புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

0 67

இஸட். ஏ. ஸன்ஹிர்
(முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்)

இலங்­கையின் ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்­களுள் ஒன்­றான புத்­தளம் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் மூன்று தசாப்த காலங்­க­ளுக்கும் மேலாக அதி­ப­ராகப் பணி­யாற்­றிய அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலையில் கால­மானார். அடுத்­தநாள் புத்­தளம் பகா மஸ்ஜித் மைய­வா­டியில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் நாடெங்­கி­லு­மி­ருந்து பெருந்­தொ­கை­யானோர் கலந்­து­கொண்­டனர்.

அப்துல் ஹமீத் மஹ்மூத், சாரா உம்மா தம்­ப­தி­யி­னரின் நான்­கா­வது மக­வான அப்­துல்லாஹ் அவர்கள் தனது ஆரம்பக் கல்­வியை புத்­தளம் ஸாஹி­றாவில் பயின்றார். அத்­துடன் ஷரீஆக் கல்­வியை மத்­ர­ஸத்துல் காஸி­மிய்­யாவில் கற்றார். பின்னர் தனது பட்டப் படிப்பை மதீனா இஸ்­லா­மியப் பல்­கலைக் கழ­கத்தில் நிறை­வு­செய்தார். மதீ­னாவில் இருந்து நாடு திரும்பி, காசி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்து, அதனைத் தொடர்ந்து கல்­லூரி அதிபர் பத­வியைப் பொறுப்­பேற்றார்.

“குத்தாப்” எனப்­படும் திண்ணைப் பள்­ளிக்­கூ­ட­மாக 1884 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸி­மிய்யா மத்­ர­ஸாவில் 1944 முதல் 1985 வரை அதி­ப­ராக இருந்து அரும்­ப­ணி­யாற்­றி­யவர் மஹ்மூத் அப்துல் மஜீத் (பெரிய ஹஸரத்) ஆவார். அப்­துல்லாஹ் ஹச­ரத்தின் தந்­தை­யான அன்னார், சுமார் நாற்­பது வரு­டங்­களும் அதனைத் தொடர்ந்து, சிறிய தந்­தை­யான ஷேய்க் மதார் ஆலிம் (சின்ன ஹஸரத்) அவர்கள் 1985 -–1989 வரை ஐந்து ஆண்­டு­களும் கல்­லூ­ரியை வழி­ந­டத்­தினர். பின்னர் இதனைப் பொறுப்­பேற்ற அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 2024 டிசம்பர் வரை காஸி­மிய்யா அதி­ப­ராக இருந்தார். இந்­த­வ­கையில் ஹஸரத் குடும்­பத்­தினர் மொத்தம் எண்­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாகக் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியைத் தொடர்ச்­சி­யாக நிரு­வ­கித்து வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அப்­துல்லாஹ் ஹஸரத் அவர்கள் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியின் அதி­ப­ராக இருந்த சம­கா­லத்தில் புத்­தளம் நகர ஜம்­மிய்­யதுல் உலமா, புத்­தளம் மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமா ஆகிய இரண்­டி­னதும் தலை­மைத்­து­வத்தை ஏற்று அவற்றை வழி­ந­டாத்­தி­யுள்ளார். குறிப்­பாகப் புத்­த­ளத்தில் 1989 இல் ஓர் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஜம்­இய்­யதுல் உலமா உரு­வாகக் காரண கர்த்­தா­வாக இருந்­துள்­ள­துடன் சுமார் முப்­பத்தி ஐந்து வரு­டங்கள் அதன் தலை­வ­ராக இருந்து அரும்­ப­ணி­யாற்­றி­யுள்ளார். அன்னார் தனது இறு­தி­வரை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்­றினார்.
அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின், மத்­திய மஜ்­லிஸுஷ் ஷூரா சபை உறுப்­பினர் என்­ப­துடன் அதன் ஆரம்­ப­கால அங்­கத்­த­வர்­களுள் ஒரு­வ­ரு­மாவார். அவர் ஒரு தசாப்­த­துக்கும் மேலாக பெண்­க­ளுக்­கான அல்­குர்ஆன் மஜ்­லிஸை மத்­ர­ஸதுல் காசி­மிய்­யாவில் நடத்­தி­வந்­துள்ளார்.

