நாளைய இலங்கையில் முஸ்லிம்கள்

0 750

கலாநிதி அமீரலி, 

மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

நாளையென்பது என்றுமே இன்றின் நகலல்ல. மாற்றம் என்ற ஒன்றைத்தவிர மற்ற எல்லாமே மாறுவன. எனவே இலங்கையின் அரசியல், பொருளாதாரம், சமூக நிலை எல்லாமே நாளை மாற்றமடைவது நிச்சயம். அது எவ்வாறு மாற்றமடையும் என்பதுதான் ஆராயப்பட வேண்டியதொன்று. எவ்வாறு மாற்றமடைந்தாலும் முஸ்லிம்களும் அதற்கேற்ப மாறவேண்டியது அவசியம். நேற்றும் இன்றும் முஸ்லிம்கள் இலங்கையில் அனுபவித்தவைகளைப் பாடங்களாகக் கொண்டு இம்மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவ்வாறான மாற்றங்களையிட்டுச் சில சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

நாளைய இலங்கை இரண்டு விதமாக அமையலாம். ஒன்று, எல்லா இனமக்களும் சம உரிமைகளுடன் சுதந்திரமாக  வாழக்கூடிய ஒரு ஜனநாயக நாடாக மீளலாம். அல்லது பாகிஸ்தான் போன்றோ மியன்மார் போன்றோ ஒரு குறிப்பிட்ட மதத்தையே அரசமதமாக அமைத்து இராணுவத்தின் அனுசரணையுடன் ஆட்சிசெய்யும் ஓர் அரசாங்கத்தைக் கொண்ட நாடாக மாறலாம். தற்போது நிலவும் அரசியல் நிலமைகளை நோக்கின் அவை இரண்டாவது திசையையே சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறான ஒரு மாற்றத்தைத் தடுப்பதற்கு இன்றிருக்கும் எதிரணிகள் பலமிழந்து காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரமே கொறோனாவுடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்வதற்குக் களமிறங்கியுள்ளதுபோற் தெரிகிறது.

நாளுக்கு நாள் நலிவடையும் பொருளாதாரத்தினால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் நெருக்கடிக்குள்ளாகின்றதை அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளாலும் வாக்குறுதிகளாலும் மூடிமறைக்க முடியாது. தேசியக் கடன் பளு, ஏற்றுமதிக் குறைவு, அன்னியச் வெலாவணிப் பற்றாக்குறை, அரசாங்க வருமானத்தின் வீழ்ச்சி, நாணய மதிப்பிறக்கம் என்றவாறு ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அனைத்து அம்சங்களும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றன. இவற்றிற்கு மத்தியில் கொறோனாவின் தலைவிரி ஆட்டம்.
கொறோனா தொற்று உலகத்தையே பாதித்துள்ளது என்பது உண்மை. ஆனால் உலக சந்தையை நம்பி வாழும் ஒரு சிறிய தீவான இலங்கை ஒரு சில மாதங்களுக்கு நியூசிலாந்தைப் போன்றோ பிஜித் தீவைப்போன்றோ நாட்டையே முற்றாகாத் தனிமைப்படுத்தி இருந்திருக்குமானால் கொறோனாவின் பரவலைத் தடுத்திருக்கலாம். ஆனால் பொதுத் தேர்தலொன்றை கருத்தில் வைத்து அரசியல் லாபத்துக்காக அவ்வாறு செய்யாததால் தொற்றினை இன்று கட்டுப்படுத்த முடியாதிருக்கின்றது.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடந்த பத்து மாதங்களுக்கு முன் இருந்த நிலையைவிட இன்று நிலைமை மோசமாகி விட்டது. ஆகவே, கொறோனாவைத் தடுப்பதற்காகக் இப்போது கடும் கட்டுப்பாடுகளை விதித்தால் பொருளாதாரக் கஷ்டங்கள் பெருகுமே ஒழிய குறையாது.  ஆனால் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நாட்டை முற்றாகத் திறந்துவிட்டால்  கொறோனா அதன் புதிய உருவத்தில் பரவுவதைத்தடுக்கவும் முடியாது. ஆட்சியினர் இருதலைக் கொள்ளி எறும்பாகிச் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.

