மலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம்

0 2,488

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத்தின் பாரிய ஒன்றுகூடலில் பங்கேற்றவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34 வயதான மலேசியர் ஒருவர் மரணித்துள்ளார்.

மேலும் மலேசியாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 900 கொரோனா தொற்றாளர்களில் அரைவாசிப் பேர் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்றவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜமேக் பெட்டலிங் பள்ளிவாசலில் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 1 ஆம் திகதி வரை நடைபெற்ற தப்லீக் ஒன்றுகூடலில் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 1500 பேர் வெளிநாடுகளிலிருந்து இந் நிகழ்வில் பங்கேற்பதற்காக மலேசியாவுக்கு வருகை தந்தவர்களாவர். மலேசியாவின் 13 மாநிலங்களிலிருந்தும் 14500 பேர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த ஒன்றுகூடலில் பங்கேற்ற சகலரையும் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு சுகாதார அமைச்சு பகிரங்க வேண்டுகோள்களை விடுத்துள்ளது.

இந் நிலையில் இந் நிகழ்வில் பங்கேற்ற 513 மலேசியர்களுக்கும் 61 புரூணே நாட்டவர்களுக்கும் 22 கம்போடியர்களுக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஐவருவருக்கும் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மலேசியாவின் செலங்கூர் மாநிலத்திலுள்ள இஸ்லாமிய விவகாரத்துறை அங்கு தப்லீக் உள்ளிட்ட சகல ஒன்றுகூடல்களுக்கும் தற்காலிக தடைவிதித்துள்ளது. மேலும் மலேசிய அரசாங்கம் மே மாதம் வரை சகல ஒன்றுகூடல்களுக்கும் ஏலவே தடை விதித்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.