தோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்

0 1,608
  • அபூ அய்மன், B.A (hons), M.Phil சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர்

அறிமுகம்

19 ஆம் திருத்தத் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்படாலும்  ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் ஒருவர்  நிறைவேற்று ஜனாதியாகத் தொிவுசெய்யப்படுமிடத்து அனைத்து அதிகாரங்களும் மீண்டும் தனி நபரிடம் குவியும் அபாயம் உள்ளது.   இதன் தாக்கத்தை பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணிலும் பார்க்க இனவாத ஆதிக்கமிக்க குடும்ப அரசியலில் அதிகம் உணரலாம்.  எனவே இந்த்த தோ்தலானது சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதா? அல்லது இன மத உரிமைகளை இழப்பதா? என்பதைத் தீாமானிக்கும் ஒரு தீர்க்கான வாக்கெடுப்புப்பாகும்.

ஜனாதிபதித் தோ்தல்: சிறுபான்மை மக்களின் தோ்தல்

இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் இருப்புடன் கூடய இந்தத் தோ்தலை நிர்ணயிக்கும் ஆற்றல் தமிழ், முஸ்லிம் மக்களின் கரங்களில் உள்ளது. இது ஜனநாயகத்தின் ஒர் உயரிய பண்பாகும். இதனை இறைவனின் ஒரு ஏற்பாடு என்றும் கூறலாம். ஜனநாயகத்துக்கு எதிரான தீய சக்திகளைத் தோற்கடிக்கடிப்பதற்கானதொரு ஆயுதமே இந்த வாக்களிப்பாகும்.

ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் மாத்திரமே இந்த இனவாதப் பேய்களின் கால்களுக்குக் கட்டுப்போடப்படுகிறது. பொது பல சேனா, இராவணா பலய, சிங்ஹளே இயக்கங்கள் வாய்மூடி நிற்கின்றன. சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்குமான அழைப்புக்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன.

 

ஏன்? இது சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் தோ்தல். இது சிறுபான்மை மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்று உணர்த்தும் தோ்தல். ஜனாதிபதித் தோ்தல்களின் போது ஒப்பந்தம் செய்யாமலே பல உரிமைகள் அடையப்பெற்றுள்ளன. ஜனாதிபதித் தோ்தல் வரலாற்றில் வாக்காளிக்காமல் ஒதுங்கி நின்று, வாக்குகளை வீணடித்து, சிறுபான்மை வாக்குகளைத் துண்டாடி அழிந்தவர்களில் பிரகாகரனும் ஒருவர்.

பதிவசெய்யப்பட்ட 15,992,096 வாக்காளர்களில் சுமார் 82% வாக்குகள் பிரயோகிக்கப்பட்டு அதில் நிராகரிக்கப்படும் (0.8%) வாக்குகள் போக, செல்லுபடியாகும் 130 இலட்சம் வாக்குகளில் 65 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர் வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார்.

ஒருவரை ஜனாதிபதியாகத் தொிவுசெய்ய வேண்டப்படும் மொத்த வாக்கில் சுமார் 55% பங்களிப்பைச் செய்யும் ஆற்றல் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களிடம் உள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் 25% வாக்குப் பலத்தையும், முஸ்லிம்

மக்கள் 20% வாக்குப் பலத்தையும், மற்றும் மலையக மக்கள் 10% வாக்குப் பலத்தையும் தம்வசம் வைத்துள்ளனர்.

10% முஸ்லிம்கள் தோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்ய முடியுமா?

ஆம். அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த குரலாக தமது பாதுபாப்பும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கட்சி மற்றும் தனிப்பட்ட இலாபம் எதுவுமின்றி ஒன்றிணையுமிடத்து மாத்திரமே இது சாத்தியமாகும்.

முஸ்லிம்கள் மாத்திரமல்ல அனைத்து சிறுபான்மை மக்களும் ஒற்றுமையாகவும், பலமாகவும் ஒன்றிணையுமிடத்து மாத்திரமே இலங்கையில் தலை விரித்தாடும் இனவாதப் பேய் அடக்கப்படும். 2015 ஜனாதிபதித் தோ்தலில் இம்மக்கள் ஒன்றிணைந்து இதனைச் செய்தும் காட்டினார்கள். அன்றைய ராஜபக்ஷ அராஜகத்தை தோற்கடிக்கும் தோ்தலில் களமிறக்கப்பட்ட பொது வேட்பாளர் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற 10 தொகுதிகளும் 90% சிறுபான்மை மக்கள் வாழும் தொகுதிகளாகும்.

