“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என அழைத்து தாக்கினர்” பதுளை சிறைச்சாலையில் நடந்தது என்ன?

0 268

எம்.ஏ.எம். அஹ்ஸன்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் கைதிகள் மீது கடந்த பத்தாம் திகதி அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சில கைதிகள் தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
ஒரு புற்று நோயாளி உட்­பட கடு­மை­யான காயங்­க­ளுக்­குள்­ளான ஐந்து பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு தற்­போது சிகிச்­சை­களின் பின்னர் சிறைச்­சா­லைக்கு திரும்­பி­யுள்­ளார்கள். குறித்த கைதி­களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என்று கூறியே ஏனைய கைதிகள் தாக்­கி­யுள்­ள­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கி­றார்கள்.

இந்த சம்­பவம் குறித்து பாதிக்­கப்­பட்ட கைதி­களின் குடும்­பத்­தினர் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன் அவர்­களை பாது­காப்­பான சிறைக்கு மாற்­று­மாறும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள். இந்த விடயம் தொடர்­பான விசா­ர­ணை­களை சிறைச்­சா­லைகள் திணைக்­களம் மற்றும் பதுளை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட கைதி­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­த­தன்­படி உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பதுளை சிறைச்­சா­லையில் தற்­போது ஒன்­பது சந்­தேக நபர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அதில் ஒருவர் தற்­போது கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்ளார்.

கைதிகள் அனை­வ­ருக்கும் இரவு உணவு விநி­யோ­கிக்­கப்­பட்ட போது பெயர் வெளி­யி­டப்­ப­டாத மூன்று கைதிகள் முஸ்லிம் கைதி­களை ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள்’ என அழைத்து மிலேச்­சத்­த­ன­மாக தாக்­கி­யி­ருக்­கி­றார்கள். புற்று நோயா­ளி­யான றிஸ்­பா­னையும் தாக்­கு­வ­தற்­காக அவர்கள் துரத்­தி­யுள்­ளார்கள். தன்னால் முடிந்­த­வரை ஓட முயற்சி செய்த அவர் இறு­தியில் மயங்கி விழுந்து முழங்­காலில் காயம் ஏற்­பட்டு இரண்டு நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றுள்ளார். றிஸ்பான் இரண்டு பிள்­ளை­களின் தந்தை ஆவார்.

பதுளை சிறைச்­சா­லையில் நடந்த வன்­முறை தொடர்­பாக மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு உற­வி­னர்கள் வழங்­கிய கடி­தத்­தில் காயம்­பட்ட நால்­வரில் ஒரு­வ­ருக்கு தாடை உடைந்து சத்­தி­ர­சி­கிச்சை செய்­துள்­ளார்கள் என்றும் மற்­று­மொ­ரு­வ­ருக்கு தலையில் பலத்த அடி கார­ண­மாக 13 தையல்­க­ளுடன் அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­றுள்ளார் என்றும் தெரி­வித்­துள்­ளார்கள். ஏனை­ய­வர்கள் கைகளில் திசு வெடித்தும் வயிற்றில் பல­மான காயம் ஏற்­பட்டும் சிகிச்சை பெற்­றுள்­ளார்கள். ஓடி ஒழிந்தே இவர்கள் உயிர் தப்­பி­யுள்­ளார்கள். இந்­தக்­கொ­டு­ர­மான தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் யார் என்­பதைக் கூட சிறைச்­சாலை அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்துக் கூற­வில்லை என்று உற­வி­னர்கள் வழங்­கி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளார்கள்.

றிஸ்­பானின் சகோ­தரர் மொஹமட் நவ்ஸாத் இது தொடர்­பாக தெரிவிக் கையில் “சிறையில் உள்ள எனது சகோ­தரர் ஏற்­க­னவே புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். அவர் வெளிர் நிறத்­துடன் பல­வீ­ன­மாக இருக்­கிறார். சில கைதிகள் அவரை அடிக்க முயன்­றுள்­ளார்­கள் ஆனால் அவ­ரது பல­வீ­ன­மான உடல் நிலை கார­ண­மாக திடீ­ரென சரிந்து விழுந்து காய­ம­டைந்­துள்ளார். சந்­தேக நபர்கள் பாது­காப்­பாக இருப்­பதை உறுதி செய்­யு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் நாங்கள் வேண்­டிக்­கொள்­கிறோம்” என தெரி­வித்தார்.

கொடூ­ர­மாக தாக்­கப்­பட்ட நான்கு கைதி­களுள் ஒரு பிள்­ளையின் தந்­தை­யான முப்­பது வய­து­டைய மொஹமட் றிஸ்வான் என்­ப­வரும் ஒருவர் ஆவார். இது தொடர்­பாக தெரிவிக்கையில், றிஸ்­வானின் மனைவி பாத்­திமா பஸ்ரின், “அவ­ரது ஒரு கையில் பலத்த காயம் ஏற்­பட்டு திசு வெடித்­துள்­ளது. மூன்று நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­விட்டு தற்­போது சிறைச்­சா­லைக்கு திரும்­பி­யுள்ளார். மனித உரி­மைகள் ஆணைக்­குழு மற்றும் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்­திற்கு இது தொடர்­பாக கடிதம் எழு­தி­யுள்ளோம்” என தெரி­வித்தார்.

பாதிக்­கப்­பட்ட சந்­தேக நபர் ஒரு­வரின் மைத்­துனர் இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கும்­போது “இம்­முறை நான்கு கைதி­களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என்று கூறி மற்ற கைதிகள் தாக்­கி­யுள்­ளார்கள். காய­ம­டைந்த கைதிகள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள். நாங்கள் ஏற்­க­னவே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு கடிதம் எழு­தி­யுள்­ள­துடன் அவர்­களை பாது­காப்­பான சிறைக்கு மாற்­று­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம்” என தெரி­வித்தார்.

சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் அடிக்­கடி இவ்­வாறு துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக அவர் தெரி­விக்­கிறார். முஸ்லிம் கைதி­களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என்று அழைப்­ப­வர்­களால் முஸ்லிம் கைதி­க­ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்­ப­டாமல் இருக்க வேண்டும் என்­ப­தற்­காக கடந்த காலங்­களில் அவர்­களை தனித்­தனி அறை­க­ளுக்கு மாற்­றி­யி­ருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

சம்­ப­வத்தில் காய­ம­டைந்த யாகூப் என்­ப­வரின் நெற்­றியில் பதி­மூன்று தையல்கள் போடப்­பட்­டுள்­ளன. மூன்று நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­விட்டு அவர் இப்­போது சிறைச்­சா­லைக்கு திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது மனைவி தெரி­விக்­கிறார். பதுளை சிறைச்­சா­லையில் இப்­ப­டி­யொரு சம்­பவம் நடந்­தி­ருப்­பதை ஊட­கங்கள் வாயி­லாகவே யாகூபின் மனைவி தெரிந்­து­கொண்டார். ஆனாலும் தனது கன­வரும் தாக்­கப்­பட்­டி­ருப்பார் என்று அவர் நினைக்­க­வில்லை. மாதத்தில் ஒரு முறை தனது கண­வரை பார்க்க பது­ளைக்குச் செல்­லும்­போதே விட­யத்தை அறிந்­து­கொண்­டுள்ளார்.

கணவர் சிறைக்குச் சென்­றதன் பின்னர் சிறு தொழில்கள் செய்து குடும்­பத்­தி­னரின் உத­வி­யுடன் பிள்­ளை­களை யாகூப்பின் மனைவி கவ­னித்துக் கொள்­கிறார். சம்­பவம் குறித்து அவர் தெரிவிக்கையில், “நடந்த விட­யத்தை எங்­க­ளுக்கு யாரும் அறி­விக்­கவும் இல்லை. அவர்­க­ளு­டைய உடல் நிலை பற்றி எங்­க­ளுக்கு சொல்­லாமல் இருக்­கி­றார்கள். சம்­ப­வத்தை கேள்­விப்­பட்டு சிங்­களம் தெரிந்­த­வர்கள் மூலம் தொலை­பே­சியில் கதைத்து விசா­ரித்­த­போது கூட சிறைச்­சாலை அதி­கா­ரிகள் நடந்த எதையும் சொல்­ல­வில்லை. விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி அவர்­களை வெளியில் எடுக்க பல முறை முயற்­சித்­துள்ளோம். அது முடி­யா­ததால் இப்­போது நாங்கள் அவர்­க­ளிடம் கேட்­ப­தெல்லாம் அவர்­களை பாது­காப்­பான சிறைக்கு மாற்ற வேண்டும் என்­பது மட்­டும்தான். எல்லா நாட்­க­ளையும் பயத்­து­டனும் கவ­லை­யு­ட­னும்தான் கடத்துகிறோம்” என அழு­கை­யுடன் கூறினார்.

தாக்­கப்­பட்­ட­வர்­களில் ஸபீர் என்­பவர் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்ளார். அவ­ரு­டைய தந்தை இது தொடர்­பாக தெரிவிக்கையில், ஸபீரின் தாடை எலும்­புகள் வெகு­வாக உடைந்­துள்­ள­தாக கூறினார். இந்­நி­லையில் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்டு ஐந்து நாட்கள் வரை வைத்­தி­ய­சாலை கண்­கா­ணிப்பில் இருந்த தனது மகன் தற்­போது சிறைச்­சா­லைக்கு திரும்­பி­யுள்ளார் என்று ஸபீரின் தந்தை தெரி­விக்­கிறார். “சிறைச்­சா­லையில் உள்­ள­வர்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் இல்­லாத நிலை­மைதான் இருக்­கி­றது. அவர்­களை பாது­காப்­பான இடத்­திற்கு மாற்­றும்­படி நாங்கள் அதி­கா­ரி­க­ளிடம் கேட்­டுள்ளோம். விசா­ர­ணைகள் எதுவும் இல்­லா­மல்தான் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைத்­துள்­ளார்கள்” என அவர் மேலும் கூறினார்.

சிறைச்­சா­லையில் தாக்­கு­த­லுக்கு உள்­ளான 28 வய­தான ஷிப்லி என்­ப­வ­ருக்கு வயிற்றில் பல­மாக காயம் ஏற்­பட்­டுள்­ளது. அவ­ரது மனைவி இது தொடர்­பாக தெரிவிக்கையில், “அவர் எற்­க­னவே முதுகில் காயங்­க­ளு­டனே இருக்­கிறார். சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட விபத்­தொன்­றினால் அவ­ருக்கு தொடர்ச்­சி­யான முதுகு வலி இருக்­கி­றது. இப்­போது வயிற்றில் ஏற்­பட்­டுள்ள காயத்­தினால் எதுவும் சாப்­பிட முடி­யாமல் சிர­மப்­ப­டு­கின்றார். என்ன சாப்­பிட்­டாலும் வாந்­தி­யாக வெளி­வ­ரு­வ­தாக சொன்னார். அவர்­க­ளு­டைய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்” என கண்­ணீ­ருடன் கூறினார்.

திரு­ம­ண­மாகி ஆறு மாதங்­க­ளில்தான் ஷிப்லி கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார். அவர் கைது செய்­யப்­பட்ட அதிர்ச்­சியால், அவ­ரது மனை­வியின் கரு கலைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று இப்­போது குணமாகியுள்ளார். இரண்டு மாதங்கள் தொடர்ச்­சி­யாக மருத்­துவ கண்­கா­ணிப்பில் இருந்த அவர் ஷிப்­லியின் பெற்­றோ­ருடன் தற்­போது வசித்து வரு­கிறார். இந்­நி­லையில் தனது கணவர் இவ்­வாறு தாக்­கப்­பட்­டுள்ள விடயம் அவரை வெகு­வாக பாதித்­துள்­ளது.
சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பாக கேள்­விப்­பட்டு சிறைச்­சா­லையை தொடர்­பு­கொண்டு கைதி­களின் உடல் நிலை குறித்து உற­வி­னர்கள் விசா­ரிக்­கும்­போது சிறைச்­சா­லை­யிடம் இருந்து உரிய முறையில் பதில் கிடைப்பதில்லை என்று உற­வி­னர்கள் சொல்­கி­றார்கள். கைதி­களின் உடல் நிலை சீராக உள்­ள­தா­கவும் அவர்கள் பாது­காப்­பாக இருப்­ப­தா­கவும் உற­வி­னர்­க­ளிடம் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளார்கள். ஆனால் கடந்த புதன் கிழமை நேர­டி­யாகச் சென்று உற­வி­னர்கள் பார்க்­கும்­போ­துதான் உண்­மை­யான நிலை­மை உற­வி­னர்­க­ளுக்கு தெரிந்­துள்­ளது. பதுளை சிறைச்­சா­லையில் நடந்த வன்­முறை தொடர்­பான முறைப்­பாட்டு கடி­தத்தில் உற­வி­னர்கள் குறித்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள்.

இந்த சம்­பவம் தொடர்­பாக கருத்து தெரி­வித்த மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷ்ரின் ஸருர், மட்­டக்­க­ளப்பு மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்தை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டேன். சந்­தேக நபர்­களில் மூவர் வைத்­தி­ய­சா­லையில் இருந்து சிறைச்­சா­லைக்கு திரும்­பி­யுள்­ளார்கள் என்­பதை பதுளை மனித உரி­மைகள் அலு­வ­லகம் மட்­டக்­க­ளப்பு மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்­திற்கு தெரி­வித்­தி­ருந்­தது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள் சிலர் பதுளை சிறைச்­சா­லைக்குச் சென்­றி­ருந்­த­போது காய­ம­டைந்­த­வர்கள் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து சிறைச்­சா­லைக்குத் திரும்­பி­யுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்” என தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மேலும் தெரிவிக்கை யில், “சிறைச்­சா­லையில் உள்­ள­வர்­களின் உடல் நிலை குறித்து தகவல் வழங்­கு­மாறு அவ­ரது குடும்­பத்­தினர் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ள போதிலும் அவ­ர்களது உடல்­நிலை குறித்து அவர்­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கப்­ப­டு­வ­தில்லை. நேர­டி­யாகச் சென்றே காயங்­களை அவ­தா­னித்­துள்­ளார்கள்” என்றார். பாதிக்­கப்­பட்ட கைதிகள் 30 மாதங்­க­ளுக்கும் மேலாக எந்­த­வித விசா­ர­ணை­களும் இன்றி சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் கள் அடிக்­கடி ஒரு சிறைச்­சா­லையில் இருந்து வேறொரு சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­ப­டு­வ­தாக ஷ்ரின் தெரி­விக்­கிறார். இது தொடர்­பாக கருத்து தெரி­விக்கும் அவர் “சில நேரங்­களில் கைதிகள் எங்­கி­ருக்­கி­றார்கள் என்று கூட அவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்குத் தெரி­யாது. குடும்­பத்­துடன் ஒரு வரை­ய­றுக்­கப்­பட்ட தொடர்பு மாத்­தி­ரமே உள்­ளது. இவர்கள் மிகவும் வறு­மை­யா­ன­வர்கள், சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகளை தூர இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களது உறவினர்கள் கைதிகளை பார்வையிட சிரமப்படுகின்றார்கள்.

சிரமத்திற்கு மத்தியில் பார்க்கச் சென்றாலும் ஐந்து நிமிடங்கள் மாத்தி ரமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறைச்சாலை க்கு கைதிகளை பார்வையிட செல்லும் முஸ்லிம் பெண்களை ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்’ என்று அங்குள்ளவர்கள் அழைக்கின்றார்கள். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 33 மாதங் கள் ஆகியும் இன்னும் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட வில்லை” என்றார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமது உறவினர்களின் வழக் குகளை துரிதப்படுத்தி விரைவில் விடு தலை செய்து தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். அதுவரை வேறொரு சிறைச்சாலைக்கு அவர்களை இடம்மாற்றி தமது உறவினர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறும் கொலை அச்சுறுத்தல் விடுத்து, தாக்கிய ஏனைய கைதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆனைக்குழுவுக்கு உறவினர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் வினயமாக கேட்டுள்ளார்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.