வர்த்தகர் முஹம்மட் பசால் நிசார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்?

0 746

எம்.எப்.எம்.பஸீர்

இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக  வெளியிட்டதாக கூறி தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் பசால் நிசார் என்பவரை சி.ஐ.டி.யினர் கைது செய்திருந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரை சி.ஐ.டி.யின் கணினி மற்றும் டிஜிட்டல் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன தலைமையிலான குழுவினர் கைது செய்திருந்தனர்.   2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய  அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரது கைதுக்கு மிக அண்மிய காரணியாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறையில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அதில் கூறப்பட்ட விடயங்களை கடுமையாக விமர்சிக்கும் வண்ணம் வெளியிட்ட வீடியோ அமைந்திருந்தது. எனினும் அந்த வீடியோவில்,  ஜனாதிபதியை விமர்சிப்பதை விட, அல்லது ஜனாதிபதியின் உரையை விமர்சிப்பதைவிட, பெளத்த மத குருக்களை மையப்படுத்திய, பெளத்த மதத்தவர்களின் உணர்வுகளை  தூண்டும் விதமான வார்த்தைப் பிரயோகங்கள் அடங்கியிருந்தது. எனவே தான் சி.ஐ.டி. அதனை மையப்படுத்தி அவரைக் கைது செய்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த கைதை தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்த  மொஹமட் பசால் நிசார், கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் கடந்த திங்கட் கிழமை அது குறித்த விவகாரம் மீள விசாரணைக்கு வந்திருந்த போது, சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன கூறிய விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது.

அதாவது, மொஹம்மட் பசால் நிசாரின் கைதின் பின்னர் அவரது வீட்டிலிருந்த கணினி, அவரது கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்று தமது டிஜிட்டல் பகுப்பாய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் அவர்களை மேலும் பல்வேறு திசைகளில் விசாரணைகளை மேற்கொள்ள தூண்டியுள்ளது.

அதாவது, அவரது கணினிப் பாகங்களையும் தொலைபேசியையும் ஆய்வு செய்த சி.ஐ.டி.யினர்,  மொஹம்மட் பசால் நிசார், அடிப்படைவாதத்தை பரப்பும், அல்லது தூண்டும் ஒரு முக்கிய நபராக விளங்கியுள்ளார் என்பதை கணித்துள்ளதாக சி.ஐ.டி.யின் தகவல்கள் தெரிவித்தன. குறித்த கணினியில் தொலைபேசியில் காணப்பட்ட விடயங்களை பகுப்பாய்வு செய்த போது இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் அவற்றில் அழிக்கப்பட்ட தகவல்களை மீளப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மொஹம்மட் பசால் நிசாரின் வங்கிக் கணக்கினையிம் சி.ஐ.டி.யினர் ஆராய்ந்துள்ள நிலையில், அங்கேயே சி.ஐ.டி.யினருக்கு பயங்கரவாத செயறபாடுகள் ஏதும் இவரது அடிப்படைவாத நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், மொஹம்மட் பசால் நிசாருக்கு சொந்தமான 7 வங்கிகளில் உள்ள கணக்குகளில் ஒரு தனியார் வங்கியின் கணக்கில்  அண்மைய காலத்தில் மட்டும் 625 இலட்சம் ரூபா பரிமாற்றப்பட்டுள்ளமையாகும். ஏனைய 6 வங்கிகளினதும் அறிக்கை சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்றிராத நிலையில், உடனடியாக குறித்த நபரை சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலின் கீழ் கொண்டுவந்து, தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யின் டிஜிட்டல் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, பாதுகாப்பு செயலரிடம் 90 நாட்கள் சந்தேக நபரை தடுத்து வைப்பதற்கான அனுமதியையும் பெற்று, கடந்த 18 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில்,  இந்த விடயங்களை முன்வைத்திருந்தார். இதனையடுத்து  குறித்த சந்தேக நபரை உடனடியாக சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையிலேயே தற்போது மொஹம்மட் பசால் நிசார், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

குறித்த  சந்தேக நபருக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரைக்கு அமையவும்,  தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும்,  2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழும்  குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  இந் நிலையிலேயே சி.ஐ.டி. 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதாக கூறி அவரை 90 நாள் தடுப்புக் காவலில் எடுக்க நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன நீதிமன்றில் மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக தெரிவிக்கையில்,

”தனியார் வங்கியொன்றில் உள்ள இந்த சந்தேக நபரின் வங்கிக்கணக்கு ஊடாக பாரிய தொகை பணம் பரிமாறப்பட்டுள்ளது.  இந்த சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றலை மையப்படுத்தியே  90 நாள் தடுப்பில் வைத்து விசாரிப்பதறகான அனுமதியை பாதுகாப்பு செயலர் அளித்துள்ளார். எனவே அவரை எம்மிடம் ஒப்படைக்க சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். ‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஸ்ரீலங்கா’ எனும் பெயரிலான  பதிவொன்றினை கடந்த 2020 டிசம்பர் 12 ஆம் திகதி கண்டிப்பாக வாசிக்க வேண்டும் எனும் தலைப்பிலும்,  2021 ஜனவரி 7 ஆம் திகதி ‘ நான்  முஸ்லிம் அடிப்படைவாதியாவேன்’ எனும் தலைப்பிலும் கூட பதிவுகளை சந்தேக நபரின் முகப்புத்தகத்தில் அவதானிக்க முடிகின்றது.  கடந்த 2021 ஜனவரி 9 ஆம் திகதி,  முஸ்லிம்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும்  ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தரவுகளை இதற்கு பிறகு கடைப் பிடிப்பதா, இல்லையா என  தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உரியது ‘ எனும் பெயரிலும்  பதிவொன்று இடப்பட்டுள்ளது. அதன் பின்னர்,  அதே தினத்தன்று சர்ச்சைக்குரிய வெறுப்பூட்டும் அவரது பேச்சு அடங்கிய வீடியோவும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின்  வங்கிக் கணக்குகளில் ஒரு  தனியார் வங்கியின் கணக்கிலக்கம் குறித்த விபரங்களே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அண்மைக் காலத்தில் அந்த வங்கிக்கணக்கூடாக 625 இலட்சம் ரூபா பரிமாற்றப்பட்டுள்ளமை  தெளிவாகிறது.  தெளிவான வருமான மார்க்கம் இல்லாத இந்த சந்தேக நபர், மாதாந்தம் தான் தெஹிவளையில் வசிக்கும் வீட்டு வாடகைக்காக 80 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார். அவரது வாகனத்துக்கு வாடகையாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார். இரு சேவையாளர்களைக் கொண்ட அவரது வர்த்தக நிலையம் தொடர்பில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வாடகையாக செலுத்தியுள்ளார் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மாதாந்தம் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் செலவு செய்யும் குறித்த நபரின் வருமான மார்க்கம் தொடர்பில் தெளிவில்லாமல் உள்ளது. அத்துடன் அவரது கணினி பாகங்களை பகுப்பாய்வு செய்த போது, மேலும் பல  அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான விடயங்களையும் கண்டறிய முடியுமாக இருந்தது. எனவே தான் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டது.” என தெரிவித்திருந்தார்.

சமூக வலைத் தளங்களில்,  தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதும், அல்லது அங்கு உலா வரும் விடயங்களை பகிரும் போதும், அந்த கருத்துக்கள் தொடர்பிலும் அதில் கையாளப்பட்டுள்ள வசனங்கள், உள்ளடக்கம் என்பன தொடர்பிலும் கூடிய அவதானம் தேவை. இல்லையேல், எந்த பொறுப்புக்களும் இன்றி விடயங்களை பகிர்வதால், எமது உணர்வுகளை வெளிக்காட்டுவதால், ஏனையவர்களின் உணர்வுகளை மதிக்காது அத்து மீறி செயற்படுவோமானால் அவை நமக்கு சிக்கலையே உருவாக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமே மொஹம்மட் பசால் நிசாரின் கைதாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.