இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா?

0 113

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்­கையில் வரு­டாந்த இறப்பு வீதம் அதி­க­ரித்­தி­ருக்­கின்ற அதே­வேளை பிறப்பு வீதம் கணி­ச­மாகக் குறைந்­தி­ருப்­ப­தாக துறை­சார்ந்­த­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­வ­டைந்­துள்­ள­தாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் விசேட வைத்­திய நிபுணர் தீபால் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

இந்த விட­யம்­பற்றி அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, கடந்த காலங்­களில் வரு­டாந்தம் பிறக்கும் குழந்­தை­களின் எண்­ணிக்கை 3 இலட்­சத்து 60 ஆயி­ர­மாகக் காணப்­பட்­டது. எனினும் இந்த எண்­ணிக்கை தற்­போது 2 இலட்­சத்து 40 ஆயி­ர­மாகக் குறை­வ­டைந்­துள்­ளது என்று தெரி­வித்­துள்ளார்.

நாட்டில், கடந்த காலங்­களில், நில­விய பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் ஏரா­ள­மான இளையோர் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­றுள்­ளமை குழந்தை பிறப்பு வீதத்தின் வீழ்ச்­சிக்குப் பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ள­தாக அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.
மேலும் சிலர் தங்­க­ளது பொரு­ளா­தாரம் வலுப்­பெ­றும்­வரை திரு­ம­ணத்தைக் காலம் தாழ்த்தி வரு­கின்­றனர்.

குறைந்­த­ள­வான குழந்தை பிறப்பு வீதம் நாட்டின் எதிர்­கால மனித வளத்­திற்குச் சவா­லாக அமையும் என்றும் விசேட வைத்­திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்­பிட்­டுள்ளார்.
மகப்­பேற்று மருத்­து­வர்கள் விடுத்­துள்ள மற்­றொரு பிறப்பு இறப்பு பற்­றிய அறிக்­கையில் மேலும் சில விட­யங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

2017ஆம் ஆண்டு இலங்­கையில் 325,000 பேர் பிறந்­துள்­ளனர். ஆனால் இந்த எண்­ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000 ஆகக் குறை­வ­டைந்­துள்­ளது.

தற்­போது நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தம்­ப­திகள் குழந்தை பெற்றுக் கொள்­வதை தாம­த­மாக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. திரு­ம­ண­மான பல தம்­ப­திகள் இலங்­கையை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் திரு­மணம் செய்து கொண்­ட­வர்­களின் எண்­ணிக்கை 12.5 சத­வீ­தத்­தினால் குறை­வ­டைந்­துள்­ளது.

இதற்­கி­டையே, ஆண்டு இறப்­புகள் 2017இல் 146,000இல் இருந்து 2023இல் 181,000 ஆக அதி­க­ரித்­தி­ருந்­த­தாக மகப்­பேற்று வைத்­தியர் பேரா­சி­ரியர் சனத் லெனரோல் தெரி­வித்­துள்ளார்.

குழந்­தை­களின் பிறப்பு விகிதம் குறைந்து, ஆட்­களின் இறப்பு வீதம் அதி­க­ரித்து வரு­வது எவ்­வாறு பாதிக்கும்? அதனால் ஏற்­படக் கூடிய பாதிப்­புக்கள் என்ன?
இந்த நூற்­றாண்டின் இறு­தியில் உலக மக்கள் தொகை குறையும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக, சீனாவின் தற்­போ­தைய 140 கோடி மக்கள் தொகை கிட்­டத்­தட்ட பாதி­யாகக் குறையும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

உலக மக்­கள்­தொகை தினம் ஜூலை 11 அன்று வரு­கி­றது, மேலும் சமூ­க-­பொ­ரு­ளா­தார அர­சியல் விவ­கா­ரங்­களில் மக்­கள்­தொகை கூடிக் குறை­வது ஒரு முக்­கிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

