திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்குள் ‘ஜெய்லானி’

0 308

கூரகலையிலிருந்து
றிப்தி அலி

“கூர­கல மலைப் பிர­தேசம் புன­ர­மைப்பு செய்­யப்பட்­ட­மை­யினால் இன்று நான் தொழி­லினை இழந்து நிர்க்­க­தி­யா­கி­யுள்ளேன்” என்­கிறார் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான முஹம்­மது தம்பி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது)

கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலுக்கு அருகில் என்னால் நடத்­தப்­பட்டு வந்த கடை, சிலர் நபர்களினால் திட்­ட­மி­டப்­பட்டு மூட­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் என்ன செய்­வது என்று தெரி­யாது இன்று நான் நடுத் தெருவில் நிற்­கின்றேன்” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

“முஸ்­லிம்­க­ளுக்கு நன்மை செய்­வ­தற்­கா­கவே கூர­கல மலைத் தொட­ர் புனர்நிர்­மாணம் செய்­யப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டனர். ஆனால், புனர்நிர்­மாணப் பணிகள் நிறை­வ­டைந்த பின்னர் இங்­குள்ள முஸ்­லிம்கள் பல கஷ்­டங்­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர். குறிப்­பாக இங்­குள்ள முஸ்­லிம்­களின் கடை­களில் பொருட் கொள்­வ­னவில் ஈடு­பட வேண்டாம் என வெளி­யூர்­களில் இருந்து வரு­கின்ற சிங்­க­ளவர்கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்” என முஹம்­மது தம்பி கூறினார்.

இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்­களை வெளி­யேற்­று­வதே கூர­கல புனித பூமிக்கு பொறுப்­பான தேரரின் இலக்­காகும் எனக் குற்­றஞ்­சாட்­டிய அவர், பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கு வாழ்ந்து வரு­கின்ற முஸ்­லிம்­களை இறைவன் தான் பாது­காக்க வேண்டும் என்றார்.
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அண்­டிய பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான ஒன்­பது கடைகள் காணப்­ப­டு­கின்­றன. இந்தக் கடை­க­ளில் பல கடைகள் இன்று மூடப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு மூடப்­பட்­டுள்ள கடை­களில் ஒன்­றினை நடத்­தி­ய­வரின் உள்ளக் குமு­றலே இது­வாகும்.

 

மூடப்பட்டுள்ள முஸ்லிம்களின் பகுதிக்குச் செல்லும் வீதி

கொழும்­பி­லி­ருந்து சுமார் 143 கிலோ மீற்றர் தூரத்­தி­லுள்ள பலாங்­கொடை நக­ரி­லி­ருந்து சுமார் 45 நிமிட பஸ் பய­ணத்தில் சென்­ற­டையக் கூடிய தென்ன எனும் கிரா­மத்­தி­லேயே தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலும், கூர­கல மலைத் தொடரும் காணப்­ப­டு­கின்­றது.
இங்கு சுமார் 130 குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 600 முஸ்­லிம்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து பல நூற்­றாண்­டு­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். கூலித் தொழில், விவ­சாயம் போன்­ற­னவே இங்­குள்ள முஸ்­லிம்­களின் பிர­தான தொழி­லாகும்.

இக்­கி­ரா­மத்­தி­லுள்ள சிறுவர்கள், தஞ்­சந்­தென்ன மகா வித்­தி­யா­ல­யத்தில் சிங்­கள மொழி மூலம் சாதா­ரண தரம் வரை கல்வி கற்று விட்டு உயர் தரத்­திற்­காக பலாங்­கொடை நக­ருக்கு செல்­வது வழ­மை­யாகும்.

ஈராக்­கினைச் சேர்ந்த சன்­மார்க்கப் போத­கரும், அறி­ஞ­ரு­மான குதுப் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் பாவா ஆதம் மலையை தரி­சிப்­ப­தற்­காக கி.பி 1132 இல் இலங்கை வந்த போது இக்­கி­ரா­மத்­தி­லுள்ள மலையில் நீண்ட காலம் தியா­னத்தில் இருந்­த­தாக வர­லா­றுகள் கூறு­கின்­றன.

