2004 ஆழிப்பேரலை நினைவுகள்

சுனாமியின் போது இலங்கை வந்திருந்த ஓர் இந்திய எழுத்தாளரின் அனுபவம்

0 635

எனது வாப்பா, வாப்­பிச்சா வீட்டு அப்பா (வாப்­பாவின் வாப்பா) ஆகி­யோ­ருக்கு இலங்­கை­யில்தான் தொழில். வாப்பா பிறந்­த­துதான் இந்­தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்­தது எல்லாம் கொழும்­பில்தான்.

என் சகோ­த­ரர்கள் அனை­வரும் இலங்­கைக்குத் தொழில் நிமித்­த­மாக சென்று வந்­து­கொண்­டி­ருக்க எனக்கு மட்டும் இலங்­கைக்கு போகும் வாய்ப்பு ஏற்­ப­ட­வில்லை.

2004 ஆம் ஆண்டு. நான் சகோ­த­ரர்­க­ளுடன் கூட்­டாகத் தொழில் செய்து கொண்­டி­ருந்த சம­யத்தில் இலங்கை செல்லும் வாய்ப்பு கிடைத்­தது.
20/12/2004 திங்­கட்­கி­ழ­மையும் வந்­தது. அதுதான் பயண நாள்.

அன்று எனது காக்கா (அண்ணன்) எனது கட­வுச்­சீட்டின் ஒளிப்­படி (Photocopy), பய­ணச்­சீட்டு ஆகி­ய­வற்றை எடுத்து தன் பையில் வைக்­கப்­போனார்.

எனது முதல் இலங்­கைப்­ப­ய­ணத்தின் ஆவணம் என்­னி­டமே இருக்­கட்டும் என்ற முறு­மு­றுப்பில் நான் வைத்­துக்­கொள்­கி­றேனே என்­ற­வுடன், இந்­தாப்­பிடி என்ற கரட்டு குரலில் நீட்­டினார்.

இன்­னொரு காக்கா, காக்கா மகன்கள் சேர பய­ண­துஆ (பிரார்த்­தனை) ஓதி வழி­ய­னுப்ப இளம் வெயில் விரவிக் கிடந்த காலைப்­பொ­ழுதில் கிளம்­பினோம்.

கொழும்பு வானூர்தி நிலை­யத்தில் இறங்­கும்­போது இலங்­கையின் உள்ளூர் நேரம் இந்­தி­யாவை விட ஒரு மணி நேரம் கூடு­த­லாக இருந்­தது. அப்­போது நடந்து கொண்­டி­ருந்­தது சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்சி. இந்­தி­யாவின் மீதுள்ள வெறுப்பும் இப்­ப­டி­யான நேர மாற்­றத்­துக்கு கார­ண­மெனத் தெரிந்­த­வர்­களின் கிசு­கி­சுப்பு வேறு. நேரத்­துக்கும் தேசத்­துக்கும் என்ன தொடர்போ? எல்லாம் புவி அர­சி­ய­லுக்கே வெளிச்சம்.

ஹஜ்­ஜுக்கு போன­பி­றகு நான் போகும் முதல் வெளி­நாட்­டுப்­ப­யணம். நான் இப்­போது எனது தேச எல்­லைக்­கப்பால் இருக்­கின்றேன். எனது பிறந்த மண்ணில் இல்லை. எனது பணம், செல்­பேசி எண், எனது ஊர், நான் என எது­வுமே இங்கு செல்­லாது என்ற அறி­தலில் என்னை நான் எல்­லை­யிலி பற­வை­யைப்­போல உணர்ந்தேன்.

கொழும்பில் நான் கால்­வைத்த சில மணி நேரங்­களில் இரண்டாம் குறுக்­குத்­தெ­ருவில் இருந்த எனது வாப்­பாவின் கடை இருந்த இடத்­தைதான் முதலில் போய் பார்த்தேன். இலங்­கை­யு­ட­னான எனது மொத்த இளம் பரு­வத்து நினை­வு­களும் ஒரு கணம் மீண்டு நிறைந்­தது. வாப்பா வழி­யாக மட்­டுமே இலங்கை பற்­றிய கன­வு­களை சிறு பிராயம் முழுக்க கண்­டதன் விளைவு அது.

