உள்ளங்களை கொள்ளை கொண்ட தலைவன் மங்கள

0 3,501

எம்.ஏ.எம். அஹ்ஸன்

முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் மரணம் முழு இலங்­கை­யையும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது என்­பதை அறிவோம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்­காக நீதி­யான முறையில் குரல் கொடுக்க என்­றுமே தவ­றாத மங்­க­ளவின் மரணம் பெரும்­பான்மை சிறு­பான்மை என அனைத்து மக்­க­ளுக்கும் பாரி­ய­தொரு இழப்பு. ஏறத்­தாள நான்கு தசாப்த அர­சியல் அனு­பவம் கொண்ட மங்­கள தனது அர­சியல் இருப்­புஇ செல்­வாக்கு என்­ப­வற்­றை­யெல்லாம் இரண்டாம் பட்­ச­மாக வைத்­து­விட்டு எல்லா இன மக்­க­ளையும் நீதி­யான முறை­யிலும் பன்­மைத்­துவ சிந்­த­னை­யி­லுமே அணு­கி­யி­ருந்தார். தனது 65 ஆவது வயதில் கொவிட் 19 தொற்று ஏற்­பட்டு இந்த உலகை விட்டுப் பிரிந்­துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர இறு­தி­யாக கடந்த நல்­லாட்­சியில் நிதி மற்றும் வெளி­நாட்டு விவ­கார அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்தார். 1983 இல் மாத்­தறை மாவட்­டத்­தி­லி­ருந்து இலங்கை சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தம ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக அர­சியல் பய­ணத்தைத் தொடங்­கினார். 1989 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாத்­தறை மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்டி பாரா­ளு­மன்­றத்­திற்குள் நுழைந்தார். 1994 தொடக்கம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல்­வேறு அமைச்­சுப்­ப­த­வி­களில் இருந்­துள்ளார். 2010 இல் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைந்­து­கொண்ட மங்­கள இறு­தி­யாக நிதி மற்றும் வெளி­நாட்டு விவ­கார அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்தார்.

2020 இல் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்­தியில் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிடத் தயா­ரா­கி­ய­போதும் தவிர்க்க முடி­யாத கார­ணங்­களால் தேர்தல் போட்­டியில் இருந்து வில­கிக்­கொண்டார். இனிமேல் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட விரும்­ப­வில்லை என்று கருத்து தெரி­வித்த அவர் நேரடி அர­சி­யலில் இருந்து ஒதுங்கி ‘தூய தேசப்­பற்­றா­ளர்கள்’ எனும் அமைப்பை உரு­வாக்கி அத­னு­ர­டாக அர­சியல் மற்றும் சிவில் சமூக செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்தார்.
இலங்கை முஸ்­லிம்கள் மீது அதிக கவனம் செலுத்­தினார் என்­பதை விட அவர்கள் மீது தீராத அன்பு செலுத்­தினார் என்று சொல்­வதே பொருத்­த­மாக இருக்கும். பெரும்­பான்மை மக்­க­ளிடம் தனது செல்­வாக்கு கேள்­விக்­கு­றி­யாகும் என்­பதை துச்­ச­மாக மதித்து “இலங்கை ஒரு பௌத்த நாடு அல்­லஇ இது ஒரு பண்­மைத்­துவ நாடுஇ இங்கே முஸ்­லிம்கள் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழ்­கி­றார்­கள், முஸ்­லிம்­களை மோச­மா­ன­வர்கள் என்று சித்­தி­ரித்தே நல்­லாட்சி கவிழ்க்­கப்­பட்­டது” என்­றெல்லாம் தைரி­ய­மாக பேசி­யி­ருக்­கிறார். கட்­டாய தக­னத்­திற்கு எதி­ராக குரல் கொடுத்­தார். தனியார் வங்கி ஒன்றில் முஸ்லிம் பெண்­களின் ஆடை சுதந்­திரம் கேள்­விக்­கு­றி­யா­ன­போது குறித்த வங்­கி­யி­லி­ருந்த தனது கணக்கை முடக்­கிக்­கொண்டார். முஸ்­லிம்­களின் எல்லா பண்­டி­கை­க­ளையும் தனது பண்­டி­கை­யாக கொண்­டா­டுவார். இன்று அவர் இல்லை என்­பது பாரி­ய­தொரு இழப்­பாக இருக்­கி­றது.

இளைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எடுத்­துக்­காட்டு
இன, மத, கட்சி பேதம் என்று எதுவும் இன்றி நல்ல விட­யங்­களை வர­வேற்கும் பண்­பினை மங்­கள கொண்­டி­ருந்தார். அது மங்­க­ளவின் தனித்­துவம் என்றே சொல்ல வேண்டும். இலங்­கையில் அனை­வ­ருக்கும் சம அளவில் மரி­யாதை கிடைக்க வேண்டும் என்­ப­தையே இலட்­சி­ய­மாக கொண்ட அவ­ருக்கு தனிப்­பட்ட வாழ்க்கை இலட்­சியம் என்று எதுவும் இருக்­க­வில்லை. மங்­கள சம­ர­வீ­ரவின் இழப்பு தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் அவர்­களை தொடர்­பு ­கொண்டு கேட்­ட­போது தனக்கு எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் முன்னாள் அமைச்சர் மங்­கள முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தி­ருக்­கிறார் என்று அன்­புடன் நினைவு கூர்ந்தார்.

இது தொடர்­பாக அவர் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில் “சிறு வயதில் இருந்தே முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் அர­சியல் விட­யங்­களை அவ­தா­னித்­தி­ருக்­கிறேன். கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில் எனது உரை­யொன்றை கேட்­டு­விட்டு குறுஞ்­செய்தி மூலம் எனக்கு வாழ்த்து ஒன்றை அனுப்­பினார். அப்­ப­டித்தான் அவர் எனக்கு அறி­மு­க­மானார். கட்­சி, இனம், மதம் மற்றும் வயது என்­பதைத் தாண்டி நல்­ல­தொரு ஆலோ­ச­க­ராக எனக்­கி­ருந்­துள்ளார். துறை­முக நகர விவ­காரம், கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழகம் போன்ற விவ­கா­ரங்கள் தொடர்­பாக தொலை­பே­சியில் என்­னோடு அதிகம் உரை­யா­டி­யி­ருக்­கிறார். எல்லா இனங்­க­ளுக்கும் சம அளவில் உரிமை கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய அள­வி­லான அர­சி­யல்­வா­தி­களுள் அவரும் ஒருவர் ஆவார்” என தெரி­வித்தார்.

மேலும் “இளைய அர­சி­யல்­வா­தி­க­ளான எங்­க­ளுக்கு அவர் ஒரு மிகப்­பெ­ரிய முன்­னு­தா­ரணம். 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­ப­க்ஷவை எந்­த­ளவு ஆத­ரித்­தாரோ அதே­ய­ளவு அவ­ரு­டைய கொள்­கைகள் தனக்கு ஒத்­து­வ­ரா­த­போது பகி­ரங்­க­மாக அதை எதிர்த்தார். நிலைப்­பா­டு­களை அடிக்­கடி மாற்­றிக்­கொள்ளும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மத்­தியில் தனக்கு சரி என்று நினைக்கும் ஒன்­றிற்­காக இறு­தி­வரை குரல் கொடுக்கும் துணிச்­ச­லு­டை­யவர் அவர். அந்த துணிச்சல் எனக்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தி­ருக்­கி­றது. அவ­ரது கனவுப் பாதையில் நாங்கள் பய­ணிப்­ப­துதான் அவ­ருக்கு செலுத்தும் அஞ்­ச­லி­யாக இருக்கும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர எப்­போதும் இளை­ஞர்­களை ஆத­ரித்து அவர்­களின் தோள்­களைத் தட்­டிக்­கொ­டுத்­தவர் ஆவார். கடந்த ஜூலை மாதத்தில் தேஷய பத்­தி­ரி­கைக்கு அவர் வழங்­கிய செவ்­வியில் “என்னைப் பொறுத்­த­வ­ரையில் நான் பாரா­ளு­மன்­றத்தில் இல்­லா­விட்­டாலும் நான் எதிர்­பார்க்கும் விட­யங்­களை பின்­பற்­று­ப­வர்கள் இருக்­கி­றார்கள் என்று சொல்ல வேண்டும். சாணக்­கியன் என்ற தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இருக்­கிறார். அவர் மூன்று மொழி­க­ளையும் கையா­ளக்­கூ­டிய ஒரு சிறந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர். இரண்­டா­வ­தாக சுனில் ஹந்­துன்­னெத்தி ஒரு நல்ல மனிதர் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன்” என தெரி­வித்­தி­ருந்தார்.

