முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியலும் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மாநாடும்

வரலாற்றுப்பார்வை

0 33

சட்டத்தரணி றுடானி ஸாஹிர்

அறிமுகம்
இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் வர­லாற்றில் பிர­தி­நி­தித்­துவ அர­சியல் குறித்து பேசப்­படும் காலம் சம­கால அர­சியல் சூழ்­நி­லையில் மீண்டும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 1885களில் சேர்.பொன்­னம்­பலம் இரா­ம­னாதன் அவர்­க­ளால சட்­ட­வாக்க சபையில் “இலங்கைச் சோன­க­ருக்­கான” தனி­யான பிர­தி­நி­தித்­துவம் கடு­மை­யாக எதிர்க்­கப்­பட்­டது. இப்­பின்­ன­ணியில் றோயல் ஆசி­யாட்டிக் கழ­கத்தில் அவர் ‘Ethnology of the ‘Moors’ of Ceylon’ எனும் தலைப்பில் அவர் 26.04.1888 இல் ஆய்­வுக்­கட்­டுரை ஒன்றை சமர்ப்­பித்தார்.

சேர்.பொன்­னம்­பலம் இரா­ம­னா­தனால் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்கள் குறித்து அறிஞர் எம்.சி.சித்­தி­லெப்­பை­யினால் தொடர்தேர்ச்சியாக எழு­தப்­பட்ட மறுப்பு ஆக்­கங்­களும், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் அவர்­க­ளினால் 1907ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட “A Criticism of Mr.Ramanathan’s Ethnology of the ‘Moors’ of Ceylon” எனும் மறுப்பு நூலும் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மா­னது. சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­ரான மேற்­படி வர­லாற்று நிகழ்­வுகள் ‘அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தின் முக்­கி­யத்­து­வத்தை’ அக்­கால முஸ்லிம் முன்­னோ­டிகள் உணர்ந்து செயற்­பட்­ட­மையும், இது குறித்து அக்­கால முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் விளிப்பு நிலை­யையும் துலாம்­ப­ர­மாக காட்டி நிற்­கின்­றது. 1936 இல் நடை­பெற்ற அரச சபைக்­கான தேர்­தலில் நிகழ்ந்த முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவ இழப்பின் எதி­ரொ­லி­யாக 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி மரு­தானை ஸாஹிரா கல்­லூ­ரியில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மாநாடு நடை­பெற்­றது. இம்­மா­நாடு நடை­பெற்று 86 ஆண்­டுகள் முடி­வு­று­கின்­றது. இத்­த­று­வாயில் இவ்­வ­ர­லாற்று முக்­கி­யத்­து­வ­மான மாநாட்டின் பின்­னணி குறித்து இக்­கட்­டுரை ஆராய்­கி­றது.

முத­லா­வது முஸ்லிம் சட்­ட­வாக்க
சபை அங்­கத்­தவர்
கோல்­பு­றூக்-­ க­மறன் ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சுக்­க­மைய முத­லா­வது சட்­ட­வாக்­கச் ­சபை (Legislative Council)1833 ஆம் ஆண்டு தாபிக்­கப்­பட்­ட­துடன் இன ரீதி­யான பிர­தி­நி­தித்­து­வத்­து­வமும் பிரித்­தா­னி­ய­ரினால் இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. சட்­ட­வாக்க சபை தாபிக்­கப்­பட்டு சுமார் 50 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் 1883 ஆம் ஆண்டு முத­லா­வது முஸ்லிம் (நிய­மன) அங்­கத்­த­வ­ராக எம்.சீ. அப்துர் ரஹ்மான் சட்­ட­வாக்க சபையில் நுழைந்தார். 1883 தொடக்கம் 1889 வரை அவர் முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினார். 1900- –1915 வரை வாப்­பிச்சி மரைக்கார் அப்துர் ரஹ்மான் அவர்­களும், 1917-–1923 வரை என்.எச்.எம். அப்துல் காதர் அவர்­களும் நிய­மன அங்­கத்­த­வர்­க­ளாக கவர்­ன­ரினால் நிய­மிக்­கப்­பட்­டனர். 2 ஆவது மனிங் சீர்­தி­ருத்­தத்தின் பின், 1924ஆம் ஆண்டு சட்­ட­வாக்க சபைக்கு நடாத்­தப்­பட்ட தேர்­தலில் சேர்.முஹம்­மது மாக்கான் மாக்கார், என்.எச்.எம். அப்துல் காதர், கலா­நிதி ரீ.பி.ஜாயா ஆகிய மூன்று முஸ்லிம் பிர­தி­நி­திகள் வெற்­றி­பெற்று சட்­ட­வாக்க சபை நுழைந்­தனர்.

