சஹ்ரான் கொல்லப்பட்டதால் உலகில் அதிகம் மகிழ்ச்சியடைந்தது நானே

தெரிவுக்குழு முன் ஹிஸ்புல்லாஹ் சாட்சியம்

0 867
  • ஆர். யசி

21 ஆம் திகதி தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்  நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார். அவ­ரது சாட்­சியம் வரு­மாறு:

கேள்வி:- உங்­களின் அர­சியல் பயணம் குறித்து கூறுங்கள்?

பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக எனது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானேன். பின்னர் பல வெற்றி தோல்­விகள் எனக்கு அமைந்­தது. பிரதி அமைச்­ச­ரா­கவும், இராஜாங்க அமைச்­ச­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளேன். பின்னர் ஜன­வரி நான்காம் திகதி இரா­ஜி­னாமா செய்து கிழக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டேன்.

கேள்வி:- நீங்கள் இலங்­கையர் என நினைக்­கிறேன், அவ்­வாறு இருக்­கையில் ” இலங்­கையில் நாங்கள் சிறு­பான்மை,  உலகில் பெரும்­பான்­மை­யினர் நாம் தான்’ என நீங்கள் கூறி­யது சரியா?

பதில்:- இது எனது அர­சியல் கருத்து அல்ல, இது ஒரு பள்­ளி­வா­சலில் நான் கூறிய விடயம். எமது மக்கள்  அங்கு மிகவும் பயந்த சுபா­வத்தில் இருந்­தனர். அன்­றாட வாழ்க்கை அனைத்­துமே ஸ்தம்­பிக்­கப்­பட்டு  இருந்­தது. வழ­மை­யாக எமது பெருநாள் பிரார்த்­த­னைகள் காலி முகத்­தி­டலில் இடம்­பெறும். இம்­முறை அது நடக்­க­வில்லை. முஸ்­லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்­தனர். ஆகவே அவர்­களை அச்சம் அடைய வேண்டாம் எனக் கூறி உங்­களில் அன்­றாட வாழ்க்­கையை முன்­னெ­டுங்கள் என்றேன். இதன்­போதே  நாம் உலகில் பெரும்­பான்மை மக்கள் ஆகவே அச்­ச­ம­டைய வேண்டாம் எனக் கூறினேன். எனினும் பிர­சு­ரித்­த­வர்கள் இதனை முன்னும் பின்னும் வெட்­டி­விட்டு பிர­சு­ரித்து விட்­டனர்.

கேள்வி :- நீங்கள் இதனை நிரா­க­ரிக்­கி­றீர்­களா?

பதில்:- நான் இலங்­கையன் என்ற எண்­ணத்­துடன் வாழ்­கிறேன். நான் எப்­போதும் நாடு என்ற உணர்­வுடன் வாழ்­கிறேன். பெளத்த நாடு என்ற எண்­ணத்தில் நான் பல கருத்­து­களை கூறி­யுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்­ச­ம­டையக் கூடாது என்றே கூறினேன்.

கேள்வி:- சஹ்­ரானை சந்­தித்­துள்­ளீர்­களா?

பதில் :- ஆம். சந்­தித்தேன்

கேள்வி:- எப்­போது என்ன நோக்­கத்தில் சந்­தித்­தீர்கள்?

பதில்:- கூறு­கிறேன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் வேட்­பு­மனு தாக்கல் முடிந்­த­வுடன்   அவர் எம் அனை­வ­ரையும்  சந்­தித்து பேச அழைப்பு விடுத்தார். அப்­போது அவர் நல்ல மத பிர­சா­ரகர். குறிப்­பாக இளை­ஞர்கள்  அவ­ருடன் இருந்­தனர். தேர்தல் வேட்­பு­மனுத் தாக்கல் முடிந்­த­வுடன் எம் அனை­வ­ருக்கும்  அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் பலரும், ஏனைய பலரும் வந்­தனர்.

கேள்வி:- அர­சியல் வாதி­களை கூப்­பிட்டு பேசும் அள­விற்கு யார் இவர்? இவ­ருக்கு என்ன அதி­காரம் உள்­ளது? நீங்கள் ஏன் இவ­ருக்கு இவ்­வ­ளவு முன்­னு­ரிமை கொடுக்­கி­றீர்கள்?  அவர் அனைத்து கட்­சி­களை சந்­திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்­போது அவர் பயங்­க­ர­வாதி அல்ல, அவர் சிறந்த மத தலை­வ­ராக இருந்தார். அவ­ருக்­காக பல இளை­ஞர்கள் பின்­பு­லத்தில் இருந்­தனர். ஆகவே வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள அவர் எமக்குத் தேவைப்­பட்டார்.

