காஸாவை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கும்
டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ், உலக நாடுகள் கடும் எதிர்ப்பு
போரினால் அழிவடைந்துள்ள காஸா பிராந்தியத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஸாவில் வாழும் மக்கள் வேறு நாடுகளில் குடியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ட்ரம்பின் இந்த அறிவிப்பை ஹமாஸ் உட்பட பல்வேறு நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ட்ரம்பின் யோசனையை முற்றாக நிராகரிப்பதாக சவூதி அரேபியாவும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காஸா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காஸா பகுதியில் உள்ள பலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காஸாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்.
அப்பகுதி மக்களுக்கு வரம்பற்ற வேலைகள் மற்றும் வீட்டுவசதிகளை வழங்கும் ஒரு பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா உருவாக்கும். இது முழு மத்திய கிழக்குக்கும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். மத்திய கிழக்கின் அந்தப் பகுதிக்கு பெரும் ஸ்திரத்தன்மையை இது கொண்டு வரும். அங்கு யார் வசிப்பார்கள் என்று கேட்கிறீர்கள். அது “உலக மக்களின்” வீடாக மாறக்கூடும்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் நிறுத்தம் நீடித்த அமைதியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த போர் நிறுத்தம், ரத்தக்களரி மற்றும் கொலைகளை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும். நட்பு நாடுகளுடனான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பிராந்தியம் முழுவதும் அமெரிக்க வலிமையை மீண்டும் கட்டியெழுப்பவும் எனது நிர்வாகம் விரைவாக செயல்பட்டு வருகிறது.
யூத எதிர்ப்பைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பணியகம் (UNRWA) ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. ஹமாஸுக்கு பணத்தை வழங்கியதும் மனிதகுலத்துக்கு மிகவும் விசுவாசமற்றதுமான ஐ.நா. நிவாரண மற்றும் பணியகத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஈரானிய ஆட்சி மீது அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற எங்கள் கொள்கையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். ஈரானுக்கு எதிராக, மீண்டும் ஒருமுறை மிகவும் ஆக்ரோஷமான சாத்தியமான தடைகளை அமுல்படுத்துவோம். ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம். மேலும், பிராந்தியத்திலும் உலகிலும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் ஈரானின் ஆட்சித் திறனைக் குறைப்போம்.
மக்கள் காஸாவுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பலஸ்தீனர்களுக்கு காஸா மிகவும் துரதிர்ஷ்டவசமான இடம் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நரகத்தில் வாழ்வதைப் போல வாழ்கிறார்கள். காஸா, மக்கள் வாழ்வதற்கான இடமல்ல” என தெரிவித்தார்.
அதேநேரத்தில், 45 கிலோமீட்டர் நீளமும் அதிகபட்சம் 10 கிமீ அகலமும் கொண்ட, கடலோரப் பகுதியான காஸாவை அமெரிக்கா எவ்வாறு, எந்த அதிகாரத்தின் கீழ் கைப்பற்றி ஆக்கிரமிக்க முடியும் என்ற கேள்விக்கு ட்ரம்ப் நேரடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஸாவை இனச்சுத்திகரிப்புச் செய்யும் ட்ரம்பின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்துள்ள ஹமாஸ் இந்தத் தீர்மானத்தை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல் என வர்ணித்துள்ளது.
‘‘காஸாவைக் கைப்பற்றும் ட்ரம்பின் கருத்துக்கள் அபத்தமானவை. காஸா மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் பிராந்தியத்தில் பதற்றத்தை குழப்பத்தையும் உருவாக்குவதே இதன் நோக்கம்’’ என ஹமாஸின் சிரேஷ்ட அதிகாரி சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
‘‘ட்ரம்பின் இந்த அறிக்கைகள் பலஸ்தீனம் மற்றும் பிராந்தியம் பற்றிய குழப்பத்தையும் ஆழமான அறியாமையையும் பிரதிபலிக்கின்றன. காஸா ஒன்றும் பொதுவான நிலம் அல்ல. அது வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு சொத்தும் அல்ல. இஸ்ரேலுக்கு ஆதரவானதும் பலஸ்தீனுக்கு எதிரானதுமான அமெரிக்க சார்பு தொடர்கிறது’’ என ஹமாஸின் மூத்த அதிகாரி இஸ்ஸத் அல் ரேஷிக் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்துள்ள பலஸ்தீன விடுதலை அமைப்பு பலஸ்தீன மக்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்த தீர்மானத்தையும் ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. ‘‘சர்வதேச சட்டத்திற்குட்பட்ட வகையில் இரு அரசு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பலஸ்தீன தலைமைத்துவம் உறுதியாகவுள்ளது’’ என பலஸ்தீன விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல் ஷெய்க் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ எமது மக்களின் உரிமைகள் மீறப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதற்காகவே நாம் பல தசாப்தங்களாக போராடி வருகிறோம். ட்ரம்பின் அழைப்புக்கள் சர்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளன. இரு அரசு தீர்வின் அடிப்படையில் 1967 ஆம் ஆண்டு இருந்த எல்லைகளின் அடிப்படையில் ஜெரூசலமை தலைநகராக கொண்ட ஒரு பலஸ்தீன அரசை நிறுவாமல் பிராந்தியத்தில் அமைதியையும் சமாதானத்தையும் அடைய முடியாது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டர் மேர்பி ட்ரம்பின் அறிவிப்பை கடுமையாக கண்டித்துள்ளார். ‘‘ காஸா மீது அமெரிக்கா படையெடுக்குமானால் அது ஆயிரக் கணக்கான அமெரிக்க வீரர்களின் படுகொலைக்கும் மத்திய கிழக்கில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் போருக்குமே வழிவகுக்கும். இது ஒரு மோசமானதும் நகைச்சுவையானதுமான அறிவிப்பாகும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவும் ட்ரம்பின் அறிவிப்பை நிராகரித்துள்ளது. ‘‘மேற்குக் கரையை முழுமையாக கட்டுப்படுத்தவும் காஸாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. இவ்வாறான கூட்டுத் தண்டனை கொள்கையை ரஷ்யா நிராகரிக்கிறது’’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ குறிப்பிட்டுள்ளார்.
காஸா மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள சீனா இரு அரசு தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.ட்ரம்பின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள துருக்கி பலஸ்தீனில் அமைதி நிலைநாட்டப்பட்டால் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை மீளத் தொடங்குவது பற்றி சிந்திக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரான்சும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. இதனை சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் செயலாக வர்ணித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்டோப் லெமோயி காஸாவின் எதிர்காலம் பலஸ்தீன அரசின் கைகளிலேயே இருக்க வேண்டும் எனவும் அதனை மூன்றாவது நாடு கட்டுப்படுத்தக் கூடாது என்றும் தெரிவி்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி பலஸ்தீனர்களின் எதிர்காலம் அவர்களது சொந்த பூமியிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்கள் காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவர்களது தாயகங்களில் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli