புத்­த­ளத்தில் சோன­கர்கள்

0 61

இலங்கை முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யானோர் ‘சோனகர்’ ஆவர். சிங்­கள மொழியில் “யொன்” அல்­லது “யொன்னு” எனவும் பாளியில் “யொன்ன” என்றும் சமஸ்­கி­ருத மொழியில் “யவன” எனவும் பிர­யோ­கிக்­கப்­படும் வார்த்­தை­களின் அர்த்தம் ‘அறபு நாட்­டவர்’ என்­ப­தாகும். தற்­போது சிங்­க­ளத்தில் ‘யோனக’ என்ற பதம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

பண்­டைய சிங்­க­ள­வர்கள் “சோனகர்” என்­பதைக் குறிப்­பிட “யொன்” என்ற சொல்லைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்கு இடப் பெயர்­களும், பதவிப் பெயர்­களும் ஆதா­ர­மா­யுள்­ளன. “யொன் வீதிய” (சோனகத் தெரு), “யொன் கல” (சோனகக் குன்று), “யொன் பிஸவ்வ” (சோனக இராணி) போன்­றன இதற்கு உதா­ர­ணங்­க­ளாகும்.

கட­லோ­டிகள் எனப் பொருள்­படும், “மரக்­கல மினின்ஸு” என்ற சிங்­களச் சொல்லும் இவர்­க­ளையே குறிக்­கின்­றது. இச்சொல் சோன­கர்­களின் பூர்­வீ­கத்­தையும் தொழி­லையும் விளக்­கு­வதாய் அமை­கின்­றது. வர்த்­த­கத்தில் திற­மை­மிக்க இவர்கள், இலங்­கையில் பிர­சித்­தி­பெற்­றி­ருந்த பொருட்­களை சர்­வ­தேச ரீதியில் சந்­தைப்­ப­டுத்தி, இலங்­கையின் புகழை மேலோங்கச் செய்­தனர். இலங்கைச் சோன­கர்கள், இந்­நாட்டின் மன்­னர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக, தேசிய இறை­மைக்கும் பாது­காப்­புக்­கு­மாகப் போர்­களில் ஈடு­பட்­டுள்­ள­துடன் கால­னித்­துவ ஆட்­சிக்கு முன்­னி­ருந்தே அர­சியல், பொரு­ளாதார, மருத்­துவத் துறை­க­ளிலும் தமது பங்­க­ளிப்பை வழங்கி வந்­துள்­ளனர்.

இலங்கைச் சோன­கர்கள் அற­பி­களின் சந்­த­தி­யினர் என வர­லாற்று மூலா­தா­ரங்கள் நிரூ­பிக்­கின்­றன. புரா­தன இந்து, புவி­யியல் நூல்­களில், ‘அறே­பியா’ என்­பது “சோனகம்” என அழைக்­கப்­பட்­டது. எனவே “சோனகர்” என்போர் அறே­பியர் அல்­லது சோனக தேசத்தைச் சேர்ந்தோர் என Rottler அக­ரா­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இலங்கைச் சோன­கர்கள், பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் குடி­யே­றிய அறபுக் குடி­யேற்­ற­வா­சி­களின் வழித் தோன்­றல்­களே.
கி.பி. எட்டாம் நூற்­றாண்­டிலே அறே­பிய ஹாஷிம் சந்­த­தி­யினர், இலங்­கையில் குடி­யே­றினர் என இலங்­கையின் முதல் பிர­தம நீதி­ய­ர­சரும் மாட்­சிமை தங்­கிய மன்­னரின் ஆள்­சபைத் தலை­வ­ரு­மான சேர் அலெக்­சாந்தர் ஜோன்ஸ்டன் குறிப்­பி­டு­கிறார். இவர்கள் கீர்த்­தி­மிக்க முஸ்லிம் வம்­சத்­தவர் ஆவர். எனினும் இஸ்லாம் தோன்­று­வ­தற்கு முன்­ன­ரி­ருந்தே அறபு, பார­சீக வர்த்­த­கர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். பாவா ஆதம் மலை (Adam’s Peak)இங்கு அமைந்­தி­ருப்­பதும் இதற்கு ஒரு பிர­தான கார­ண­மாகும்.