எந்தத் தோ்தலில் பிரிந்திருப்பது எந்தத் தோ்தலில் சோ்ந்திருப்பது?

 “நாங்க சிறுபான்மை, நாங்க பிரிந்து நின்று வாக்களிக்க வேண்டும்”

“நாம சிறுபான்மை, நாம் மூன்றாம் தரப்ப பலப்படுத்தி ஒரு புரட்சிகரமான மாற்றம் செய்ய வேண்டும்”

“ அவரு வெண்டு ஒழிஞ்ஞி! நாங்க சேராட்டி…அம்பானைக்கு கெடைக்கும்”

 இவை இன்றைய அரசியல் கருத்தாடல்கள். அவர்கள் அனைவரதும் நோக்கம் முஸ்லிம் வாக்குகளைத் துண்டாடி (பங்கு போட்டு) தமது தனிப்பட்ட இலக்குகளை அடைவதாகும். அவை இலஞ்சமாகவும்

இருக்கலாம் அல்லது 2020 பாராளுமன்றத் தோ்தல் தேசியப் பட்டியலாகவும் இருக்கலாம். இவை அனைத்துமே இலங்கை அரசியலின் அடிப்படை கூடத் தொியாதவர்களின் கூற்றுக்களாகும். இவை அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாடளாவியரீதியில் சிதறிவாழும் நாம் எந்தத் தோ்தலில் ஒன்றிணைந்து கூட்டாக வாக்களிப்பது, எந்தத் தோ்தலில் பிரிந்து நின்று பிராந்திய பெரும்பான்மை கட்சிகளுடன் / மக்களுடன் ஒருமித்துப் பணியாற்றுவது என்ற தெளிவு இலங்கை முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும்.

உள்ளூராட்சித் தோ்தலில் கட்சி வேறுபாடு, இன வேறுபாடின்றி பக்கத்து வீட்டு, பக்கத்துத் தெரு உறவுகளைப் பேணி வாக்களிக்க வேண்டும். மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தோ்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய இடங்களில் புரிந்துணர்வுடனும் பெரும்பான்மை கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதுடன், முஸ்லிம் பிரதிநித்துவத்தைப் பெற முடியாத இடங்களில் அனைத்து பிரதான கட்சிகளுக்கும் சம இடம் வழங்கி ஒற்றுமையான முறையில் எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். 

உதாரணமாக பாராளுமன்றத் தோ்தலில் 20  தொடக்கம் 25 முஸ்லிம் பிரதிநிதிகளாவது தொிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, கொழும்பு, கழுத்துறை, கண்டி, வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், கேகாலை ஆகிய 11 மாவட்ட வாக்காளர்களும் திட்டமிட்டவாறு ஒற்றுமையாகவும் ஒருமித்தும் வாக்களிக்க வேண்டும். ஏனைய 11 தோ்தல் மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் தேசிய இன ஒருமைப்பாட்டின் அடிப்படையில் மூன்றோ அல்லது நான்கோ பிரதான கட்சிகளுடன் நேரடிக (அரசில் கட்சி தரகர்கள் இல்லாமல்) இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவமும், தேசிய இன நல்லிணக்கமும் பாதுகாக்கப்படும்.

2019 ஜனாதிபதி தோ்தல் கள நிலவரம்

 2015 ஜனாதிபதித் தோ்தல் கள நிலைமையை மீட்டிப் பார்ப்போமேயானால், யுத்த வெற்றியின் பின்னணியில் நடைபெற்ற 2010 ஜனாதிபதித் தோ்தலின் 58% வெற்றி மற்றும் அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலில் மூன்றில் இரண்டு பலத்துடனான ராஜபக்ஷ அரசு வட மாகாணம் தவிர்ந்த அனைத்து மாகாண சபைகளையும், உள்ளூராட்சி நிறுவனங்களையும் தம் வசம்வைதிருந்தது. மஹிந்தவை யாரும் தோற்கடிக்க முடியாது. அவர் மகா ராஜாவாகவவே இருந்தார்.