கொறோனாவும் பொருளாதாரமும் ஒன்றாக இணைந்து மக்களிடையே அரசாங்கத்தின்மேலுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதுமல்லாமல் எதிர்ப்பையும் வளர்க்கும். அந்த எதிர்ப்பு வருமென்று அவர் முன்கூட்டியே அறிந்துவைத்துள்ளார். அதனாலேதான் பல காரணங்களைச் சாட்டாகக்கூறி இராணுவத்தின் நடமாட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பொது மக்களின் எதிர்ப்பு பெருகும்போது அதனைத் திசை திருப்புவதற்காக ஒரு புதிய எதிரியை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது. அந்த எதிரிதான் முஸ்லிம்கள்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றபின் நெலுந்தெனியப் பள்ளிவாசல் தொடக்கம் கட்டாய ஜனாஸா எரிப்புவரை முஸ்லிம்களுக்கெதிராக ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற அத்தனை சம்பவங்களிலும் ஒன்றைக்கூட அவர் தலையிட்டுத் தீர்த்து வைக்கவில்லை. காரணம் அவரையும் அவரின் அரசாங்கத்தையும் சுற்றியுள்ள சிங்கள பௌத்த போராதிக்க வெறியர்களின் அழுங்குப்பிடி. அவர்களின் பிடிக்குள் சிக்கியுள்ள இந்த அரசை நூறுவீதம் இனவெறிகொண்ட ஆட்சியென வருணிப்பதில் எந்தத் தவறும் இல்லை. 1950கள் தொடக்கம் வளர்க்கப்பட்டுவந்த  சிங்கள இனவாதம் இன்று சிங்கள பௌத்த மதவாதமாக உருவெடுத்து, இன ஒற்றுமையைச் சீர்குலைத்து, நாட்டின் பொருளாதாரத்தையும் வளரவிடாமற் தடுத்து, ஜனநாயக அரசியல் மரபுகளை உதறித்தள்ளி இராணுவ ஆட்சியொன்று நிலையாவதற்கு வழிவகுக்கின்றது.
இந்த ஆபத்தை உணர்ந்து ஜனநாயக அடிப்படையிலான ஓர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சிங்கள பௌத்தர்களிடையே பல சக்திகள் இப்போது உருவாகின்றன. சிறந்த கல்விமான்கள், யதார்த்த சிந்தனையாளர்கள், பௌத்த துறவிகள், சமூகநல ஆர்வலர்கள், சர்வமானிட உணர்வு கொண்ட எழுத்தாளர்கள் என்றவாறு பல துறையினர் ஜனநாயக மாற்றம்வேண்டிக் குரலெழுப்புகின்றனர். அவர்களின் குரல்கள் பொதுமக்களின் செவிகளை எட்டாவண்ணம் தடுப்பதற்கு ஆட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அத்தடைகளையும் மீறி அக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

முஸ்லிம்களை எதிர்நோக்கும் கேள்வி இதுதான். இராணுவ அதிகாரத்தைக் கொண்டு ஏதேச்சதிகாரத்துடன் இயங்கும் நாளைய இலங்கையில் கைகட்டி வாய்பொத்தி, கூனிக்குறுகி, எல்லாம் இறைவனின் செயல் என்று பாரத்தை இறைவன்மேல் சுமத்திவிட்டு ஒதுங்கி இருப்பதா, அல்லது ஜனநாயக மாற்றம் வேண்டும், அங்கே யாவரும் அவரவர்களின் கலாச்சாரத் தனித்துவத்துடன் சுதந்திரமாகவும் சம உரிமைகளுடனும் நீதிக்குத் தலை வணங்கி வாழ்வதற்காக மாற்றம்காணத் துடிக்கும் பௌத்த, கிறித்தவ, இந்து மார்க்க மக்கள் குழுக்களுடனும் எந்த மார்க்கத்தையுமே தழுவாது யதார்த்த சிந்தனையுள்ள மனிதர்களுடனும் சேர்ந்து வெளியிறங்கிப் போராடுவதா?

இவற்றுள் முதலாவது வினா காட்டும் வழியைக் கடைப்பிடித்தால் இப்போதிருக்கும் முஸ்லிம் தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு, சந்ததி சந்ததியாக குற்றேவல் புரியும் ஓர் இனமாகச் செத்து மடிவதேயன்றி வேறு வழி இல்லை. ஒரு சில முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்து ஓரளவுக்கு உயரலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் நாளைய இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்வது கடினம்.
தமிழினத்துக்காவது தட்டிக்கேட்கத் தமிழ்நாடும் அதனூடாக இந்தியாவும் இருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இரவோடிரவாக ஆட்சியாளர்கள் உடைத்தெறிந்ததும் மறுநாள் காலை அவசர அவசரமாகப் புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டியதும் இந்தியாவின் தலையீட்டினால் என்பது இப்போது தெளிவாகி விட்டது.  இவ்வாறு முஸ்லிம்களின் சார்பாக அழுத்தம் கொடுக்க எந்த நாடும் இல்லை. இன்றிருக்கும் ஐம்பத்தேழு முஸ்லிம் நாடுகளும் தனித்தனியாகவோ ஒன்று சேர்ந்தோ உலக அரங்கில் ஓர் அணுவையேனும் அசைக்கமுடியாது. இந்த உண்மையை உலகெங்கும் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்கு இலங்கைக்குள்ளேதான் பரிகாரம் காண வேண்டி இருக்கிறது. அதற்கு ஒரே வழி இரண்டாவது வினா காட்டும் வழியே. நாளைய இலங்கையில் ஜனநாயகம் மறுபிறவி எடுக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் பாடுபட வேண்டும். மற்றவர்கள் பாடுபட அதன் பயனை அனுபவிப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கக்கூடாது.