போர்த்­துக்­கேயர் இலங்­கையில் காலடி எடுத்­து­வைத்­ததன் பின்னர், இங்கு வாழ்ந்த முஸ்­லிம்­களை அவர்கள், “மொரொஸ்” அல்­லது “முஅர்ஸ்” என்று அழைக்­க­லா­யினர். போர்த்­துக்­கேயர் அந்த வார்த்­தையை அற­பி­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய வழித் தோன்­றல்­க­ளுக்­குமே உப­யோ­கித்­தனர் என கால­னித்­துவ ஆட்­சி­யாளர் சேர் ஜேம்ஸ் எமெர்சன் டெனண்ட் கூறு­கிறார். ஆங்­கி­லேய ஆட்­சி­யின்­போது ‘முஹம்­ம­தியர்’ (Mohammedan) எனவும் முஸ்­லிம்கள் அழைக்­கப்­பட்­டனர். ஆனால் போர்த்­துக்­கே­யரின் வரு­கைக்கு முன்­னரே சிங்­க­ள­வர்கள், இலங்கை முஸ்­லிம்­களை “யொன்” அல்­லது “யொன்னு” என்றும் தமி­ழர்கள் இவர்­களை, “சோனகர்” என்றும் அழைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிரித்­தா­னிய கால­னித்­துவ நிர்­வா­கி­களும், இலங்­கை­ய­ரான முதல் சிவில் சேவை உத்­தி­யோ­கத்தர், கல்­பிட்­டியைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி (1834) போன்­றோரும் தமது வர்த்­த­மானித் தொகுப்­பு­க­ளுக்­காக, ‘சோனகர்’ என்ற தனித்­து­வ­மான மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு வகையை உரு­வாக்­கினர். அதே­வேளை ஆங்­கி­லேயர் காலத்தில், ‘இலங்கைச் சோனகர்’ (Ceylon Moors) என்ற தனித்­துவ அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­த ­வேண்­டிய அவ­சி­யமும் உரு­வா­னது.

இலங்கை சோன­கர்கள், ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்டோர் என்­பதை நிறுவ, சோனக சங்கத் தலை­வ­ரான ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் அவர்கள் பெரும் சிரத்­தை­யெ­டுத்தார். இதன் தொடர்ச்­சி­யாக, இலங்கை வாழ் சோன­கர்கள், ஆங்­கி­லேய அர­சுக்கு விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க தேசா­தி­பதி கோர்டன் என்­பவர் எம்.சீ. அப்­துர்­ரஹ்மான் அவர்­களை 29.10.1889 இல் சட்­ட­வாக்க சபையின் முத­லா­வது சோனகர் பிர­தி­நி­தி­யாக நிய­மித்தார்.

புத்­தளம் பிர­தே­சத்தில் சோனகர் செல்­வாக்கு மிக நீண்­ட­கா­ல­மாக இருந்­துள்­ளதை வர­லாற்றுக் குறிப்­புக்கள் வாயி­லாக அறிய முடி­கின்­றது. புத்­தளம் பிர­தே­சத்­துக்குத் தெற்கே, தெதுறு ஓயாவும் வடக்கே, கலா ஓயாவும் இந்து சமுத்­தி­ரத்தில் சங்­க­மிக்­கின்­றன. கலா ஓயா­வா­னது பொன்­ப­ரப்பி ஆறு எனவும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. இது கட­லுடன் கலக்கும் இடத்­துக்கு நேர் எதிர்த் திசையில் தென் இந்­தி­யாவின் பண்­டைய துறை­மு­க­மான காயல் நகரில், தாமிர வருணி ஆறு கடலில் வந்து விழு­கின்­றது. காயல் பட்­டி­ன­மா­னது, “சோனகர் பட்­டினம்” எனவும் அழைக்­கப்­பட்­டுள்­ளது.

வர­லாற்றில் தெதுறு ஓயா, கலா ஓயா ஆகிய இரண்­டுமே ‘சோனகர் நதி’ என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­விரு நதி­க­ளுக்கும் இடைப்­பட்ட புத்­தளம் பிர­தே­சத்தில் பண்­டைய அறபுக் குடி­யி­ருப்­புக்கள் அமைந்­தி­ருந்­த­தாக வர­லாற்­றா­சி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். பொன்­ப­ரப்பி, குதி­ரை­மலைப் பிர­தே­சங்­களில் அறபுக் குடி­யி­ருப்­புக்கள் அமைந்­தி­ருந்­தன. அதன் எச்­ச­மாக இன்றும் குதிரை மலையில் பழை­மை­யான ஸியாரம் ஒன்று உள்­ளது.

மகா­வம்­சத்­துக்கு மூன்று நூ.ஆ. முன்னர், கி.பி. 150 இல் வரை­யப்­பட்ட தொல­மியின் வரை­ப­டத்தில் (Claudius Ptolemy) தெதுறு ஓய என்ற ஆறா­னது, சோனா நதி (Soana Fluvius) அல்­லது அற­பிகள் நதி (River of the Arabs) எனக்­ கு­றிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­னது இலங்கை – அறபு உறவின் தொன்­மையை நிரூ­பிப்­ப­தா­கவும் அவர்­களின் வணிகக் குடி­யேற்­றங்கள் இங்கு காணப்­பட்­ட­தற்­கான ஆதாரம் எனவும் Lorna Dewaraja (1994) குறிப்­பி­டு­கிறார்.