புதிய நாடு உண்­டாக்கும் பர­ப­ரப்பு அடங்­கு­வ­தற்குள் அந்த நாள் வந்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை காலை சுபஹ் தொழுகை, நிஜா­மிய்யா கடையின் நிறை குவளை தேநீர், சிறு கடி, குளியல் என எல்லாம் கழிந்து பேரு­வ­ளைக்கு புறப்­பட அணி­ய­மாக இருக்­கும்­போது அறையின் கதவை தள்ளிக் கொண்டு “தொர’ என்­ற­வாறே வெற்­றி­லைக்­கறை படிந்த பற்­க­ளுடன் நுழைந்தான் செல்­வராஜ்.

அவன் இந்­திய தலை­முறைத் தமிழன். வேர்கள் மது­ரைப்­பக்கம். எங்­க­ளூர்­கா­ரர்கள் அனை­வரின் இருப்­பி­டங்­க­ளுக்கும் சென்று பணி­வி­டைகள் செய்து காலத்தை ஓட்­டு­பவன்.

“டேய் பொறப்­பு­டுற நெரத்­துல வந்­தி­ருக்­கி­றியே” என்றார் காக்கா. செல்­வராஜ் தன் கையில் வைத்­தி­ருந்த மின்­னேற்றம் செய்­யக்­கூ­டிய சுவர் விளக்­கொன்றை அவ­ரிடம் நீட்­டினான். “இத வச்­சுக்­கிட்டு எழு­நூறு ரூபாய் தாங்க தொர” என்றான். அவன் வரும்­போது சரி­யாக காலை எட்டு மணி பத்து நிமி­டங்கள்.

காக்கா அதை கையில் வாங்­கி­ய­வாறே தன் வெள்­ளெ­ழுத்து கண்­ணா­டியை மாட்­டினார். மர நாற்­கா­லியில் அமர்ந்து கையை ஊன்றிக் கொண்டு அந்த சுவர் விளக்கை புரட்டிக் கூர்ந்து பார்த்து வாசிக்க தொடங்­கினார். “இந்த விளக்கு ரிப்­பே­ராகி விட்­டது சரி­யாக வேல செய்­யாது எண்டு எழு­தி­யி­ருக்­கு­துடா” என செல்­வராஜ் காது­க­ளுக்கு தப்­பாமல் கேட்­கும்­ப­டி­யாக முன­கினார்.

சிறிது ஏமாற்­ற­ம­டைந்த செல்­வராஜ் சுதா­ரித்துக் கொண்டு, “அது பழு­துண்­டுலாம் ஓரு கம்­ப­னில போடவா செய்­வாங்க தொர” என்­ற­வாறே தன் காவி பற்­களை திறந்தான். கண்­ணுக்குள் குரங்கு சிரித்­தது. ஒரு வழி­யாக இலங்கை பணம் நானூறை அவன் கையில் திணித்து விட்டு புறப்­ப­டும்­போது மணி 08:25.

புறக்­கோட்டை பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து காலி செல்லும் பேருந்தில் ஏறினோம். காலை வெயில் கடலின் உப்பு சேர்­மா­னத்­தோடு சுள்­ளென தோலுக்குள் இறங்­கி­யது. கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, கல்­கிஸ்ஸை என வேக­மெ­டுத்த பேருந்து களுத்­து­றையை நெருங்­கும்­போது சாலையின் இரு மருங்­கு­க­ளிலும் ஆட்கள் கையில் ஞெகிழி பைக­ளுடன் பதற்­ற­மாக ஓடி வந்துக் கொண்­டி­ருந்­தனர். கொஞ்சம் பேருக்கு உள்­ளாடை மட்­டுமே இருந்­தது. சரக்கு வண்­டிகள் பேய் வேகத்தில் சாலை­களில் பாய்ந்து கொண்­டி­ருந்­தன. ஏதோ தொடர்­வண்டி விபத்து என்­பது போல வண்­டிக்குள் பேசிக் கொண்­டனர்.