இதற்கு முன்பும் வெளியிட்ட கட்டுரைகளிலும் ஒரு புதிய தலைமைத்துவத்தின் தேவையைப்பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அந்தத் தலைமைத்துவம் தேசப்பற்றுடையதாகவும் மற்றைய இனங்களுடன் இணைந்து ஜனநாயக மறுமலர்ச்சிக்காகப் போராடக்கூடியதுமாக இருக்க வேண்டும். அது இளைய தலைமுறையிலிருந்தே உருவாகவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் இயக்க ரீதியாக ஒன்றிணைந்து இந்தத் தலைமைத்துவத் தேடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த முயற்சி பெரும்பான்மை இனத்துக்குள்ளேயும் ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இது ஓர் அரசியல் முயற்சி. இதற்குள் இஸ்லாத்தைப் புகுத்திக் குழப்பியடிக்கக் கூடாது. மதத்தையும் அரசியலையும் கலந்ததனாலேதான் முஸ்லிம்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் இன்று முற்றி தீர்வுகாண முடியாமல் கிடக்கின்றன. இளம் தலைமுறை இதனை உணர்தல் நன்று.

நாளைய இலங்கையில் முஸ்லிம்களின் அடுத்த பிரச்சினை இனவொற்றுமை. அதாவது, முஸ்லிம்களுக்குள்ளே உள்ள ஒற்றுமைக்கும் மேலாக மற்றைய இனங்களுடன் எவ்வாறு முஸ்லிம்கள் இணைவது என்பதே முக்கியம். இதைப்பற்றி மேடைகளில் வாய்கிழியப் பேசியகாலம் முடிந்துவிட்டது. செயலிலே காட்டவேண்டிய காலம் வந்துவிட்டது. இது ஒரு புதிய பிரச்சினை. ஏனெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மற்றைய இனங்களுடன் இரண்டறக்கலந்து வாழ்ந்த முஸ்லிம்கள் அண்மைக் காலங்களில் ஒதுங்கிவாழத் தொடங்கியுள்ளனர். இந்த ஒதுக்கத்தை இலங்கைக்குள்ளேயே வாழும் முஸ்லிம்கள் உணராவிட்டாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒதுக்கத்தைத் தோற்றுவித்த காரணிகள் யாவை, அவற்றை எவ்வாறு நீக்கலாம் என்பவற்றை ஆராய்ந்து அதற்குரிய செயற் திட்டங்களைத் தீட்டுவது மிகமிக அவசியம். நாங்கள் எப்படியும் உடுப்போம், எப்படியும் பேசுவோம், எதனையும் நிர்மாணிப்போம், எங்கேயும் கூடுவோம், அது எங்கள் அடிப்படை மனித உரிமை என்று வாதாடுவதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் அந்த வாதாட்டத்துக்கு மத்தியில் யாருடன் வாழ்கிறோம், யாருடைய உறவுகளை நாம் பாதிக்கிறோம், எங்களுடைய செய்கைகள் மற்றவர்களை எவ்வாறு புண்படுத்துகின்றன என்ற சமூகத்தைப் பற்றிய சிரத்தையும் சிந்தனையும் பாழ்படுகிறது. இந்தச் சிந்தனையற்ற போக்கே முஸ்லிம்களின் ஒதுக்கத்துக்கு முக்கிய காரணம்.