சுமார் 52 இலட்சம் வாக்குகளை (56%) கைவசம் வைத்து களமிறங்கிய மாராஜாவுக்கு எதிரான நிறுத்தப்பட்ட பொது வேட்பாளருடன் 40 இலட்சம் (44%) வாக்காளர்களே இருந்தனர்.  இருப்பினும் தோ்தல் முடிவில் 55% (22 இலட்சம்) புதிய வாக்குகளுடன் மைதிரி வெற்றி பெற்றார். மிதப்பு வாக்குகளில்       622,419  புதிய வாக்குகளை மாத்திரமே மஹிந்தவினால் பெற முடிந்தது. அது வெறும் 12% அதிகரிப்பாகும். காரணம் ராஜபக்ஷ ஊழல் மோசடியும், சிறுபான்மை வாக்காளர்களின் ஒற்றுமையுமேயாகும்.

 இந்தத் தோ்தலில் ராஜபக்ஷவின் ஊரும், கடந்த ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளர் மைதிரி அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்ற மாவட்டமுமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்தே பிரதான வேட்பாளர் களமிறங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ அவர்களின் புதல்வன் ஜக்கிய தேசிய கட்சியின் பலம் குறைந்ததொரு மாவட்டத்திருந்து களமிறங்கியுள்ளமையானது  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை இந்தத் தோ்தலின் கேந்திர நிலையமாக மாற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஷவுக்கு எதிராக சஜித் களமிறங்கிய 2000 மற்றும் 2001 பொதுத் தோ்தல்கள் இரண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 4/21 தாக்குதலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியான மேற்கு கரையோர பிராந்தியத்தில் ஒரு தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, என்றுமில்லாதவாறு இனவாதத் தீ பரவவிடப்பட்டுள்ளது. தோ்தல் விஞ்ஞானபனங்கள் எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தாலும், வேட்பாளர்கள் எவ்வகையான சிறந்த பண்புகளைக் கொண்டிருப்பினும் அநேகமான அரச ஊழியர்கள் “ஒரு சிங்கள தேசம்” உருவாகுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது புலப்படுகிறது.

பலமான இரு முனைப் போட்டி

35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்தத் தோ்தலும் வழமையைப் போலவே ஒரு பலமான இருமுனைத் தோ்தாகலாக மாறியுள்ளது. பொதுவாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் நகரங்களிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் பலம் கிராமியப் பிரதேசங்களில் மேலோங்கியிருந்தாலும் இந்தத் தோ்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது பின்தங்கிய கிராமியப் பிரதேசங்களில் சஜித் ஆதரவு அதிகரித்தும் பிரதான நகர  எல்லை பிரதேசங்களில் கோட்டா ஆதரவு அதிகரித்தும் காணப்படுகிறது.

கடந்த தோ்தலில் மகரகம, கடுவெல, ஹோமாகம, கெஸ்பாவ, அவிஸ்ஸாவெல போன்ற சிங்கள பெரும்பான்மை தொகுதிகளில் ராஜபக்ஷவுக்கும் மைதிரிக்கும் இடையே சுமார் 5,000 – 7,000 வாக்கு வித்தியாசமே காணப்பட்டாலும் இந்த தோ்தலில் அது 10,000 – 15,000 வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிராமிய பிரதேசங்களில் சஜித் ஆதரவு 3% – 5% அதிகரிக்குமிடத்து தொடர்ந்தும் சஜித் முதன்மை ஸ்தானத்தை உறுதிசெய்வார் என்பது ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

மொனராகல மாவட்டத்தின் வெள்ளவாய தோ்தல் தொகுதியில் மாதிரியெடுப்பின் அடிப்படையில் தொிவுசெய்யப்பட்ட 10 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, சஜிதின் ஆதரவு நன்கு அதிகரித்துள்ளதுடன், ராஜபக்ஷ ஆதரவு தேக்கநிலையை அடைந்துள்ளது. வெள்ளவாய தொகுதியில் கடந்த ஜனாதிபதித் தோ்தலில்  அன்னம் சின்னத்துக்கு 36% வாக்குகள் கிடைக்கப்பெற்றாலும் இந்தத் தோ்தலில் அது 43% ஆக அதிகரிக்கலாம். இது 19% அதிகரிப்பாகும்.

