ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களோ, உறுப்பினர்களோ தமது கட்சியில் கிடையாதென்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க, தமது கட்சியின் வேட்புமனுவில் ஒருவரின் பெயரை பதிவு செய்வதற்கு முன்னர் அவர் இலங்கையாரா என்பதை உறுதி செய்ததின் பின்னரே அவரை பெயர் பட்டியலில் பதிவு செய்வதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமுகமாக இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
எமது கட்சியில் வேட்பாளர் பெயர் பட்டியலில் ஒருவரின் பெயரை பதிவு செய்வதற்கு முன்னர் அவர் இலங்கையரா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே அவருக்கு வாய்ப்பளிப்போம். இதைவிடுத்து அவர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவரா என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில்லை. ஒரு பிரதேசத்தை முதல்நிலைப்படுத்தி பார்த்து அங்குள்ள மக்களிடம் அதிகமான ஆதரவை யார் பெற்றிருக்கின்றாரோ அவருக்கே நாங்கள் வாய்ப்பளிப்போம்.
முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி எமது கட்சியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த யாராவது இருப்பதாக அறிந்திருந்தால் அந்த விடயம் தொடர்பில் பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடளிக்க வேண்டும். அப்போது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதை விடுத்து வெறுமனே இவ்வாறு தெரிவிப்பது சாத்தியமற்றதாகும்.
இதன்போது சுதந்திரக்கட்சிக்கு புது அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே இருந்தவர்களில் யார் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் அவரிடம் வினவியபோது அவர் கூறியதாவது,
யார் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் என்னிடம் தற்போது அறிக்கையில்லை. ஆனால் கட்சிக்காக எதுவும் செய்யாமல் இருப்பவர்களே நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக சென்று , ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனால் அவரை அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளது. இதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்ஸா உள்ளிட்ட சிலரின் உறுப்புரிமைகளும் நீக்கப்படும். அவர்கள் கட்சிக்காக எதுவும் செய்யாதபோது அவர்களின் உறுப்புரிமையை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லைதானே.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் வினவியபோது, அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பொலனறுவை மாவட்டத்தை பிரதிநிதித்து வப்படுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.-Vidivelli