மறைந்த அப்­துல்லாஹ் ஆலிம் அவர்கள், பல்­வேறு சமூக சேவை நிறு­வ­னங்­களின் தலை­வ­ரா­கவும் செயற்­குழு உறுப்­பி­ன­ரா­கவும் தொடர்ந்தும் செய­லாற்­றி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. புத்­தளம் பிர­தே­சத்தில் சமூகப் பணி­யாற்­றிய சங்­கங்­களுள் ஒன்று ‘புத்­தளம் மக்கள் மன்றம்’ ஆகும். இது 1999 இல் உரு­வா­னது. அதன் தாபகத் தலைவர் அப்­துல்லாஹ் ஹஸரத் ஆவார். இப்­பி­ர­தே­சத்தின் சமூக விவ­கா­ரங்கள் பல, காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியை மையப்­ப­டுத்தி நீண்ட நெடுங்­கா­ல­மாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்டு, வழி­காட்­டல்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதற்­கான கார­ண­கர்த்தா அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்­களே.

புத்­தளம் மாவட்ட சர்வ மதக் குழுவின் இணைத் தலை­வ­ரான அப்­துல்லாஹ் ஹஸரத் அவர்கள் மத நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் முன்­னின்று உழைத்தார். இந்த அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஐரோப்­பிய நாடுகள் உட்­பட பல நாடு­க­ளுக்கும் பய­ணங்­களை மேற்­கொண்­டுள்ளார். புத்­தளம் மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமாத் தலை­வ­ராக இருந்­த­போது புத்­தளம் பெரி­ய­ பள்­ளி­வாசல் தலை­மைத்­து­வத்­துடன் மிக அந்­நி­யோன்ய நட்­பு­றவைப் பேணி­வந்தார். சமூக விவ­கா­ரங்­களைக் கலந்­து­ரை­யா­டவும் பிரச்­சி­னை­க­ளுக்கு இல­கு­வாகத் தீர்­வு­கா­ணவும் இது ஏது­வா­யிற்று. பெரிய பள்­ளி­வா­சலின் நிரு­வாகக் குழு உறுப்­பி­ன­ரா­கவும் அவர் அங்­கத்­துவம் வகித்­துள்ளார்.

எம்­மை­விட்டும் மறைந்த அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் ஆலிம் என்ற நிலையில் இருந்­து­கொண்டு சமூக விவ­கா­ரங்­களில் அதீத சிரத்­தை­யெ­டுத்துச் செய­லாற்றி ஏனை­யோ­ருக்கு முன்­மா­தி­ரி­யாகத் திகழ்ந்­தவர். நவீன சிந்­த­னைகள் கொண்ட அவர், நல்ல புதிய முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு என்றும் எதிர்ப்­புத்­தெ­ரி­வித்­த­தில்லை. தலை­மைத்­துவப் பண்­புகள் நிறையப் பெற்­றவர். சிறந்த செவி­ம­டுப்­பாளர். நிதா­ன­மிக்­கவர். பொறு­மையின் சிகரம். சமூக மேம்­பா­டு­பற்றி என்­றென்றும் சிந்­திப்­பவர். அனைத்து இனத்­தி­ன­ரு­டனும் நல்­லு­றவைப் பேணி­வந்­தவர். அவர் ஓர் உதைப்­பந்­தாட்ட வீரரும் கூட.

அன்­னாரின் ஜனா­ஸாவில் தேசிய ரீதி­யாக பல பிர­மு­கர்கள் கலந்­து­கொண்­டனர். தேசிய சமா­தானப் பேரவை நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி ஜெஹான் பெரேரா, அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உல­மாவின் உப தலை­வர்­களுள் ஒரு­வ­ரான அஷ் ஷேய்க் புர்ஹான் (பஹ்ஜி), ஜமா­அதுஸ் ஸலாமா தலைவர் ஆஸாத் முஈஸ், பற­க­ஹ­தெ­னிய அன்சார் சுன்­னத்துல் முகம்­ம­திய்யா தலைவர் அஷ் ஷேய்க் அபூ­பக்கர் சித்தீக் (மதனி) போன்றோர் இவர்­களுள் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர். அத்­துடன் புத்­தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத் தலைவர் புத்­தி­யா­காம இரத்­தின தேரர், புத்­தளம் பங்குத் தந்தை, அருட்­பணி டிலங்க பெரேரா ஆகியோர் உட்­பட பலரும் ஆண், பெண் இன மத பேத­மின்றி கலந்­து­கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமாத் தலைவர் அஷ் ஷேய்க் ரிஸ்வி முப்தி, புத்தளம் பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள், சுந்தர ராம குருக்கள் ஆகியோர் தற்போது நாட்டில் இல்லாதபோதும் தமது அனுதாபச் செய்திகளை அனுப்பிவைத்திருந்தனர்.

புத்தளம் ஓர் சிறந்த தலைமையை இழந்து தவிக்கின்றது. அவரின் குடும்பத்தினர் ஆறாத் துயரத்தில் வாடுகின்றனர். அன்னாரின் சிறந்த மறுமை வாழ்வுக்குப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தாரின் மன நிம்மதிக்கும் இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.