களுத்­து­றையின் வங்­காள விரி­கு­டாவில் சங்­க­மிக்கும் களு­கங்கை நதி மீதான பாலத்தில் பேருந்து வந்து கொண்­டி­ருந்­தது. நீர்ப்­ப­ரப்பு மயில் தோகை போல படர்ந்து இளம் நீல நிறத்தில் இலங்கிக் கொண்­டி­ருந்து, இடது பக்க கரை­யோரம் இரு பட­குகள் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. விட­லைப்­பை­யனின் உய­ர­ம­ள­விற்கு தலை வளைந்த அலை­யொன்று கிளம்பி அந்த இரு பட­கு­க­ளையும் ஒன்­றுக்­கொன்று மோதச்­செய்­தது. டமார் ஓசை என் செவி­க­ளுக்குள் இறங்­கி­யது.

நதியில் அலை எழும்­பு­வதை முதன் முதலில் இப்­போ­துதான் பார்க்­கின்றேன்.

களுத்­துறை கழிந்து கட்­டுக்­கு­ருந்தை தொடர்­வண்டி நிலைய அணு­கு­சாலை சந்­தியில் பேருந்தை பொது­மக்கள் மறித்­தார்கள். இதற்கு மேல் பாதை­யில்லை. போகா­தீர்கள். உயி­ருக்கு உத்­தி­ர­வா­த­மில்லை என்­றனர். அனை­வரும் இறங்­கினோம். காலை ஒன்­ப­தரை மணி.
பேரு­வ­ளைக்கு இன்னும் 11.50 கி.மீ. தொலை­வி­ருக்­கின்­றது. கொழும்பு – காலி சாலையில் நடக்கத் தொடங்­கினோம். எங்­க­ளுடன் பேரு­வ­ளையைச் சார்ந்த ஒரு­வரும் வந்தார். சாலையில் ஆங்­காங்கே உடைந்த கண்­ணாடி சில்லு போல தண்ணீர் தேங்கிக் கிடந்­தது. திடீ­ரென சாலையின் எதிர்ப்­பு­றத்­தி­லி­ருந்து ஒருவர் ஓடி வந்து சுதிகெட்ட பாங்கில் கைகளை சுழற்றி “வத்­துர ஆயெ எனவா… வத்­துர ஆயெ எனவா…” என சிங்­க­ளத்தில் கூக்­கு­ர­லிட்டார்.

உடன் வந்த பேரு­வ­ளைக்­காரர், உடனே எங்­களைப் பார்த்து தண்ணி வரு­வுதாம். உள்­ளுக்­குள்ள ஓடுங்க என்றார். பாத­ணி­களைக் கழற்றி கையி­லெ­டுத்து உட்­புற சாலையில் ஓடத் தொடங்­கினோம், இறு­திப்­பொ­ழுது நெருங்கி விட்­ட­தென மூளை முடி­வெ­டுக்க கலி­மாவை (இறை நம்­பிக்கை சாட்சி சொல்) ஓதிவிட்டேன்.

சிறு வயது சேட்­டை­களின் எதிர் விளை­வு­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக பாத­ணி­களைக் கழற்றி ஓடிய பிறகு தண்­ணீரின் விரட்­டலில் இரண்டாம் முறை­யாக பாதணி நீக்கம்.