கலா ஓயாவும் தொன்­மை­யான தேசப்­ப­டங்­களில் ‘சோனகர் நதி’ எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­னது இப்­பி­ர­தே­சத்தில் அறே­பியர் வாழ்ந்­ததை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­யுள்­ளது. சுமார் 2300 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் (கி.மு. 327 -– 326) மகா அலெக்­சாந்­த­ரின்­ஆ­ணையின் பிர­காரம் இலங்­கையின் பூகோள வரை­ப­டத்தை வரைந்த கிரேக்க மாலுமி, Onesicritus, இன்­றைய புத்­தளம் மற்றும் அதனை சூழ­வுள்ள பிர­தே­சத்தில் ‘சோனாள்’ களின் குடி­யற்­றங்­களைக் கண்­ட­தா­கவும் இது விஜ­யனின் வரு­கைக்கு முற்­பட்­டது எனவும், சீ. சுந்­த­ர­லிங்கம் குறிப்­பிட்­டி­ருப்­ப­தாக 1969 மார்ச் 30 த டெய்லி மிரர் பத்­தி­ரி­கையில், மர்சூக் புர்ஹான் எழு­தி­யுள்ளார்.

பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம், அனஸ் அவர்கள், தனது “புத்­தளம் முஸ்­லிம்கள் வர­லாறும் வாழ்­வி­யலும் (2009) என்ற நூலில், Soana Fluvius நதியை J.R. சின்­னத்­தம்பி அவர்கள், ‘கலா ஓயா’ என அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தாகக் குறிப்­பி­டு­வ­துடன் ‘சோனா’ எனப்­ப­டு­வது சோன­கரைச் சுட்­டு­வ­தா­கவும் சொல்­லு­கிறார். மேலும் சமஸ்­கி­ருதப் பேரா­சி­ரி­ய­ரான தோமஸ் அவர்கள், கலா ஓயாவை, மகா­வம்­சத்தில் குறிப்­பிட்­டுள்ள ‘கோனக’ அல்­லது ‘ஹோனக்க நதி’ என அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறிப்­பி­டு­கிறார்.

ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­களில் சமூகத் தலை­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். அப்­ப­த­வி­களுள் ஒன்று Head Moorman என்­ப­தாகும். புத்­தளம் நகரில், தர்ஹா அல்­லது பிர­தான பள்­ளி­வாசல் தலைமைப் பொறுப்பில் இருப்­ப­வ­ருக்கு ‘சோனகர் தலைவர்’ பதவி கொடுக்­கப்­ப­டு­வது மர­பாக இருந்­துள்­ளது.

தற்­போது புத்­தளம் பெரி­ய­பள்ளி அமைந்­தி­ருக்கும் இடத்தில் முன்னர் அழ­கிய தர்ஹா ஒன்று இருந்­த­தாக, சைமன் காசிச்­செட்டி குறிப்­பி­டு­கிறார். அதனை “ஊர் மரைக்கார்” என அழைக்­கப்­பட்ட ‘மரைக்கார் குடும்­பத்­தினர்’ நிரு­வ­கித்து வந்­துள்­ளனர். இவர்­களின் மூதா­தையர் கல்­பிட்­டியை சேர்ந்­த­வர்­க­ளாவர். ‘சோனகர் தலைவர்’ பதவி இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் சோனகர் தலை­வர்கள் வரி­சையில் 1803 மாசி 01 இல் முத­லா­வ­தாக அஹு­மது நெய்னா மரைக்கார் நிய­மிக்­கப்­பட்டார். அவரே தர்ஹா டிரஸ்­டி­யு­மாவார். இவரின் மர­ணத்தின் பின்னர் 1845 ஆனி மாதம் 25 ஆம் திக­தி­யன்று அ. முஹம்­மது நெய்னா மரைக்கார் சோனகர் தலை­வ­ரானார். பின்னர் 1899 மார்­கழி 06 அன்று முஹம்­மது அலி­ம­ரைக்கார் சோனகர் தலை­வ­ரானார். அவ­ருக்குப் பின்னர் தர்­ஹாவைப் பொறுப்­பேற்ற, அவரின் புதல்வர் உ.சி.ம.மு. முஹம்­மது காசிம் மரைக்கார் 1917 புரட்­டாதி 14 அன்று சோனகர் தலை­வ­ரானார்.

சாலிஹ் மரைக்­காரின் தந்­தை­யான சி.அ.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் 1923 இல் தேசா­தி­பதி வில்­லியம் மாணிங் அவர்­களால் இரண்­டா­வது ‘ஹெட் மூர்மேன்’ ஆக நிய­மிக்­கப்­பட்டு சிறிது காலத்தின் பின்னர், ‘மூர்­மேன்’­ஆனார். 1946 இல் எம்.ஏ. சாலிஹு வெளி­யிட்ட புத்­தளம் முஹி­யத்தீன் தர்ஹா என்ற கையேட்டில் இத்­த­க­வல்கள் உள்­ளன.