தனது அர­சியல் எதிர்­கா­லத்தை துச்­ச­மாக மதித்­தவர்.
முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது அர­சியல் எதிர்­காலம் மற்றும் அர­சியல் செல்­வாக்கு என்­ப­வற்றை துச்­ச­மாக மதித்து முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுத்த ஒரே­யொரு அர­சியல் தலைவர் ஆவார். முன்னாள் அமைச்­சரின் முஸ்லிம் சமூ­கத்­திற்­கான செயற்­பா­டுகள் குறித்து அவ­ரது சட்ட விவ­கா­ரங்­களில் நெருங்கிச் செயற்­பட்ட சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அமீர் பாயிஸ் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரி­விக்­கும்­போது “அமைச்சர் மங்­கள சம­ர­வீர போலி­க­ளற்ற நிஜ மனிதன். தனிப்­பட்ட வாழ்க்கை மற்றும் அர­சியல் என்ற இரண்­டிலும் இப்­படி போலிகள் இல்­லாமல் உண்­மை­யாக வாழ அப­ரி­மி­த­மான துணிவு வேண்டும். அந்த மனோ­நிலை மங்­க­ள­விடம் எப்­போதும் இருந்­தது” என தெரி­விக்­கிறார்.
இது தொடர்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பாயிஸ் மேலும் தெரி­விக்­கும்­போது “எமது நாட்டில் எங்கே பிழை இருக்­கி­றது என்­பதை சரி­யாக அடை­யாளங் கண்­ட­வர், அதனை திருத்­து­வ­தற்­காக தனது பாதையில் துணிச்­ச­லுடன் பய­ணித்தார். எல்­லா­வற்­றிகும் மேலாக மனி­த­ய­நே­ய­முள்ள ஒரு­வ­ராக விளங்­கினார். எல்லா இடங்­க­ளிலும் கண்­ணி­யத்தை பேணுவார். அனை­வ­ருக்கும் சம அளவில் உரி­மைகள் மற்றும் மரி­யாதை கிடைக்க வேண்டும் என்றே அவர் அதிகம் கனவு கண்டார். நேரடி அர­சி­யலில் இருந்து ஒதுங்­கி­னாலும் கூட தனது கனவை அடையும் இலட்­சியப் பய­ணத்தை அவர் விடவே இல்லை” என்றார்.

நிலை­மாறு கால நீதி மற்றும் அதி­காரப் பர­வ­லாக்கம் போன்ற விட­யங்­க­ளுக்­காக முன்னாள் அமைச்சர் மிகுந்த நேர்­மை­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட்டு வந்­ததை சட்­டத்­த­ரணி அமீர் பாயிஸ் நன்­றி­யுடன் நினைவு கூர்ந்தார். வடக்கு முஸ்­லிம்­களின் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் உரி­மை, இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விவ­காரம் என்­ப­வற்றில் அதிகம் கரி­ச­னை­யுடன் மங்­கள கருத்து வெளி­யிட்­ட­தாக அவர் தெரி­விக்­கிறார். கட்­டாய தக­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து குரல் எழுப்­பிய முதன்­மை­யான அர­சி­யல்­வா­தி­களுள் மங்­கள சம­ர­வீ­ரவும் ஒருவர் ஆவார். தனது அலு­வ­லக பணி­யா­ளர்கள் மற்றும் தனக்கு கீழ் வேலை செய்ய வேண்­டி­ய­வர்­களை தெரிவு செய்­யும்