ஓடி ஓடி மேடான பகு­திக்கு வந்தோம். அங்கு நின்­றி­ருந்த வீட்டின் வெளிப்­புற சுவரை ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். ஓராள் உயரம் அள­விற்கு கடல் நீர் வந்து நின்று போன­தற்­கான ஈரத்­தடம் அதில் பதிந்­தி­ருந்­தது. நிலை­மையின் கடுமை அப்­போ­துதான் தலைக்­கே­றி­யது. காலை 09:20 மணிக்கு அடித்­தி­ருக்­கின்­றது ஆழிப்­பே­ரலை. சில மணி நேரங்­க­ளி­லேயே மீட்பு பணி­களும் தொடங்­கி­யி­ருந்­தன. மண் வாரி பொறிகள் வந்­தி­ருந்­தன.

மீண்டும் எங்கள் நடை­ப­ய­ணத்தை வயல்­க­ளுக்குள் தொடர்ந்தோம். என் கையி­லி­ருந்த அரச செல் சேவை நிறு­வ­ன­மான மொபிடெல் மட்டும் வேலை செய்­தது. தனியார் செல் நிறு­வன சேவை முற்­றிலும் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. அரசு அர­சுதான். தனியார் தனி­யார்தான் என்ற பாடம் தலைக்குள் நடந்­தது.

வழி முழுக்க சிங்­கள மீனவ கிரா­மங்கள். எல்­லோ­ருமே சொல்­லி­ழந்து நின்று கொண்­டி­ருந்­தனர்.

சில கிரா­மங்­களில் கடல் வரு­கின்­றது என்ற புர­ளி­யி­லேயே மக்கள் தட்­ட­ழிந்து கொண்­டி­ருந்­தனர். இறு­தி­யாக பேரு­வ­ளை­யி­லி­ருந்து ஆறரை கி.மீ. தொலை­வுள்ள மக்­கொனை கிரா­மத்­திற்கு வந்து சேர்ந்தோம். கடும் தாகமும் பசியும் அச்­சமும் அலைக்­க­ழித்­தது. அங்கு காக்­கா­விற்கு தெரிந்த வணி­க­ரொ­ருவர் பல்ஸர் பைக்கில் எதிர்ப்­பட்டார். எங்­களை ஏற்றிக் கொண்டு அவ­ரது வீட்­டிற்கு அழைத்துச் சென்றார். அவரின் உணவு மேசை மீதி­ருந்த சின்­னஞ்­சிறு வானொலிப் பேழையில் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தமிழ் செய்­தி­ய­றிக்கை ஒலி­ப­ரப்­பாகிக் கொண்­டி­ருந்­தது.

இலங்­கையில் மட்­டு­மில்லை இந்­தியா, மால­தீவு, இந்­தோ­னே­ஷியா, தாய்­லாந்­திலும் கடல் பெருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­தார்கள். செய்தி முடி­வ­தற்குள் சுடு­சோறும் பருப்புக் கறியும் சுட்ட கரு­வாடும் வந்து சேர்ந்­தது. கட்­டு­ரையின் முன்­ப­கு­தியில், களுத்­து­றையில் சரக்கு ஊர்­திகள் பேய் வேகத்தில் போயின என்ற வரி­யி­ருக்கும். பின்­னர்தான் தெரிய வந்­தது, அந்த வண்­டிக்குள் சரக்­கு­க­ளாக இருந்­தவை சடல கொத்­துக்கள்.

உண்­டி­யா­சனம் முடித்­து­விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்து உள் கிரா­மங்­களின் வழி­யாக பேரு­வ­ளையை வந்­த­டைந்தோம். அப்­போது மதியம் மணி மூன்று. கொழும்பு – காலி பிர­தான சாலைக்கு வந்தோம். நடுக்­கடல் வாழ் பெரும் மீன்­பிடிப் பட­குகள் சாலைக்கு நட்ட நடுவே நின்று கொண்­டி­ருந்­தன. கடல் கொண்டு வந்து கொட்­டிய குப்பை கூளங்­க­ளுக்கு நடுவே நீள் மூக்கு சுறா போல அவை காட்­சி­ய­ளித்­தன. சாலை­யோரம் இருந்த சில வீடு­களின் முன்­புற வாச­லுக்குள் போய் செருகி கிடந்­தன பெரும் மீன்­பிடி தோணிகள்.