கொழும்பு, கல்­பிட்டி, சிலாபம், திரு­கோ­ண­மலை, காலி, மாத்­தறை போன்ற பிர­தே­சங்­க­ளிலும் சோனகர் தலை­வர்கள் நிய­மனம் இடம்­பெற்­றுள்­ளது. 1824 க்கு முன்னர் கல்­பன்­டைனில் (கல்­பிட்டி) சின்­னத்­தம்பி அவர்­களும் சிலா­பத்தில் கலெக்டர் பத­விக்கு அடுத்­த­ப­டி­யாக உமர் மரைக்கார் சேகு லெப்பை மரைக்கார் அவர்­களும் சோனகர் தலை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். 1772–1847 காலப்­ப­கு­தியில் ஷெய்க்­கடி மரைக்கார் எனப்­படும் Dr. உதுமா லெப்பை மரைக்கார் ஷெய்க் அப்துல் காதர் மரைக்கார் கொழும்பில் சோனகர் தலை­வ­ரா­யி­ருந்­துள்ளார். இணை­யத்தில் இத்­த­க­வல்­களைப் பெறலாம்.

போர்த்­துக்­கேய எழுத்­தோ­வி­யங்­களில் காணப்­படும் ‘ஜன­வம்ச’ பரம்­பரைக் கதை­களின் பிர­காரம் 14 ஆம் நூற்­றாண்­ட­ளவில் சோன­கர்கள் இலங்­கைக்கு நெசவுத் தொழிலை அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளனர். இவர்கள் ‘சலா­கம’ அல்­லது ‘சாலியர்’ எனவும் அழைக்­கப்­பட்­டனர். (அல் இஸ்லாம் – ஜன­வரி 1967) சிலாபம் நகரில் ‘சோனகர் தெரு’ என்ற ஒரு வீதி இருக்­கின்­றது.

இவர்கள் குடி­யே­றிய பிர­தே­சங்­களில் புத்­த­ளமும் ஒன்று. இவர்கள் வாழ்­வ­தற்­காகத் தற்­போ­தைய மஸ்ஜித் வீதி, இரண்­டாம்­கு­ருக்குத் தெரு, மரைக்கார் தெரு, போல்ஸ் வீதி ஆகிய எல்­லை­க­ளுக்­கி­டை­யி­லான பரந்த நிலப்­ப­ரப்பு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று இத்­தெ­ருக்கள் “பெரிய பாவோடித் தெரு”, “சிறிய பாவோடித் தெரு” என அழைக்­கப்­பட்­டன. “பாவோ­டுதல்” என்­பது நெசவுத் தொழிலைக் குறிக்கும்.

இலவத் தம்பி அம்­ப­ல­கா­ரனார், சேக்­காலி அம்­ப­ல­கா­ரனார், செய்­யது ஆகிய குடும்­பத்­தினர் முதலில் இங்கு குடி­யே­றினர். அவர்­களின் பரம்­ப­ரை­யினர் இன்று புத்தளம் நகரில் வாழ்கின்றனர். வான் வீதியில் இவர்கள் தோண்டிய குளம், அம்பலகாரனார் குளம் என்று பெயர்பெற்றது. கோடை காலத்தில் பொன்பரப்பி ஆற்றில் இவர்கள் தங்கும் இடம் இன்றும் “அம்பலகாரனார் விடுதி” என அழைக்கப்படுகின்றது. இவை பற்றிய மேலதிகத் தகவல்களை, ஏ.என்.எம். ஷாஜஹான் எழுதிய “புத்தளம் வரலாறும் மரபுகளும்” என்ற நூலில் காணலாம்.

இலங்கை முஸ்லிம்களில் சோனகர், மலாயர், மேமன், போராக்கள் போன்ற பல பிரிவினர் அடங்குவர். சமய ரீதியில் இவர்கள் ஒன்றுபட்டாலும் கலாசார ரீதியிலும் வேறு சில இன ரீதியான அம்சங்களிளும் இவர்களுக்கிடையில் வேறுபாடுகளுண்டு. சோனகர் மத்தியில், தமது தனித்துவ அடையாளங்களைப் பேணுவது அருகிவரும்போதிலும் இன்னும் அவை முற்றுமுழுதாக மறைந்துவிடவில்லை. இலங்கை சோனகர் பற்றிய ஆய்வுகள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய உலகில், நவீன விஞ்ஞான முறைகளைக் கையாளுவதன் மூலம் மேலும் பல தீர்க்கமான முடிவுகளுக்கு வரலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.