இணை­யத்தின் இர­க­சி­யங்கள்

0 71

இணை­யத்தின் இர­க­சி­யங்கள்
இணை­யத்தின் இர­க­சி­யங்­களை இளம் தலை­மு­றை­யினர் மாத்­தி­ர­மன்றி வயது வந்­த­வர்­களும் தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­ன­தாகும். பெரும்­பா­லா­ன­வர்கள் இணை­ய­வழி சிக்­கல்­களில் மாட்டிக் கொள்­வ­தற்கு இதுவும் ஒரு கார­ணி­யாகும். எனவே, இப்­ப­கு­தியில் இணையம் தொடர்­பான சில முக்­கி­ய­மான இர­க­சி­யங்­களை பற்றி அவ­தா­னிக்­கலாம்.

இணைய வழி தக­வல்­களின்
நிலை­பே­றான தன்மை
நாம் சமூக வலைத்­த­ளங்­களில் பகிரும் செய்­திகள், தக­வல்கள், புகைப்­ப­டங்கள், மற்றும் வீடியோ காட்­சிகள் யாவும் நிலை­யா­னவை. அவற்­றுக்கு அழிவு கிடை­யாது. அவற்றை முற்­றாக நீக்­கு­வது என்­பது சாத்­தி­ய­மான ஒன்­றல்ல. இதனைப் பலர் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தில்லை. ஒருவர் பகிர்­கின்ற எந்த ஒரு இணைய உள்­ள­டக்­கமும் உரி­ய­வரின் கணக்­கி­லி­ருந்து அழிக்­கப்­பட்­டாலும், கரு­வி­க­ளி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டாலும் அவை உண்­மையில் பரந்த இணை­ய­வெ­ளியில் பல்­வேறு இடங்­களில் சேமிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு இடத்தில் அழிந்­தாலும் அவற்றை பல வழி­களின் மூலம் பெற முடியும். அதே­போன்று, சமூக வலைத்­த­ளங்­களில் உள்ள கணக்­கு­களை அழித்­தாலும் பல சந்­தர்ப்­பங்­களில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஓர் இணைய உள்­ள­டக்கம் வெளி­யி­டப்­பட்ட பின்னர் அது உலகம் முழுக்க பரவி விடு­கின்­றது. ஒருவர் பகிரும் தக­வல்­கள் பல சேவர்­களில் பதி­வா­கின்­றன. சேமிக்­கப்­ப­டு­கின்­றன. அதே­வேளை, ஒருவர் தனது சமூக வலைத்­த­ளத்தில் பகிரும் தக­வல்­களை ஏனை­ய­வர்கள் ஸ்கிரீன் சாட் எடுக்க முடியும். எடுத்­துக்­காட்­டாக இலங்­கையில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வெளி­யான நடி­கர்கள், நடி­கைகள் மற்றும் விளை­யாட்டு வீரர்­களின் அந்­த­ரங்க வீடி­யோக்­களை அவர்கள் தமது கணக்­கி­லி­ருந்து நீக்­கி­னாலும் அவற்றை முழு­மை­யாக அழிக்க முடி­ய­வில்லை. பல்­வேறு இணை­ய­த­ளங்­களில் அவர்­க­ளது அந்­த­ரங்க வீடி­யோக்­களும் புகைப்­ப­டங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. அவை தனித்­தனி உள்­ள­டக்­கங்­க­ளாக உள்­ளன. என­வேதான் எந்த ஒரு விட­யத்­தையும் இணை­யத்தில் பகிர்­வ­தற்கு முன்னர் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, தனிப்­பட்ட ஒருவர் தன்­னி­டத்தில் மாத்­திரம் வைத்­தி­ருக்க வேண்­டிய புகைப்­ப­டங்­களை அல்­லது வீடி­யோக்­களை பொது வெளியில் வெளி­யி­டு­வதை தவிர்த்துக் கொள்ள வேண்­டு­மென எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

இணைய இர­க­சி­யங்கள்
இணை­ய­வெளி என்­பது அந்­த­ரங்­க­மா­ன­தல்ல. அது ஒரு பொது­வெளி. திறந்­த­வெளி. சிலர் தமது சகல அசை­வு­க­ளையும் சமூக ஊட­கங்­களில் பதி­வி­டு­வ­துண்டு. சிலர் செல்லும் பய­ணங்கள், வீட்டு வைப­வங்கள், உண்ணும் உணவு வகை, செல்லும் வாக­னங்கள், செல்­லப்­பி­ரா­ணிகள், பிள்­ளை­களின் புகைப்­ப­டங்கள் மற்றும் கொண்­டாட்ட நிகழ்ச்­சிகள் என்­ப­வற்றை ஒரு நேரடி அஞ்சல் போல பதி­வி­டு­வ­துண்டு. இந்த சுதந்­தி­ரத்தை இணையம் சக­ல­ருக்கும் வழங்­கு­கி­றது. சிலர் எமது புகைப்­ப­டங்­களை நாம் எப்­போதும் வெளி­யி­டலாம், எந்த தினத்­திலும் வெளி­யி­டலாம் என நினைப்­ப­துண்டு. சிலர் தமது குழந்­தைகள் கட்டம் கட்­ட­மாக வளரும் விதத்தை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டு­வ­துண்டு. அதற்கும் அவர்­க­ளுக்கு உரிமை உண்டு. சிலர் ஏனை­ய­வர்­களை கோப­மூட்­டு­வ­தற்­காக தமது சந்­தோ­ச­மான வாழ்க்­கையின் கட்­டங்­களை மற்­ற­வர்­க­ளுக்கு காட்டி அதில் ஆனந்­த­ம­டை­வ­­துண்டு. இவற்றை விமர்­சிக்­கவோ தடுத்து நிறுத்­தவோ யாருக்கும் உரிமை கிடை­யாது. ஆனால் இவ்­வாறு தனிப்­பட்ட விட­யங்­களை அளவு கடந்து பதி­வி­டும்­போது அது பல விப­ரீ­தங்­களை கொண்டு வர முடியும். முதலில் செயற்கை நுண்­ண­றிவு கட்­டுப்­பா­டு­களைத் தாண்டி வளர்ச்சி அடைந்து வரு­கின்­றது. இந்­நி­லையில் எமது தனிப்­பட்ட விட­யங்­களை எதி­ரிகள் தவ­றாக பயன்­ப­டுத்த முடியும். சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­படும் புகைப்­ப­டங்­க­ளையும் திரி­வு­ப­டுத்தி நிர்­வாண தோற்­றங்­களை உரு­வாக்கி இழி­வு­ப­டுத்த முடியும். இவ்­வாறு அந்­த­ரங்கப் புகைப்­ப­டங்கள் வீடி­யோக்­களை வெளி­யிட்ட பல சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

ஒருவர் தனது தனிப்­பட்ட விட­யங்­களை பதி­விடும் போது அவர்­களின் தர­வு­களை சேக­ரித்து அதன் வாயி­லாக அவர்­க­ளது கணக்­கு­களை முடக்க முடியும். எமது நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் கொலை, கொள்ளை, வழிப்­பறி மற்றும் பாலியல் பலாத்­காரம் போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற கார­ண­மாக அமைந்­தது சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்ட தனிப்­பட்ட விட­யங்­க­ளாகும். ஒருவர் எங்கு சாப்­பி­டு­கின்றார், எப்­போது பயணம் செய்வார், எப்­போது வீட்­டுக்கு திரும்பி வருவார், வீட்டில் யார் இருக்­கின்­றார்கள், எந்த வாக­னத்தில் பய­ணிக்­கின்­றார்கள் என்­பதை பல­ரது சமூக வலைத்­த­ளங்கள் எதி­ரி­க­ளுக்கு காட்டிக் கொடுத்து விடு­கின்­றன. சமூக வலைத்­த­ளங்­களில் பிர­வே­சிப்­ப­தற்கு முன்னர் மிகுந்த நன்­ம­திப்­புடன் காணப்­பட்ட எழுத்­தா­ளர்கள், சமூகத் தலை­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள், ஆசி­ரி­யர்கள், மற்றும் அதி­கா­ரிகள் போன்றோர் தம் சமூ­க­வலைத் தளங்­களில் வெளிக்­காட்டும் பொது விழு­மி­யங்­க­ளாலும் அவர்­க­ளது பதி­வு­க­ளாலும் செல்­வாக்­கி­ழந்து விடு­கின்­றனர். அவர்கள் எவ்­வ­ளவு குறு­கி­ய­மனம் கொண்­ட­வர்கள் என்­பதை சமூக வலைத்­த­ளங்கள் காட்­டி­க் கொ­டுத்து விடு­கின்­றன.

எண்­ணிமப் பாதத்­தடம்
எண்­ணிமப் பாதத்­தடம் (Digital Footprint) என்­பது இணைய வெளியில் நாம் மேற்­கொள்ளும் சகல காரி­யங்­களும் பதி­யப்­பட்டு, நமது ஒட்டு மொத்த இணைய நடத்­தையை தீர்­மா­னிக்கும் சான்­று­க­ளாக அமை­வதைக் குறிக்கும். குறிப்­பாக இது இணைய வெளியில் எவ்­வாறு நடந்து கொள்­கின்றோம் என்­பதைக் குறிக்கும். நாம் இணை­யத்­த­ளத்தில் அல்­லது சமூ­க­வலைத் தளங்­களில் பிர­வே­சித்து செய்­கின்ற லைக், கமெண்ட் மற்றும் செயார் போன்ற ஒவ்­வொரு செய்­கையும் இணை­ய­த­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. எமது சகல தேடுதல் வர­லாறும் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது. நாம் எந்த இணை­ய­த­ளத்தில் பிர­வே­சித்தோம், எப்­போது பிர­வே­சித்தோம் என்­பது முதல் எமது ஒட்­டு­மொத்த இணை­ய­வெளி நட­வ­டிக்­கை­களும் நமது வர­லா­றாகப் பதி­யப்­ப­டு­கி­றது. நாம் இணை­ய­வெ­ளியில் எவ்­வாறு நடந்து கொள்­கின்றோம் என்­பதைப் பொறுத்து, நாம் எவ்­வா­றா­ன­வர்கள் என்­பதைப் பிறர் கணிக்க முடியும். என­வேதான், தனியார் நிறு­வ­னங்­களில் புதி­தாக நேர்­முகப் பரீட்­சைக்கு வரும் நபர்­களை பணிக்கு தெரிவு செய்­வ­தற்கு முதல் அவர்கள் இணைய உலகில் எவ்­வாறு நடந்து கொள்­கி­றார்கள் என்­பதை தேடிப் பார்க்­கின்­றனர். அதிக கல்வித் தகை­மை­களைக் கொண்­ட­வர்­களின் எண்­ணிமப் பாதத்­தடம் ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமை­யா­விட்டால் அவர்கள் தமக்­கான வாய்ப்­பு­களை இழக்க நேரிடும். சம­கால நேர்­மு­கத்­தேர்­வு­களில் எண்­ணிமப் பாதத்­தடம் தொடர்­பான தேடுகை முக்­கியம் பெறு­வதால் தொழில் நாடு­ப­வர்கள் இந்த விட­யத்தில் கவ­ன­மாக நடந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. சில­ரது இணை­யத்­தளப் பாவனை அவர்­களின் நண்­பர்கள் யார், அவர்­களின் சமூகப் பழக்­க­வ­ழக்கம், எத்­த­கைய விட­யங்­களை பதி­வேற்றம் செய்­கின்­றார்கள், எத்­த­கைய உள்­ள­டக்­கங்­களை பகிர்ந்­து­கொள்­கின்­றார்கள், நண்­பர்­க­ளு­ட­னான நடத்தை, கருத்து வெளிப்­பாட்டு மனப்­பாங்கு, மற்­ற­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு எதிர்­வி­னை­யாற்றும் பண்பு என்­ப­ன­வற்றை இல­குவில் காட்டிக் கொடுக்­கின்­றன.

சில­போது, ஆரோக்­கி­ய­மற்ற எண்­ணிமப் பாதத்­த­டங்­களை கொண்­டி­ருப்­ப­வர்கள் கல்­லூ­ரியில் அனு­ம­தியை இழக்க நேரி­டு­கி­றது. மாறாக நேர்த்­தி­யான இணை­ய­த்தள ஈடு­பாட்டை கொண்­ட­வர்கள் புலமை பரி­சில்­களை இல­குவில் பெற்றுக் கொள்­கின்­றனர். பயி­லு­னர்­க­ளாக, பங்­கேற்­பா­ளர்­க­ளாக வாய்ப்­பு­களை பெற்றுக் கொள்­கின்­றனர். எண்­ணிமப் பாதத்­தடம் ஒரு­வ­ரது இணை­ய­வழி நற்­பெ­யரை அதிகம் பாதிக்­கின்­றது. நேர் நிலை­யான பிர­தி­ப­லிப்பை தடுக்­கி­றது. நண்­பர்கள் வலைப்­பின்னலில் உள்­ள­வர்கள் மத்­தியில் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­கி­றது. மாறாக, நல்ல எண்­ணிமப் பாதத்­தடம் என்­பது அதிக நட்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கி­றது. வலு­வான தகுதி வாய்ந்­த­வர்­களை வலைப்­பின்­னலில் அறி­மு­கப்­ப­டுத்தித் தரு­கின்­றது. நன்­ம­திப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. மக்கள் ஆத­ரவை ஏற்­ப­டுத்­து­கின்­றது. எனவே, ஒருவர் இணைய உலகில் எவ்­வாறு நடந்து கொள்­கின்றார் என்­பது அவ­ரது தனிப்­பட்ட, குடும்ப, சமூக, மற்றும் தொழில் வாழ்க்­கையில் அதிகத் தாக்­கத்தை செலுத்­து­கி­றது.

மெய்­நிகர் நாச­கா­ரர்கள் (Online Predators)
இணை­ய­வெ­ளியில் பெரும்­பாலும் போலி­யான பெயர்­களில் இருந்­து­கொண்டு சிறு­வர்கள், இளை­ஞர்கள் மற்றும் பெண்­க­ளுக்கு தீங்­கி­ழைப்­ப­வர்­க­ளையே இது குறிக்­கின்­றது. இணை­ய­வெ­ளியில் எவரும் சொந்த பெயரில் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை. எவரும் வேறு பெயர்­களில் வாழலாம். தேவை­யா­ன­போது மறைந்தும் இருக்­கலாம். தேவை­யா­ன­போது தோன்றி மறை­யலாம். பல பெயர்­களில் பல கணக்­கு­களில் மறைந்­தி­ருக்­கின்­ற­வர்­களும் உள்­ளனர். இவ்­வா­றான­வர்கள் சமூக வலைப்­பின்­னல்­களில் உள்ள நண்­பர்­க­ளுடன் தவ­றாக நடந்து கொள்­வதை நாம் பல சந்­தர்ப்­பங்­களில் கண்­டி­ருக்­கின்றோம். ஆண் பெண்­ணா­கவோ அல்­லது பெண் ஆணா­கவோ தன்னை மாற்றிக் கொண்டு போலிப் பெயர்­களில் கணக்­கு­களை வைத்­தி­ருப்­ப­வ­ர்கள் மற்­ற­வர்­களை ஏமாற்­று­வ­துண்டு, நம்­பிக்கை துரோகம் செய்­வ­துண்டு, திருட்டுக்களில் ஈடுபடுவதுண்டு. இத்தகையவர்களில் பெரும்பாலானவர்கள் மோச­டி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள். சமூக வலைத்­த­ளங்­களை நடத்தும் சர்­வ­தேச கோடிஸ்­வ­ரர்கள் இவற்றைப் பெரும்­பாலும் தேடிப்­பார்ப்­ப­தில்லை. மற்­ற­வர்கள் முறைப்­பாடு செய்­தா­லே­யொ­ழிய இவற்றில் உள்ள மையத்­தன்­மையை தேடிப் பார்ப்­ப­தில்லை. அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­தெல்லாம் மொத்த கணக்­கு­களும் அவற்றின் செயற்­பா­டுளின் வாயி­லாக கிடைக்கும் விளம்­பரப் பண­மும்தான். இணை­யத்­த­ளங்­களில் போலி­யாக மறைந்­தி­ருப்­ப­வர்கள் எமது சிறு­வர்­க­ளுடன் நட்பை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டி, அவர்­க­ளுடன் உற்ற நண்­பர்­க­ளாக நடந்து கொண்டு, அவர்­க­ளுக்கு பரி­சு­களை வழங்கி, அவர்­க­ளுடன் அன்­பான வார்த்­தை­களால் பேசி, அவர்­களை தவ­றான வழி­கேட்டுச் செல்ல முடியும். இது பற்றி நாம் பின்னர் பிறிதொரு பகு­தியில் நோக்­கலாம். இதனால், எல்லா சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் நட்புக் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ளும் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் நடந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. முன்-பின் அறிமுகமற்ற போலியான தகவல்களை வழங்குகின்றவர்களை தவிர்க்கவும் நீக்கவும் வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.