இலங்­கையில் பிறப்பு வீதம் வேக­மாக வீழ்ச்­சி­ய­டைந்து 30 சத வீத­மாகக் குறைந்­துள்­ளது.
நாட்டில் பிறப்பு விகி­தங்கள் குறைந்து வரு­வ­தற்கு பொரு­ளா­தார சிக்­கல்­களே முதன்­மை­யான கார­ண­மாகும் என்று நிபு­ணத்­துவ மருத்­து­வர்­களும் துறை­சார்ந்த ஆய்­வா­ளர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

பல குடும்­பங்கள் இரண்­டா­வது குழந்­தையைப் பெற்றுக் கொள்ளத் தேவை இல்லை என்று விரும்­பு­கின்­றனர். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்­பா­த­வர்­களைப் பொறுத்­த­வரை, குழந்­தை­களைப் பெறு­வது அவர்­களின் விருப்புப் பட்­டி­யலில் முன்­னு­ரி­மையில் இல்லை.

மேலும், பல புது­மணத் தம்­ப­திகள் குழந்­தை­களைப் பெற்­றுக்­கொள்ளும் எண்­ணத்தைத் தள்­ளிப்­போட்­டு­விட்டு, அதிகம் சம்­பா­திப்­பதில் முன்­னு­ரிமை கொடுத்து, குடும்ப வாழ்வைத் தொடங்­கு­வதைத் தாம­தப்­ப­டுத்­து­கின்­றனர்.

நாட்டை விட்டுப் புலம்­பெ­யர்ந்த பலர் இலங்­கைக்குத் திரும்­பு­வதைக் கருத்தில் கொள்­ள­வில்லை. இலங்கைத் தம்­ப­திகள் பலர் வெளி­நா­டு­க­ளுக்கு புலம்­பெ­ய­ரு­வதை நோக்­க­மாக கொண்­டுள்­ளனர். இது­வரை இலங்­கையில் கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த இளை­ஞர்­களும் தற்­போது வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­றனர்.

சிறு­பான்மை இனங்­களை எடுத்துக் கொண்டால் அவர்­க­ளது பிறப்பு வீதத்தைப் பாதித்த பல கார­ணிகள் உள்­ளன.

தமிழ் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், தமிழர் உரிமைப் போராட்­டத்தின் விளை­வாக படை­யி­னரால் அநே­க­மான இளைஞர் யுவ­திகள் கொல்­லப்­பட்­டமை, கடத்­தப்­பட்­டமை, காணாமல் போனமை, அர­சியல் கைதி­க­ளாக விசா­ர­ணை­யின்றி வெளியில் விடப்­ப­டாமல் நீண்ட கால­மாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளமை, புலம்­பெ­யர்ந்­தமை, விதவை மறு­வாழ்வு ஊக்­கு­விக்கப்­ப­டாமை போன்­றவை பிறப்பு வீதம் குறை­வ­டைந்­த­மைக்­கான கார­ணங்­க­ளாக உள்­ளன என்று சமூக நோக்­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.

