ராஜன் நசீர்தீன் நமடகஹவத்த,
கலேவெல.
ஜும்ஆ மஸ்ஜிதுகள், தக்கியாக்களில் கடமை புரியும் பேஷ் இமாம் முஅத்தின்களின் சேவைக்காக வழங்கப்படும் சம்பளமானது ஒவ்வொரு மஸ்ஜித்களுக்குமிடையில் வேறுபட்ட அளவுடையதாகவே இருக்கின்றது.இவ்வளவுதான் என நிர்ணயம் செய்யப்படாத நிலையில் இமாம்களும் முஅத்தின்களும் ஏதோ ஒரு தொகையை சம்பளமாக எடுத்துக் கொண்டு தமது கடமைகளை செய்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் சம்பளத் தொகை போதுமானதா? இச்சம்பளத்தில் நாம் திருப்தி அடைய முடியுமா? பொதுவாக 25 முதல் 40 ஆயிரம் ரூபா அளவிலேயே இமாம் முஅத்தின்களின் சம்பளம் இருக்கின்றது.(இச் சம்பளத்தொகை சில பள்ளிவாசல்களில் வேறு படலாம்.) இன்றைய பொருளாதார நிலையில் இது போதுமானதல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.
நாட்டில் உள்ள தகுதியான ஆலிம் உலமாக்கள் எல்லோரும் உலமா சபையின் கீழ் அல்லது இது போன்ற ஒரு நிறுவன அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு சட்டப்படி பதிவு செய்யப்பட்டவர்களே மஸ்ஜிதுகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். மஸ்ஜித் நிருவாகம் உலமாசபை அல்லது இது போன்ற ஒரு நிறுவனத்திடம் விண்ணப்பித்து தங்களது மஸ்ஜிதுக்கான பேஸ் இமாம்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இமாம்களுக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டு முறையாக மஸ்ஜிகளுக்கு இமாம் முஅதின்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு இமாம் முஅத்தின் நியமிக்கப்படும் போது அவர்களுக்கான அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். உலமாக்கள் தரம் 1/2/3 என அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட வேண்டும். தரப்படுத்தலுக்கேற்ப சமபளத் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
முறையான நியமனமற்ற இமாம்கள் முஅத்தின்கள் மஸ்ஜிதுகளுக்கு இணைத்துக்கொள்ளப் படுவதால் இங்கு இரு பக்கத்திலும் பொறுப்புக் கூறுதல் என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது.பாதுகாப்பும் இவ்வாறே. மாறாக இன்று மஸ்ஜிதுகளுக்கு இமாம்களை சேர்த்துக் கொள்வதில் மஸ்ஜித் நிருவாகம் நிர்ணயம் செய்யும் தொகையே மாதச் சம்பளமாக அமைகின்றது. இந்நிலை மாற வேண்டும்.
உலமாசபை போன்ற நிறுவனத்திடமிருந்து நியமனங்கள் வழங்கப்பட்டு மஸ்ஜிதுகளுக்கு இமாம் முஅத்தின்கள் நியமிக்கப்படும் போது இரு பக்கத்திலும் பொறுப்புக் கூறுதல் என்பது அமைந்து விடும்.மஸ்ஜித் நிருவாகத்தால் இமாம் முஅத்தின்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் அநியாயங்கள் நடை பெற்றால் அது தொடர்பான பொருத்தமான தீர்மானங்களை பெற்றுக் கொள்ள முடியும். அது போல் இமாம் முஅத்தின் ஆகியோரால் பொறுப்பற்ற விதத்தில் கடமை பொடுபோக்குகள் இடம்பெறும் போது மஸ்ஜித் நிருவாகமும் நியாயங்களை பெற்றுக்கொள்ள முடியும். மஸ்ஜித் நிருவாகங்கள் இமாம் முஅத்தின்கள் தங்களுக்கு ஒத்துவராது என கருதும் போது அவர்களை உடனே மஸ்ஜிதை விட்டு துரத்தி விடுவதும் மாறாக அவர்கள் தங்களுக்கு வசதியான தோதுவான வேறு மஸ்ஜித் கிடைக்கும் போது சொல்லாமல் கொள்ளாமல் விலகிச்சென்று விடுவதும் என நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு முறையான நியமனத்தினூடாக தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
உலமாக்கள் மஸ்ஜிதுகளை தேடி அலைந்து திரிவதும் அல்லது அவர்கள் இடைநடுவில் விலக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். அது போல் மஸ்ஜித் நிருவாகிகள் தங்கள் கருத்துக்களுக்கு ஒத்துப் போகும் ஆலிம்களைத் தேடி அலைவதுமான தொல்லையில் இருந்து விடுபட ஒரு அமைப்பின் கீழ் பொருத்தமான முறையில் நியமனங்கள் வழங்கப் படும் போது மஸ்ஜித்களுக்கு பொருத்தமான இமாம் முஅத்தின்களை நியமித்துக் கொள்ள முடியும். இவ்வாறாக நியமன அடிப்படையில் அடிப்படை சம்பளத்துடன் நியமனம் பெற்று மஸ்ஜித் களுக்கு கடமைக்குச் செல்லும் இமாம் முஅத்தின்கள் மரியாதையுடன் தங்கள் கடமையை செய்ய முடியும்.
நிச்சயமாக உலமாக்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வைக்கப்படவேண்டியவர்கள்.அதிலும் மஸ்ஜித்களில் கடமை புரிபவர்கள் மேலும் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள்.தமது தகுதிக்கேற்ப சம்பந்தப்படும் இமாம் முஅத்தின்களும் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் இன்று குறைந்தது 75 முதல் 80 ஆயிரம் ரூபா வரையான அடிப்படைச் சம்பளம் இமாம் முஅத்தின்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களின் வேறு கொடுப்பனவுகள் இதற்குள் அடங்காது.
அரச தனியார் துறையில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களது தொழிலுக்கும் சம்பளத்துக்கும் உத்தரவாதம் கிடைக்கின்றது. மஸ்ஜித்களில் கடமை புரியும் இமாம் முஅத்தின்களின் தொழிலுக்கோ சம்பளத்திற்கோ எந்த உத்தரவாதமுமில்லை. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது எங்கும் முறையிட முடியாத நிலையில் வேறு மஸ்ஜிதுக்கு சென்று விடுகிறார்கள். இவ்வாறு இவர்கள் இடமாறிச் செல்லும் போது அங்கு அவர்களின் சேவை முதலிலிருந்தே பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கான சேவைக்கால எந்தக் கொடுப்பனவுகளும் இல்லை.சேவைக்கால சம்பள அதிகரிபுகளும் இல்லை. போகுமிடமில்லாத போது எவ்வளவு சம்பளமானாலும் பராவாயில்லை என ஆலிம்கள் மஸ்ஜித்களில் கடமையாற்ற வேண்டியுள்ளது. சில இமாம்கள் பேஷ் இமாம் தொழிலில் இருந்தே தங்களை விடுவித்துக் கொண்டு வேறு தொழில்களுக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மஸ்ஜித் நிருவாகங்கள் தங்களுக்கான வருமானம் குறைவு என கடமை புரியும் இமாம் முஅத்தின்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க முடியாது. குறைவான சம்பளம் என்பதால் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இமாம் முஅத்தின்கள் விரும்பியோ விரும்பாமலோ ஊர்மக்களிடம் கைநீட்ட வேண்டி ஏற்படுகின்றது. அல்லது கடன் பெற வேண்டி ஏற்படுகின்றது.
வருடத்திற்கு இருமுறை பெரு நாட்களில் ஓரிரு இலட்சங்களை சேர்த்துக் கொடுத்து விட்டு ஊரார் இமாம் முஅத்தின் விடயத்தில் திருப்தியடைந்து விடுகின்றனர். இதனால் இமாம் முஅத்தின்கள் வேறு பள்ளியில் சம்பளம் கொஞ்சம் கூட கிடைக்குமென்றால் விலகிச் செல்வதில் குறியாக இருக்கின்றனர். பிரச்சினைகள் தீர்க்கப்படாத போது பொறுப்புக்கள் சரியாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்க முடியாது.
இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்களுடன் உடன்படுபவர்களும் இருக்கலாம். முரண்படுபவர்களும் இருக்கலாம். தங்களது மஸ்ஜித்களில் இமாம் முஅத்தின்கள் முறையாக கவனிக்கப்படுகிறார்கள் என கருதும் நிருவாகங்களும் இருக்கலாம். இங்கு முன் வைக்கப்படும் பிரதான கருத்தாவது உலமாக்கள் ஒரு குவி மையத்தில் இணைக்கப்பட்டு அவர்களுக்கு இமாம் முஅத்தின் நியமனம் முறையாக வழங்கப்பட்டு மஸ்ஜிதுகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான பொருத்தமான சம்பளத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
நபிமார்களின் வாரிசான உலமாக்கள் கண்ணியமான முறையில் தங்களின் கடமைகளை மஸ்ஜித்களில் நிறை வேற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதாகும். இவ்விடயங்கள் குர்ஆன் மத்ரசா, அரபு மத்ரசா ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.- Vidivelli