குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்திற்கு சவூதி 10.5 மில். டொலர் நிதி ஒதுக்கீடு
நிதி திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சவூதி நிதியத்திற்கிடையே ஒப்பந்தம் கைச்சாத்து
(றிப்தி அலி)
கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேராதனை – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமாகவுள்ள தொகையே இந்த பால நிர்மாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான திருத்தப்பட்ட ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் (சட்டம்) அப்துல்மொஹ்சன் ஏ. அல்முத்லாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், பேராதனை – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்தில் மீதமுள்ள நிதியினை நெடுஞ்சாலை வலையமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பால நிர்மாணத்தின் ஊடாக கிண்ணியா பிரதேசத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து மற்றும் வணிகத் தேவைகளை இலகுபடுத்தப்படவுள்ளது.
இதனிடையே, திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபை பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைப்புக்காக கடந்த 2022 நவம்பர் 23 ஆம் திகதி மூடப்பட்டிருந்தபோது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இயந்திரப் படகு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய் உட்பட சுமார் 8 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli