கவனத்தை வேண்டிநிற்கும் வடக்கு முஸ்லிம்களின் இன்றைய சவால்கள்

0 536

வட மாகா­ணத்தின் பூர்­வீக முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் நிரா­யு­த­பா­ணி­க­ளாக பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட வர­லாற்றுத் துயரம் இடம்­பெற்று தற்­போது 31 வரு­டங்கள் கடந்­துள்­ளதை நினை­வு­கூரும் வகையில் முசலி வாசகர் வட்டம் அண்­மையில் இணை­ய­வழி கலந்­து­ரை­யாடல் ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. குறித்த நிகழ்வில் யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் உள்ள பூர்­வீக முஸ்­லிம்கள் மற்றும் அவர்கள் சார்ந்­த­வர்­க­ளுடன் நெருக்­க­மாக செயற்­பட்டு வரு­கின்ற சமூக ஆர்­வ­லர்கள் மிக முக்­கி­ய­மான கருத்­துக்­களை முன்­வைத்­தார்கள். அதன் தொகுப்பு.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

வடக்கின் பூர்­வீக முஸ்­லிம்­களின் இன்­றைய நிலை
1990 ஆம் ஆண்டில் வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் இலங்­கையின் புத்­த­ளம், வன்னி உட்­பட பல்­வேறு பகு­தி­களில் இடம்­பெ­யர்ந்து வசித்து வரு­கி­றார்கள். தற்­போது கட்டங் கட்­ட­மாக தமது பூர்­வீக நிலங்­களில் மீள்­கு­டி­யேறி வரு­கின்­றார்கள். தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் மீள்­கு­டி­யே­றி­யி­ருக்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு தமது முன்னாள் அண்டை வீட்­டார்­க­ளான தமிழ் மக்­க­ளுடன் நல்­லி­ணக்க உற­வினை கட்­டி­யெ­ழுப்­ப வேண்­டிய கட்­டாய தேவை இருக்­கி­றது.
முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­போது தமி­ழர்­களும் அவர்­க­ளுக்கு உதவி செய்ய முடி­யாத நிலை­மையில் இருந்­தார்கள் என்­பதை இலங்கை முஸ்­லிம்கள் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று மடு பிர­தேச செய­ல­கத்தின் கலா­சார உத்­தி­யோ­கத்தர் சபா தனுஜன் தெரி­விக்­கிறார். யாழ் மக்கள் ஒன்­றி­யத்­துடன் இணைந்து வரு­டாந்தம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட நாளில் தமிழ் மக்கள் அனை­வரும் முஸ்­லிம்­களின் வெளி­யேற்­றத்தை நினைத்து வருந்­து­வ­தாக சபா தனுஜன் தெரி­வித்தார்.

1995 ஆம் ஆண்டில் இரா­ணுவ அச்­சு­றுத்­த­லுக்குப் பயந்து அசையும் சொத்­துக்­க­ளுடன் மாத்­திரம் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தமிழ் மக்கள் தமது இருப்­பி­டத்தை விட்டு விலகிச் சென்­றதை சபா தனுஜன் நினைவூட்டுகிறார். அதே நிலை­மையே 1990 ஆம் ஆண்டில் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டது என்­ற­போ­திலும் முஸ்­லிம்கள் எந்­த­வித சொத்­துக்­க­ளையும் எடுத்துச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார். வறு­மையில் அனு­தி­னமும் சிர­மப்­பட்டு கடு­மை­யாக உழைத்து வாழ்­கின்ற தமிழ் மக்கள் மத்­தி­யி­லேயே மீண்டும் முஸ்­லிம்கள் குடி­யே­று­கின்­றார்கள். இந் நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த தமிழ் தேசி­ய­வாதம் தடை­யாக இருப்­ப­தாக தெரி­விக்கும் சபா தனுஜன் முடிந்­த­வரை அது தொடர்­பான பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

திட்­ட­மிட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு
வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வத்தை ஒரு திட்­ட­மிட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு என எழுத்­தாளர் சிராஜ் மஷ்ஹுர் வரை­வி­லக்­கணம் செய்­கின்றார். அக­தி­க­ளாக்­கப்­பட்­ட­வர்கள் என்றோ உள்­நாட்­டிற்குள் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் என்றோ அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. முஸ்­லிம்கள் தனித்­த­னி­யாக அடை­யாளம் காணப்­பட்டு திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டார்கள் என்­பதன் அடிப்­ப­டையில் குறித்த வர­லாற்றுத் துய­ரத்­தினை இனச்­சுத்­தி­க­ரிப்பு என்றே அடை­யா­ளப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது என சிராஜ் மஷ்ஹுர் தெரி­விக்­கிறார்.
அவ­ரது கருத்­தின்­படி இலங்­கையில் முஸ்­லிம்கள் வாழும் சூழலை செறிந்து வாழும் சூழல், தீர்­மா­னிக்கும் அதி­கா­ரத்­தி­லுள்ள சூழல், குறை­வான சனத்­தொகை கொண்ட மற்றும் ஆகக்­கு­றைந்த சனத்­தொகை கொண்ட சூழல் என்று நான்கு வகை­யாக பிரிக்க முடியும். அதில் வடக்கில் மீள்­கு­டி­யே­றி­யி­ருக்­கின்ற முஸ்­லிம்கள் நான்­கா­வது வகை­யாகும்.

முஸ்­லிம்­களின் பல­வந்த வெளி­யேற்­றத்­திற்கு தமி­ழர்­க­ளாக உள்ள பொது­மக்கள் காரணம் என்று நினைப்­பது முட்­டாள்­த­ன­மாகும். குறித்த காலப்­ப­கு­தியில் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவோ அல்­லது முறை­யற்ற விதத்­திலோ அதி­கா­ரத்தில் இருந்­த­வர்­கள்தான் இந்த வர­லாற்றுத் துய­ரத்­திற்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் ஆவர். இந்த சம்­ப­வத்தை கிழக்கில் உள்ள தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முறை­யற்ற செயல் என்றோ அல்­லது ஏனைய கார­ணங்­களை முன்­வைத்தோ நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்று சிராஜ் மஷ்ஹுர் கரு­து­கின்றார். 1983 தமிழ் மக்­க­ளுக்கு ஒரு கறுப்பு ஆண்டு என்­ப­தைப்­போல 1990 முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு கறுப்பு ஆண்­டாகும். 30 வருட கால யுத்­தத்தில் தமிழ் மக்கள் மாத்­தி­ர­மல்­லாது முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள் என்­பதை அனை­வரும் உணர வேண்டும். இங்கே இருப்­பது கூட்­டு­ம­னக்­கா­யங்கள் என்­பதை உணர்ந்து சமூக உணர்வை குழப்­பாமல் இருக்க வேண்டும் என்­பது சிராஜ் மஷ்­ஹுரின் வேண்­டு­கோ­ளாகும்.

புதிய தலை­முறை அறி­யாத பல துய­ரங்­களை கடந்தே வடக்கின் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். பணம், நகை என சகல சொத்­துக்­க­ளையும் சூறை­யாடி வெறுங்­கை­யோடு அனுப்­பப்­பட்­டார்கள். நடைப்­ப­ய­ண­மாக வரும்­போது வன விலங்­கு­களின் தாக்­கு­த­லுக்கு எத்­த­னையோ பேர் ஆளா­னார்கள். அர­சாங்கம் அல்­லது அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் வழங்­கு­கின்ற சின்­னஞ்­சி­றிய உலர் உண­வுப்­பொ­தியில் தங்கி வாழும் நிலை­மைதான் அனை­வ­ருக்கும் இருந்­தது. பெண்கள் சிறு­வர்கள் வயோ­தி­பர்கள் என அனை­வ­ருமே வார்த்தை வடிவம் கொடுக்க முடி­யாத அள­வுக்கு சிர­மப்­பட்­டார்கள் என்­ப­வற்றை மறக்­கவே முடி­யாது. இன­வாதம் சார்ந்து நாம் பழைய விட­யங்­களை பேசு­வ­தற்கு மாற்­ற­மாக ஒரு பகை மறப்பு தேவைப்­ப­டு­கின்­றது.

நடந்த விட­யங்­களை மறக்க முடி­யா­து­தானே தவிர மன்­னிக்க முடி­யாது என்­றில்லை. அர­சியல் ரீதி­யான தீர்க்­க­மான முடி­வு­க­ளுக்­காக பகை மறப்பு தேவைப்­ப­டு­கின்­றது. நேச உணர்­வினை அர­சியல் மற்றும் இலக்­கியம் போன்ற சாத­னங்­களின் ஊடாக வெளிக்­கொண்டு வர முடியும். அர­சியல் என்ற ஒன்றைத் தாண்டி வடக்கில் உள்ள முஸ்­லிம்­களின் வாழ்க்கைச் செலவு நெருக்­க­டி­களை இல்­லா­ம­லாக்­கவும் நல்­லி­ணக்கம் என்ற ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. ஒரு­வரை ஒருவர் குற்றம் சாட்­டாமல் பொதுப்­புள்­ளி­களை கண்­ட­டைந்து செயற்­பட வேண்­டிய தேவை இருக்­கி­றது.

இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் வாழ்­வியல் அம்­சங்கள்
1990 இல் வடக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட மிகப்­பெ­ரி­ய­தொரு அநீ­தி­யா­கவே அவர்­களின் வெளி­யேற்­றத்தை பார்க்க வேண்­டி­யுள்­ள­தாக பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் வாழ்­வியல் அம்­சங்கள் தொடர்­பாக ஆய்­வினை மேற்­கொண்­டு­வரும் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் மஹேந்­திரன் திரு­வா­ரங்கன் கரு­து­கின்றார். பன்­மைத்­துவம் மற்றும் சக­வாழ்­வுக்கு ஏற்­பட்ட மிகப்­பெ­ரிய சவா­லாக இந்த பல­வந்த வெளி­யேற்றம் இருக்­கி­றது.

யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழகம் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளின்­படி பல­வந்த வெளி­யேற்றம் இடம்­பெற்று 31 ஆண்­டுகள் கடந்த பிறகும் இன்­னமும் குறித்த சமூ­கத்­தினர் தனிப்­பட்ட முறையில் அல்­லது குடும்ப அமைப்பில் தம்மை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை­யு­டனே வாழ்­கி­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது மீள்­கு­டி­யே­று­கின்ற முஸ்­லிம்கள் மிதக்கும் சமூ­க­மா­கவே வாழ்­கி­றார்கள். அதா­வது புத்­த­ளத்தில் கொஞ்ச நாள் யாழ்ப்­பா­ணத்தில் கொஞ்ச நாள் என்றே அவர்­க­ளு­டைய வாழ்க்கை நகர்­கி­றது.

யாழ்ப்­பா­ணத்தில் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற தமிழ் மக்கள் நமது அண்டை வீட்­டார்­களை ஆரம்­பத்தில் ஏற்­றுக்­கொள்ள மறுத்­த­போது தற்­போது அதற்­கான சூழல் அமைந்­துள்­ளது. மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்கள் தமது தேவை­க­ளுக்­காக அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்­கின்­ற­போது அங்­குள்ள அதி­கா­ரி­க­ளினால் வெறுப்­புப்­பேச்­சு­களை சந்­திப்­பது வழ­மை­யான ஒன்­றாக ஆகி­யுள்­ளது. இப்­படி அனு­தி­னமும் சிர­மத்­துடன் வாழ்­கி­றார்கள் எனும்­போது மீள்­கு­டி­யேற்றம் அர்த்­த­மற்­ற­தாக மாறி­விடும்.

வீடு­களை மீளக்­கட்டி மீள்­கு­டி­யேறும் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கு­கின்ற திட்­டங்­களில் பாரிய பின்­ன­டைவு இருக்­கி­றது. நிலத்­துக்­கான ஆவ­ணங்கள் எது­வுமே கைவசம் இல்­லாத நிலையில் அர­சாங்கம் அவர்­க­ளிடம் ஆவ­ணங்­களை கோரு­வதும் திட்­டங்­களை இழுத்­த­டிப்பு செய்­வதும் வேடிக்­கை­யான ஒன்று என மஹேந்­திரன் திரு­வா­ரங்கன் கரு­து­கின்றார்.

மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்­க­ளுக்கு நிலம் ஒரு பாரிய பிரச்­சினை ஆகும். நிலங்­க­ளுக்­கான பட்­ட­யங்கள் இல்­லா­மையால் அங்கே நீருக்­காக கிணறு தோண்­டு­தல், மின்­சார வச­தி­களை பெற்­றுக்­கொள்­ளுதல் போன்ற விட­யங்­க­ளுக்கு பாரிய சிர­மங்கள் இருக்­கின்­றன. மேலும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலால் காணி­களை தமி­ழர்கள் மாத்­தி­ர­மின்றி முஸ்­லிம்­களும் இழந்­துள்­ளார்கள். ஆனால் இது தமிழ் மக்கள் மாத்­திரம் எதிர்­கொண்ட பிரச்­சி­னை­யா­கவே ஊட­கங்­களில் காட்­டப்­ப­டு­கின்­றது. மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்­க­ளுக்கு மாற்­றுக்­கா­ணி­க­ளாக வழங்­கப்­பட்ட நிலங்கள் எந்­த­வித வளங்­களும் இல்­லாத வெற்று நிலங்கள் ஆகும்.

வரை­ய­றுக்­கப்­பட்ட நிலத்தில் விறகு வெட்­டு­தல், தேன் வளர்ப்­பு, கால்­நடை மேய்ச்­சல், வலை பின்­னு­தல், நெசவு என பல்­வேறு கைத்­தொ­ழில்­களை மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்கள் செய்து வந்­த­போ­திலும் வளங்கள் எது­வுமே இல்­லாத நிலம் தமக்கு வழங்­கப்­பட்­டதில் மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து கைத்­தொ­ழில்­களும் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன.

இந்­திய இழு­வைப்­ப­ட­கு­களின் பிரச்­சி­னை, மீன்­பிடி எல்லைப் பிரச்­சினை போன்ற விவ­கா­ரங்கள் தமி­ழர்­களின் பிரச்­சினை என்­பது போல காட்­டப்­பட்ட போதிலும் இந்த சவால்­களை முஸ்­லிம்­களும் எதிர்­கொள்­கி­றார்கள் என்­பதே நிதர்­ச­ன­மான உண்மை. முஸ்­லிம்­க­ளுக்கு வட்டி போன்ற விட­யங்­க­ளுக்கு சமய ரீதி­யாக தடை உள்ள நிலையில் வட்­டி­யற்ற கடன் திட்­டங்­களை தமிழ் மக்கள் மேற்­கொள்­கி­றார்கள் என்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆரம்­பத்தில் சிலா­வத்­துறை போன்ற இடங்­களில் வட்டி என்ற விட­யத்தில் தொடர்­புட்டு பல முஸ்லிம் பெண்கள் அதனை மீளச் செலுத்­து­வதில் வாழ்­வா­தா­ரத்தை இழந்­தார்கள்.
யாழ்ப்­பா­ணத்தில் பல முஸ்லிம் ஆண்கள் இரும்பு சேக­ரித்து விற்­பனை செய்­கி­றார்கள். அவ்­வாறு இரும்பு சேக­ரிக்க வீடு­க­ளுக்கு செல்­லும்­போது இன­வாத வசை­களை எதிர்­கொள்­கி­றார்கள். வியா­பாரம் மேற்­கொள்­ளும்­போதும் இந்த வசை தொடர்­கி­றது. சிங்­கள பேரி­ன­வா­தத்தை எதிர்க்­கின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசி­ய­வா­தத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி முஸ்லிம் மக்­களை எதிர்ப்­பது ஆகு­மா­ன­தல்ல. எனவே மாகாண சபை, பிர­தேச செய­ல­கம், பாட­சா­லைகள் போன்­ற­வற்றில் உள்ள அதி­கா­ரிகள் தமது அதி­கா­ரத்தை முஸ்­லிம்கள் மீது பிர­யோ­கிக்­காமல் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு திற­வு­கோ­ளாக அவர்கள் செயற்­பட வேண்டும் என்று மஹேந்­திரன் திரு­வா­ரங்கன் வேண்­டிக்­கொள்­கிறார்.

அர­சியல் தவ­றுகள் மற்றும் பெண்­களின் பிரச்­சி­னைகள்
முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­ப­டும்­போது அப்­போ­தி­ருந்த முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இந்த விவ­காரம் தொடர்­பாக கவனம் செலுத்­த­வில்லை என்று மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷ்ரீன் ஸரூர் குற்றம் சாட்­டு­கின்றார். தற்­போது கூட வடக்­கி­லுள்ள முஸ்­லிம்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்­பாக யாரும் கண்­டு­கொள்­வ­தில்லை என தெரி­விக்­கிறார். தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் எவ்­வாறு மறைக்­கப்­பட்­டதோ அதே­போல முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் மறைக்­கப்­பட்­டுள்­ளன என்றே சொல்ல வேண்டும். இன்றும் மீள்­கு­டி­யேற்றம் என்­பது ஒரு சலு­கை­யாக பார்க்­கப்­ப­டு­கின்­றதே தவிர அது ஒரு உரி­மை­யாக பார்க்­கப்­ப­டு­வ­தில்லை.
காணி­களின் உரிமை தொடர்­பாக உள்ள சிக்கல் கார­ண­மாக புத்­த­ளத்தில் மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்­க­ளுக்­காக ஒரு அலு­வ­ல­கத்தை தாபிக்க சுமார் பத்து வரு­டங்கள் ஆகி­யது. உரிமை சார்ந்த விட­யங்கள் எது­வுமே கிடைக்­காத நிலை­மையே தற்­போது வரை இருக்­கி­றது. 5000 இந்­திய வீட்­டுத்­திட்டம் உட்­பட பல்­வேறு திட்­டங்­களில் கடு­மை­யான வரை­ய­றைகள் இருப்­பதால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இன்­னமும் சலு­கை­க­ளையும் உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

ஜன­நா­யக உரி­மை­க­ளுக்கும் தீங்­குகள் விளை­விக்­கப்­பட்­டன. 2019 ஜனா­தி­பதித் தேர்­தலின் போது புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு வாக்­க­ளிக்கச் சென்ற வடக்கு முஸ்­லிம்­களின் பஸ் வண்டி மீது 2019 நவம்பர் 16 ஆம் திகதி அதி­காலை தந்­தி­ரி­ம­லையில் வைத்து துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. மத­வாச்­சியில் கும்­பல்­களின் தாக்­கு­தலில் பல பெண்கள் மற்றும் குழந்­தைகள் காய­ம­டைந்­தனர் ஆனால் இன்­று­வரை எந்த விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வில்லை (ஒரு விசா­ரணை அறிக்கை கூட தேர்தல் ஆணை­யத்தால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை).

அன்று மாலை, பெண்­களும் குழந்­தை­களும் புத்­த­ளத்­திற்குத் திரும்பிச் சென்­ற­போது, அவர்கள் மீண்டும் தாக்­கப்­பட்­டனர். காயம்­பட்ட வாக்­கா­ளர்கள் பழி­வாங்­க­லுக்கு பயந்து மருத்­துவ சிகிச்­சையைக் கூட பெற­வில்லை. இந்த வன்­மு­றையின் அடிப்­ப­டையில், 2020 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இந்த வாக்­கா­ளர்கள் பங்­கேற்­ற­போது, புத்­த­ளத்தில் கொத்­தணி வாக்குச் சாவ­டி­களை அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்­புக்­கொண்­டது. இடம்­பெ­யர்ந்த அல்­லது மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்கள் மிதக்கும் வாக்­கா­ளர்­க­ளாக இருக்­கி­றார்கள். இதனால் பாரிய சவால்கள் நில­வுகின்றன.

இளம் வயது திரு­ம­ணங்கள் மற்றும் இளை­ஞர்கள் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­குதல் போன்ற விட­யங்கள் தற்­போது மலிந்து விட்­டன. இந்த விவ­கா­ரத்தை கண்­கா­ணிக்க பாட­சாலைச் சூழல் முன் வர வேண்டும். எங்­க­ளு­டைய சமூ­கத்­திற்­கான காப்பு கல்­விதான். கல்விச் சூழலை சிறந்த முறையில் பேணுவது மீள்குடியேற்ற முஸ்லிம்களுக்கு கட்டாயமான ஒன்றாகும் என ஷ்ரீன் சரூர் மேலும் வலியுறுத்தினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.