமாற்ற உத்தரவு’ அல்லது ‘தடைசெய்யப்பட்ட’ வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன, அங்கு மனிதாபிமான குழுக்கள் தங்கள் இயக்கங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என இஸ்ரேலிய அதிகாரிகள் கோருகின்றனர். இஸ்ரேலிய இராணுவம் பலமுறை இந்த வெளியேற்றங்கள் பொதுமக்களை தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது, மேலும் சிலர் பாலஸ்தீன போராளிகள் அண்மையில் இஸ்ரேலுக்குள் ரொக்கெட்டுகளை வீசிய பகுதிகளை குறிவைத்துள்ளனர்.
ஒரு திட்டத்தை வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கு சமம் என ஐ.நா. குறிப்பிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய ‘இடமாற்றத் திட்டம்’ தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் 2.3 மில்லியன் காஸா மக்களுள் ‘ஆர்வமுள்ள அனைவருக்கும்’ ஏனைய நாடுகளுக்கு ‘தன்னார்வ அடிப்படையில் செல்ல விரும்புபவர்களுக்கு’ அனுமதியளிக்கப்படும் என்று வார இறுதியில் மீண்டும் வலியுறுத்தினார்.
விரிவாக்கப்பட்ட சூனியப் பிரதேசம் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை உள்ளடக்கியுள்ளது.
பிரதேசத்தின் இடமாற்றம் மற்றும் பிரிப்புக்கு மேலதிகமாக, இஸ்ரேல் படிப்படியாக காஸாவின் உள்ளே ஏற்கனவே இருக்கும் சூனியப் பிரதேசத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வடக்கிலிருந்து கிழக்கில் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியில் எகிப்தின் தெற்கு எல்லை வரை நீண்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களின் சாட்சியங்களை சேகரிக்கும் ‘பிரேக்கிங் தி சைலன்ஸ்’ அமைப்பு கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் அவர்கள் சூனியப் பிரதேசத்தில் வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் விவசாய நிலங்களை முறையாக அழிப்பது என விவரிக்கின்றனர். அந்தப் பகுதிகள் தற்போது பெரும்பாலும் பாலஸ்தீனர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகக் காணப்படுகின்றது என அவர்கள் கூறுகிறார்கள்.
‘விவசாய நிலங்கள், கல்லறைகள், கைத்தொழில் பகுதிகள், வீடுகள் என அனைத்தையும் நாங்கள் இடித்தோம். அது எங்களுக்கு அதிக பாதுகாப்பைத் தரும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கருதுகின்றது. ஏனென்றால் ஹமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிஹாத் நெருங்கி வருவதை நாம் அவதானிக்க முடியும்,’ என பிரேக்கிங் தி சைலன்ஸ்- இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நடவ் வெய்மன் தெரிவித்தார்.
தற்போது சூனியப் பிரதேசத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலத்தின் பெரும்பகுதி முன்னர் விவசாய நிலமாக இருந்தவையாகும், இதன் காரணமாக நீண்டகால தாக்கமாக காஸா அதன் சொந்த உணவு உற்பத்தியில் சிலவற்றையாவது மீண்டும் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. பிரேக்கிங் தி சைலன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, சில பகுதிகளில் சூனியப் பிரதேசம் 2.5 கிலோமீட்டர் (1.6 மைல்) வரை அகலமாக உள்ளது, கிழக்கு காஸா நகரத்தில் உள்ள ஷெஜையா போன்ற நகர்ப்புற பகுதிகள் வரை செல்கின்றது..
‘எல்லைக்கு அருகிலுள்ள அனைத்து பகுதிகளும் – வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு – கைப்பற்றப்பட்டு பீரங்கி குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளன. காஸா பகுதிக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் வான்வழி குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளன. தப்பிக்க வழி இல்லை,’ என 43 வயதான பலஸ்தீன பெண்ணொருவர் மேற்கு காஸா நகரத்திலிருந்து தொலைபேசி மூலம் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தார். அங்கு அவரது குடும்பம் தற்போது உறவினர்களுடன் தங்கியுள்ளது.
‘சந்தையில் துப்புரவுப் பொருட்கள் இல்லை, குடிநீர் இல்லை, போதுமான உணவு இல்லை, எரிவாயு இல்லை, மேலும் சுகாதார நிலைமை மோசமாக உள்ளது’ என தனது குடும்பத்திற்கு அதிகரித்து வரும் கடினமான தினசரி போராட்டத்தை விளக்கினார்.
‘தற்போதைய காஸா முன்பு இருந்த காஸா அல்ல. எமது குழந்தைகளுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடனும் நாங்கள் உயிர்வாழ முயற்சிக்கிறோம்,’ என அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli