நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்
மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி
விசினவ இளங்கலைப் பட்டதாரிகள் (VUGA) அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன 12.01.2025 அன்று சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு.
தொகுப்பு: எம்.எல்.எம்.றவூப் (ஒய்வு பெற்ற அதிபர்)
5.0 தொழிற்புரட்சியின் (Industry 5.0 revolution) ஊடாக வேகமாக மாறிவரும் உலகம்
இன்றைய உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. மனிதன் Global citizen ஆகவும், சமூகம் Online community ஆகவும் மாறியிருக்கிறது. இன்று வளரும் பரம்பரை Alpha Gen கடந்து Beta Gen என பரம்பரை அறிமுகமாகியிருக்கிறது. இன்றைய உலகம் phygital world என அழைக்கப்படுகிறது. அமெரிக்க அறிஞரான Buckminster Fuller தனது Critical Path என்ற நூலில் அறிவு இரட்டிப்படையும் வளைவு (Knowledge Doubling Curve) என்ற கோட்பாட்டினை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் 1900 ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒர் அறிவு (சிந்தனை, கோட்பாடு, சித்தாந்தம்) இரட்டிப்படைவதற்கு ஒரு நூற்றாண்டும், 1945 காலங்களில் 25 வருடங்களாகவும், இது 1980 களில் 12 மாதங்களும், தற்போது 12 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை அறிவு இரட்டிப்படைகிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதாவது 12 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், நாம் தெரிந்த ஒரு விடயம், மாற்றங்களுக்கு உட்பட்டு, அது புதுமைகளைக் கண்டுவருகிறது.
இன்றைய உலகம் 5.0 கைத்தொழில் புரட்சியின் புதுமைகளின் மாற்றங்களோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. Artificial intelligence (AI செயற்கை நுன்னணறிவு) என்பது இன்று அனைத்து துறையிலும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக உலகம் அனைத்து துறைகளிலும் பெருந்தரவுத் தொகுதிகளை (Big Data) மையப்படுத்தி Human- robotic Combination இணைந்து இயங்க துவங்கியிருக்கிறது. பெருத்த தகவல்களைக் கொண்டிருக்கும் தனிநபர்களும் சமூகமும் நாடுமே இன்று அதிகாரம் மிக்கவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது தகவல் முதலாளியம் (information Capitalism) என்று சொல்லப்படுகிறது. அதாவது இன்றைய உலக பொருளாதாரத்தின் மூலதனமாக தகவல்கள் காணப்படுகிறது.
எமது நாடும் இந்த மாற்றங்களை கண்டுவருகிறது. இலங்கை 2022 ஆம் ஆண்டில் 52 வீதமானவர்கள் இணைய பாவனையில் உள்ளதோடு, மக்களில் நூற்றுக்கு 147% கையடக்க தொலைபேசிப்பாவனையில் இருக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் Digitalization முக்கிய கொள்கையாகவும் காணப்படுவது இதன் அவசியப்பாட்டை காட்டுகிறது. உலக பொருளாதார அமையத்தின் (www.weforum.org) ஆய்வின் படி 2030 ஆம் ஆண்டு மிகவேகமாக வளர்ச்சியடைவும் தொழில்கள் (Fastest growing jobs- 2030) அனைத்தும் நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்றதாகவே அமையும். எனவே நாமும் மாற வேண்டிய தேவை இருக்கிறது.
University Grants Commission’s tracer study ஆய்வுத் தகவல்களின் படி, கலைப்பட்டதாரிகளுக்கான இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் வீதம் (Employability Rate) 28.9 காணப்படுகிறது. எனவே இத்துறைச் சேர்ந்தவர்கள் நவீன கால வேலை உலகிற்கு ஏற்ப தமது தகவமைவை மீள வடிவமைப்பது கட்டாயமாகும்.
நிர்வாக தொழில்வல்லுனர்கள் (Administrative Professionals) இடைவெளி, அதனை நிரப்பவேண்டியதன் கடப்பாடு.
இன்று எமது சமூகத்தில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாக்குவதற்கே நாம் அதிகமான பிரயத்தனங்களை எடுத்துவருகிறோம். இதற்காக அதிகமான செயற்திட்டங்கள் (Projects) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமூகம் சார் நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. மேற்படி முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியது. அவற்றின் வெற்றிகளை சமூகம் இப்போது அனுபவிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்கிடையில் எமது சமூகத்திற்கு அனைத்து துறையிலும் வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டிய சமூகத்தலைவர்களின் (Social Leader) தேவை இரட்டிப்படைந்திருக்கிறது.
ஒரு சமூகத்தினை சமகால அரசியல், பொருளாதார, தொழிநுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு நகர்த்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இத்தரப்பினரே. குறிப்பாக சமூகத் தலைவர்கள் என்ற வகையில் நிர்வாகம் சார்ந்த தொழில் வல்லுனர்களின் (Administrative professionals) போதாமை என்பது எமது சமூகம் துறைவாசியாக பலயீனப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது எனது அபிப்பிராயம். எனவே நிர்வாகம் சார்ந்த தொழில் வல்லுனர்களின் தேவை என்பது இன்றைய சமூகம் வேண்டி நிற்கும் முதன்மை விடயம் என்பது எனது அவதானம். இதற்காக எமது இளம் பட்டதாரிகள் தயாராகுவதும் தயாராக்கப்படுவதும் சமூகத்தின் கடப்பாடாகும்.
இதன் பின்னணில், சில தரவுகளை பகிர்ந்துகொள்வது பொருத்தம் என கருதுகிறேன். நாடளாவிய ரீதியில் காணப்படும் 12 வகையான இலங்கை நிர்வாக சேவைகளில் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் 5 வீதத்திற்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது. உதாரணமாக இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் (SLEAS) நாடளாவிய ரீதியில் இருக்கவேண்டிய மொத்த ஆளணி 2691 ஆகும். இதில் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் 98 பேர். (3.6%) இலங்கை நிர்வாக சேவை (SLAS) தேசிய மட்ட ஆளணி 2496 பேர், இதில் எமது சமூகம் சார்பான பிரதிநிதித்துவம் 79 (3.1%) இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) தேசிய மட்ட ஆளணி 769, சமூகம் சார்பான பிரதிநிதித்துவம் 36 (4.68%) இலங்கை விஞ்ஞான சேவையில் (SLSS) 411 (தேசிய மட்டம்) 5 (1.2%) பேர் மட்டுமே எமது சமூகம் சார்பான ஆளணியினர். இத்தரங்களுக்கு ஏற்ப, உயர் பதவி நிலைகளைப் பொறுத்தவரையிலும் இலங்கையில் காணப்படும் 100 கல்வி வலயங்களில் 7 கல்வி வலயங்களில் மாத்திரமே எமது சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற பதவியில் இருக்கின்றனர். நாட்டிலுள்ள 331 பிரதேச செயலகங்களில் 15 இல் பிரதேச செயலாளர்களாக கடமைபுரிகின்றனர்.
குருணாகல் மாவட்டத்தினைப் பொறுத்தவரையிலும் எமது சமூகத்தினைச் சேர்ந்த SLAS அதிகாரிகள் ஆறு பேர், SLEAS அதிகாரிகள் 9 பேர் மட்டுமே இச்சேவைகளில் உள்ள ஆளணயினராகும். இது எமது சமூகத்திற்கும் எமது நாட்டிற்குமான பங்களிப்பில் எமது சமூகம் சார்பான போதாமையினைக் காட்டி நிற்கிறது. அவ்வாறே கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பட்டியலிலும் சொற்பமானவர்களே பணிபுரிகின்றனர்.
எடுத்துக்காட்டாக அண்மைய பெறுபேறுகள் சிலவற்றை நோக்குகையில் எமது சமூகத்தின் குறைந்தளவிலான ஈடுபாட்டை, ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது. கடந்த வருடம் இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் (மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சையில் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட 735 பேர் கொண்ட பட்டியலில் 27 (3.67%) மட்டுமே எமது சமூகம் சார்பாக தெரிவானவர்கள். (சிங்களம்: 584 79%, தமிழ்: 124 17%) இதில் குருணாகல் மாவட்டம் சார்பாக யாரும் தெரிவாக வில்லை. (இதன் இறுதி தெரிவுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை) அவ்வாறே கடந்த மாதம் பெறுபேறுகள் வெளியாகி நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்ட பின்வரும் பரீட்சைகளில் SLAS 204 பேரில் 5 , SLPS 145 பேரில் 3 SLAcS 149 பேரில் 3 என்ற வகையிலேயே முஸ்லிம் பட்டதாரிகள் தெரிவாகினர்.
நாட்டின் முதன்மையான நிர்வாக அலகாக காணப்படும் கிராம சேவகர் பணியிலும் எமது சமூகம் சார்ந்தவர்கள் மிகவும் குறைவாகவே நுழைகின்றனர். கடந்த வருடம் புதிதாக நியமனம் பெற்ற1942 பேரில் 148 முஸ்லிம்கள் (8%) (சிங்களம்: 1502 77% தமிழ்: 292 15%) இதில் குருணாகல் மாவட்டத்திலிருந்து 6 பேர் மட்டுமே தெரிவாகினர். அவ்வாறே எமது மாட்டத்தில் அண்மைய ஆசிரியர் நியமனங்களின் போது விசேடமாக 50 இற்கும் மேற்பட்ட கணிதப்பாடத்திற்கான வேலைவாய்ப்புக்கள் இருந்த போதும், உரிய பட்டதாரிகள் தெரிவுப்பரீட்சைகளில் உரிய புள்ளிகளை பெறுவதில் போதாமை காணப்பட்டதன் காரணமாக வெறும் 12 பேர் மட்டுமே தெரிவாகினர். குருணாகல் மாவட்டத்தில் காணப்படும் 88 தமிழ்மொழிப் பாடசாலைகளில் இன்னும் 25 இற்கும் மேற்பட்ட அதிபர் சேவை இடைவெளிகள் காணப்படுகிறது.
கிராம சேவகர் அலகிலிருந்து பாடசாலை, கல்வி வலயம், பிரதேச செயலகம், அமைச்சின் செயலாளர்கள் என பரந்துபட்ட நிர்வாக அலகுகளில் நிர்வாக வல்லுனர்களின் வறுமை பரவலாக காணப்படுகிறது. இன்று எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்புக்களையும் பணிகளையும் செய்யக்கூடிய நிர்வாக துறைகளில் எமது சமூகத்தின் ஈடுபாடு மிகவும் மந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இதன் தேவை, அவசியப்பாடு தொடர்பில் இளங்கலைப்பட்டதாரிகள், இளம் பட்டதாரிகள் வழிப்படுத்த, வழிகாட்டப்பட வேண்டும். இதற்கு சமூகம்சார்ந்த புத்திஜீவிகள், தனவந்தர்கள், சமூக நிறுவனங்கள் அக்கறை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இறுதியாக இளம் பட்டதாரிகள் தமது பல்கலைக்கழக காலங்களில் Life skills, Soft skills, Digital skills போன்ற துறைசார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பாடத்தெரிவு விடயங்கள், ஆய்வு, வாசிப்பு, தேடல், முயற்சியாண்மை சிந்தனை முன்னெடுப்பு (Entrepreneurial thinking) போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். மேற்படி தரவுகளை மையப்படுத்தி எமது திட்டமிடல்கள் அமைதல் வேண்டும்.- Vidivelli