கேள்வி:- நீங்கள்  அவரை பயங்­க­ர­வாதி என ஏற்­க­மாட்­டீர்­களா ?

பதில்:- அவர் பயங்­க­ர­வாதி தான். அதனை நான் மறுக்­க­வில்லை, ஆனால் அந்தக் காலத்தில் அவர் மதத் தலைவர். இளைஞர் அனை­வரும் அவ­ருடன் இருந்­தனர். பல உடன்­ப­டிக்­கைகள் அவ­ரினால் போடப்­பட்­டது .

கேள்வி:- என்ன உடன்­ப­டிக்கை ?

பதில்:- தேர்தல்  கூட்­டங்­களில் பாடல் போட முடி­யாது. கூட்­டங்­களில் ஆண்கள் பெண்கள் கலக்கக் கூடாது. தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக நாம் அதனை ஏற்றுக் கொண்டோம்.

கேள்வி:- தேர்­தலில் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள எந்த உடன்­ப­டிக்­கை­யையும் செய்­வீர்­களா?

பதில்:- அவர் அப்­போது பயங்­க­ர­வாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்­க­ர­வாதி என்றால் நாம் ஏன் சந்­திக்க போகின்றோம்.  அப்­படிச் செய்ய மாட்டோம். அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதி­ராக சில நட­வ­டிக்­கைகள் எடுத்தார்.  2015 காலப்­ப­கு­தியில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரிடம் முறை­யிட்டேன். அதில் இருந்து எனக்கு எதி­ரா­கவே அவர் செயற்­பட்டார். என்னை அவர் 2000 வாக்­கு­களால் தோற்­க­டித்தார். அந்த சந்­திப்பின் பின்னர் அவரை நான் சந்­திக்­கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதி­ராக பல ஆர்ப்­பாட்­டங்­களை  செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிர­சாரம் செய்தார்.நான் தோற்­க­டிக்­கப்­பட்ட கார­ணத்­தினால் என்னை தேசியப் பட்­டி­யலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்­பாட்டம் செய்தார். என்­னுடன்  சூபி மக்கள் உள்­ளனர். அவர்கள் எனக்கு வாக்­க­ளிப்­பார்கள். அவர்­களை இவர்கள் தாக்­கினர். வழக்கு தொடுத்­துள்ளேன். இதில் ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் பல­ருக்கு பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது. அப்­போதில் இருந்து எனக்கு எதி­ராக பல எதிர்ப்­புகள்  வந்­தன.

இந்­தி­யாவில் ஒரு கார்ட்டூன் எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப் புத்­த­கத்தில் விமர்­சனம் செய்­தனர், நியாஸ் என்ற நபர். இவர்தான் சாய்ந்­த­ம­ருதில் குண்டை வெடிக்க வைத்த தற்­கொலைதாரி.  என்னை மட்டும் அல்ல எனது குடும்­பத்­தையும் விமர்­சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடு­வ­தாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவ­ரது குழுவை கைது­செய்ய வேண்டும் என நானும் சூபி குழு­வி­னரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்­க­வில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறி­னார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்­திக்­க­வில்லை.  எனக்கும் அவ­ருக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை இல்­லாது செய்ய நட­வ­டிக்கை எடுத்­தவர். இரா­ணு­வத்­தினர் பல­ருடன் இவர் தொடர்பில் இருந்­தவர்.நியாசும் அவ்­வாறு இருந்தார்.

கேள்வி:- இது என்ன கதை, தெளி­வு­ப­டுத்­துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்­கலாம். ஆமி மொகிதீன் என்­ப­வரும்  இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்தார்.  இரா­ணு­வத்­துடன் இருந்­தனர். இரா­ணு­வத்­துடன் வரு­வது போவது என்­பதைப் பார்த்தோம். அவர்கள் பல­மாக இருந்­தனர். நாம் என்ன கூறி­னாலும் அவர்­களை ஒன்றும் செய்ய முடி­யாது.

கேள்வி:- இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்­த­னரா? எப்­போதில் இருந்து?

பதில்:-  ஆம்.  2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்­தனர். அனை­வ­ருமா என்று தெரி­யாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .

கேள்வி:- நீங்கள் எந்த கட்­சியில் அப்­போது இருந்­தீர்கள்?