பேரு­வளை, சீனன்­கோட்டை நன்கு மேடான பகுதி என்­பதால் பிர­தான சாலைக்கு வந்த ஆழிப்­பே­ரலை உள் நுழை­ய­வில்லை. அங்­குள்ள ஜும்ஆ மஸ்­ஜிதில் கரை­யோர மீனவ சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் வெளி­நாட்­ட­வரும் தஞ்சம் புகுந்­தி­ருந்­தனர். கொப்­ப­ரை­களில் அவர்­க­ளுக்­கான உணவு வெந்து கொண்­டி­ருந்­தது. குழந்­தை­க­ளுக்­கான பால்மா பொதி வண்­டியில் இறங்கிக் கொண்­டி­ருந்­தது. பேரு­வ­ளையின் கடல் பக்க குடி­யி­ருப்­புக்­க­ளில்தான் இழப்பு கூடு­த­லாக இருந்­தது. மதியம் வாக்கில் பிர­தான சாலையில் காக்­காவை அவ­ருக்கு பழக்­க­மான ஆளொ­ருவர் சந்­தி­த்தார். “மச்சான்! சுனா­மிக்கு பொறவு காலய்­லே­ருந்து கடல் ஸைலன்ஸ். இப்­பத்தான் அது குர­டிய (ஓசை எழுப்­பு­கின்­றது) அப்ப கடல் நோமல்” (நோமல் – இயல்பு நிலை) என்று தன் தூக்­க­லான பற்கள் காட்­டி­ய­வாறே நிம்­ம­தி­யாக சிரித்தார்.

ஊட­கங்­களில் இர­வுதான் சுனாமி என்ற பெயர் உச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதற்­கி­டையில் சென்னை மெரினா கடற்­கரை தமி­ழ­கத்தின் ஒருங்­கி­ணைந்த தஞ்­சாவூர் மாவட்டம், கன்­னி­யா­கு­மரி மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள பெரு­ம­ள­வி­லான உயிர், பொருள், உடைமை சேதா­ரங்கள் பற்றி தனியார் தொலைக்­காட்­சிகள் ஒளி­ப­ரப்பத் தொடங்கி விட்­டி­ருந்­தன. சென்னை ஆழிப்­பே­ரலை காட்­சி­களை திரும்பத் திரும்ப ஒளி­ப­ரப்பிக் கொண்­டி­ருந்­தார்கள்.

சிவப்பு நிறக் காரொன்று மெரி­னாவின் சுனா­மிச்­சு­ழலில் வட்­ட­ம­டித்துக் கொண்­டி­ருந்­தது.

பேரு­வளை கடைத்­தெ­ருவில் உள்ள கடை­க­ளி­லுள்ள அனைத்து பொருட்­களும் கடல் நீரில் சேதா­ர­மா­கி­விட்­டன. மாடிக் கடைகள் மட்­டுமே தப்­பின.

இரண்டாம் நாளி­லேயே சாலையில் குவிந்­தி­ருந்த ஆழிப்­பே­ரலை கொட்­டிய குப்­பை­க­ளையும் தோணி பட­கு­க­ளையும் மீட்பு படை­யினர் அகற்றி போக்­கு­வ­ரத்தை மீட்­டனர்.

மீட்பு பணியில் இலங்­கை­யி­னரின் துரித செயல்­பாடு நம் நாட்டை விட பல­ம­டங்கு கூடுதல்.

நாங்கள் கொழும்பு சென்­று­விட்டு இரண்­டொரு நாட்கள் கழித்து மீண்டும் பேரு­வ­ளையின் அரு­காமை ஊரான பயா­க­லவின் தொடர் வண்டி இருப்பு பாதை­களை பார்த்தோம். முறுக்கி பிழி­யப்­பட்ட கயிறு வடம் போல தட்­டாத்தி அரிசி முறுக்கு போல அவை திரு­கப்­பட்டுக் கிடந்­தன.