முஸ்லிம் சமூ­கத்தை எடுத்­துக்­கொண்டால் அந்த சமூ­கத்­தி­லுள்ள பலர் எல்­ரீ­ரீஈ இயக்கம் உட்­பட ஏனைய தமிழர் உரிமைப் போராட்ட ஆயுத தாரி­களால் கொல்­லப்­பட்மை, இனச் சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்டு அவர்­க­ளது வாழ்­வி­டங்­களை விட்டு விரட்­டி­யக்­கப்­பட்­டதால் குறு­கிய அகதி முகாம்­களில் நீண்ட கால அகதி வாழ்க்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி பலர் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளமை, முஸ்­லிம்கள் அள­வுக்­க­தி­க­மாக இனப்­பெ­ருக்கம் செய்­வ­தாகப் பரப்­பப்­படும் இன­வாத வெறுப்பு அச்­சு­றுத்தல், நிரு­வாக ரீதி­யான ஒடுக்­கு­மு­றைகள் பாகு­பாடு என்­ப­ன­வற்­றாலும் அந்த சமூ­கத்தின் பிறப்பு வீதம் குறை­வ­டைந்­துள்­ள­தாக ஆர்­வ­லர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பொதுவில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களை எடுத்துக் கொண்டால், நாட்டில் மூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்ற யுத்தம் அதனால் ஏரா­ள­மான மூவின சமூ­கங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டமை, அகதி வாழ்க்கை, இடம்­பெ­யர்வு, சிறை வாழ்க்கை, கடத்­தப்­பட்­டமை, காணா­ம­லாக்­கப்­பட்­டமை, கொல்­லப்­பட்­டமை போன்­ற­வையும் இயற்கை இடர்­க­ளான சுனாமி, கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்­றினால் ஏற்­பட்ட மர­ணங்கள் போன்­றவை மூவின சமூ­கங்­க­ளி­னதும் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதி­க­ரித்­த­மைக்­கான கார­ணங்­க­ளாக உள்­வாங்க முடியும்.
மலை­ய­கத்­தில குடும்பக் கட்­டுப்­பாடு திணிக்­கப்­பட்­ட­தாக அங்­குள்ள சமூக அமைப்­புக்கள் கரு­து­கின்­றன. மலை­ய­கத்தின் தேயிலை, இறப்பர் தோட்­டங்­களில் இரண்டு பிள்­ளை­களைப் பெற்ற பெண்கள் நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாடு செய்­து­கொள்­ளும்­படி நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்­தமை, அங்கு மக்­கள்­தொகை வளர்ச்சி குறை­வ­தற்கு ஒரு முக்­கிய காரணம் என்று கண்டி சமூக அபி­வி­ருத்தி நிறு­வ­கத்தின் இயக்­குநர் பெரி­ய­சாமி முத்­து­லிங்கம் கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

சுகா­தார அமைச்சின் 2023ஆம் ஆண்­டுக்­கு­ரிய செயல்­திறன் முன்­னேற்ற அறிக்­கையில் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்டம் பற்றி விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதில், பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் கால­தா­ம­த­மான வழக்­க­மான கொள்­முதல் கார­ண­மாக, குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்­டத்­திற்­கான கருத்­தடை சாத­னங்­களில் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. எனினும், பய­னுள்ள தேசிய குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்­டத்­திற்கு அமை­வாக தேவை­யான அனைத்து அத்­தி­யா­வ­சிய குடும்பக் கட்­டுப்­பாட்டுச் சேவை­க­ளுக்­கான கருத்­தடைப் பொருட்­களும் அரசு நிதியில் வாங்­கப்­பட்டு 2022ஆம் ஆண்­டிலும் 2023ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்­டிலும் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், கோவிட் மற்றும் நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியின் சவால்­க­ளுக்கு மத்­தியில் 2021ஆம் ஆண்டில் 57.7% சத­வீ­த­மாக இருந்த நவீன கருத்­தடை பரவல் விகிதம் 2022 இல் 59.4 சத­வீ­த­மாக அதி­க­ரிக்கும் வகையில் மாவட்­டங்­க­ளுக்கு கருத்­தடைப் பொருட்கள் கிடைப்­பதை உறுதி செய்­த­தாக அந்த அறிக்­கையில் மேலும் விவ­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

2024ஆம் அரை­யாண்டு அர­சிறை நிலைப்­பாட்டு அறிக்­கையில் செப்­ப­மற்ற பிறப்பு வீதம் செப்­ப­மற்ற இறப்பு வீதம் என்று குறிப்­பி­டப்­பட்டு விவ­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.
மேலும், தேசிய கணக்­காய்வு அலு­வ­லகம் செய­லாற்றல் கணக்­காய்வுப் பிரிவு வெளி­யிட்­டுள்ள 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை­யி­லு­மான ஆய்வு அறிக்­கையில் 93 பாட­சா­லைகள் மாண­வர்கள் இல்­லாமை, நாட்டு நில­வரம் மற்றும் வேறு கார­ணங்­க­ளுக்காகத் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருந்­த­தோடு 2018ஆம் ஆண்­டினுள் மட்டும் 101 பாட­சா­லைகள் மூடப்­பட்­டி­ருந்­த­தாக கல்வி அமைச்சின் புள்ளி விவ­ர­வியல் தகவல் அடிப்­ப­டையில் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தரம் 1 இல் மாண­வர்கள் இணை­வதில் காணப்­ப­டு­கின்ற வீழ்ச்சி நிலை­யா­னது, கிளி­நொச்சி மாவட்­டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்­சியைக் காட்­டு­வ­தாக, கிளி­நொச்சி வலயக் கல்விப் பணிப்­பாளர் ஜோன்­கு­யின்ரஸ் கிளி­நொச்சி மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் 2018 ஏப்ரல் 02ஆம் திகதி நடை­பெற்­ற­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் கூற்­றுப்­படி, சமீப காலங்­களில் கரு­வு­று­த­லிலும் ஆயுட்­கால விகி­தங்­க­ளிலும் பெரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. 1970 களின் முற்­ப­கு­தியில், பெண்கள் சரா­ச­ரி­யாக தலா 4,5 குழந்­தை­களைப் பெற்­றனர். இருப்­பினும், 2015ஆம் ஆண்டில், உலகின் மொத்த கரு­வு­றுதல் ஒரு பெண்­ணுக்கு 2 குழந்­தைகள் என்­ற­ளவில் குறைந்து விட்­டது.

உல­க­ளவில் பிறப்பு விகி­தங்கள் குறை­வ­தற்கு, எளிய கருத்­தடை முறைகள், பெண்­க­ளுக்கு அதிக அளவில் கல்வி, வேலை­வாய்ப்பு கிடைப்­பது, வாழ்க்கைச் செல­வினம் அதி­க­ரிப்பு ஆகி­யவை சில கார­ணங்­க­ளாகக் கூறப்­ப­டு­கி­றது.
2080 ஆம் ஆண்டில், 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் 18 வய­திற்கு உட்­பட்­ட­வர்­களை விட அதி­க­மாக இருப்­பார்கள்.

இந்த நடை­முறை தொட­ரு­மானால், பல வரு­டங்­க­ளுக்குப் பிறகு, தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட மனித வளம் இல்­லாத சிர­மங்­களை இலங்­கையும் சந்­திக்க நேரிடும்.

சிலர் குறைந்த பிறப்பு விகி­தத்தை வளர்ந்த நாடு­களின் சிறப்­பி­யல்பு என்று கரு­து­கி­றார்கள். மக்கள் தொகைப் பெருக்­கம்தான் வறு­மைக்குக் காரணம் என்று உணர்ந்த அர­சுகள். மக்கள் தொகைப் பெருக்­கத்தை வெகு­வாக கட்­டுப்­ப­டுத்­தின. ஆனால், அதன் விளை­வுகள் வேறு மாதிரி ஏற்­பட்டு வரு­கி­றது. முதி­யோர்கள் அதி­க­மா­கவும், இளை­யோர்கள் இல்­லாத நிலையும் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளது. அதனால், அந்த நிலைப்­பாட்டை எடுத்த சில நாடுகள் இப்­போது விளை­வுகள் பார­தூ­ர­மா­வதை அறிந்து இயல்­பாகச் சிந்­திக்கத் தொடங்கி விட்­டன. ஒரு காலத்தில் எவை எல்லாம் சரி என்று நினைத்­தார்­களோ இன்று அவை தவ­றென்று தங்கள் நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்­டுள்­ளார்கள்.