பதில்:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்தேன். கிழக்கில் பிர­தான வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினேன்

கேள்வி:- சஹ்­ரானின் அழைப்­புக்குச் செல்ல நீங்கள் தீர்­மா­னிக்க அவ­ருக்கு இருந்த பலம் என்ன?

பதில்:- வாக்குப்  பலம்தான்

கேள்வி:- நீங்கள் வாக்­கு­களை மட்டும் பார்த்தால் அவ­ருக்கு எத்­தனை பேர் ஆத­ர­வாக இருந்­தனர்  என நினைக்­கி­றீர்கள்?

பதில்:- இரண்­டா­யிரம் மூவா­யிரம்  வாக்­குகள், அப்­போது நான் மகிந்த ராஜபக் ஷவுடன் இருந்தேன் , அவ­ரது அர­சியல் வெற்­றிக்­காக செயற்­பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனா­தி­பதி  மைத்­தி­ரியின் வெற்­றிக்­காக செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தார். ஊரில் மூவா­யிரம்  வாக்­குகள் உள்­ளன என்றால் பலம் தானே. அதேபோல் அவர் நல்ல பேச்­சாளர்.  ஆகவே அது பலம் தான். இதற்­காக மட்டும் அல்ல  இவரைத் தவிர வேறு வேறு அமைப்­பு­க­ளு­டனும் பேசினேன். தப்லீக் ஜமாஅத் அவர்­க­ளுடன் பேசினேன். பத்­தா­யிரம் வாக்­குகள் அவர்­க­ளிடம் உள்­ளன. சூபி என்ற அமைப்பு உள்­ளது . அவர்­க­ளிடம் ஆயிரம் வாக்­குகள் உள்­ளன. தாருல் அதர் என்ற அமைப்பு இவ்­வாறு பல அமைப்­புகள் உள்­ளன. அவர்­க­ளு­டனும் பேசுவோம். இது சாதா­ரண விடயம்.

கேள்வி:- சஹ்­ரா­னுக்கு பாது­காப்பு உதவி கிடைத்­ததா?

பதில்:- ஆம், சஹ்ரான்  எந்த சிக்­கலும் இல்­லாது அனைத்து சலு­கை­க­ளையும் பெறுவார். அவர்­க­ளுக்கு பொலிஸ் நெருக்­கடி இருக்­க­வில்லை. அவர் வேறு முஸ்லிம்  அமைப்­பு­களை விமர்­சித்து ஒலி­பெ­ருக்­கி­களை கொண்டு தாக்­குதல்  நடத்­துவார்.

கேள்வி:- அப்­படி என்றால் அவ­ருக்கு அனு­மதி கிடைக்­குமா?

பதில்:- ஆம், சகல சலு­கை­க­ளையும்  பெற்றார்.

கேள்வி:- அவர் மதங்­க­ளுக்கு இடையில் வெறுப்­பு­ணர்­வையும்  முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக  வெறுப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தினார். அப்­ப­டியா?

பதில்:- ஆம், அவர்  மத ரீதியில்  தாக்­குதல் நடத்­துவார். 2010- – 11 காலங்­களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விட­யங்­களை கூறி ஒவ்­வொரு குழுக்­களில் இணைந்தார். அவர்­க­ளிடம் முரண்­பா­டுகள்  ஏற்­பட்டு அவர்­களே நீக்­கி­வி­டு­வார்கள். பின்னர் அவ­ராக ஒரு அமைப்பை உரு­வாக்­கினர். ஒவ்­வொரு வெள்­ளியும் ஏனைய மதங்­களை விமர்­சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மத­வா­தி­யாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்­தி­ருக்க வேண்டும்.

கேள்வி:- நீங்கள் ஐ.எஸ் அமைப்பை எதிர்க்­கி­றீர்­களா?

பதில்:- ஆம். நான் அதனை பாரா­ளு­மன்­றதில் கூட சிறப்­பான உரை ஒன்றில்  தெரி­வித்தேன்.

கேள்வி :- நீங்கள் அவ­ருடன் இணைந்து செயற்­பட்­டீர்கள் தானே?

பதில்:-ஆரம்­பத்தில் எனக்கு அவர் ஒத்­து­ழைப்பு வழங்­கினார், ஆனால்  நான் தோற்­க­டிக்­கப்­பட்டேன்

கேள்வி:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக மாறுவார் என நினைத்­தீர்­களா?