1931 ஆம் ஆண்டு அரச சபைக்­கான தேர்தல்
டொனமூர் சீர்­தி­ருத்­தத்தின் மூலம் 1931ஆம் ஆண்டு சர்­வ­சன வாக்­கு­ரிமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு அரச சபைக்­கான தேர்தல் (Sate Council Elections) பிர­தேச வாரி முறையில் (Territorial Basis) நடத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை டொனமூர் சீர்­தி­ருத்­தக்­குழு புறக்­க­ணித்­தி­ருந்­தது. இந்­நி­லையில், முஸ்லிம் அங்­கத்­த­வர்கள் தெரிவு செய்­யப்­படக் கூடிய இரண்டே இரண்டு தொகு­திகள் மட்டும் காணப்­பட்­டன. ஒன்று கொழும்பு மத்தி; மற்­றை­யது தற்­போ­தைய அம்­பாறை மாவட்டம் உள்­ள­டங்­க­லான மட்­டக்­க­ளப்பு-­ தெற்கு தேர்தல் தொகுதி. முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் நோக்­கத்­துடன் அத்­தேர்­தலில் சேர் முஹம்­மது மாக்கான் மாக்கார் மட்­டக்­க­ளப்­பு-­ தெற்கு தேர்தல் தொகு­தியில் பெரும் நிலச்­சு­வாந்­தரும் சட்­ட­வாக்க சபை உறுப்­பி­ன­ரு­மாக இருந்த ஈ.ஆர். தம்­பி­முத்து அவர்­களை எதிர்த்துப் போட்­டி­யிட்டார். கிழக்கு முஸ்லிம் மக்கள் முழு­மை­யான ஆத­ரவை சேர். முஹம்­மது மாக்கான் மாக்கார் அவர்­க­ளுக்கு வழங்­கினார்கள். 31 வய­திற்கு மேற்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் வாக்­க­ளித்­தனர். சிவப்பு (ஈ.ஆர். தம்­பி­முத்து), பச்சை (சேர்.முஹம்மத் மாக்கான் மாக்கார்) நிறங்கள் அவர்­க­ளுக்கு முறையே ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் முடிவில், அரச சபைக்­கான ஒரே­யொரு முஸ்லிம் அங்­கத்­த­வ­ராக சேர்.முஹம்மத் மாக்கான் மாக்கார் மட்­டக்­க­ளப்­பு-­ தெற்கு தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்து 2637 பெரும்­பான்மை வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்டார். அதே வேளை கொழும்­பு-­ மத்தி தேர்தல் தொகு­தியில் போட்­டி­யிட்ட ரீ.பி. ஜாயா அவர்கள் ஏ.ஈ. குண­சிங்­க­வினால் 5203 வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்டார்.

தேர்­த­லொன்றின் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது முஸ்லிம் உறுப்­பி­னரைத் தேர்ந்­தெ­டுத்த பெரு­மையை இதன் மூலம் மட்­டக்­க­ளப்­பு-­ தெற்கு தேர்தல் தொகுதி பெறு­கின்­றது. சேர்.முஹம்­மது மாக்கான் மாக்கார் அவர்கள் முத­லா­வது முஸ்லிம் அமைச்­ச­ராக அமைச்­ச­ர­வையில் அமர்­வ­தற்கும் இவ்­வெற்றி வழி­வ­குத்­தது. அவர் ஏறத்­தாழ நான்கு ஆண்­டுகள் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக கட­மை­யாற்­றினார்.

துர­தி­ஷ்டவச­மாக 1936ஆம் ஆண்டு நடை­பெற்ற அரச சபைக்­கான தேர்­தலில் எந்­த­வொரு முஸ்லிம் அங்­கத்­த­வரும் தெரி­வா­க­வில்லை. புதிய தேர்தல் முறையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் அதி­யுச்ச சபை­யான அரச சபையில் இழக்­கப்­பட்­டது. பூச்­சிய நிலைக்கு வந்­தது. இவ்­வ­ர­சியல் நெருக்­கடி நிலை பெரும் கவ­லை­யையும் அதி­ருப்தி அலை­யையும் முஸ்­லிம்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யது. இது இவ்­வா­றி­ருக்க, பல்­வேறு சீர்­தி­ருத்த சிபா­ரி­சு­களை முன்­வைத்து 04.03.1939 கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் இலங்கை தேசிய காங்­கி­ரஸின் விஷேட கூட்டம் நடை­பெற்­றது.

“இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 68 இல் 8 ஸ்தானங்கள் வேண்டும்”
கவர்­ணரின் புதிய சீர்­தி­ருத்த சிபா­ரிசில் ஏமாற்­ற­ம­டைந்த முஸ்­லிம்கள் “இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 68 இல் 8 ஸ்தானங்கள் வேண்டும்” என்ற கோரிக்­கையை முன்­னி­றுத்தி மார்ச் மாதம் 5ஆம் திகதி 1939ஆம் ஆண்டு கொழும்பு மரு­தானை ஸாஹிரா கல்­லூ­ரியில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மாநாட்டை ஏற்­பாடு செய்­தனர். மேற்­படி பிரே­ர­ணையை ரி.பீ.ஜாயா அவர்கள் முன்­வைத்தார். அம் மாநாட்டின் தலை­வ­ராக சேர். முஹம்­மது மாக்கான் மாக்கார் அவர்­களும் செய­லா­ள­ராக டாக்டர் பதி­யுத்தீன் மஹ்மூத் அவர்­களும் செயற்­பட்­டனர். தீவின் நாலா புறத்­தி­லு­மி­ருந்தும் முஸ்­லிம்கள் ஒன்­று­கூ­டினர். சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் இடம்­பெற்ற இம்­மா­நாட்டில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தின் அவ­சியம் குறித்தும், தேசிய அர­சி­யலில் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­காலம் குறித்தும் தீவி­ர­மாக சிந்­தித்த டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், முத­லியார் எஸ்.ரீ.அப்துல் ரஹ்மான், டபிள்யூ.எம் ஹாஸிம், புரக்டர் எம்.ஐ.எம்.ஹனீபா, எம்.எச்.எம்.சுலைமான், எச்.எஸ்.இஸ்­மாயில், கலீ­பத்­துஷ்­ஷா­துலி எஸ்.ஓ.எஸ். ஐதுரூஸ் மௌலானா, சேர்.முஹம்­மது மாக்கான் மாக்கார், சேர் ராஸிக் பரீட், ரி.பி.ஜாயா, எம்.எஸ்.காரி­யப்பர் ஸஹீட் ஏ மரிக்கார், பதி­யுதீன் மஹ்மூத், எஸ்.எல்.முஹம்மத், டாக்டர்.எம்.எஸ். கெளசுல் அமீர் உட்­பட பல முஸ்லிம் தலை­வர்கள் பங்­கு­பற்­றினர்.

அம்­மா­நாட்டில் சேர் முஹம்­மது மாக்கான் மாக்கார் அவர்கள் தெரி­வித்த பின்­வரும் கருத்­துக்கள் கூர்ந்து கவ­னிக்­கத்­தக்­கது.

“முஸ்­லிம்­க­ளுக்கு போது­மான பிர­தி­நி­தித்­து­வத்தை நான் கேட்டேன், ஆனால் 50:50 கோரிக்­கையை ஆத­ரிக்­கு­ம­ளவு நான் செல்­ல­மாட்டேன், ஏனெனில் எண்கள் மற்றும் விகி­தா­சா­ரங்கள் எனும் கோரிக்­கைகள் என்­பன நல்ல அர­சாங்கம் (Good Government) எனும் பிர­தான கேள்­வி­க்கு சற்று கூடு­த­லா­கவோ குறை­வா­கவோ இருக்கும். மேலும், நல்ல அர­சாங்கம் என்­பது என்ன? இரு வார்த்­தை­களில் அதனை சாரம்­சப்­ப­டுத்­தலாம். ஒன்று நீதி இரண்­டா­வது பார­பட்­ச­மின்மை. எல்லா மனி­தர்­க­ளுக்­கு­மான நீதி. மற்றும் எல்­லாச்­ச­மூ­கங்­க­ளுக்கும் பார­பட்ச­மின்­றிய நடாத்­துகை. நீதி மற்றும் பார­பட்­ச­மின்­மையின் பெயரில் பெரும்­பான்மை சமூகம், சிறு­பான்மை சமூ­கத்தின் நிலைக்குத் தாழ்த்­தப்­பட வேண்டும் என்று நான் அப்­பொ­ழுதும், இப்­பொ­ழுதும் விரும்­ப­வு­மில்லை. அதற்கு மாறாக, என்­னு­டைய நல்­லெண்­ணத்தை காட்டும் வித­மாக ‘இந்­நாட்டில் சிங்­கள ஆட்சி நடை­பெ­று­வ­தற்கு எனக்கு எவ்­வித ஆட்­சே­ப­னை­யு­மில்லை’ என்று குறிப்­பிட்­டுள்ளேன். என் உள்ளம் வகுப்பு வாத தப்­பெண்­ணத்­தி­லி­ருந்து எவ்­வ­ளவு சுதந்­தி­ர­மாக இருக்கின்­றது என்­ப­தற்கு இக்­க­ருத்து மட்­டுமே போது­மான சான்­றாகும்.”

