ருவன்வெலிசாய பதவியேற்பு பிரகடனம்: சிறுபான்மையினருக்கு கூறும் செய்தி என்ன?

0 1,319

இலங்­கையின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தேர்­தலில், சிங்­கள மக்­களின் அமோக ஆத­ர­வுடன் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இணைந்து பெரும்­பான்­மை­யான வாக்­கு­களை வழங்­கிய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தாச இந்த தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­துள்ளார்.

இரு­வ­ருக்கும் இடை­யி­லான போட்டி மிகவும் நெருக்­க­மா­ன­தாக இருக்­கு­மென்றும் வெற்றி பெறு­பவர் எவ­ராக இருந்­தாலும் பெரும்­பான்மை வாக்­குகள் மிகச் சொற்­ப­மா­கவே இருக்கும் என்றும் தேர்தல் பிர­சார காலத்தில் எதிர்­பார்க்­கப்­பட்­டது. இரு­வரில் எவ­ரா­வது 50%+1 வாக்­கு­களைப் பெற முடி­யாமல் போகு­மே­யானால், இரண்­டா­வது சுற்று வாக்கு எண்­ணிக்­கையை செய்ய வேண்­டி­யி­ருக்கும் என்­று­கூட முதற்­த­ட­வை­யாக ஊகிக்­கப்­பட்­டது. இரு­வ­ருமே முதன்மை நிலை­யான அர­சி­யல்­வா­திகள் இல்லை என்­பதால் இரண்­டா­வது சுற்று வாக்கு எண்­ணிக்­கைக்­கான சாத்­தி­யப்­பாடு பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­பக்‌­ஷவின் வெற்­றியை பொறுத்­த­மட்டில் ஓர­ளவு எதிர்­பார்த்த முடி­வாக அமைந்­தாலும் முதன்மை வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ, சஜித் பிரே­ம­தாச இரு­வ­ருக்கும் இடையில் கடும் போட்டி நில­வு­மென்று எதிர்­பார்த்த நிலையில் 13 இலட்­சத்­திற்கு மேற்­பட்ட வாக்கு வித்­தி­யா­சத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி என்­பது எதிர்­பார்த்­த­தை­விட அதி­க­மா­ன­துதான். கூடவே, ஜே.வி.பி. அனுர குமார திச­நா­யக்க குறைந்­தது 10 இலட்சம் வாக்­கு­க­ளை­யேனும் பெறு­வா­ரென்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் வெறும் 4 இலட்­சத்­திற்கு அதி­க­மான வாக்­கு­களை மட்டும் பெற்­றி­ருப்­பது பல­ருக்கும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ ஜனா­தி­பதி பதவி ஏற்­புக்­கான சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்யும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி அனு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள வர­லாற்று சிறப்­பு­மிக்க ருவன்­வெ­லி­சாய பௌத்த புனி­தஸ்­த­லத்தில் நடை­பெற்­றது. சத்­தி­யப்­பி­ர­மாண நிகழ்வைத் தொடர்ந்து இடம்­பெற்ற ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு உரையில் அங்கு திர­ளாகக் கூடி­யி­ருந்த மக்கள் மத்­தியில் அவர் பேசு­கையில், “….நான் இந்­நாட்டின் பெரும்­பான்மை இன­மான சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யானேன். சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் வெற்­றி­பெ­ற­மு­டியும் என்­பதை நான் ஏற்­க­னவே தீர்­மா­னித்து விட்டேன்…” என்ற கருத்தை அவர் உரை­யின்­போது வெளி­யிட்டார்.

இலங்­கையில் மன்­ன­ராட்சி காலத்தில் தலை­ந­க­ர­மாக விளங்­கிய அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்த பௌத்த விகா­ரை­யாக ருவன்­வெ­லி­சாய விளங்­கு­கின்­றது. புத்த பெருமான் ஞானம் பெற்­ற­தாக நம்­பப்­படும் வெள்­ள­ரசு மரம் அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள ஸ்ரீம­கா­போதி விகா­ரை­யி­லேயே உள்­ளது.

இந்த ஸ்ரீம­கா­போதி மற்றும் ருவன்­வெ­லி­சாய ஆகிய விகா­ரைகள் இரண்டும் ஒன்­றுடன் ஒன்று இணைந்தே காணப்­ப­டு­கின்ற பின்­ன­ணியில், இந்த விகா­ரைகள் பௌத்த மதத்தை பின்­பற்­றுவோர் மத்­தியில் மிகவும் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய புனி­தஸ்­த­லங்­க­ளாக விளங்­கு­கின்­றன.

ருவன்­வெ­லி­சாய பௌத்­தர்­களின் சின்­ன­மாக விளங்­கு­வது மற்றும் சிங்­கள மன்­னர்­களால் அநு­ரா­த­புர யுகம் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆட்­சி­யாக வர­லாற்றில் குறிக்­கப்­ப­டு­வது ஆகிய கார­ணங்­களே தமது பத­விப்­பி­ர­மாண நிகழ்­வுக்கு இந்த இடத்தை கோத்­தா­பய தேர்ந்­தெ­டுத்­த­தற்கு கார­ண­மாக இருக்­கு­மென்று கரு­தப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­ாபய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாரா­ளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. ஒரு யுத்த செயற்­பாட்டு பின்­ன­ணியை கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார். ஒரு சிப்­பா­யாக இரா­ணு­வத்தில் பிர­வே­சித்து போர்க்­கள அனு­ப­வத்தின் பின்பே அவர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக பொறுப்­பேற்­றி­ருந்தார். விடு­தலைப் புலி­களை இரா­ணுவ ரீதி­யாக மௌனிக்கச் செய்ய வேண்டும் அல்­லது நிர்­மூ­ல­மாக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்தார். விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கையில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷவுக்கு தோளோடு தோள் கொடுத்து கோத்­தா­பய ராஜபக் ஷ செயற்­பட்­டி­ருந்­ததால் சுய­மாக முடி­வெ­டுத்து செயற்­ப­டு­வ­தற்கு அவ­ரு­டைய மூத்த ஜனா­தி­ப­தியின் கூடப்­பி­றந்த சகோ­தரன் என்ற குடும்ப உறவு முறை அவ­ருக்குப் பேரு­தவி புரிந்­தது.

யுத்­தத்தில் கிடைத்த வெற்றி ஜனா­தி­பதி ராஜபக் ஷவை மட்­டு­மல்­லாமல், அவ­ரு­டைய சகோ­த­ரரும் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு அர­சி­யலில் ஒரு மேன்மை நிலை­மையை வழங்­கி­யி­ருந்­தது. இந்த வெற்­றியைத் தனது அர­சியல் மூல­மாக பயன்­ப­டுத்­திய மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க மேற்­கொண்ட முயற்சி 2015 ஆம் ஆண்டு அவரை தோல்­வி­ய­டையச் செய்தது. ரணில் –சந்­தி­ரிகா மற்றும் சிறு­பான்மை இணைந்து கூட்­ட­மைப்பு வெற்­றியை தேடிக்­கொண்­டது. இலங்கை சுதந்­திரக் கட்­சியின் இரண்டாம் நிலைத் தலை­வ­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்­த­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கினார்.

2015 இல் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஏற்­பட்ட தோல்­வி­யுடன் அம்­பாந்­தோட்டை, மெத­மு­ல­னவில் தனது பொது­வாழ்­கையை முடித்துக் கொள்ளச் சென்ற சகோ­த­ரர்­களை மீண்டும் அர­சியல் பிர­வே­சத்­திற்குள் அழைத்து வந்­ததில் கடந்த முறை அமைந்த மைத்­திரி –- ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும், சிறு­பான்மை சமூக அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் குறிப்­பாக முஸ்லிம் தீவி­ர­வாதக் குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஈஸ்டர் குண்டு தாக்­கு­த­லுக்கும் பெரும் பங்­குண்டு என்­பதை மறுக்­க­மு­டி­யாது.

பாது­காப்­பான நாடு, பிள­வு­ப­டாத நாடு, வளர்ச்சிப் பாதையில் நாடு என்ற நம்­பிக்­கை­களை ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளாலே உரு­வாக்க முடியும் என்று பெரும்­பான்மை மக்­களில் பெரும் பான்­மை­யி­னரும் சிறு­பான்மை மக்­களில் சிறு­பான்­மை­யி­னரும் நம்­பிய நிலையில் கோத்­தா­ப­யவின் வெற்றி அமோ­க­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரைக்கும், யுத்­தத்­திற்குப் பின்னர் அவர்­க­ளு­டைய அர­சியல், சமூக, கலா­சார மற்றும் பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அவர்­க­ளு­டைய அர­சியல், சமூக, பொரு­ளா­தார இருப்­புக்கள் அழி­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சூழ்­நி­லைகள் தோன்­றி­யி­ருக்­கின்­றன.

அதே­வே­ளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லா­னது, முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் இருப்பின் மீதும், அவர்­களின் சுதந்­தி­ர­மான வாழ்­வு­ரிமை மற்றும் மனித உரி­மைகள் மீதும் பல பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இவ்­வா­றான சூழ்­நி­லை­யில்தான், இலங்­கை­யி­னு­டைய ஏழா­வது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் நடந்து முடிந்­துள்­ள­தோடு, அதில் கோத்­த­ாபய ராஜபக் ஷ வெற்றி பெற்­றுள்ளார்.

இலங்­கையில் ஜனா­தி­ப­தி­களைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­க­ளாக சிறு­பான்­மை­யினர் முக்­கிய பங்­க­ளிப்பை செய்து வந்­தி­ருக்­கின்­றனர். ஆனால் இந்தத் தேர்­த­லிலே சிங்­கள மக்கள் ஒன்­றி­ணையப் போகி­றார்கள் என்­ப­தையும், அந்த ஒன்­றி­ணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகி­றது என்­ப­தையும் முஸ்­லிம்­களை வழி­ந­டத்தி வரும் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அனு­மா­னிக்­க­வில்­லையா என்­கிற கேள்வி எழு­கி­றது.

1990களிலே அப்­போ­தைய ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுடன் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்­தி­ருந்த காலம் மற்றும் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­வுடன் அஷ்ரப் இணைந்­தி­ருந்த காலங்­களில் ஜனா­தி­ப­தி­களைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக சிறு­பான்­மை­யின மக்கள் இருந்து வந்­துள்­ளார்கள். 2015 ஆம் ஆண்டு நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இதனை மிகத் தெளி­வாகக் கண்டோம்.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்­றி­யீட்­டி­யுள்ள இந்தத் தேர்தல் முடி­வா­னது, சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வில்­லா­ம­லேயே, ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் தெரிவு செய்­வ­தற்­கா­ன­தொரு நிலை­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வடக்கு, கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்கள் ஆங்­காங்கே கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தா­லும்­கூட, வடக்கு, கிழக்­கிலே தமி­ழர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து வாழ்­கின்ற முஸ்­லிம்கள், பெரும்­பாலும் தமது வாக்­கு­களை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்­கினர். இதன் கார­ணத்­தினால், முஸ்­லிம்­க­ளு­டைய பங்­கு­பற்­றுதல் இல்­லா­ம­லேயே சிங்­கள ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை சிங்­கள சமூகம் தெரிவு செய்­தி­ருக்­கி­றது. எனவே, முஸ்லிம் தலை­மைகள் மீண்டும் மிகக் கவ­ன­மாக சிந்­தித்து, தங்கள் அர­சியல் செயல்­மு­றை­மை­யினை கொண்டு நடத்த வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

இந்த நாட்டின் இனத்­துவ விகி­தா­சாரப் புள்ளி விப­ரத்­தின்­படி, 74 வீதத்­தினர் சிங்­க­ள­வர்­க­ளாக இருக்­கின்­றனர். அதன் கார­ணத்­தினால் சிறு­பான்­மை­யினர் அர­சி­யலில் பெரும் செல்­வாக்கைத் தொடர்ந்தும் செலுத்த முடி­யாத நிலைமை இருப்­ப­த­னாலும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­ககள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­த­னாலும், முஸ்­லிம்கள் ஒத்­தி­யங்கிப் போய் தங்­களின் வாழ்க்­கை­யையும் தம்­மு­டைய எதிர்­கால சமூ­கத்தின் வாழ்க்­கை­யையும் நிலைப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவையைத் தேட­வேண்­டி­யுள்­ளது.

கோத்­தா­பய வெற்­றி­ய­டைந்­த­மைக்கு சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கார­ண­மாக அமை­ய­வில்­லை­யா­யினும் அவர் வெற்றி பெறு­வ­தற்கு சிறு­பான்மை மக்­கள்தான் காரணம் என்­பதை ஈண்டு கூற­மு­டியும். அதா­வது சஜித் பிரே­ம­தா­ச­வுடன் சேர்ந்த முஸ்லிம் தமிழ் பிர­தான கட்­சி­களின் கூட்டு தான் கோத்­தா­பய ராஜபக் ஷ வின் வெற்­றியை பேரின சமூ­கத்­துக்­கி­டையில் ஜனா­தி­பதி தேர்­தலில் இல­கு­வாக்­கி­யது என்று அர­சியல் அவ­தா­னிகள் குறிப்­பி­டு­கி­றார்கள்.

தேர்தல் முடிவு கோத்­தா­ப­ய­விற்கு தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இருந்து சென்ற செய்தி; நாம் இன்­ன­மும் தங்­களை அதிகம் நம்­ப­வில்லை என்­பதே. அது 2009 முள்ளிவாய்கால் யுத்தமாக இருக்கலாம், யுத்தத்திற்குப் பின்பு 2015 வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயற்பட்ட தேரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாமல் இருந்தமை, தமிழ் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நடக்கும் சிங்கள மக்களின் குடியேற்றம் மற்றும் பெளத்த விகாரைகளின் தோற்றம் போன்ற பல காரணங்களை குறிப்பிட முடியும்.

இந்த தாற்பரியங்களை ராஜபக்‌ஷவினர் சரியாகப் புரிந்துகொண்டு கிடைத்திருக்கும் ஆட்சி வாய்பை சரியாகப் பயன்படுத்தி இலங்கை வாழ் சகல இன மக்களும் சரிசமமாக வாழ்வதற்குரிய நாடு. இங்கு யாரும் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என்று உரிமைகளில் உசத்தி, குறைவு என்றில்லாமல் யாவரும் சமம் என்று செயற்படுவார்களானால் எதிர் காலத்தில் ராஜபக்‌ஷவினரின் அரசியல் ஸ்திரத்தன்மையை யாராலும் தடுக்க முடியாது.
அன்றேல் இடையிடையே இன்னொரு ‘நல்லாட்சி’ ஏற்பட்டுத்தான் ஆகும். 2009 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட தமது ஆட்சிகால செயற்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து தவறுகளை திருத்தி, சிறப்புக்களை மேலும் செயற்பாட்டுத் திறனுள்ளவையாக மாற்றினால் இலங்கை நாட்டின் அரசியல் வரலாறு பல்தேசிய இனம் வாழும் முன்மாதிரி நாடுகளில் ஒன்றாக எழுதப்படும்.-Vidivelli

  • எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)

Leave A Reply

Your email address will not be published.