பதில்:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக  மாறுவர் என நான் நினைக்­க­வில்லை. செய்­தியில் பார்க்கும் வரையில் நான் நினைத்­து­கூடப் பார்க்­க­வில்லை.

கேள்வி:- பாட­சாலை நிகழ்­வொன்றில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டது தானே?

பதில்:-ஆம், மீரா பாலிகா வித்­தி­யா­லத்தில் மாண­விகள் கலா­சார நடனம் ஆடிய கார­ணத்­திற்­காக அந்த இடத்தில் மேடை போட்டு மோச­மாக தாக்­கினர்

கேள்வி:- தாக்­கினர் என்றால்?

பதில்:- திட்­டினார்.

கேள்வி:- அதற்கும்  ஒலி­பெ­ருக்கி பொலி­சாரின் அனு­ம­தி­யுடன் வழங்­கப்­பட்­டதா?

பதில்;-  ஆம். பொலி­சாரின்  ஒத்­து­ழைப்­புடன் அவர் இந்த செயற்­பாட்டை செய்தார்.

கேள்வி :-அவர் ஒவ்­வொரு குழுவில் இணைந்து வெளி­யேற என்ன கரணம்?

பதில் :-அவர் அங்கு சென்றால் அவர்­களின் அமைப்பு பிழை என கூறி இது ஏற்­று­கொள்ள முடி­யாது என விவா­திப்பார். முடி­யாத நிலையில் அவர்­களே இவரை நீக்­கி­வி­டு­வர்கள் .

கேள்வி :- அப்­ப­டி­யென்றால் எதை சரி­யென கூறுவார் ?

பதில் :-அவர் மத விட­யங்­களில், தொழும் விதம், ஏனைய சில விட­யங்கள் தவறு, இதனை இவ்­வாறு  செய்ய வேண்டாம் என கூறுவார்.

கேள்வி :-ஏனைய மதங்­களை விமர்­சிக்­க­வில்­லையா ?

பதில் :- எனக்கு தெரிந்த அளவில் அவர்  அவ்­வாறு  செய்­த­தாக தெரி­ய­வில்லை.

கேள்வி :-உங்­களில் இருந்து அவர் முரண்­பட  என்ன காரணம்?

பதில் :-இசைத்த  கார­ணத்­தினால்

கேள்வி :- இசையா ?

பதில் :- ஆம் நாம் இசை போட்ட கார­ணத்­தினால் தான் இதனை செய்தார்

கேள்வி :- அவர்  இணைந்த குழுக்­களில் இசை போட­வில்­லையா

பதில் :அது தெரி­ய­வில்லை.

கேள்வி:-உங்­க­ளிடம் இருந்து விலக இசை கார­ண­மாக இருக்­காது.

பதில் :-ஆம். என்­னுடன் சூபிசம் மக்கள் உள்­ளனர். அவர்கள் முழு­மை­யாக என்­னுடன் உள்­ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யுடன் இல்லை.

கேள்வி : சஹ்ரான்  சூபிக்கு  எதி­ரா­ன­வரா

பதில் :- ஆம்  முழு­மை­யாக எதிர்ப்பு

கேள்வி :-அப்­ப­டி­என்றால் ஏன் உங்­களை அழைத்தார்

பதில் :- இல்லை அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­ததை போல எனக்கும் அழைப்பு விடுத்தார்.

கேள்வி :-இறுதி தேர்­தலில் உங்­க­ளுக்கு அவர் உத­வ­வில்­லையா

பதில் :- இல்லை, அவர் பிடி­யா­ணையில் இருந்தார்

கேள்வி :- சஹ்­ரா­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத குற்ற முறைப்­பா­டுகள் செய்­தீர்­களா ?

பதில் :- பயங்­க­ர­வாத சஹ்­ரானை நான் ஒரு­போதும் சந்­திக்­க­வில்லை. எனக்கு தெரிந்­தது மத தலை­வ­ரான சஹ்ரான். அவ­ரது மத செயற்­பா­டு­க­ளுடன் முரண்­பட்டு முறைப்­பாடு செய்­துள்ளேன் ஆனால் பயங்­க­ர­வாதி என நான் எந்த முறைப்­பாடும்  செய்­ய­வில்லை. எனக்கு தெரி­ய­வில்லை , அவ­ரிடம் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்­தது தெரிந்தால் நான் தான் முதலில் முறைப்­பாடு செய்­தி­ருப்பேன்.