உலகின் மிகப்­பெ­ரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா, ஒரு குழந்தை மட்­டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்­த­ரவை கடு­மை­யாக அமுல்­ப­டுத்­தி­யது. அதனால், மக்­கள்­தொகை பெரிய அளவில் சரிந்­தது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு அந்தக் கொள்­கையை அதி­ர­டி­யாக ரத்துச் செய்து, 2 குழந்­தைகள் பெற்றுக் கொள்ள அனு­ம­தித்­தது. அதன்­பி­றகும் எதிர்­பார்த்த முன்­னேற்றம் இல்­லா­ததால் 3 குழந்­தைகள் பெற்றுக் கொள்­ளலாம் என்று கடந்த கொரோனா பாதிப்பின் பின்னர் 2021ம் ஆண்டு அறி­வித்­தது.
ஏற்­கெ­னவே சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து விட்­டதால், சீனா முழு­வதும் உள்ள மழ­லையர் பள்­ளிகள் பல மூடப்­பட்டு வரு­கின்­றன. அந்த பள்­ளிகள், முதியோர் இல்­லங்­க­ளாக மாற்­றப்­படும் நிலையும் ஏற்­பட்டு வரு­கி­றது.

சீனாவில் முதி­யோரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. 140 கோடி மக்கள் தொகையில், 30 கோடிப் பேர் 60 வயதைத் தாண்­டி­ய­வர்கள் என்று சீன அரசின் புள்ளி விவரம் ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக தம்­ப­தி­களை ஊக்­கு­விக்கும் வகையில், அவர்­க­ளுக்கு 13 சலு­கைகள் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. குழந்தை பெற்­றுக்­கொள்ள விரும்பும் பெற்­றோ­ருக்கு குழந்­தைப்­பேறு மானியம், வீட்டு வசதி, கல்வி, வேலை­வாய்ப்பு, வரு­மா­ன­வரிச் சலு­கைகள், அடிப்­படை மருத்­துவ காப்­பீட்டுத் திட்டம், இடம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பேறு­காலக் காப்­பீடு, பேறு­கால விடு­முறை, இது­போன்ற குழந்தைப் பரா­ம­ரிப்பு விடு­முறை தொடர்­பான கொள்­கை­களைச் சரி­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்றும் சீன அரசு அதி­கா­ரி­க­ளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திரு­மணம் ஆகாத பெண்கள், ஊதி­யத்­துடன் மகப்­பேறு விடுப்பை எடுத்துக் கொண்டு செயற்கைக் கரு­வுறல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்­ளலாம். அதேபோல் தனிப்­பெண்கள் வாடகைத் தாய் மூலமும் குழந்­தை­களைப் பெற்றுக் கொடுக்­கலாம். அவர்­க­ளுக்கும் ஊதி­யத்­துடன் கூடிய மகப்­பேறு விடு­முறை வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தென்­கொ­ரியா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளிலும் குழந்­தை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக இவ்­வா­றான உதவி ஊக்­கங்கள் அந்­நாட்டு அர­சு­களால் வழங்­கப்­ப­டு­கின்­றன.

திரு­ம­ண­மா­காத பெண்­களும் குழந்தை பெற்றுக் கொள்­ளலாம் என்ற சீன அரசின் கொள்கை மாற்­றத்தால், செயற்கைக் கரு­வூட்டல் மையங்­களின் தேவை அதி­க­ரித்­துள்­ள­தாக ஆசியா பசிபிக் தொழில் மேம்­பாட்டு நிலையம் அறி­வித்­துள்­ளது.

எனவே, இந்த நிலை­மை­களை இன­ம­த­வா­த­மற்று நடு­நி­லை­யோடு, நின்று, நிதா­னித்து, உற்றுக் கவ­னித்து எதிர்­கால சந்­த­தி­யி­னரின் ஒட்­டு­மொத்த நல­னுக்­காக இந்தப் பிரச்­சி­னையின் முக்­கி­யத்­து­வத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

மேலும் இது தேர்தல் காலத்தில் மட்டும் கவனம் செலுத்தும் இன­வாதம் மத­வாதம் சார்ந்த ஒன்­றாக இருக்கக் கூடாது. ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மைக்காக இந்த விடயங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.