மாநாட்டில் பதி­யுதீன் மஹ்மூத் அவர்கள் பின்­வ­ரு­மாறு கருத்­துக்­களை பகிர்ந்தார் “என்­னு­டைய சிங்­கள சகோ­த­ரர்­க­ளுக்கு நான் நிச்­ச­ய­மாகக் கூற விரும்­பு­வது என்­ன­வென்றால் இந்த நாட்­டிற்கு பூரண விடு­தலை கோரு­வதில் நான் அவர்­க­ளோடு ஒரு­வனாய் இருக்­கின்றேன். அவர்­க­ளு­டைய தேசிய, கலா­சார அபி­ல­ா­சை­களை நான் வெகு­வாகப் போற்­று­பவன் என்று அவர்கள் என்னை கணிக்­கலாம். அவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் நானும் எனது சீதா­யமும் என்றும் இந்­நாட்டில் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான நண்­பர்­க­ளாக வாழுவோம். என்­னிலோ அன்றி எனது சமு­தா­யத்­திலோ இந்­நாட்­டிற்கு அதன் குழந்­தைகள் காட்ட வேண்­டிய பற்­றிலோ அல்­லது அசைக்க முடி­யாத விசு­வா­சத்­திலோ சற­்றேனும் குறை­காண முடி­யாது.”

1905 ஆம் ஆண்டு நடை­பெற்ற துருக்­கித்­தொப்பிப் போராட்­டத்­திற்­குப்­பின்னர் பெருந்­தி­ர­ளான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட வர­லாற்­றுச்­சி­றப்­பு­மிக்க கூட்­ட­மாக இம்­மா­நாடு அமைந்­தது. முஸ்­லிம்­க­ளுக்­கான போது­மான அளவு பிர­தி­நி­தித்­து­வத்தை (Adequate Representation) ஏனைய சமூ­கங்­க­ளது நலனை பாதிக்­காத வண்ணம் பிரித்­தா­னிய அர­சிடம் கோரு­வது குறித்து பல்­வே­று­ த­ரப்­பட்ட கருத்­துக்­களும் குழப்­ப­க­ர­மான நிலை­மையும் தோன்­றி­யி­ருந்­தது. வேற்­று­மை­களை உத­றித்­தள்ளி பிரிந்து நின்ற பல­ரையும் அர­சியல் எழுச்­சி­ய­டையச் செய்து பல்­வேறு கருத்­து­ நி­லை­யி­லி­ருந்­த­வர்­க­ளையும் அம்­மா­நாடு ஒன்­றி­ணைத்­தது. மக்கள் வெள்ளம் ஸாஹி­ராக்­கல்­லூ­ரியில் நிரம்பி வழிந்­தது. கல்­லூ­ரியின் நடை­பாதை, மூலை முடுக்­கு­க­ளெல்லாம் மக்கள் பேரார்­வத்­துடன் குழுமி நின்­றனர். இம்­மா­நாடு குறித்த செய்­தியை 06.03.1939இல் முன்­பக்­கத்தில் தின­கரன் பிர­சு­ரித்­தது. இக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள், பிரே­ரணைகள் சொற்­பொ­ழி­வுகள் பின்னர் எழுத்து வடிவில் தொகுக்­கப்­பட்டு பிரிட்டிஷ் மன்னர் 5ஆம் ஜோர்ஜ், குடி­யேற்ற மந்­திரி, இலங்கை கவர்னர் மற்றும் பல்­வேறு அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது. அந்­நூலின் பெயர் பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது “Proceedings of the all Ceylon Muslim Political Conference held at Zahira College on 5th March 1939 on the reforms of the constitution compiled and published for and on behalf of the all Ceylon Muslim political Conference Committee”.

முடிவுரை
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கிய காலப்பிரிவாகும். இலங்கையரை அரசியல் விழிப்படையச்செய்த காலம் அது. அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்து தம்மை தயார்படுத்தும் விதமாக ஒவ்வொரு சமுதாயமும் தம்மை புனர்நிர்மாணம் செய்து கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் கல்வியறிவிலும், அரசியல் முதிர்ச்சியிலும் பின்தங்கி நின்றனர். 1915 இல் நிகழ்ந்த கண்டிக்கலவரம் முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. அக்காலப்பிரிவில் இலங்கை சோனகரின் அபிலாஷைகளை வென்றெடுப்பதோடு, இலங்கையானது ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட வேண்டுமென முஸ்லிம் தேசிய தலைவர்கள் முன்னின்றுழைத்தனர். சுதந்திரத்திற்கு முன்னரான காலத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதோடு தேசிய அரசியலையும் நேர்மறையாக கையாளுவது என சாதுர்யமாக அரசியலை அவர்கள் அணுகியுள்ளனர். தமது சமூகத்தினதும் தேசத்தினதும் எதிர்காலம் குறித்து ஒருசேர சிந்தித்து கூட்டாக செயலாற்றியிருப்பது அக்கால முஸ்லிம் அரசியல் தலைவர்களது தூரதிருஷ்டி பார்வையையும் சமூக அக்கறையையும் தேசப்பற்றையும் தெளிவாகக் காட்டி நிற்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.