கூட்டாக செயற்படுவது குறித்து எதிரணிகள் கலந்துரையாடல்
ஐ.ம.ச., பொ.ஜ.பெ., ஐ.தே.க., தமிழ்–முஸ்லிம் கட்சிகளும் பங்கேற்பு
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிரணிகள் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் பலமான பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டினர். கடந்த ஜனவரி 29 ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்ததோடு, நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலும் இதன் ஓர் தொடர்ச்சியாகும்.
இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர் ஜே.சி. அலவதுவல, எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர் அஜித் பி. பெரேரா, அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சர்வஜன அதிகாரம் கட்சி தலைவர் திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், பி. சத்தியலிங்கம், அமிர்தநாதன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனுராத ஜயரத்ன, டி.வீ. சானக மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். – Vidivelli