அங்கு தங்­கி­யி­ருந்த ஒரு மாதம் முழுக்க ஒவ்­வொரு நாளும் ஆழிப்­பே­ரலை நிகழ்­வு­களை கேட்டுக் கொண்­டே­யி­ருந்தோம். தப்­பி­ய­வர்கள் சொன்ன விரக்­தியும் நன்­றி­யு­ணர்ச்­சியும் விர­விய வர்­ண­னை­க­ளுடன்.
ஆழிப்­பே­ர­லைக்குள் கறுப்பு நிறத்­துடன் மண் கலங்­க­லாக வெந்­நீரும் கலந்தே வந்­தி­ருக்­கின்­றது. உட­லங்கள் வெந்­தி­ருந்­தி­ருக்­கின்­றன. நீருடன் உப்பு மண்ணும் கலந்­தி­ருந்­ததால் கொஞ்சம் நீரை உட்­கொண்­ட­வர்­களும் பிழைக்­க­வில்லை. வந்த அதே வேகத்தில் கட­லுக்குள் மீண்­டி­ருக்­கின்­றன அலைகள். வரும்­போது தப்­பித்­த­வர்­களை திரும்­பும்­போது கொண்டு போயி­ருக்­கின்­றன.

அலைகள் வரும்­போது பெருஞ்­சு­வ­ரொன்று ஓடி வரு­வது போல இருந்­தி­ருக்­கின்­றது. மரு­த­முனை போன்ற கிழக்கு மாகாண பகு­தியில் பொங்­கி­யெ­ழுந்த ஆழிப்­பே­ர­லையின் திரையில் காலைக் கதி­ரவன் கூட மறைந்து இருள் படர்ந்­தி­ருக்­கின்­றது.

கட­லுக்குள் இழு­பட்­டு­சென்ற சட­லங்­களை மீன்கள் உண­வாக உண்டு வரும். எனவே மீன் உணவை சில மாதங்களுக்கு தவிர்ப்போம் என தவிர்த்தவருமுண்டு.

ஹிக்கடுவை பேரலை அருகே கொழும்பிலிருந்து காலி சென்று கொண்டிருந்த தொடர்வண்டியில் பயணித்த அனைவரின் உயிர்களையும் உறிஞ்சி குடித்தபின் பெட்டியை அதன் பொறியுடன் சுழற்றி எறிந்திருக்கின்றது ஆழிப்பேரலை. அந்த பெட்டியில் பயணித்த கீழக்கரையைச் சார்ந்த, கொழும்பில் உணவகம் நடத்தி வருபவரின் மகன் ஒருவரையும் எம்ஜியார் என்ற பட்ட பெயரிட்டு அழைக்கப்படும் எங்களூரின் கோமான் தெருவைச்சார்ந்த சமையல்காரர் ஒருவரையும் சேர்த்து கொண்டு போய்விட்டது.

இரட்டைப்பிள்ளைகளை மூழ்கடித்த கடல் நீர் ஒரு பிள்ளையை விட்டு விட்டு மற்றொரு பிள்ளையை கொண்டுபோனது, பள்ளிவாசல் கதவு நுனியில் ஆடையில்லாமல் தொங்கிக் கிடந்தது, தென்னை மரத்தை பற்றிக் கொண்டு தப்பியது, கண், வயிறு உப்பி வெடித்த சடலங்கள் என நூறு நூறு ஆழிப்பேரலை கதைகள் நினைவுகளின் ஆழத்தில் கிடந்து கீறிகொண்டேயிருக்கின்றன.

எந்த ஊரில் சென்று கடலையும் கரையையும் பார்த்தாலும் ஆழிப்பேரலை நினைவுகளும் உடன் எழுகின்றன. கூடவே எந்த வருடத்து டிசம்பர் வந்தாலும் தான்.-Vidivelli

  • சாளை பஷீர்
    தமிழ்நாடு

Leave A Reply

Your email address will not be published.