ரம்ஸி ராஸிக்கை தடுத்து வைத்துள்ளமை சர்வதேச உடன்படிக்கையை மீறும் செயல்

விடுதலை இயக்கம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டு

0 743

ஏ.ஆர்.ஏ. பரீல்

ஓய்வுபெற்ற அரச ஊழியரான ரம்ஸி ராசீக் தனது முக நூல் பக்கத்தில் ‘சிந்தனா ஜிஹாத்’ என்று பதிவிட்டதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையினை மீறியதற்காகவும் மற்றும் சைபர் குற்றங்கள் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு கடந்த 60 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். குற்றச் செயலுக்கான எவ்வித ஆதாரமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படவில்லை. இலங்கையின் அரசியல் யாப்பு 14(1)(a)யின் கீழ் ராசீக்கின் சுதந்திரமாக பேசுவதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் அவரது அடிப்படை உரிமைகளை மதித்து நிபந்தனைகளற்ற விடுதலை வழங்குமாறு வேண்டுகிறோம் என ‘விடுதலை இயக்கம் (Liberation Movement)  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரைக் கோரியுள்ளது.

ரம்ஸி ராசீக்கின் நிபந்தனைகளற்ற விடுதலை மற்றும் இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இவ்இயக்கத்தினால் கடந்த 24 ஆம் திகதி திறந்த மடலொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறுபான்மையினத்தவர்களை குற்றவாளியாக்காமல் மெளனிக்கச் செய்யமல் முறையான சட்டவரையொன்றினை அமுல்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஸி ராசீக்கின் கைது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR)  மற்றும் சைபர் குற்றங்கள் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சட்டம் ராசீக் மற்றும் ஏனைய மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளின் கீழ் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் வன்முறைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டியதாகும். அதாவது அண்மையில் ஆயுதமேந்தி அரசுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிரானதாகும்.

ரம்ஸி ராசீக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ICCPR சட்டத்தை மீறியதற்காகவும் சைபர் குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் ரம்ஸி விமர்சித்து வந்ததற்கான வரலாறு உண்டு. அவர் தனது முக நூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ‘கருத்தளவில் ஜிஹாத்’ என பதிவிட்டிருந்தார். முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் முஸ்லிம் சமூகத்துக்கு வெளியிலிருந்தும் தினமும் தாக்குதல்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தார்.

இரு தினங்களின் பின்பு அவரது பதிவுக்கு  எதிராக எண்ணிக்கையற்ற கொலை அச்சுறுத்தல்கள் அவருக்கு விடுக்கப்பட்டன. அதிகமானோர் அவரது பதிவினை தவறாக விளங்கிக் கொண்டனர். இனவாத கருத்துகளை பதிவு செய்ததற்காக அவரை சிறையில் அடைக்க வேண்டுமெனக்கோரினர். அவர் எதுவித ஆதாரங்களுமின்றி 60 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது வைத்திய வசதிகள் தடுக்கப்பட்டுள்ளது. அவரது வைத்திய உதவிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உரிய மருந்துகள் கிடைக்காமையினால் அவரது உடல் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியொருவர் இவ்வாரம் ரம்ஸியை சந்திக்க முயன்றபோது அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். கொவிட்–19 வைரஸ் தொற்றைக் காரணம் காட்டியே அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்ட ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

ICCPR சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் ரம்ஸி முதல் நபரல்ல. இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் 2019 ஏப்ரல் முதல் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் சிறுபான்மை இனத்தவர்கள் மீது போன்று சிங்கள பெளத்த தீவிரவாதம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு பொறுப்பானவர்கள்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் அரசியல்  தலைவர்கள், ஐக்கிய நாடுகளின் இலங்கை வதிவிட இணைப்பாளர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. – vidivelli

Leave A Reply

Your email address will not be published.