மாவடிப்பள்ளி அனர்த்தம் : பொறுப்பற்று நடந்தார்களா பொறுப்புவாய்ந்தவர்கள் ?

0 65

தென்­மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23 ஆம் திகதி காற்­ற­ழுத்த தாழ்வுப் பகு­தி­யாக உரு­வெ­டுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்­டது. இதன் தாக்­கத்தால் இலங்­கையின் பெய்த கடும் மழையால் பெரு­வா­ரி­யான பகு­திகள் வெள்ளக்­கா­டாக மாறி­யி­ருந்­தன. அம்­பாறை மாவட்­டத்தில் இதன் தாக்கம் உச்சம் தொட்­டி­ருந்­தது.

அன்று நவம்பர் 26 ஆம் திகதி செவ்­வா­யன்று, A31 அம்­பாறை – காரை­தீவு பிர­தான வீதியின் ஒரு பகு­தி­யான மாவ­டிப்­பள்ளி பிர­தான வீதி வெள்­ளத்தில் மூழ்­கி­யதால் காரை­தீ­வி­லி­ருந்து சம்­மாந்­துறை, அம்­பாறை, இறக்­காமம் போன்ற பகு­தி­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் அப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு செல்லும் மக்கள் உழவு இயந்­தி­ரங்கள் மற்றும் கன­ரக வாக­னங்கள் ஊடா­க­வுமே வீதியைக் கடக்கும் நிலை ஏற்­பட்­டது.

அன்று மாலை­யா­கியும் மழை குறைந்­த­பா­டில்லை. உழவு இயந்­திரம் மூலம் குறித்த பாதை ஊடாக மத்­ரஸா மாண­வர்கள் உட்­பட சுமார் 15 பேர­ளவில் குறித்த உழவு இயந்­தி­ரத்தில் பய­ணத்தை ஆரம்­பித்­தனர். காரை­தீவு – அம்­பாறை வீதி முத­லா­வது பஸ் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து சுமார் 200 மீற்றர் தூரம் செல்லும் போது உழவு இயந்­திரம் தடம்­பு­ரண்­டது.
கடும் காற்­றுடன் கொட்டும் பலத்த மழைக்கும் மத்­தியில் அந்த விபத்தில் சிக்­கி­கொண்ட மாண­வர்கள் ‘எம்மை காப்­பாற்­றுங்கள்’ என்று கத­றி­ய­ழுத அலறல் சத்தம் இன்னும் எனது காது­க­ளுக்குள் ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன, என்னால் தூங்­கவே முடி­ய­வில்லை என்று நிந்­தவூர் காஷிபுல் உலூம் மத்­ரஸா மாணவர் ஹிமாஸ் அஹமத் தன் கண் முன்னால் நிகழ்ந்த அந்த திக் திக் நிமி­டங்­களைக் கூறி விம்­மி­ய­ழுதார் . தைரி­யத்­துடன் ஓரிரு மாண­வர்­களை காப்­பாற்­றிய அந்த மாணவன், அங்கு நடந்த சோகக் கதையை விப­ரிக்கும் வீடியோ காட்­சி­யா­னது எமது ஆன்­மாக்­க­ளையும் அந்த வெள்­ளத்­திற்குள் மூழ்­க­டித்­து­விட்­டது.

பின்னர் மாளி­கைக்­காடு ஜனாஸா நலன்­புரி அமைப்­பினர் மற்றும் காரை­தீவு இளை­ஞர்கள் உட்­பட கடற்­ப­டை­யி­னரின் உத­வி­யுடன் பொது மக்கள் மீட்­புப்­ப­ணியில் ஈடு­பட்­டனர். குறித்த மீட்­புப்­ப­ணியில் போது அப்­ப­கு­தியில் உள்ள மின்­கம்­பத்தை பிடித்­தி­ருந்த மாண­வர்கள் சிலரை மீட்­புக்­கு­ழு­வினர் உயி­ருடன் மீட்டு அருகில் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சிகிச்­சைக்­காக அழைத்துச் சென்­றனர். மேலும் இந்த விபத்தில் 6 மத்­ரஸா மாண­வர்கள் உழவு இயந்­தி­ரத்தை செலுத்­திய நபர் மற்றும் இவர்­க­ளுடன் மற்­று­மொ­ரு­வரும் வெள்­ளத்தில் அடித்துச் செல்­லப்­பட்­டனர்.

26 ஆம் திகதி செவ்­வா­யன்று தொடர்ச்­சி­யாக நில­விய கன மழை மற்றும் வெள்ள நீரின் ஓட்ட வேகம் ஏனை­யோரை மீட்­டெ­டுப்­பதில் பெரும் இடை­யூ­றாக இருந்­தது. இந்­நி­லையில், மறுநாள் புதன் கிழமை காலையில் இரா­ணுவம் விசேட அதி­ர­டிப்­படை, பொலிஸார் பங்­கேற்­புடன் சாய்ந்­த­ம­ருது ஜனாசா நலன்­புரி மக்கள் பேரவை, மாளி­கைக்­காடு ஜனாசா நலன்­புரி அமைப்பு, காரை­தீவு இளை­ஞர்கள் உள்­ளிட்டோர் தொட­ரச்­சி­யாக தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். அத்­துடன், விமா­னப்­ப­டையின் ஹெலி­கப்­டரும் மீட்பு பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அன்றை தினம் மாலை 7 மணி வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட மீட்பு நட­வ­டிக்­கை­களின் மூலம் நான்கு மத்­ரஸா மாண­வர்கள் ஜனா­ஸாக்­க­ளாக மீட்­கப்­பட்­டனர்.

முஹம்மட் ஜெஸீல் முஹம்மட் சாதிர் (வயது 17), முஹம்மட் ஆஷிக் முஹம்மட் அப்னான் (வயது 15), பாறூக் முஹம்மட் நாஸிக் (வயது 15), பாறூக் முஹம்மட் சஹ்ரான் (வயது 15) ஆகி­யோரின் ஜனா­ஸாக்கள் மீட்­கப்­பட்டு சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­ல­ப்பட்­டன. பின்னர், சம்­மாந்­துறை நீதி­மன்ற பதில் நீதி­பதி எம்.ரி சபீர் அகமட் பார்­வை­யிட்ட பிறகு பிர­தேச மரண விசா­ரணை அதி­காரி அப்துல் ஹமீட் அல் -ஜவாஹிர் மரண விசா­ரணை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து ஜனா­ஸாக்கள் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

புத­னன்று நள்­ளி­ரவு தாண்டி ஏனை­யோரை தேடும் மீட்புப் பணிகள் நிறுத்­தப்­பட்டு மறுநாள் வியா­ழனன்று மீண்டும் ஆரம்­ப­மா­னது. மத்­ரஸா மாண­வ­னான அலியார் முக­மது யாசீன் (வயது-12), உழவு இயந்­தி­ரத்தை செலுத்­திய உது­மா­லெவ்வை முஹம்மட் அகீப் (வயது 20), கல்­முனை புகை பரி­சோ­தனை நிலைய ஊழியர் அப்துல் ரஸீட் அஜ்மீர் (வயது 28) ஆகி­யோ­ரது ஜனா­ஸாக்கள் மூன்­றா­வது நாளான வியா­ழ­னன்று மீட்­கப்­பட்டு மரண விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து குடும்­பத்­தா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இருள் மற்றும் பலத்த காற்று கார­ண­மாக வியா­ழக்­கி­ழமை மாலை தேடுதல் பணிகள் இடை­நி­றுத்­தப்­பட்டு மீண்டும் வெள்­ளி­யன்று காலை மீட்புப் பணிகள் ஆரம்­ப­மா­கி­யது. எனினும், காண­ாமல்­போன இர­முளான் முஹம்­மது தஸ்ரிப் என்ற 16 வயது மாண­வரை அன்றைய தினம் மீட்க முடி­ய­வில்லை. மறுநாள் சனிக்­கி­ழமை ஐந்­தா­வது நாள் தேடுதல் பணி­களின் போதே தஸ்­ரிபின் ஜனாஸா மீட்­கப்­பட்­டது.

இந்த விபத்துச் சம்­ப­வத்­தை­ய­டுத்து நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூரி அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டது. அதில் ‘மூன்று தினங்­க­ளாக தொடர்ச்­சி­யாக பெய்­து­வந்த அடை மழை கார­ண­மாக மத்­ரஸா கட்­டி­டத்தில் ஏற்­பட்ட நீர் ஒழுக்கு கார­ண­மாக மாண­வர்­க­ளுக்கு அசௌ­க­ரியம் ஏற்­பட்­டது. பிற்­பட்ட நாட்­களின் கால­நி­லையை கருத்­திற்­கொண்டு மத்­ரஸா நிர்­வா­கத்­தி­னரின் முடிவின் பிர­காரம் தாங்கள் மாண­வர்­களின் பெற்­றோர்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு விட­யங்­களை தெரி­யப்­ப­டுத்­தினோம். அதன்­படி, அக்­க­ரைப்­பற்று, சம்­மாந்­துறை, கல்­முனை பிர­தேச மாண­வர்­களை அவ­ரவர் பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­படி, மத்­ரஸா அதிபர் மற்றும் ஆசி­ரியர்கள் சிலரும் தனியார் பஸ் ஒன்றில் அனைத்து மாண­வர்­க­ளையும் ஏற்­றிக்­கொண்டு அக்­க­ரைப்­பற்று பிர­தேச மாண­வர்­களை அவர்­களின் பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு இரண்­டா­வ­தாக சம்­மாந்­துறை மாண­வர்­களை ஒப்­ப­டைக்கச் சென்­ற­போது காரை­தீவு பிர­தே­சத்­துடன் பய­ணங்கள் அனைத்தும் தடைப்­பட்டு காணப்­பட்­டன.

அந்த நேரம் சம்­மாந்­துறை மாண­வர்­களின் பெற்­றோர்­க­ளிடம் தொலை­பே­சி­யூ­டாக பேசி அனு­ம­தி­யெ­டுத்­த­போது பெற்­றார்கள் பாதைக்கு மறு­புறம் (அதா­வது மாவ­டிப்­பள்ளி எல்லை) நிற்­ப­தா­கவும், தாங்கள் இங்கே பிள்­ளை­களை பாரம் எடுக்­கிறோம் அனுப்பி வையுங்கள் என வாக்­கு­று­தி­ய­ளித்த பின்­னரே இவ்­வாறு உழவு இயந்­தி­ரத்தில் ஏற்­றி­விட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில், சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் வியா­ழ­னன்று நிந்­தவூர் காஷிபுல் உலூம் மத்­ர­ஸாவின் அதிபர், ஆசி­ரியர் ஒருவர் உட்­பட மேலும் இரு ஊழி­யர்கள் அடங்­க­லாக நால்­வரை கைது செய்­தனர்.

அவர்கள் சம்­மாந்­துறை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டு வாக்­கு­மூலம் பெற்ற பின்னர் சம்­மாந்­துறை நீதி­மன்ற பதில் நீதி­பதி எம்.ரி சபீர் அகமட் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இதன்­போது மத்­ர­ஸாவின் அதிபர் மற்றும் ஆசி­ரியர் ஆகி­யோரை டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­ட­துடன், 2 உத­வி­யா­ளர்­களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

வெள்ள நீரில் அகப்­பட்டு மர­ண­ம­டைந்த மாண­வர்கள் உட்­பட ஏனை­யோ­ரது மறு­வாழ்­விற்­காக வெள்ளைக் கொடிகள் கட்­டப்­பட்டு கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அம்­பாறை மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் துக்க தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மறுநாள் சனிக்­கி­ழ­மையும் சம்­மாந்­து­றையில் துக்­க­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இறு­தி­யாக மீட்­கப்­பட்ட மாணவன் தஸ்­ரிபின் ஜனாஸா தொழுகை சம்­மாந்­துறை மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் பல்­லா­யிரக் கணக்­கான மக்­களின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.

உயி­ரி­ழந்த மாண­வர்­களின் வீடு­க­ளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பலரும் விஜயம் செய்து ஆறுதல் தெரி­வித்­தனர். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன் உட்­பட அர­சி­யல்­வா­திகள் பலரும் விஜயம் மேற்­கொண்­டனர்.

இத­னி­டையே, அம்­பாறை மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே.எச்.எம்.என் ஜய­பத்ம ஆலோ­ச­னைக்­க­மைய கல்­முனை பிராந்­திய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரீ. எச். டி .எம். எல். புத்­தி­கவின் வழி­காட்­டலில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சம்­மாந்­துறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கே.டி.எஸ் ஜெயலத் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிர்­வாக சபை­யினை கலைத்து விட்டு புதிய நிர்­வாக சபை­யினை உட­ன­டி­யாக நிய­மிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு நீதவான் டி. கரு­ணா­கரன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மேலும் இவ்­வ­ழக்கு விசா­ர­ணைகள் முடி­வ­டையும் வரை குறித்த அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் மற்றும் விரி­வு­ரை­யாளர் ஆகியோர் அரபுக் கல்­லூ­ரிக்கு செல்­லக்­கூ­டாது எனவும் நீதவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். குறித்த விசா­ர­ணையின் போது காரை­தீவு பிர­தேச செய­லாளர் மாவட்ட அனர்த்­தன நிவா­ரண சேவைகள் அதி­காரி ஆகி­யோரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். குறித்த வழக்கு எதிர்­வரும் 16ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நீர்ப்­பா­சனத் திணைக்­களம் மற்றும் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­ன­ரையும் அடுத்த தவ­ணையின் போது மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் இலங்­கையில் சுமார் 20 பேர் வரை உயி­ரி­ழந்­துள்­ளனர். இவற்றில் மாவ­டிப்­பள்ளி விபத்தே அதி­க­மான உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. இந்த சம்­பவம் முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குமாறு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தாஹிர் மற்றும் உதுமாலெப்பை ஆகியோரும் அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீனும் மு.கா. தலைவர் ஹக்கீமும் இது தொடர்பில் சபையில் விசேட கோரிக்கைகளை முன்வைத்தனர். இச் சம்பவம் நடைபெற்ற போது அங்கு கடமையில் நின்றிருந்த பொலிசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் ஆபத்தான வெள்ளத்தின் ஊடாக இவ்வாறு மாணவர்கள் பயணிக்க அவர்கள் எவ்வாறு அனுமதி வழங்கினர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முறையான நஷ்ட ஈட்டை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியமானதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.