இதன் பின்னர் இம்­மலைப் பிர­தே­சத்­தினை பாரம்­ப­ரிய வணக்­கஸ்­த­ல­மாக முஸ்­லிம்கள் மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக இங்கு வர ஆரம்­பித்­தனர். முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜீலா­னியின் ஞாப­கார்த்­த­மாக தப்தர் ஜெய்­லானி என இப்­பி­ர­தே­சத்­திற்கு பெயர் சூட்­டப்­பட்­டது.

பல நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­க­ளினால் இங்கு சமய வழி­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் மூன்று நல்­ல­டி­யார்­களின் ஜனா­ஸாக்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த தப்தர் ஜெய்­லானி பற்றி இரத்­தி­ன­புரி கச்­சே­ரியில் கட­மை­யாற்­றிய பல அரச அதி­பர்கள், தத்­த­மது டய­ரி­களில் குறிப்­புக்­களை எழுதி உள்­ள­தாக வர­லா­றுகள் கூறு­கின்­றன.
சுமார் 56 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினைக் கொண்ட இப்­பி­ர­தே­சத்­தினை காலஞ்­சென்ற அமைச்சர் எம்.எல்.எம். அபூ­சா­லியின் குடும்­பத்­தி­னரின் பங்­க­ளிப்­புடன் தென்ன முஸ்­லிம்கள் பரா­ம­ரித்து வந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் 1922ஆம் ஆண்டு சீ.எல்.எம் மரைக்­கா­ரினால் இங்கு பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. கப்பல் வடி­வி­லான மலை­யினை சார்ந்த­தாக இப்­பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் கூரை தேவைப்­ப­ட­வில்லை. காரணம் அங்­கி­ருந்த பாரிய கற்­பாறை தேவை­யான நிழ­லையும் மழையில் இருந்து பாது­காப்­பையும் வழங்கக் கூடி­ய­தாக அமைந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், 1960களில் கூர­கல, பௌத்த துற­வி­களும் தியா­னத்தில் ஈடு­பட்ட ஒரு இடம் என்று பௌத்­தர்கள் சிலர் உரிமை கோரத் தொடங்­கி­ய­தாக அபு­சாலி எழு­தி­யுள்ள நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொல்­பொருள் திணைக்­களம் தப்தர் ஜெய்­லா­னியில் ஒரு புதிய பௌத்த கோபு­ரத்தை கட்டத் தொடங்­கி­யது. 1971இல் இந்த பௌத்த கோபுரம் இரண்­டடி உய­ரத்­துக்கு கட்­டப்­பட்­டது.

அதன்பின், இது 2,000 ஆண்­டுகள் பழ­மை­யா­னது என பௌத்தர்கள் உரிமை கோர ஆரம்­பித்­தனர். இந்த விட­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ளவர்களுக்கும் இடையில் நீண்ட கால­மாக பாரிய இழு­பறி காணப்­பட்­டது.

 

தொல்பொருள் பகுதியென பொறிக்கப்பட்டுள்ள அறிவித்தல்பலகை

இந்த நிலையில் இப்­பி­ர­தேசம் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­துடன் புண்­ணிய பூமி­யா­கவும் பிர­க­ன­டப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இப்­பி­ர­தே­சத்­தினை சிங்­க­ள­ம­ய­மாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கொண்டு வரப்­பட்­டாலும் அது கைகூ­ட­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, 2013ஆம் ஆண்டில் பாது­காப்பு செய­லா­ள­ராக பதவி வகித்த போது இப்­பி­ர­தே­சத்­திற்கு விஜயம் செய்து புன­ர­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை ஆரம்­பித்தார்.

இதன்­போது, தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லிற்கு அரு­கி­லி­ருந்த பல நூற்­றாண்­டுகள் பழ­மை­யான இரு சியா­ரங்கள் மற்றும் தங்­கு­மிடம் போன்ற பல கட்­டி­டங்கள் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளன. அச்­ச­ம­யத்தில் அங்­கி­ருந்த விகா­ரா­தி­ப­தி­யினால் சிங்­க­ள­ம­ய­மாக்கல் செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அது அவர்­க­ளுக்கு எதிர்­பார்த்த வெற்­றியைத் தர­வில்லை.

இதனால் கண்டி, முருத்­த­லாவ பிர­தே­சத்­தி­லுள்ள நெல்­லி­கல மலையில் சர்வதேச பௌத்த நிலை­யத்­தினை நிர்­மா­ணித்த வத்­து­ரக்­கும்­புர தம்­ம­ரத்ன தேர­ரிடம் கூர­கலை மலைத் தொட­ரினை புன­ர­மைப்புச் செய்யும் பணிகள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.
கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­ட­தனை அடுத்து இதன் புனர்நிர்­மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் இடம்­பெற்­றன. சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த புன­ர­மைப்புப் பணிக்கு வெளி­நாட்­டி­லுள்ள இலங்­கையர்களினால் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­தாக வத்­து­ரக்­கும்­புர தம்­ம­ரத்­தன தேரர் முன்னர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதன் நிர்­மாணப் பணி­க­ளுக்கும் இலங்கை இரா­ணுவம் மற்றும் சிவில் பாது­காப்பு படை ஆகி­ய­வற்றின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பும் கிடைக்கப் பெற்­றது. கடந்த வெசாக் தினத்தின் போது (மே 7) புன­ர­மைப்புச் செய்­யப்­பட்ட கூர­கல பகுதி, அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்­வா­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்தே இப்­பி­ர­தேச முஸ்­லிம்­க­ளுக்கும், தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கும் பாரிய நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­சலின் விறாந்தை பகு­தி­யி­லுள்ள தகரக் கொட்­டிலை அகற்ற மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி இறு­தியில் கைவி­டப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும், இப்­பள்­ளி­வாசல், ஹிஜ்ரி 883 இல் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள யெமனைச் சேர்ந்த தர்வேஷ் முஹை­யதீன் வலி­யுல்லாஹ் அவர்களின் சியாரம் ஆகி­யன ஒரு­போதும் அகற்­றப்­ப­ட­மாட்­டாது என்றும் சிறி­பாத போன்று இப்­ப­குதி அபி­வி­ருத்தி செய்­யப்­படும் என வத்­து­ரக்­கும்­புர தம்­ம­ரத்­தன தேரர் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, இப்­பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள சுரங்க மலை, ஜின் மலை, பாத மலை போன்­ற­வற்றில் சுமார் 40 குகைகள் காணப்­ப­டு­வ­தாக வர­லா­றுகள் கூறு­கின்­றன.
தற்­போது சுரங்க மலை காணப்­பட்ட பிர­தே­சத்தில் 167 அடி உய­ர­மான தாது­கோ­பு­ர­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஜின் மலை காணப்­பட்ட இடத்தில் சிங்­கமும் பாத மலை காணப்­பட்ட இடத்தில் யானையும் கட்­டப்­பட்­டுள்­ளன.
இதே­வேளை, இப்­பள்­ளி­வாசல் அமை­யப்­பெற்­றுள்­ளதை இல­குவில் அடை­யாளம் காண்­ப­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த மினாரா (வர­வேற்பு கோபுரம்) இவ்­வ­ருட ஆரம்­பத்தில் அத்­து­மீறி உடைக்­கப்­பட்­டது.

இதனால், இப்­பள்­ளி­வா­சலை இல­குவில் அடை­யாளம் காண்­ப­தற்­கான எந்­த­வொரு அடை­யா­ள­மு­மில்லை. இப்­பள்­ளி­வா­சலை திட்­ட­மிட்டு மறைக்கும் நோக்கில் இதற்கு அரு­கி­லுள்ள திறந்­த­வெளிப் பகுதி சுவர்களினால் கட்­டப்­பட்டு ஐந்து அரச மரங்கள் நடப்­பட்­டுள்­ளன.

சுமார் 10 அடி அக­ல­மான சிறிய வீதி­யொன்றின் ஊடா­கவே தற்­போது இப்­பள்­ளி­வா­ச­லுக்குச் செல்ல வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மாக புதி­தாக இப்­பள்­ளி­வா­ச­லுக்குச் செல்வோர் பள்­ளி­வா­சலை அடை­யாளம் காண்­பதில் பாரிய சிரமங்களை எதிர்­நோக்க வேண்டி ஏற்­படும். அது போன்ற நிலை­யினை இக்­கட்­டு­ரை­யா­ளரும் எதிர்­நோக்­கினார்.
இப்­பள்­ளி­வா­ச­லுக்­கான நிர்­வாக சபை 1936 இலி­ருந்து நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக வரலா­றுகள் கூறு­கின்­றன. எனினும், வக்பு சபை­யினால் இன்று இப்­பள்­ளி­வா­ச­லுக்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிர்­வா­கி­களில் அதி­க­மானோர் கொழும்­பினைச் சேர்ந்தவர்களாவர். அத்­துடன் தென்ன கிரா­மத்­தினைச் சேர்ந்த எவரும் இந்த நிர்­வாக சபையில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை, தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கீழ் இப்­பி­ர­தேசம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­மை­யினால், இப்­பள்­ளி­வா­சலின் எந்­த­வொரு செயற்­பாட்­டுக்கும் குறித்த திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யினை பெற வேண்­டி­யுள்­ளது.

தப்தர் ஜெய்­லா­னியில் 1890 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட கொடி­யேற்­றமும், கந்­தூரி நிகழ்வும் கடந்த 133 வரு­டங்­க­ளாக தொடர்ச்சியாக இடம்­பெற்று வரு­கின்­றது. எவ்­வா­றா­யினும், இவ்­வ­ருட கந்­தூரி கடந்த நவம்பர் 26ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவும், 27ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பகலும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனினும் வத்­து­ரக்­கும்­புர தம்­ம­ரத்­தன தேரரின் ஆலோ­ச­னையின் பிர­காரம் குறித்த நிகழ்வு 30ஆம் திகதி புதன்­கி­ழமை இர­விற்கும், 1ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பக­லிற்கும் மாற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இவ்­வாறு கந்­தூ­ரிக்­கான திகதி மாற்­றப்­பட்­டமை இதுவே முதற் தட­வை­யாகும்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்­களில் அதிக சிங்­க­ளவர்கள் இந்த மலைத் தொட­ருக்கு விஜயம் செய்­வ­த­னா­லேயே இவ்­வாறு வேறு திக­திக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கலாம் என இப்­பள்­ளி­வா­சலின் நிர்­வா­கி­யொ­ருவர் தெரி­வித்தார்.

குறித்த தினங்­களில் சுமார் ஒரு இலட்சம் பௌத்தர்கள் கூர­கல மலைத் தொட­ரினை பார்­வை­யிட வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை ஊக்­கு­விக்கும் நோக்கில் பல நிகழ்ச்சித் திட்­டங்கள் சமூக ஊட­கங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
“இந்த பிர­தேச முஸ்­லிம்­களை வெளி­யேற்­று­வதே வத்­து­ரக்­கும்­புர தம்­ம­ரத்­தன தேரரின் இலக்­காகும். இதற்­காக முஸ்­லிம்­களின் காணி­களை கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கையில் அவர் தற்­போது கள­மி­றங்­கி­யுள்ளார்” என இப்­பி­ர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

அண்­மையில் முஸ்லிம் குடும்­ப­மொன்றிடம் இருந்து சுமார் அரை ஏக்கர் காணி­யினை 25 இலட்சம் ரூபா­விற்கு கூர­கல ரஜ­மகா விகா­ரை நிர்வாகம் கொள்வனவு செய்­துள்­ள­தா­கவும் பிர­தேச மக்கள் குறிப்­பிட்­டனர்.

இதே­வேளை, கூரகல புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக முஸ்லிம்கள் வாழும் பகுதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி இருக்கத் தக்கதாக இன்று கூரகலைக்கு செல்வதற்காக புதிய வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டு முஸ்லிம் பிரதேசம் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
முன்னரைப் போன்று தற்போது முஸ்லிம்கள் இப் பகுதிக்கு விஜயம் செய்வது குறைவு என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். இதேவேளை ஜெய்லானிக்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

இதனிடையே, திட்டமிடப்பட்டு வரலாற்றிலிருந்து இல்லாதொழிக்கப்படுகின்ற தப்தர் ஜெய்லானி பற்றி இதுவரை எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு பாவா ஆதம் மலைக்குப் பிந்திய மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு இருப்பியல் அடையாளமான தப்தர் ஜெய்லானியை பாதுகாப்பதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.