அவர் கொல்­லப்­பட்­டதில் உல­கத்தில் அதிக மகிழ்ச்­சியில் உள்­ளது நான் தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கரங்­க­ளுக்கு முழு  ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது அவர்கள் தான். இவர்­களால் எனக்கு வாக்கு இல்­லாது போனது. ஆகவே இப்­போது நான் மகிழ்ச்­சி­யாக  உள்ளேன்.

கேள்வி :- இந்த சம்­பவம் அனைத்தும் சஹ்ரான் செய்த அனைத்­துமே காத்­தான்­கு­டியில் தான் நடந்­தது. அது உங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை.  ஆனால் ஏனைய முஸ்லிம் அமைப்­புகள் பல இவ­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­துள்­ளனர். உங்­க­ளுக்கு ஏன் தெரி­ய­வில்லை ?

எனக்கு அவர் பயங்­க­ர­வாதி என தெரி­யாது. இவ்­வாறு கொலை­கார அமைப்பு இவ­ரிடம் இருந்­தது என எனக்கு தெரி­யாது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அவர் ஊரில் இருக்­க­வில்லை. எனக்கு ஒன்றும் தெரி­யாது

கேள்வி :-சஹ்­ரானின் குடும்­பத்­தினர் பற்றி உங்­க­ளுக்கு தெரி­யாதா?

பதில் : தெரி­யாது

கேள்வி :-சஹ்­ரானின் ஏனைய உறுப்­பி­னர்கள் பற்றி தெரி­யாதா?

பதில் :-சிலர் மீது பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது . தற்­கொ­லை­தா­ரிகள் சிலர் மீதும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது.  அப்­போது  அவர்கள் ஊரில் இருக்­க­வில்லை. சில மாற்று குழுக்கள்  அவர்­களின் பள்­ளியை நடத்­தினர்.

கேள்வி :-அவர்­களும் அடிப்­ப­டை­வா­தி­களா ?

ஆம். அவர்­களும் அடிப்­ப­டை­வா­திகள் தான், மத ரீதியில் இறுக்­க­மான கொள்கை  கொண்­டவர். அவர்­களை பொலிசார் கைது செய்­துள்­ளனர்.

கேள்வி :-திகன சம்­ப­வத்தின் பின்னர் சஹ்ரான் வீடியோ காட்­சிகள், அவர் பெளத்த விகாரை தாக்­குதல் குறித்து பேசி­யுள்ளார். பார்த்­தீர்­களா ?

பதில் :-ஆம் பார்த்தேன்.

கேள்வி :-எப்­போது?

பதில் :-இந்த தாக்­கு­தலின் பின்னர் தான் அவற்றை நான் பார்த்தேன்

கேள்வி :-நீங்கள் ஆளு­ந­ராக இருந்த காலத்தில் இது குறித்து எதையும் கூறி­னீர்­களா?

பதில் :இல்லை

கேள்வி :உங்­க­ளுக்கு யாரும் கூறி­னார்­களா ?

பதில் :இல்லை. தாக்­குதல் நடக்கும் வரை தெரி­விக்­க­வில்லை.

கேள்வி :மோட்டார் சைக்­கிளில் குண்டு வெடிக்­கப்­பட்ட போது ஆளுநர் நீங்கள் ,நீங்கள் எத­னையும் தெரிந்­தி­ருக்­க­வில்­லையா ?

பதில் :-உண்­மையில் பால­முனை  பகு­தியில் இடம்­பெற்­றது. நான் காத்­தான்­குடி பொலி­சா­ரிடம்  கேட்டேன். விசா­ரணை நடத்­து­வ­தாக கூறி­னார்கள்.  இது என்னை இலக்கு வைத்­த­தாக இருக்­கலாம் என்றும் எனது பாது­கா­வலர் கூறினார். என்னைப் பாது­காப்­பாக இருக்க வேண்டும் என்று கூறினர்.

கேள்வி :யாரு­டைய இடம் அது?

பதில் :அது தெரி­யாது

கேள்வி :வவு­ண­தீவு சம்­பவம், அது பற்றி என்ன நினைக்­கி­றீர்கள் ?

பதில் :அது ஒரு சம்­பவம், அது எனக்கு தெரி­யாது . அப்­போதும் நான் போலி­சிடம் கேட்டேன். மாவீரர் தினம் நடக்க ஒருநாள் இருந்­தது. ஆகவே இதனை அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தினர். அதற்கு அப்பால் சிந்­திக்­க­வில்லை .

கேள்வி:  பின்னர் அறிந்­து­கொள்ள முடிந்­ததா ?

பதில் :ஆம், சஹ்ரான் குழு செய்­த­தாக தெரிய வந்­தது.

