பிரதமர், அமைச்சரவை தொடர்வது நீதிமன்றை அவமதிப்பதாக அமையும்

புதிய பிரதமர், அமைச்சரவையை ஜனாதிபதி உடன் நியமிக்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன்

0 623

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு குறித்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்தப் பதவிகளை இனிமேலும் தொடர்ந்தால்,  அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்கவும்  ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அப்பதவியைத் தொடரவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்த நிலையிலேயே, அந்த உத்தரவின் பின்னர்  ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

”நீதிமன்றம் தற்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் பிரதமர், அமைச்சுப் பதவிகளில் தொடர இடைக்கால தடை விதித்துள்ளது. அவர்களது பதவிகளின் அதிகாரபூர்வ தன்மையை நீதிமன்றில் உறுதி செய்யும்வரை அவர்களால் இவ்வாறு பதவிகளில் தொடர முடியாது.  அப்படியாயின் தற்போது நடடில் பிரதமர், அமைச்சரவை எதுவும் இல்லை. இந்நிலையில் நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதியால் உடனடியாக புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும்” என ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.