இலங்கையர்கள் அஞ்ச வேண்டியது கொரோனாவுக்கு அல்ல: டெங்குவுக்கே!

0 602

இன்று சீனாவை பாரிய அழி­வுக்­குள்­ளாக்கி உல­கையே அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்கும் கொவிட்–19 எனும் கொரோனா வைரஸ் பற்­றியே எல்லோர் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. இந்நோய்ப் பீதியே எல்லோர் மனங்­க­ளிலும் உறைந்­துள்­ளது. ஆனால் இந்­நோ­யினால் இது­வரை இலங்­கைக்கு எத்­த­கைய பாதிப்­புக்­களும் எற்­ப­ட­வில்லை என்று எமது சுகா­தா­ரத்துறை அறி­வித்­துள்­ளது. இதனால் ஓர­ளவு ஆறு­த­ல­டைய முடி­கி­றது. ஆனால் கொரோனா பேச்சு அடி­பட ஆரம்­பித்­த­வு­டனே இங்­கி­ருந்த டெங்குப் பீதி எங்கோ ஓடி மறைந்­து­விட்­ட­தென்றே கூறலாம்.

இந்­நாட்டை அடிக்­கடி அச்­சு­றுத்தி ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்கும் ஆட்­கொல்­லிதான் டெங்கு. எனவே இந்நோய் தொற்று குறித்து நாம் அசட்­டை­யாக இருக்­கக்­கூ­டாது. கடந்த வரு­டமும் நாடு டெங்­குவால் பெரிதும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டது.

அரச வைத்­தி­ய­தி­கா­ரிகள் சங்­கத்தின் அறிக்­கை­யின்­படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜன­வரி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்கை முழு­வதும் 99,120 டெங்கு நோயா­ளர்கள் இனங்­காணப் பட்­டுள்­ளனர்.

இவர்­களுள் 128 மர­ணங்கள் சம்­ப­வித்­துள்­ளன. இதிலும் கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை ஆகிய மேல் மாகா­ணத்தின் மாவட்­டங்­க­ளி­லேயே கூடு­த­லான டெங்கு நோயா­ளிகள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர். அந்த வகையில் மேல்­மா­காணம் முத­லிடம் பெறு­கி­றது என்று அந்த அறிக்கை மூலம் அறி­ய­மு­டி­கி­றது.

1960 ஆம் ஆண்டே டெங்கு இந்­நாட்டில் பர­வ­லாக தலை­காட்­டி­ய­தாக கணிக்­கப்­ப­டு­கி­றது. அன்று முதல் இன்று வரை வரு­டந்­தோறும் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை கூடியும் குறைந்தும் வந்­துள்­ளன. ஆனாலும் முற்­றிலும் இழிவு நிலை­ய­டைந்­த­தாக இல்லை என்­பதைப் புள்ளி விப­ரங்கள் காட்­டு­கின்­றன.

இலங்­கையில் டெங்கு மிகவும் கோர விளைவை ஏற்­ப­டுத்­திய வரு­ட­மாக 2017 ஆம் ஆண்டே வர­லாறு படைத்­துள்­ளது. அவ்­வாண்டில் 1,86,101 டெங்கு நோயா­ளர்கள் இனம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்­களுள் 500 க்கும் மேற்­பட்டோர் இறக்க நேரிட்­ட­தா­கவும் மேற்­படி வைத்­திய சங்க அறிக்கை கூறு­கி­றது.

‘இந்­நாட்­டி­லி­ருந்து டெங்­குவை ஒழித்துக் கட்­டுவோம்’ என்று பகீ­ரதப் பிர­யத்­த­னத்­துடன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் எமது சுகா­தார வைத்­தி­யத்­து­றைக்கு சவால்­விடும் வகையில் டெங்கு நோய் மீண்டும் மீண்டும் தலை­தூக்­கிக்­கொண்­டி­ருப்­பது கவலை தரு­வ­தா­க­வுள்­ளது.

பொது­வாக இலங்­கையில் தென்மேல் பருவப் பெயர்ச்­சி­கால மழை, வடகீழ் பருவப் பெயர்ச்­சி­கால மழை ஆகிய இரு பருவ காலங்­க­ளையும் தொடர்ந்து வரக்­கூ­டிய நாட்­க­ளி­லேயே டெங்கு தலை­தூக்­கு­வது இயல்பு. ஆனால் கடந்த 2019 ஆம் வருடம் பருவ காலத்­திற்குப் புறம்­பாக வேறு காலங்­க­ளிலும் அதிக மழை­வீழ்ச்சி காணப்­பட்­டது. இத­னாலே டெங்கு பாதிப்பும் கட்­டுக்­க­டங்­காது தாண்­ட­வ­மா­டி­யது. இதனால் பல வைத்­தி­ய­சா­லை­களும் டெங்கு நோயா­ளி­களால் நிரம்பி வழிந்­தன. வைத்­தி­ய­சாலை விடுதி அறைக் கட்டில் ஒன்றில் இரண்டு, மூன்று நோயா­ளிகள் சிகிச்­சைக்­காகத் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவற்­றுக்கும் மேலால் வைத்­தி­ய­சாலை வெளி­வ­ராந்­தாக்­க­ளிலும் நோயா­ளிகள் படுத்­து­றங்­கிய அவ­லங்­க­ளையும் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

2019 ஆம் ஆண்டு முழு­நாட்­டிலும் காணப்­பட்ட 99,120 டெங்கு நோயா­ளர்­களில் மேல் மாகா­ணத்தில் 43,063 பேர் காணப்­பட்­டனர். இதில் தெஹி­வளை– கல்­கிசை, மொறட்­டுவ, ஜய­வர்­த­ன­புர, கொலன்­னாவ, மக­ர­கம, கடு­வல, முல்­லே­ரியா உள்­ளிட்ட கொழும்பு மாவட்­டத்தில் 19,870 பேர் அடங்­கு­கின்­றனர். இதிலும் கொழும்பு நகரில் மாத்­திரம் 4,215 பேர் காணப்­பட்­டனர்.

இந்த 2020 ஆம் வருடம் ஜன­வரி மாதத்தில் முழு நாட்­டிலும் 9,510 டெங்கு நோயா­ளர்கள் இனம் காணப்­பட்­டுள்­ளனர். மேல் மாகா­ணத்தில் 2,544 பேரும் கொழும்பு மாவட்­டத்தில் 1465 பேரும் கொழும்பு நகரில் 462 பேரும் அடங்­கு­கின்­றனர். கடந்த டிசம்பர் மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் இத்­தொகை 50 வீதத்தால் குறைந்­துள்­ளது. இப்­போது நிலவும் கோடை­கால சூழ்­நி­லையே இதற்குக் கார­ண­மாகும். தொடர்ந்து வரட்சி நீடிப்­பதால் மேலும் படிப்­ப­டி­யாக குறைவு காணும் என்று எதிர்­பார்க்­கலாம். மழை தொடர்ந்தால் மேலும் தலை­தூக்கும் சாத்­தி­ய­முள்­ளது.

தேங்கும் மழை நீரி­லேயே டெங்கு பரப்பும் நுளம்­புகள் உள்­ளிட்ட நுளம்­புகள் பெரு­கு­கின்­றன.

கடந்த வருடம் டெங்கு நோயா­ளர்கள் அதி­க­ரிக்­கவும் டெங்கு மர­ணங்கள் உய­ரவும் இன்­னொரு பிர­தான கார­ணியும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதாவது, குறிப்­பிட்ட நோயைத் தோற்­று­விக்கும் வைரஸ் முன்­னரை விட வீரியம் பெற்­றி­ருப்­பதே அக்­கா­ர­ணி­யாகும். இதனால் முன்னர் பயன்­ப­டுத்­திய மருந்து சிகிச்சை முறை இப்­போது வீரி­ய­ம­டைந்­துள்ள வைரஸால் தாக்­குப்­பி­டிக்க முடி­கி­றது. இதனால் நோய்த்­தாக்கம் தொட­ரவே செய்­கி­றது. பலம் பெற்­றுள்ள வைரஸை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பிரத்­தி­யேக மருந்து தயார் பண்­ணு­வ­தற்­கி­டை­யிலே நோய் வேக­மாகப் பர­வி­ய­மையே நோயாளர் அதி­க­ரிப்­புக்கும் மரண வீதம் உயர்­வுக்கும் கார­ண­மென்று தெரி­விக்கப் படு­கி­றது.

நவீன யுகத்­திற்கு ஏற்ற வகையில் மனிதன் படித்து முன்­னே­று­வது போல விலங்­கி­னங்கள் உள்­ளிட்ட வைரஸ்­களும் காலத்­திற்­கேற்­ற­வாறு தன்­னி­லையை மாற்­றி­ய­மைத்து முன்­னேறி வரு­வ­தையே மேற்­படி நிலை எமக்கு உணர்த்­து­கி­றது. சிகுன்­குன்யா உள்­ளிட்ட வைரஸ் காய்ச்­சலை உண்டு பண்ணும் W–N1, H1 என்ற வைரஸும் காலத்­துக்கு காலம் தன்னை வீரி­யப்­ப­டுத்­திக்­கொண்டு வரு­வதை வைத்­திய வட்­டா­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இவ் வைரஸ் இரண்டாம் கட்­டத்தில் W–N1, H2 என்றும் இதற்­கான மருந்தைத் தாக்கம் பிடிப்­ப­தற்­காக மேலும் பலம் பெற்று W–N2, H2 என்று மாறி இப்­போது W–H2, H3 என்று வீரியம் பெற்று மனி­தனைத் தாக்கிக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் வைத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

இதே­போன்றே நுளம்­பு­களின் முன்­னேற்றம் குறித்தும் மற்றோர் ஆய்வை முன்­வைக்க முடி­கி­றது. நுளம்புச் சுருள்­களை நாம் பயன்­ப­டுத்தி வரு­கிறோம்.

அதற்கும் தாக்குப் பிடித்துக் கொள்­வதால் நாம் நுளம்புச் சுருள் ரகத்­தையும் மாற்றி வரு­கிறோம். இப்­போது அவற்­றுக்கும் தாக்குப் பிடித்து நுளம்­புகள் கைவ­ரி­சையைக் காட்டி வரு­வதைக் காண்­கிறோம். இதே போன்­றுதான் எம்மைத் தீண்­டு­வ­திலும் நுளம்­புகள் பாடம் படித்­தி­ருப்ப தையும் காண­மு­டி­கி­றது. எமது கையால் தாக்­கி­ய­ழிக்க முடி­யா­த­வாறு நுளம்­புகள் எமது நடு முதுகுப் பகு­தி­யையோ அல்­லது கைக்­கெட்­டாத தோள்­பட்டைப் பகு­தி­யையோ தீண்­டு­வதை எங்­களால் அவ­தா­னிக்க முடி­கி­றது.

மறு­பு­றத்தில் டெங்கு வைரஸும் நான்கு வகை­களில் வளர்ச்சி கண்­டுள்­ள­தாகக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. வைரஸ் ரகம் 1,2,3,4 என்­ப­னவே அவை­யாகும்.

கடந்த வருடம் தாக்கம் செலுத்­திய வைரஸ்–3 ரகத்தைச் சேர்ந்­த­தாகும். சுமார் 10 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இந்த வைரஸ் தலை­காட்­டி­யுள்­ள­தாக வைத்­திய நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் இதன் வீரி­யத்­தன்­மை­யுடன் போரா­டு­வ­தற்­கு­ரிய எதிர்ப்புச் சக்தி மனித உடம்பில் இல்­லா­மை­யாலே நோய் மனி­தனைத் தொற்றி வேக­மாகப் பர­வு­வ­தற்கு கார­ண­மா­கி­யுள்­ளது.

டெங்கு வைரஸைக் காவி­வரும், ஈடிஸ் ஈஜிப்டஸ், அல்­போ­பிக்டஸ் ஆகிய இரு வகை நுளம்­பு­க­ளா­லேயே டெங்கு பரப்­பப்­ப­டு­கின்­றது. சுக­தே­கி­யொருவரை குறித்த நுளம்பு தீண்­டும்­போது அதன் குடுக்­கை­யி­லுள்ள டெங்கு வைரஸ் அவ­ரது உட­லினுள் செலுத்­தப்­ப­டு­கி­றது. அவ­ரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்­தி­ருக்கும் பட்­சத்தில் அவர் நோய்க்­கி­லக்­காகி விடு­கிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறை­வா­க­வுள்ள சிறார்கள், முதியோர், இதர நோயுள்ளோர் மற்றும் கர்ப்­பி­ணிகள் இல­குவில் டெங்­குக்கு இலக்­கா­கி­வி­டுகிறார்கள்.

குறித்த வைரஸ் உட­லினுட் புகுத்­தப்­பட்ட பின்னர் நோய் அறி­கு­றி­யாக காய்ச்சல் ஏற்­படும். பொது­வாக இன்­பு­லு­வன்ஸா, எலிக்­காய்ச்சல் உள்­ளிட்ட வைரஸ் காய்ச்­சல்கள் பலவும் தற்­போ­துள்­ளன. எனவே குருதிப் பரி­சோ­தனை மூலமே டெங்­குவா அல்­லது வேறு வைரஸ் தொற்றா என்­பதைக் கண்­ட­றி­யலாம்.

காய்ச்­ச­லோடு கடும் தலை­வலி, கண் சிவத்தல், கண்­க­ளுக்குக் கீழ்ப்­ப­கு­தியில் வலி, சதை­களில் வலி, மூட்­டுக்­களில் வலி, ஒக்­காளம், வாந்தி, தோலில் மேல் பகு­தியில் சிவப்பு பள்­ளங்கள், அதிக குருதி அழுத்தம் போன்ற குணங்­கு­றிகள் காணப்­ப­டு­மாயின், உடனே அரு­கி­லுள்ள வைத்­தி­ய­ரையோ, அரச வைத்­தி­ய­சா­லை­யையோ நாட­வேண்டும். ஏனெனில் நோய் முதிர்ச்­சி­ய­டை­வ­தற்குள் இனங்­கா­ணப்­ப­டு­வதன் மூலம் உரிய சிகிச்­சை­களைப் பெற்று நோயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர­வேண்டும்.

குறித்த நோய்­வாய்ப்­பட்­டவர், இயன்ற வரையில் ஓய்வு நிலை­யி­லி­ருக்க வேண்டும். அதி­க­ளவில் நீரா­காரம் அருந்த வேண்டும். இளநீர், பழச்­சா­றுகள் ஏற்­ற­தாகும். எப்­ப­டியும் வைத்­தி­யரின் ஆலோ­ச­னைப்­ப­டியே செயற்­பட வேண்டும். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கு­மாறு டாக்­டரால் கோரும் பட்­சத்தில் அவ்­வாறே நடந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

தற்­போது வீரியம் பெற்­றுள்ள டெங்கு நுளம்­புகள் காலை 5 மணி முதல் 7 மணி வரை­யான காலப்­ப­கு­தி­யிலும் மாலை வேளை­யிலும் 5 மணி முதல் இரவு 7 மணி வரை­யிலும் நட­மா­டு­வ­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனவே குறித்த மேற்­படி நேரங்­களில் நுளம்பு தீண்­டு­வதில் நின்றும் பாது­காத்­துக்­கொள்­வது அவ­சியம். திறந்த மேனி­யோடு இருப்­பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட கை, காற்­சட்­டைகள் அணி­வது ஏற்­ற­மாகும். குறிப்­பிட்ட நேரங்­க­ளில்தான் டெங்கு வைரஸ் உள்ள நுளம்­புகள் நட­மா­டு­கி­ற­போ­திலும் இதர நோய்­களைப் பரப்பும் ஏனைய நுளம்புக் கடி­களில் இருந்தும் தவிர்ந்­து­கொள்ள எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூடிய அவ­தா­னத்­துடன் நடந்­து­கொள்­வது தேகா­ரோக்­கி­யத்­திற்கு நல்­லது.

பெரும்­பா­லான நோய்கள் நுளம்­பு­க­ளா­லேயே காவு கொள்­ளப்­பட்டு வரு­வதால் பொது­வாக நுளம்பு பெருகும் எல்லா இடங்­க­ளையும் இல்­லாமல் செய்ய வேண்டும். வீட்­டையும் சுற்றுச் சூழ­லையும் சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தி­லேயே கண்ணும் கருத்­து­மாகச் செயற்­ப­ட­வேண்டும். மழை நீரோ, வீட்டுக்கழிவு நீரோ தேங்கியிருக்க விடாது வடிந்தோடச் செய்ய வேண்டும். ஒரு துளி அளவோ அல்லது பெரும் கிடங்கு, சாக்கடை குழிகளிலோ நீர் தேங்குவதைத் தடுக்கவேண்டும்.

தென்னஞ்சிரட்டை, குரும்பைக் கோம்பை அல்லது பாவனையின் பின்னர் அப்புறப்படுத்தும் நீர்தங்கும் நிலையில் உள்ள பாத்திரங்கள், போத்தல், மூடிகள், வாகன டயர்கள், பொலித்தீன் பைகள், பூச்சாடிகளிலும் கூட தங்கியுள்ள சிறுஅளவு நீரிலும் நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகும் வாய்ப்பு நிறையவே உள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு வாரம் ஒரு முறையோ அல்லது அடிக்கடி துப்புரவு செய்வது உயிராபத்திலிருந்து தடுத்துக்கொள்ள உதவும்.

ஒவ்வொருவரும் தனது வீட்டையும் சூழலையும் மாத்திரமின்றி அயலகப் பகுதிகளையும் சுத்தம் பேணுவது சமூகத்தைக் காக்கும் பணியாக அமையும்.
இதற்காக சுகாதாரப் பகுதியையோ தமது பிரதேச ஆட்சி மன்றங்களையோ எதிர்பார்க்காது தம் கடமை என்ற உணர்வோடு காரியமாற்றினால் டெங்குப் பாதிப்பிலிருந்து குறைந்த பட்சமாவது பாதுகாத்துக்கொள்ள முடியும்.-Vidivelli

  • ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.