அதே நேரம் கடந்த உள்ளூராட்சி தோ்தலில் 8% வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பி யின் வாக்குப் பலம் இந்தப் பிரதேசத்தில் 50% வீழ்ச்சியை காட்டிநிற்கின்றது. ஏனெனில் வெற்றிபெற முடியாத ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து தமது வாக்குகளை சிதறடித்து அல்லது வீணடிப்பதை விட வெற்றிபெரும் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதிலேயே  மக்கள் ஆர்வமாக உள்ளனர்.  இந்த நிலைமை ஜே.வி.பீ. தலைவர் ரோஹன விஜேவீர களமிறங்கிய 1982 ஆம் ஆண்டு தோ்தலிலும், நந்நன குணதிலக (தற்போது ஐ.தே.க.) போட்டியிட்ட 1999 ஆம் ஆண்டு தோ்தலிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆய்வு முடிவுகளின் படி, இந்த ஜனாதிபதித் தோ்தலில் 90% த்திலும் அதிக சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 13 தோ்தல் மாவட்டங்களில்  கோட்டாபே ராஜபக்ஷவுக்கு சுமார் 55% வீத வாக்குகளும் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு சுமார் 41% வீத வாக்குகளும் எனைய உதிரிக் கட்சிகளுக்கு சுமார் 4% வீத வாக்குகளும் கிடைக்கபெறலாம். இதன்படி, சிறுபான்மை மக்களின் செல்வாக்குடனான 09 தோ்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் மிகையான வாக்கு வித்தியாசம் சஜித்தின் வெற்றியை உறுதிசெய்கிறது.

முன்றாம் தரப்பும் இரண்டாம் கணிப்பும்

ஜனாதிபதித் தோ்தலில் தாம் விரும்பும் மூவரை தொிவுசெய்ய முடியும் என்பது ஒரு புதிய விடயமல்ல. இருப்பினும் இந்த முறை சில அரசியல் கட்சிகள் தமது நன்மை கருதி இதனை ஒரு பூதாகரமாகத் திரிபுபடுத்தி தாமே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் பிரதிநிதி என்று மக்களை திசை திருப்பி வருகின்றன. இந்தத் தோ்தலில் முதன்மை வேட்பாளர்கள் இருவரையும் மக்கள் தெளிவாக அடையாளங்கண்டுள்ளனர். 96% வாக்காளர்கள் தமது ஜனாதிபதி வேட்பாளரின் சின்னத்துக்கு எதிரே புள்ளடியை “û” மாத்திரம் பதிவுசெய்வார்கள்.

இருப்பினும் ஏனைய 33 வேட்பாளர்களில் யாரையாவது முதன்மை வேட்பாளராக யாரும் கருதுமிடத்து மாத்திரம் அவர்கள் இந்த முதன்மை வேட்பாளரில் ஒருவரை தமது இரண்டாம் தொிவாக இணைத்துக் கொள்ள முடியும். அவர்கள் மாத்திரமே வழமையான புள்ளடிக்குப் பதிலாக “1” மற்றும் “2” எனும் இலக்கத்தில் தமது வாக்கைப் பதிவ செய்ய வேண்டும்.

முதல் சுற்றில் நீக்கப்படும் 33 வேட்பாளர்களும் சுமார் 5  இலட்சம் வாக்குகளைப் பெறுவர்கள் என்றும் அதில் சுமார் 1 இலட்சம் வாக்காளர்கள் தமது இரண்டாம் விருப்பு வாக்குகளையும் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதலாவது மற்றும் இரன்டாவது வேட்பாளர்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம்  1 இலட்சத்தை தாண்டுமிடத்து இந்த இரண்டாம் விருப்பு வாக்குக் கணிப்பீடு தேவையற்ற ஒரு விடயமாகவே அமையும். அதாவது 2019 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அதிகாலையியே 47% வீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தொிவுசெய்யப்படுவார்.

 முடிவுரை

“உறுதியான சிங்கள தேசம்” மற்றும் “பன்மைத்துவப் பண்புகளுடனான ஒரு ஜனநாயக இலங்கை” எனும் இரு வேறுபட்ட சுலோகங்களுடன் இந்த தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் மக்கள் முதன்மை வேட்பாளர்களாக அடையாளம் கண்டுள்ளனர். 33 சிறு கட்சிகளினதும் வாக்குச் சிதறடிப்புக் காரணமாக முதல் சுற்றுக் கணிப்பீட்டில் எந்தவொரு முதன்மை வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறுவது சிக்கல்மிக்கதாக இருக்கலாம். அதேபோல இரண்டாம் சுற்றுக் கணிப்பு என்பதும் ஒரு அர்த்தமற்ற விடயமாகவே அமையலாம். இந்தப் பின்னணியில், முதல் சுற்றில் கிடைக்கப்பெற்ற பெரும்பான்மை (47%) வாக்குகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாகத் தொிவுசெய்யப்படுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அதிகமாகும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.