இலங்கையில் நவீன இருதய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஆரம்பமாகிய இலங்கை இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புலமைத்துவ அமர்வின் போது (Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்சக்காரவினால் இந்த அதி உயர் விருது அவருக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மர்ஹூம் டாக்டர் லாஹியின் மனைவி பாத்திமா மின்னா,புதல்வி சப்றினா மற்றும் குடும்பத்தினர் பிரசன்னமாகியிருக்க, மருமகன் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் அதனைக் கையேற்றார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டாக்டர் லாஹியினால் பயிற்றுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் இரேஷ் விஜேமான்ன அன்னாரின் மகத்தான பங்களிப்புகள் பற்றி விபரித்துக் கூறினார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற டாக்டர் யூசுப் காமில் முஹம்மத் லாஹி, கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டதாரியானார். இங்கிலாந்தில் மிடில் செக்ஸ் பல்கலைக்கழகத்தில் இருதய அறுவை சிகிச்சைத் துறையில் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டு நிறைவு செய்து நாடு திரும்பி, பின்னர் கொழும்பு பெரியாஸ்பத்திரி லேடி(சீமாட்டி) ரிஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் இருதய அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றி, தனது 63 ஆவது வயதில் ஓய்வு பெற்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு காலமானார்.- Vidivelli