கேள்வி : வெடி­பொருள் அந்த ஊரில்  எவ­ரா­வது சிலரால் வழங்கி இருக்க முடியும் என நீங்கள் நினைக்­க­வில்­லையா?

பதில் :-அது குறித்து விசா­ர­ணைகள் நடக்­கின்­றன. எவ்­வாறு கிடைத்­தது  என்­பது தேடப்­பட்டு வரு­கின்­றது

கேள்வி :-ஏனைய கட்­சி­யினர் வந்­த­தாக கூறி­னீர்கள். அவர்­களும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பில் இருப்­பார்கள் என நினைக்­கி­றீர்­களா ?

பதில்: இல்லை.  அதற்­கான எந்த வாய்ப்பும் இல்லை. காத்­தான்­கு­டியில்  எந்த அர­சியல் தலை­வர்­களும்  பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்க மாட்­டார்கள். உறு­தி­யாக கூறுவேன்.

கேள்வி :- காத்­தான்­குடி அடிப்­ப­டை­வாத பகுதி  என நம்­பு­கி­றீர்­களா?

பதில் :-இல்லை

கேள்வி :- காத்­தான்­கு­டியில் எத்­தனை மொழிகள்

பதில் :மூன்று மொழிகள்

கேள்வி :- அரபு மொழி ஏன் அங்கு ?

பதில்:- இங்கு மூன்று மொழிகள் உள்­ளது. அரபு இங்கு இல்லை. ஆனால் சுற்­றுலாத் துறைக்­காக அர­பிகள் வரு­வதால் எமக்கு அவர்­களை கவர வேண்டும். அதற்­காக நாம் இதனை செய்­ய­வேண்டும். இது சட்ட விரோ­தமோ அர­சியல் அமைப்­பிற்கு மாறா­னது என்றோ நினைக்க முடி­யாது.

கேள்வி :- அர­பிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வரு­கின்­றனர் வேறு நாடு­களில் எமக்கு அப்­படி இல்­லையே

பதில்:- அப்­படி அல்ல, நாம் சுற்­றுலாத் துறையை கவர இவற்றை செய்­கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்­கீ­காரம் பெற்றோம்

கேள்வி :-காத்­தான்­கு­டியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம் ?

பதில் :- உண்­மையில் காத்­தான்­கு­டியில் மரம் நட நான் தீர்­மானம் எடுத்தேன். பசி­யா­லைக்கு சென்ற போது வேறு சில  மரம் நட தீர்­மானம் எடுத்தோம். ஆனால் எமது பிர­தேச காலத்­திற்கு ஏற்ப இவை சரி­வ­ர­வில்லை. ஆகவே ஈச்சம் மரம் நடலாம் என தீர்­மானம் எடுத்தோம். எமது பிர­தேச வெப்­பத்­துக்கு அமைய தீர்­மானம் எடுத்தோம்

கேள்வி :- ஏன் பனை மரம் தெரி­வு­செய்ய­வில்லை?

பதில் : ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம்

இதனை கழற்ற தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தியை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றதே?

இது குறித்து வழக்கு இருப்­பதால் நான் கருத்து கூற­வில்லை

கேள்வி :- பாரா­ளு­மன்­றத்தில் நீங்கள் கூறிய கருத்­துக்கள், இரத்த ஆறு ஓடும் என்­றீர்கள், சஹ்­ரானும் அதனை கூறினார். அதேபோல் போரா­டுவோம்  என்­றீர்கள். இதெல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­னீர்கள்.

பதில் :- வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி சிலர் பேசும்  போதே வடக்கு கிழக்கை இணைக்க நாம் விட­மாட்டோம். அவ்­வாறு பல­வந்­த­மாக இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறினேன். இந்த இணைப்பை விட­மாட்டோம். அதற்கு ஏதி­ராக ஆயுதம் எடுப்போம் போரா­டுவோம் என்று கூறினேன்.

கேள்வி :-வடக்கு கிழக்கு இணைத்தால் ஆயுதம் ஏந்­து­வீர்கள் என்­றீர்­களா

பதில் : ஆம், நான் அல்ல. எமது இளை­ஞர்கள்

கேள்வி : இப்­போது கூறி­னீர்கள், நீங்கள் ஏன்?

ஆம்,

கேள்வி :-இது ஒரு அச்­சு­றுத்தல், ஜன­நா­ய­கத்தை பாது­காக்­காது வன்­மு­றையை கையில் எடுப்­ப­தாக கூறு­கி­றீர்கள், நீங்கள் என்றும் இல்லை, முஸ்­லிம்கள் என்று கூறு­கின்­றீர்கள். முஸ்­லிம்கள் ஆயுதம்  எடுத்து வன்­மு­றையை கையில் எடுப்­பார்­களா?

பதில் :- நான்  கூறு­வது, முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்­பிற்கு எதி­ரா­ன­வர்கள். அதை செய்தால் இது நடக்கும் என்றேன்.

கேள்வி :-ஆயுதம் எடுப்­ப­தா­கவா ?

பதில் :-ஆம், மக்கள்.

கேள்வி :-ஆகவே நீங்கள் வன்­மு­றையை கையில் எடுக்­கி­றீர்கள். நீங்கள் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளீர்கள்?

பதில் :-எமது பொறுப்பு இவற்றை அனு­ம­திக்கக் கூடாது என்­பது. ஆகவே இது நடக்கக் கூடாது என்­ப­தா­கவே தான் நான் கூறினேன்

கேள்வி : சஹ்­ரானின் சேப்  ஹோம் பற்றி தெரி­யுமா?

பதில் :-இல்லை

 

கேள்வி: -மாகாண சபை பாட­சா­லை­களை தேசிய பாட­சா­லை­க­ளாக மாற்ற கோரிக்கை விடு­தீர்­களா?

பதில்: ஆம், அவ்­வாறு விடுத்தேன்.

கேள்வி: -ஆளு­ந­ராக நீங்கள் இருந்த காலத்தில் மாகாண சபை கலைக்­கப்­பட்ட நேரத்தில் இந்தக் கோரிக்கை விடுத்­தது சரியா?

பதில்: -அப்­படி அல்ல, முன்­னரும் இவ்­வாறு சில விட­யங்கள் இடம்­பெற்­றன. நான் தனி­யாக தீர்­மானம் எடுக்­க­வில்லை. நான் அனு­மதி வழங்­கு­வது வழமை.

கேள்வி: -ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு பாட­சா­லை­களை மத்­திய அர­சுக்கு கொடுக்க நட­வ­டிக்கை எடுத்­தது ஏன்?

பதில்: -பணம் இல்லை, நடத்த முடி­யாது. ஆகவே சிக்கல் இருந்­தது. அபி­வி­ருத்தி செய்யும் போது இவற்றை கருத்திற் கொண்டேன். இதை நான் மட்டும் செய்­ய­வில்லை.

குழு:- மாகாண சபையை பல­வீ­னப்­ப­டுத்­து­கி­றீர்கள்.இதை முறைப்­பா­டக கூற­வில்லை.

கேள்வி:- ஹிரா நிறு­வனம் பற்றி கூறுங்­களேன்? எவ்­வ­ளவு நிதி வந்­தது

பதில்:- முன்­னூற்று ஐம்­பது மில்­லியன்

கேள்வி:- கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் பற்றி?

பதில்: நாம் எந்த இன மத அடிப்­ப­டையில் பார்த்தும் எடுக்­க­வில்லை. ஆனால் பெரும்­பான்மை முஸ்லிம் மாண­வர்கள் வந்­தனர்.

கேள்வி:- மகா­வலி அபி­வி­ருத்தி இடம் ஒன்­றினை நீங்கள் பெற்­றீர்கள் ஏன்?

ஆம், தற்­கா­லி­க­மாக நிறு­வனம் ஒன்றே இருந்­தது,. ஆகவே நிரந்­த­ர­மாக ஹிரா நிறு­வ­னத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறு­வ­ன­மாக மாற்ற நாம் கோரிக்கை அறிக்கை ஒன்­றினை உயர் கல்வி அமைச்­சுக்கு கோரிக்கை விடுத்தோம். இதில் சில முன்­மொ­ழி­வு­களும் இருந்­தன. ஆகவே மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரில் ஆவ­ணங்கள் தயா­ரித்து மகா­வலி நிறு­வன நிலத்தை பெற்­றுக்­கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அர­சினால் அனு­மதி கிடைக்கப் பெற்­றது. 35 ஏக்கர் இருந்­தது.

கேள்வி:- நீங்கள் வஹாப் வாதத்தை ஆத­ரிக்­கி­றீர்­களா ?

பதில்:- இல்லை, ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை

கேள்வி:- கிழக்கு பல்­க­லைக்­க­ழகம்  ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கமா?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அர­சாங்­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்க சகல விதத்­திலும் தயா­ராக உள்ளேன். ஆனால் ஊட­கங்கள் இதனை தவ­று­த­லாக விமர்­சித்து வரு­கின்­றன. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிரு­வாக அதி­கா­ரிகள் சிங்­க­ள­வர்கள். அவர்­களின் பெயர்­களை நான் கூற விரும்­ப­வில்லை. சிலர் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை விரும்­ப­வில்லை. சைட்டம் மூடப்­பட்­டது. அது­போன்று எங்­க­ளையும் இலக்கு வைக்­கின்­றனர். இது எமது அப்­பாவி மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நான் ஒரு சமூக சேவை­யாக இதனை பார்க்­கிறேன். எமது மக்­க­ளுக்­காக நான் எதையும் செய்ய தயா­ராக உள்ளேன்.

கேள்வி:- ஹிரா மூலம் எத்­தனை பள்­ளி­வாசல் உரு­வாக்­கப்­பட்­டது

பதில்:- நிறைய அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- சவூதி நிதி வரு­கின்­றது, அவர்கள் சூபிக்­க­ளுக்கு ஆத­ரவு இல்­லையே?

பதில்:- அவர்­க­ளுக்கு பிடிக்­காது. ஆனால் நிதி எனக்கு வரு­கின்­றன. எனக்கு பிரி­வினை முக்­கியம் இல்லை. மக்­களின் சேவ­க­னாக நான் சேவை செய்­கின்றேன். வேறு தமிழ் மக்­க­ளுக்கும் உதவி செய்­துள்ளேன்.

கேள்வி:- அப்துல் ராசிக் யாரென்று தெரி­யுமா

பதில்: ஆம்

கேள்வி: அவ­ருடன் உங்­களின்  பழக்கம் எப்­படி?

பதில் :தொலை­பே­சியில் பேசி­யுள்ளோம். இந்த பிரச்­சி­னை­களின் பின்னர் பேசினார். இரு தினங்­க­ளுக்கும் முன்­னரும் பேசினேன்.

கேள்வி:- அவ­ருடன் உங்­க­ளுக்கு நெருக்­க­மான நட்பு உள்­ளதா?

பதில்: -அப்­படி என்று இல்லை, இந்த பிரச்­சி­னைக்கு பின்னர் பேசுவோம்

கேள்வி: அவர் ஐ.எஸ். கொடி­க­ளுடன் கிழக்கில் செயற்­பட்­டார?

பதில்: அப்­படி ஒன்றும் எனக்கு தெரி­யாது.

கேள்வி: அவர் ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வாக உள்­ள­தாக இங்கு வந்த இருவர் கூறினர்

பதில்:- அவற்றை நான் கேட்­ட­தில்லை, ஆனால் தவ்ஹீத் என்ற பெய­ருக்­காக அவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­திகள் அல்ல. ஒருவர் பயங்­க­ர­வாதி என்றால் அவர்­களை விசா­ரிக்க வேண்டும். அதற்­காக அவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாதி என கூற முடி­யாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரி­யாது.

கேள்வி: -சஹ்ரான் போன்று எத்­தனை பேர் உள்­ளனர்?

பதில்:- இருந்­த­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என அறிந்து கொள்ள முடிந்­தது.

கேள்வி:- இந்த தாக்­குதல் நடக்கும் வரை சஹ்ரான் அச்­சு­றுத்தல் என்று தெரி­ய­வில்­லையா?

பதில்:- இல்லை, இப்­போது தான் தெரியும்.

கேள்வி:- உங்­களின் பாது­காப்­புக்கு உள்­ள­வர்கள் கூற­வில்­லையா ?

பதில்:- இல்லை, அப்­படி ஒன்றும் தெரி­விக்­க­வில்லை.

கேள்வி:- காத்­தான்­கு­டியை அரபி மய­மாக்­கி­யது நீங்கள் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது, இதனை ஏற்­கி­றீர்­களா?

இது அர­பி­மயம் அல்ல. எமது மக்­களின் அடை­யாளம் அவ்­வாறு உள்­ளதால் அத­னுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்­டடக் கலை தானே. யாழில் இந்து கலா­சார முறைமை உள்­ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்­ளது. அது போன்று தான்.

கேள்வி:- சஹ்ரான் கட்­ட­ளை­களை விதித்த காலத்தில் கூட உங்­க­ளுக்கு அவரின் நிலைமை புரி­ய­வில்­லையா?

பதில்:- அவர் அடிப்­ப­டை­வா­திதான்.ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று  தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.