எஸ்.என்.எம்.சுஹைல்
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற மௌலவியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையணிந்தபடி கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலியொன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டதான தகவலும் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மௌலவியுடன் நேரடியாக உரையாடி விடயம் தொடர்பில் தெரிந்துகொண்டோம். அத்துடன், இதுவிடயமாக பொலிஸ் தரப்பினரின் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. அத்தோடு, இந்த தாக்குதலானது உலமாக்களை அவமதித்ததாகவே கருதுவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இனி நாம் விரிவாக பார்ப்போம்.
தாக்கப்பட்ட மௌலவி யார்?
அநுராதபுரம் சலாஹியாவில் ஹிப்ழ் கற்கையையும் அக்குறணை ரஹ்மானியா அரபுக் கல்லூரியில் கிதாபு கற்கைளையும் முடித்த எப்பாவல, கட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய அல்ஹாபில் அல் ஆலிம் அப்துல் லதீப் கியாஸ்தீன் (ரஹ்மானி) என்பவரே கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி மடாட்டுகம, கைலப்பத்தான பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட மௌலவியாவராவார். இவர், ஹொரோவபொத்தான, அங்குநெச்சி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசலில் பேஷ் இமாமாக கடமையாற்றிவருகின்றார். அப்பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ள குறித்த மௌலவிக்கு இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
நடந்தது என்ன?
கண் பார்வையை இழந்துள்ள மௌலவியின் மாமனாருக்கு கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மௌலவி கியாஸ், அவரது மனைவியுடன் மாமனாருக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது இரண்டு பிள்ளைகளையும் எடுத்துகொண்டு, கடந்த 22 ஆம் திகதி காலை ஹொரோவபொத்தானையிலிருந்து கண்டிக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். மறுநாள் மாமனாருக்கு சிகிச்சைபெற வேண்டியநிலையில் கண்டிக்கு சென்ற இவர்கள், மாமனாரின் சகோதரியின் வீட்டில் தங்கிவிட்டு 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரோவபொத்தானை நோக்கி பயணித்துள்ளனர்.
இந்த பயணத்தின்போது ஏ9 வீதியில் தம்புள்ளை தாண்டி மடாட்டுகம பகுதியிலுள்ள கைலப்பத்தானயில் உணவு உட்கொள்வதற்காக சாப்பாட்டுக்கடையொன்றுக்கருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தும் போதே மௌலவி பொலிஸ் உத்தியோத்தரால் தாக்கப்படார்.
நடுவீதியில் நடந்தது என்ன?
ஏ9 வீதியில் கண்டியிலிருந்து யாழ்ப்பாண திசையில் சென்றுகொண்டிருந்த மௌலவி முச்சக்கர வண்டியை பாதையின் வலப்பக்கமாக திருப்புவதற்கான சமிக்ஞை மின் விளக்கை ஒளிரச் செய்து திருப்ப முற்பட்டுள்ளார். இந்நிலையில், எதிர் திசையில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளொன்று வருவதை கண்டு அதற்கு இடமளித்த பிறகும் வீதியின் மறுபக்கத்திற்கு சென்று முச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்டபோது, கடந்து சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவர் திரும்பி மீண்டும் வந்து மௌலவியை பலமாக கன்னத்தில் இரண்டு மூன்று தடவைகள் அறைந்து தாக்கியுள்ளார். பின்னர் முச்சக்கர வண்டியிலிருந்து கீழே இறங்கிய மெளலவியை பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
தாக்குதலையடுத்து என்ன நடந்தது?
இந்த தாக்குதல் பெப்ரவரி 23 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. தாக்கப்பட்ட மௌலவி சாப்பாட்டுக் கடையில் தேனீர் அருந்திவிட்டு பொலிஸில் முறைப்பாடுகள் ஏதும் அளிக்காமல் ஹொரோவபொத்தானை வீட்டுக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில், பலத்த தாக்குதலுக்கு உள்ளான மௌலவிக்கு இரவில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதுடன், தலையில் வருத்தமும், கழுத்தை திருப்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் தாக்கப்பட்ட தினமான 23 ஆம் திகதி முறைப்பாடளிக்கவோ, சிகிச்சை பெறவோ இல்லை.
இதனியடையே, மௌலவி தாக்கப்பட்ட விடயம் கைலப்பத்தான சாப்பாட்டுக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி. கெமராவில் பாதிவாகியிருந்தது. இந்தப் பதிவை, அங்கிருந்து பெற்றுக்கொண்டே வீடு திரும்பியிருக்கிறார் மௌலவி.
ஹொரோவபொத்தானையில் சிகிச்சை
தாக்கப்பட்ட மௌலவி கியாஸ்தீன், மறுநாள் காலை ஹொரோவபொத்தான வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட பலத்த காயம் குறித்து வைத்தியசாலையில் வினவப்பட்டபோது முதல்நாள் கைலப்பத்தானையில் நடந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, வைத்தியசாலை ஊடாக விடயம் ஹொரோவபொத்தானை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் வைத்தியசாலைக்கு சென்று முறைப்பாட்டையும் பெற்றுக்கொண்டனர்.
மூன்று நாட்கள் ஹொரோவபொத்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற, அங்கு Scan மற்றும் xray வசதிகள் இன்மையால் அநுராதபுர வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை 27 ஆம் திகதியன்று மாற்றப்பட்டுள்ளார்.
அநுராதபுர வைத்தியசாலையில் xray எடுக்கப்பட்டு பாரதூரமான நிலைமை இல்லை என அறிவிக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை (02.28) வீடு திரும்பியதாக கூறினார் மௌலவி கியாஸ்தீன்.
பொலிஸ் நடவடிக்கை
மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதை விடிவெள்ளிக்கு உறுதி செய்த பொலிஸ் ஊடகப் பிரிவு, தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மறுநாள் பெப்ரவரி 23 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் மடாட்டுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த திங்களன்று (மார்ச் 3 ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு பிணையளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.
இந்த சம்பவம் குறித்ததான விசாரணைகளை மடாட்டுகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் , இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 திகதி இடம்பெறும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இது இவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் செவ்வாயன்று பாதிக்கப்பட்ட மௌலவியுடன் முச்சக்கர வண்டியில் சென்ற அவரது மாமனார் மற்றும் மனைவி ஆகியோர் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக மடாட்டுகம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே, சுகயீனமுற்றுள்ள மௌலவியின் மாமனாரும் மனைவியும் நோன்பு நோற்ற நிலையில் ஹெரோவபொத்தானையிலிருந்து நீண்ட தூரம் பயணித்து கெக்கிராவைக்கு அருகாமையிலுள்ள மடாட்டுகமவுக்கு சென்று வாக்குமூலம் அளித்திருந்தனர்.
உலமா சபை கண்டனம்
கியாஸ்தீன் மௌலவி தாக்கப்பட்டதையடுத்து அநுராதபுர மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவினர் அவருக்கு ஆறுதல் கூறினர். அத்தோடு, ஹொரோவபொத்தான கிளையினரும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல்படுத்தி நலம் விசாரித்தனர். இது இவ்வாறிருக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பாதிக்கப்ட்ட மௌலவிக்கு ஆறுதல் கூறினர். மேலும், இந்த விவகாரத்துக்கு கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
அதில், அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த மௌலவி மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறிய செயற்பாட்டினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மிக வன்மையாக கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மௌலவிக்கு மிகத் துரிதமாக நீதியினை பெற்றுக் கொடுக்குமாறும், தாக்குதல் நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுக்கிறது என கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் கூறுகையில், அநுராதபுரத்தில் மௌலவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் முழு உலமாக்களையும் முஸ்லிம்களையும் அகௌரவப்படுத்தியமைக்கு சமமானதாகும். எனவே, இந்த விடயத்தை உலமா சபை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. தாக்கப்பட்ட விவகாரத்திற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கு போராடும் எனவும் தெரிவித்தார்.
கெக்கிராவைக்கு அருகாமையில் நடுவீதியில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரால் மௌலவியொருவர் தாக்கப்பட்டமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தாக்குதலுக்கு உள்ளான மௌலவி உடல் உபாதைக்கு உள்ளாகி வைத்தியசாலையில் 5 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அத்தோடு, இந்த சம்பவத்தையடுத்து அவர் பல்வேறு இன்னல்களுக்கும் முகம்கொடுத்துள்ளார்.
இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 30 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்கிறது. பொலிஸாரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அகில இலங்கை ஜம்இய்துல் உலமா இவ்விவகாரத்தை கண்டித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமும் பொலிஸ் தரப்பும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்துகிறோம்.- Vidivelli