இடைவெளியை குறைக்க இணைந்து செயற்படுவோம்

0 974

இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ வெற்றி பெற்­றி­ருக்­கிறார். தன்னை எதிர்த்துப் போட்­டி­யிட்ட புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை விடவும் பதின்­மூன்­றரை இலட்சம் மேல­திக வாக்­கு­களால் அவர் வெற்றி பெற்­றி­ருக்­கிறார்.

இந்த தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் முதல் சுற்றில் 50 வீத வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­ள­மாட்­டார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யிலும் இரு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்­கு­மி­டையில் ஓரிரு இலட்ச வாக்­கு­களே வித்­தி­யா­சப்­படும் என எதிர்வு கூறப்­பட்ட நிலை­யி­லுமே அனை­வ­ரையும் பிர­மிக்கச் செய்யும் வகையில் கோத்­தா­பய ராஜ­பக்­சவின் வெற்றி அமைந்­துள்­ளது.

உண்­மையில் இந்த தேர்தல் முடிவு பல செய்­தி­களை இலங்கை மக்­க­ளுக்குச் சொல்ல முனை­கி­றது. முத­லா­வது தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் விருப்பம் ஒரு புற­மி­ருக்க வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சிறு­பான்மை மக்­களின் விருப்பம் இன்­னொன்­றா­க­வி­ருக்­கின்­றது என்­பதே அந்த செய்­தி­யாகும். அதா­வது பெரும்­பான்­மை­யி­னரும் சிறு­பான்­மை­யி­னரும் துரு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை இது தெளி­வாகக் காண்­பிக்­கி­றது. இதற்கு கடந்த 30 வருட கால­மாக நீடித்து வரும் இனப் பிரச்­சி­னையும் யுத்­தத்தின் பின்னர் எழுந்­துள்ள மத­வாத பிர­சா­ரங்­களும் வன்­மு­றை­க­ளுமே கார­ண­மாகும்.

அத்­துடன் இது­வரை காலமும் ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்து வந்த சிறு­பான்­மை­யி­னரின் வாக்குப் பலம் இத் தேர்­தலில் செல்­லாக்­கா­சாக்­கப்­பட்­டுள்­ளது. சிறு­பான்­மை­யி­னரின் தய­வின்­றியே எம்மால் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற செய்­தியை பொது ஜன பெர­மு­னவும் பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் இத் தேர்­தலில் சொல்­லி­யுள்­ளனர். இந்த செய்­தியை விளங்கி சிறு­பான்மைக் கட்­சிகள் எந்­த­வி­த­மான நகர்­வு­களை முன்­னெ­டுக்கப் போகின்றன என்­பதே தற்­போது நம்­முன்­னுள்ள கேள்­வி­யாகும்.

இந்த நாட்டில் பெரும்­பான்­மை­யினர் ஒரு திசை­யிலும் சிறு­பான்­மை­யினர் மற்­றொரு திசை­யிலும் தான் பய­ணிக்க வேண்­டுமா அல்­லது இரு தரப்­பி­னரும் இணைந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதா என்ற கேள்­விக்கு உடன் விடை காணப்­பட வேண்டும். அந்த வகையில் இரு துரு­வங்­க­ளாகப் பிரிந்­துள்ள மக்­களை ஒன்­று­ப­டுத்­து­கின்ற பெரும் பொறுப்பு புதிய ஜனா­தி­பதி மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. தன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள், சந்­தே­கங்­க­ளுக்­கப்பால் முழு நாட்டு மக்­க­ளி­னதும் நம்­பிக்­கையை அவர் எப்­படி வெல்லப் போகிறார் என்­ப­தி­லேயே இந்த நாட்டின் எதிர்­கா­லமும் தங்­கி­யுள்­ளது.

புதிய ஜனா­தி­பதி இனப் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்வை வழங்கி தமிழ் மக்­களின் மனதை வெற்றி கொள்ள வேண்டும். அதே­போன்று தனது கட்சி தொடர்பில் முஸ்லிம் மக்கள் கொண்­டுள்ள அச்­சத்தை நீக்கி நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

இந்தத் தேர்தல் பெறு­பே­றுகள் முஸ்லிம் சமூ­கத்தில் பெரும்­பான்­மை­யா­னோரின் விருப்­பத்­திற்கு மாற்­ற­மா­கவே அமைந்­துள்­ளன. எனினும் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பர­வ­லான வாக்­குகள் கோத்­தா­பய ராஜ­பக் ஷவுக்கு அளிக்­கப்­பட்­டுள்­ள­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இந் நிலையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் புதிய ஜனா­தி­ப­திக்­கு­மி­டை­யி­லான உறவு எவ்­வாறு அமையும் என்­பதை காலம்தான் தீர்­மா­னிக்கப் போகி­றது.

”எனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்கும் நான் சேவை­யாற்­றுவேன். இன மத பேதங்­களைப் புறந்­தள்ளி இலங்­கை­ய­ராக முன்­னோக்கிச் செல்வோம்” என புதிய ஜனா­தி­பதி நேற்­றைய தினம் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அந்த வகையில் தனது கூற்றை நிஜப்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­றிட்­டங்­களை அவர் வகுத்துச் செயற்­ப­டுவார் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கி­றது.

மறு­புறம் முஸ்லிம் கட்­சி­களும் முஸ்லிம் சிவில் தலை­மை­களும் எவ்­வாறு புதிய அர­சாங்­கத்­துடன் இணக்­கப்­பாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது குறித்துச் சிந்­திக்கக் கட­மைப்­பட்­டுள்­ளனர். அர­சியல் நிலைப்­பா­டுகள் எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த நாட்டில் சமா­தா­னத்­தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான எமது தரப்பு பங்களிப்பை வழங்குவது குறித்து சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தத் தேர்தல் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் இரு துருவங்களாகியுள்ளனர் என்பதை நன்றாக வெ ளிப்படுத்தியுள்ள நிலையில் அந்த இடைவெ ளியைக் குறைப்பதற்கான பணியையே நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. மாறாக இன்னுமின்னும் இடை வெளியை அதிகரிப்பது யாருக்குமே ஆரோக்கியமானதல்ல.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.