வாக்குரிமையை பயன்படுத்தி காணிகளை மீட்டெடுப்போம்

0 1,005

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னிறுத்துவது தொடர்பில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகின்ற நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் பெறக் கூடிய ஒருவராலேயே இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்துக்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும் சில உத்தியோகப்பற்றற்ற ஆய்வுகளும் இதனையே கூறிநிற்கின்றன. இந் நிலையில் சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அந்த வகையில் நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை முக்கியமானதாகும். இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம் பேசல்களில் ஈடுபடுவதுடன் எழுத்துமூல வாக்குறுதிகளையும் பெற்றுக் கொள்வதன் மூலமாகவே காணிகளை விடுவிப்பதை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பிரதான நிபந்தனைகளுள் ஒன்று அரசாங்கத்தினால் குறிப்பாக படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதாகும். இதற்கமைய இரா­ணு­வத்­தினர் வசமிருந்த காணி­களில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் அறி­வித்­திருந்தது.

அர­சாங்கம் இவ்­வாறு காணி­களை விடு­விப்­ப­தற்­கான காரணம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்­கிய அழுத்­தங்­க­ளே­யாகும். தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்கும் அர­சாங்­கத்தின் போக்­குகள் ஒரு­பு­ற­மி­ருக்க, காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்­பதில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு குறிப்­பி­டத்­தக்­க­ளவு வெற்றி பெற்­றுள்­ளது என்ற யதார்த்­தத்தை எவரும் மறுக்க முடி­யாது.

எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக இரா­ணு­வத்­தி­னாலும் அர­சாங்­கத்தின் ஏனைய திணைக்­க­ளங்­க­ளி­னாலும் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­பதில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் மக்­களும் தோல்­வியைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் என்ற யதார்த்­தத்­தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி அனு­மதிப் பத்­திரம் இருக்­கின்ற சுமார் 4652 காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளது 14127 ஏக்கர் பரப்­புள்ள காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­லணி சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தமது காணிகளை மீட்டுத் தர முன்வரும் வேட்பாளருக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்போம் என காணிகளை இழந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான போராட்டங்களையும் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

இதே­போன்­றுதான் திரு­கோ­ண­ம­லையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி உட்­பட ஏரா­ள­மான காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இன்றும் புல்­மோட்டை உட்­பட பல இடங்­களில் காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. வடக்கில் முச­லியில் இரா­ணு­வத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீட்­ப­தற்­காக அம் மக்கள் பல வரு­டங்­க­ளாக போராடி வரு­கி­றார்கள்.
இவை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலைமைகள் கையறு நிலையிலேயே உள்ளன. தேர்தல் காலங்களில் மாத்திரம் காணிகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகின்ற நிலையே நீடிக்கிறது.

அந்தவகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேற்படி ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை சகல கட்சிகளிதும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமிருந்து இக் காணிகளை விடுவிப்பதற்கான வாக்குறுதிகளை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் தேர்தலின் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.