ஊரடங்கில் சமூக வலைதள பாவனை

எம்.ஏ.எம். அஹ்ஸன்

0 1,149

கொரோனா வைரஸ் அச்சம் உலகெங்கும் தலை தூக்கியுள்ள நிலைமையில் ஒவ்வொரு நாடுகளிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் வெளியில் செல்வதில் உள்ள சுகாதார பிரச்சினைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் தத்தமது வீடுகளில் முடங்கியுள்ளோம். அதே நேரம் வீட்டில் பெருமளவிலான நேரத்தை செலவிடுவதால் எம்மவர்களின் சமூக வலைத்தள பாவனையின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சாதாரணமாக ஒரு பதின்ம வயது அல்லது இளைஞர் ஒருவர் முகநூலில் சுமார் 2 – 4 மணித்தியாலயம் வரை நேரத்தை செலவிடுகிறார். இந்த விடயத்தை ஆரோக்கியமான ஒரு விடயமாக கருத முடியாது என்பதை பலர் உணராமல் இருப்பதுதான் வேதனை.

வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது என்பது எத்தனை சிரமமான விடயம் என்பதை நாம் அனைவரும் நன்கு உணர்ந்தவர்களே. வீட்டுக்குள்ளேயும் இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களையும் பாவிக்கக்கூடாது என்பது யாருக்கும் நியாயமான ஒரு விடயமாக இருக்காது. முற்றுமுழுதாக அதன் பாவனையை தவிர்க்க வேண்டும் என்று யாராலும் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் இன்று பலரது வாழ்க்கையில் சமூகவலைத்தளம் ஓர் அங்கமாக மாறி விட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் அடிப்படையில் சமூக வலைத்தள பாவனையால் விளையும் தீமைகளை கருத்தில்கொண்டு அளவாக அதை பயன்படுத்தினால் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பலாம்.

சமூக வலைத்தளங்களின் தீமைகள்

இலங்கையை பொறுத்தவரையில் இன்று அனைவரும் பேஸ்புக் என்ற சமூக ஊடகத்தைத்தான் பயன்படுத்துகின்றார்கள். மேற்சொன்னது போல் பேஸ்புக் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகி போதை அதாவது யுனனiஉவழைn என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் செய்திகளை உடனுக்குடன தெரிந்து கொள்ள அனைவரும் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்றார்கள் என்பதை ஆரோக்கியமான விடயமாக கருதினாலும் கூட தேவையின்றி நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்ளுதல், போலிச் செய்திகளை பதிவிடுதல், இனவாதம் பேசுதல், தவறான உறவுகளை பேணுதல் என்பவற்றை ஆரோக்கியமான ஒரு விடயமாக கருத முடியாது.

கொரோனா வைரஸினைப் போல சமூக வலைத்தளங்களும் இன மத வயது பால் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கியுள்ளது. இதனால் தமது பொன்னான நேரத்தை இழந்து கைசேதப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச்  சேர்ந்தவர்கள் மாத்திரம் கிடையாது. ஆனால் இன்று சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை எங்கேயோ சென்று விட்டது. இதை ஒரு பிரச்சிiனாக யாரும் உணராமல் இருப்பதே இதற்கு தீர்வு இல்லாமல் இருப்பதற்குக் காரணம்.

உங்களுக்கு ‘நோமோபோபியா” இருக்கிறதா?

நோமோபோபியா என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? இது பதற்றத்தை எற்படுத்தும் ஒருவகை உளவியல் சார்ந்த வியாதி. போபியா என்பது தேவையற்ற பதற்றத்தை குறிக்கும். இது பல வகைகளில் இருக்கும். இன்று அறிந்தும் அறியாமல் பலருக்கு இருக்கும் வியாதியாக நோமோபோபியாவை குறிப்பிடலாம். நாம் எமது தொலைபேசியை ஏதாவது ஒரு காரணத்தினால் கொஞ்ச நேரத்துக்கு பயன்படுத்த முடியாமல் போய்விட்டால் எமக்கு ஒரு பதற்றம் வருமானால் அது நோமோபோபியா என்ற உளவியல் பிரச்சினையாகும். மருத்துவ ஆலோசனை பெறாத வரை இந்த நோய் குணமாகுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

காலையில் எழுந்தவுடன் மொபைலை தேடுதல், தூங்கச்செல்லும் முன்னர் மொபைலை பார்த்தல், அடிக்கடி மொபைலுக்கு சார்ஜ் ஏற்றுதல், எப்போதும் தனது பார்வையின் கீழ் மொபைல் இருக்க வேண்டும் எனக்கருதுதல் என்பன நோமோபோபியாவுக்கான அறிகுறிகளாகும். மூன்றாம் உலக நாடுளில் சுமார் 66 சதவீதமான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொபைலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நிலவும் காலப்பகுதியில் இந்த நோயின் வீதம் அதிகரிக்கலாம் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.

போலிச் செய்திகள்

இது அதிகம் தகவல்களை பரப்பும் காலமாகும். இக் காலத்தில் அதிகமாக அனைவரும் செய்திகளை நாடுகின்றார்கள். இதனால் பதிவு செய்யப்படாத செய்தி நிறுவனங்கள் பயிற்சி பெறாத ஊடகவியலாளர்கள் என சமூக வலைத்தளம் முழுக்க ஒருவருக்கொருவர் செய்திகளை பரிமாறுவதில் ஒரு போட்டித்தன்மை காணப்படுகின்றது. இந்த போட்டித் தன்மையினால் பலரும் தமக்கு கிடைத்த செய்திகளை உறுதிப்படுத்தாமல் பதிவிடுகின்றார்கள். இது ஒரு அசாதாரணமான பிரச்சினையாகும்.

கொரோனா வைரஸ் தொடர்பான போலிச் செய்திகளுக்கு எந்தவிதமான பஞ்சமும் இப்போது இல்லை. அண்மையில் அரசாங்கம் மாணவர்களுக்கு இலவசமாக மடிகணினி வழங்குவதாக கூறி போலிச் செய்தி வந்தது. வட்சப் செயலியில் பரவலாக பகிரப்பட்ட இந்தச் செய்தி போலியானது என இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் உறுதிப்படுத்தியது. அதுபோல கத்தோலிக்க திருச்சபை ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கிறிஸ்தவர்களின் உடலை எரிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்ததாக போலிச் செய்திகள் பரவின. தான் அவ்வாறானதொரு விடயத்தை வெளியிடவில்லை என திருச்சபை ஊடகம் உறுதிப்படுத்தியது.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர் மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர் என்பன தொடர்பாக பல போலிச்செய்திகள் உருவாகின. மேலும் இதன்மூலம் இனவாத பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் கொரோனா ஒரு மதம் சார்ந்த பிரச்சினை கிடையாது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இனவாதிகளுக்கு கிடைத்த ஒரு பொக்கி~மாக கொரோனா இருந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும்,  உயிரிழக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என அரசாங்கம் வேண்டியுள்ளது.

எதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக சமூக விரோதிகள் இந்த சமூக வலைத்தளத்தில் ஏதோ ஒன்றை பகிர்ந்து விடுகின்றார்கள். செய்திகளை அவசரமாக வழங்குவதை விட உண்மை என உறுதிப்படுத்திவிட்டு வழங்குவதன் அத்தியவசியத்தை ஊடகங்கள் பெரும்பாலும் சரிவர செய்கின்றன. ஆனால் சமூக ஊடகங்களில் செய்திகளை பகிர்வதில் உள்ள போட்டி போலிச்செய்தி உருவாவதற்கான பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது.

சமகாலத்தில் நாம் பொது வெளியில் சமூக இடைவெளியைப் பேணுவதைப் போன்றே சமூக ஊடகங்களிலும் இடைவெளியை பேணுவதன் அவசியம் தொடர்பாக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதில் அவர் சமூக ஊடகங்களில் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து தம்மை ஊடகவியலாளர் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி செய்பவர்கள் மிகக்கவனமான முறையில் செய்திகளை பகிர வேண்டும். ஊடகத்துறை என்பது மிகவும் நுணுக்கமான ஒரு துறையாகும். செய்திகளை எழுதுதல் பகிர்தல் என்பவற்றுக்கு பிரத்தியேகமாக ஊடகவியலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தவிர ஏனையவர்கள் செய்திகளை வாசிப்பதுடன் மிக அவசியமாக இருந்தால் மாத்திரம் அதைப் பகிர்ந்து சமூக ஊடகத்தில் சமூக இடைவெளியை பேண வேண்டும். செய்திகளை பகிர்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அவர்களது வேலையை செய்வதற்கு இடமளித்து தாம் ஒதுங்கியிருப்பதே சிறந்ததாகும். இல்லாவிடின் சமூகம் பாரிய பிரச்சினைகளை சந்திக்கும் என்றார்.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

அதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தாது தவிர்ந்திருங்கள் என நாம் அறிவுறுத்தவில்லை. இதன் பாவனை இருக்க வேண்டும் என்று கூறும் அதே வேளை அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதே அனைவருக்கும் தேவையான ஒரு விடயமாகும். சமூக வலைத்தளங்களின் பாவiனையை கட்டுப்படுத்தி அதனை அளவாக ஒரு வரையறைக்குள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி உளவளத்துணையாளர் லுக்மான் ஹக்கீம் பின்வருமாறு விளக்கினார்.

“அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த தருணத்தில் எல்லோருக்கும் இருக்கின்ற பிரதான பொழுதுபோக்காக தொலைபேசியும் சமூக வலைத்தளங்களும்தான் மாறியுள்ளன. எந்த வேலையும் இல்லாத இந்த தருணத்தில் சமூக வலைத்தளங்களை பாவிக்காதே என்று யாரிடமும் சொல்ல முடியாது. ஆனால் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனையை வழங்கலாம். சாதாரணமாக ஒருவர் ஒரு நாளைக்கு 45 நிமிடம் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம். இந்த கால அளவு சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கும் பொருந்தும்.

ஓரு நாளைக்கு 3 அல்லது 4 மணித்தியாலயம் சமூக வலைதள பாவனையில் இருப்பது உளவியல் ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கும். கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை மக்கள் அடிக்கடி பார்ப்பது மற்றும் கேட்பது உளவியல் பிரச்சினைக்கு வழிவகுக்கும். அடிக்கடி கொரோனா தொடர்பாக எதிர்மiறாயன விடயங்கள எங்களது காதுகள் கேட்கின்றன. இதனால் எதிர்மறை சிந்தனை ஒன்று எமக்குள் உருவாகிவிடும். இதனைத் தவிர்க்க கொரோனா பற்றிய தரவுகளை தேடுவதைக் காட்டிலும் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும்.

குடும்ப சூழலில் நேரத்தை செலவிட நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அதற்கு வழி செய்ய வேண்டும். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பலர் சமுக வலைத்தளங்களில் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த வாய்ப்பையும் இழந்து நிற்கிறார்கள். மேலும் பலர் பாலியல் காணொலிகளுக்கும் அடிமையாகி இருக்கிறார்கள். இந்த நிலைமையில் இருந்து விடுபட சுய நேரசூசி ஒன்றை அமுல்படுத்த இரவு 9 மணிக்குப் பின்னர் தொலைபேசியை பயன்படுத்துவதில்லை என்று ஒருவர் திடசங்கற்பம் பூண்டு அதை நடைமுறைப்படுத்தினால் இவற்றிலிருந்து விடுபடலாம்.

என்றாலும் இவ்வாறான விடயங்கள் குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூடிய விடயங்கள் இல்லை என்பதையும் சொல்ல வேண்டியது. அத்துடன் குறிப்பிட்ட சிலரை வைத்துக்கொண்டு இவற்றுக்கு தீர்வு காண முடியாது. தனிமனிதனாக ஒவ்வொருவரும் தாம் இந்த நிலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் அல்லது இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்காத வரை இதற்கு தீர்வு கிடையாது.
வழக்கமாக நாம் செய்கின்ற விடயங்கள் உட்பட எங்களுடைய தொழிலுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் சமூக வலைத்தளங்களின் பாவனை இருக்க வேண்டும். உதாரணமாக, குளித்தல் சாப்பிடுதல் போன்ற அடிப்படை விடயங்கள் தொழுகை நோன்பு போன்ற சமய விடயங்கள் என்பவற்றுக்கு பாதிப்பு இருக்குமானால் அது போதை என்ற ஒரு நிலையாகும். இவ்வாறானவர்கள் நிச்சயமாக தம்மை மாற்றிக்கொள்வதற்கான சுய ஒழுங்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு இணையவழிக் கல்விக்கு அவர்களை ஊக்குவிக்கலாம். அவர்களுக்கு தொலைபேசியை கொடுக்கும்போது கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு தொலைபேசியை வழங்க வேண்டும். இன்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இணையவழி பயிற்சி நெறிகள் மற்றும் சூம் செயலி மூலம் இணையவழிக் கூட்டங்கள் போன்ற நல்ல விடயங்களும் நடைபெறாமல் இல்லை. இவ்வாறான விடயங்களுக்கு எம்மை பழக்கப்படுத்துவது ஒரு நல்ல விடயமாக அமையும்.

இணையவழி வாசிப்பு இணையவழிக் கற்றல் மற்றும் சமூக வலைதளங்களில் அறிவியல் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியமான விவாதம் என்பன நல்லதொரு தலைமுறையை உருவாக்கும். அது தவிர்ந்த தகாத உறவு, பாலியல் சுரண்டல், பாலியல் கானொலிகளை பாரத்தல் மற்றும் வீணாக சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகுதல் என்பன தேவையற்ற உடல் உள பிரச்சினைகளை உருவாக்கும். எனவே அனைவரும் சமூக வலைதளங்களிலும் தொலைபேசியிலும் கடத்தும் காலத்தை குறைத்துக் கொண்டு ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த ய்வு காலத்தை பயனுள்ள முறையில் கழிக்க முன்வர வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.