 

­போதும் இன மத பேத­மின்றி திற­மையின் அடிப்­ப­டை­யி­லேயே வாய்ப்­பு­களை வழங்­கி­யி­ருந்தார். ஒரு துளி கூட இன­வாதம் இல்­லாமல் முற்­போக்கு சிந்­த­னை­யுடன் மங்­கள வாழ்ந்து மறைந்­துள்­ளாக சட்­ட­த­ரணி அமீர் பாயிஸ் கவலை வெளி­யி­டு­கின்றார்.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­களின் உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­தவர்
வடக்கின் பெண் மாற்றுத் திற­னா­ளிகள் கூட்­ட­மைப்­புடன் நெருக்­க­மான உறவை வைத்­தி­ருந்த முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர அவர்­க­ளது தேவை­களை அடிக்­கடி கேட்­ட­றிந்­து­ கொண்டார். குறித்த அமைப்பின் தலை­வரும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­யு­மான பிரி­ய­தர்­ஷினி ராஜேந்­திரன் 2018 இல் மன்­னாரில் வைத்து முன்னாள் அமைச்­சரை சந்­தித்து தமக்­கி­ருக்­கின்ற இன்­னல்­களை தெரி­வித்­த­போது அதில் மன­மு­ருகி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்­டத்தில் மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்­கென பாரி­ய­தொரு தொகையை ஒதுக்­கீடு செய்ய வழி சமைத்தார். அது­வரை மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் கொடுப்­ப­னவு ரூபா 3000 ஆக இருந்­ததை ரூபா 5000 ஆக அவர் மாற்­று­வ­தற்கு தன்­னா­லான முயற்­சி­களை செய்தார்.

இது தொடர்­பாக ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரி­விக்கும் பிரி­ய­தர்­ஷினி ராஜேந்­திரன் “மாங்­குளம் பகு­தியில் எங்­க­ளுக்­காக 10 ஏக்கர் காணி­யொன்­றினை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு அவர் வழி­ச­மைத்தார். அதில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான கட்­ட­டங்கள் கட்­டு­வ­தாக இருந்­தது. ஆட்சி மாற்றம் மற்றும் கொரோனா தொற்று கார­ண­மாக வேலைகள் ஸ்தம்­பித்­துப்­போ­னாலும் நாங்கள் அவரை நன்­றி­யோடு நினைவு கூர்­கிறோம்” என தெரி­விக்­கிறார். மாங்­குளம் பகு­தியில் குறித்த ஒதுக்­கப்­பட்ட காணி இருக்­கின்­றது. தற்­போது அதில் கட்­ட­டங்கள் கட்­டு­வ­தற்­கான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக ஒலித்த வலி­மை­யான குரல்
தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்­தவம் என சகல இனங்­க­ளிலும் உள்ள ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக எப்­போதும் முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது குரல்­களை வெளிப்­ப­டுத்­தியே வந்தார். நுண் நிதிக்­கடன் பிரச்­சி­னையால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் தொடர்பில் அமைச்­சரின் நட­வ­டிக்­கைகள் குறித்து கருத்துத் தெரி­வித்த மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷ்ரீன் ஸரூர் “நுண் நிதிக்­கடன் பிரச்­சி­னையால் பல பெண்கள் தற்­கொலை செய்து கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் அந்த விட­யத்தில் நிதி­ய­மைச்சர் என்ற அதி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்­தினார். மத்­திய வங்­கியின் ஊடாக பதிவு செய்­யப்­ப­டாத நுண் நிதிக்­கடன் திட்­டங்­களை விசா­ரணை செய்யும் செயற்­றிட்டம் ஒன்றை அவர் அதற்­காக கொண்டு வந்தார்” என தெரி­விக்­கிறார்.

பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளினால் அர­சி­யலில் உச்சம் தொட்ட மங்­கள அதே பெரும்­பான்மை மக்­களும் பெரும்­பான்மை அரசும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீ­தி­யி­ழைக்­கும்­போது நிமிர்ந்து கேள்வி கேட்ட ஒரு நப­ராக மங்­க­ளவை ஷ்ரீன் பார்க்­கிறார். மேலும் “மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்து அவர்­க­ளுக்­கா­கவே கடைசி வரை வாழ்ந்து சென்­றி­ருக்­கிறார். தற்­போது சிறு­பான்மை இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு எத்­த­னையோ அநீ­திகள் நடக்­கின்­றன. அது தொடர்­பாக தைரி­ய­மாக அவர் பேசி­யி­ருக்­கிறார். அவ­ரைப்­போல இன்­னொரு அர­சி­யல்­வாதி இனி இருக்­கப்­போ­வ­தில்லை” என மேலும் தெரி­விக்­கிறார்.

ஊட­கத்­து­றைக்கும் முன்­மா­தி­ரி­யான சேவை­களை செய்தார்
ஊடக அமைச்­ச­ராக மங்­கள சம­ர­வீர இருந்த காலங்­களில் ஊட­கத்­து­றைக்கு முன்­மா­தி­ரி­யான பல சேவை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். பத­வி­களை வழங்­குதல் மற்றும் நிர்­வாக சேவை­களில் பார­பட்­ச­மின்றி எல்லா இனத்­த­வர்­க­ளுக்கும் சம அளவில் வாய்ப்பு வழங்கி சிறு­பான்­மை­யி­ன­ரையும் உள்­வாங்­கினார். திற­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அனை­வ­ருக்கு நிர்­வாகக் கட­மை­களில் பொறுப்பு வழங்­கி­யி­ருந்தார். இது தொடர்­பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரி­விக்­கும்­போது “மங்­கள ஊடக அமைச்­ச­ராக இருந்த காலத்தில் இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் 80 வருட வர­லாற்றில் முதல் முறை­யாக ஒரு முஸ்லிம் நபரை தலை­வ­ராக நிய­மித்­தி­ருந்தார். இப்­படி முஸ்­லிம்­க­ளுக்கு பல்­வேறு வாய்ப்­பு­களை வழங்­கி­யி­ருக்­கிறார். இவர் இன ரீதி­யாக வேறு­பா­டுகள் காட்­டாத ஒருவர் என்­ப­தற்கு இது ஒரு மிகச்­சி­றந்த உதா­ரணம் ஆகும்” என தெரி­வித்தார்.

“ஊட­கங்­களில் இனம் மதம் என்­ப­வற்றை பெயர் குறிப்­பிட்டு தவ­றான முறையில் செய்­திகள் வெளி­யி­டு­வதைத் தவிர்க்கும் சுற்­று­நி­ருபம் ஒன்றையும் அவரது காலத்தில் கொண்டு வந்தார். யாழ்ப்பாண நுரலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பான்மை மக்களுக்கு அந்த சம்பவத்தின் பாரதூரத்தை உணர்த்தி புத்தகங்களை சேகரிப்பதற்கும் வழிசமைத்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இணைந்து வௌ;ளைத் தாமரை என்ற செயற்றிட்டத்தின் ஊடாக சமாதானத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளையும் அவர் செய்தார். கொவிட் 19 அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாட்டின் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று எப்போதும் தெரிவித்துக் கொண்டே இருப்பார்” என மேலும் தெரிவித்தார்.

மங்களவின் மறைவு எல்லா சமூகங்களுடனும் சமத்துவத்துடனும் சமாதானமாகவும் வாழ விரும்புகின்ற முற்போக்கு சக்திகள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் போன்ற ஒரு தலைவர் இனி இல்லை என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் செல்லுமொ தெரியவில்லை. பல சூழ்ச்சிகளால் பலர் ஒடுக்க நினைத்த குரல் இன்று கொடிய வைரஸ் தாக்கத்தினால் தானாக உறங்கச் சென்று விட்டது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் வழித்தடங்களை இளம் அரசியல்வாதிகள் பின்பற்றுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கை தொடர்பாக மங்கள கண்ட கனவுகள் என்றாவது ஒருநாள் நிறைவேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.