ஆகவே முஸ்லிம்களுக்குள்ளே ஒரு சமூகப் புரட்சி எழவேண்டி இருக்கிறது. அந்தப் புரட்சியின் நோக்கம் தேச மக்களுடன் எவ்வாறு இணைவது என்பது பற்றியதாக இருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களில் சுமார் முன்றிலிரண்டு பகுதியினர் நாற்பது வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்களுடைய உலகம் வேறு. மிகுதி முன்றிலொரு பகுதியினரின் உலகம் வேறு. ஆனால் சமூகத்தின் தலைமைத்துவமோ இன்னும் அந்த மூன்றிலொரு பகுதியினர் கைகளிலேயே அதுவும் ஆண்களின் கைகளிலேயே இருக்கிறது. அந்தத் தலைமைத்துவத்துக்கு இன்றைய இளந் தலைமுறையின்  உலகமும் விளங்காது, பெண்ணினத்தின் வேக்காடுகளும் புரியாது. இதே நிலையை மற்றைய இனங்களிலும் உணர முடிகின்றது. ஆகவே எல்லா இனங்களிலும் வாழும் இளைய தலைமுறைகளை இணைக்கும் கருவிகளெவை என்பதை உணர்ந்து அவற்றைக் கொண்டுதான் இனங்களுக்கிடையேயுள்ள சௌஜன்ய உறவினை வளர்க்கலாம். உதாரணமாக, ஆயிரம் மத நல்லிணக்க மகாநாடுகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட எல்லா இன இளைஞர்களும் சேர்ந்து நடாத்தும் ஒரு கலைவிழாவின் தாக்கம் உடனடியானதும் ஆழமானதுமாகும்.
இவ்வாறே இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இன்றைய இளைஞர்கள் ஆர்வமுடன் பங்குகொள்ளும் எத்தனையோ போராட்டங்கள். இந்தப் போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்குபற்றல் மிகக்குறைவு. ஏன்? அதேபோன்று தேசிய விழாக்களிலும் நிகழ்வுகளிலும் இலங்கை முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்களே ஒழிய பங்காளிகளாக இல்லை என்ற குறைபாடும் பரவலாகக் காணப்படுகிறது. மறு பக்கத்தில் முஸ்லிம்களின் விழாக்களிலும் பண்டிகைகளிலும்கூட மற்றைய இனங்களை அழைத்தலும் மிகமிக அரிது. என்ன தடையோ? இந்தப் பிரச்சினை பற்றிய கருத்தரங்குகள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த உணர்வின்றி நாளைய ஜனநாயக இலங்கையில் முஸ்லிம்கள் அமைதியுடன் வாழமுடியாது.
சமூகப் பிரச்சினைகளை அலசி, அவற்றின் தீர்வுகளைப்பற்றிய கருத்துக்களையும் உணர்த்தக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு முஸ்லிம்களுக்குண்டு. அதுதான் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் குத்பா பிரசங்கம். ஒரு காலத்தில் அந்தப் பிரசங்கம் விளங்காத மொழியிலே நடைபெற்றதால் அதனைக் கேட்போர் தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அரபுத்தமிழில் யாரோ எப்போதோ எழுதிவைத்த கிரந்தங்களிலிருந்ததை அப்படியே வாசித்தார்கள். இப்போது அழகு தமிழில் அதே விடயத்தைத்தான் ஆவேசத்துடன் உரைக்கிறார்கள். பாடலொன்றே, ஆனால் பாடும் இராகம்தான் வேறு. அரைத்த மாவையே அரைக்கும் இந்த வழக்கம் மாற வேண்டும். சமூகத்துக்குப் பயனுள்ள ஓர் அரிய வாய்ப்பு இங்கே விரயமாகின்றது. இதை எப்படி மாற்றுவது என்பது பற்றிச் சிந்தித்துத் திருத்தங்கள் கொண்டுவருவது நாளைய இலங்கைக்கு அவசியம். இன்றைய பிரச்சினைகளைப்பற்றியும் அதற்குரிய தீர்வுகளைப்பற்றியும் வெள்ளிக்கிழமைதோறும் பள்ளிவாசல்களிலே திரளும் மக்களுக்கு எவ்வாறு யார் விளங்கப்படுத்துவது? முஸ்லிம் புத்திஜீவிகளே சிந்தியுங்கள். நீங்களாக ஒரு களத்தை அமைத்து அதனை விளக்க விரும்பினால் உங்களைக் கேட்க நாலு பேரும் வரமாட்டார்கள். ஆகவே அவர்கள் திரளாக வரும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாமா? அதற்கென்ன வழி என்பதைப்பற்றி ஆலோசியுங்கள்.

முடிவாக ஒன்று. நாளைய இலங்கையில் முஸ்லிம் பெண்களின் வகிபாகம் அளப்பரியது. தாயின் மடியிலே தனயனின் சொர்க்கம் என்று நபிகளார் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அதனுள் அடங்கியுள்ள தத்துவம் கடல்போன்றது. இதற்கு முன் வெளிவந்த ஒரு கட்டுரையிலும் ஏன் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஐந்து பாடம் சித்தியடைந்த முஸ்லிம் பெண்களுக்கு ஆசிரியத் தொழில் வழங்கினாரென்று விளக்கப்பட்டது. நபி பெருமானாரின் போதனைதான் அவரைத் தூண்டியது. முஸ்லிம் தலைமைத்துவத்தில் அவர்களுக்கும் பங்குண்டு. கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் அடைந்த முன்னேற்றம் வியக்கத்தக்கது. ஏன் அவர்கள் அரசியலுட் புகமுடியாது?

நாளைய இலங்கையில் முஸ்லிம்கள் உயிரோட்டமுள்ள ஓர் இனமாய் மாறவேண்டியுள்ளது. அந்த மாற்றம் மற்றைய இனங்களுடன் இணைந்த ஒன்றாய் அமைய வேண்டும். அந்த மாற்றமே முஸ்லிம்களின் தனித்துவமாய் அமையட்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.