யெமன் தாய்மார்கள் தமது மகன்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0 448

அமீரக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தமது மகன்மார்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரி யெமனிலுள்ள தாய்மார்கள் நாட்டின் உள்துறை அமைச்சரின் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைது அல்லது காணமலாக்கப்படுதலுக்கு எதிராகப் போராடும் யெமன் பெண்கள் அமைப்பான கடத்தப்பட்டோரின் தாய்மார்களின் அமைப்பு தமது பிள்ளைகளின் நிலைமை தொடர்பில் அறியத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல் போயுள்ளோரில் சிலரின் தகவல்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் மேலும் சில கைதிகள் தமது தடுப்புக் காவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதகாலமாக பிர் அஹமட் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஞாயிறன்று துறைமுக நகரான ஏடனில் வைத்து குறித்த பெண்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்தையும், உள்துறை அமைச்சரையும் மற்றும் சட்டமா அதிபரையும் நாம் கோருகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏடனின் தெற்கு ஆளுநர் பிரிவில் அமைந்துள்ள பிர் அஹமட் சிறைச்சாலை ஐக்கி அரபு அமீரகத்துடன் இணைந்த துணை இராணுவப் பிரிவான செக்கியுரிட்டி பெல்டினால் இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றது.

நூற்றுக்கணக்கானோர் மனிதாபிமானமற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தெற்கு யெமன் சிறைச்சாலைகள் செக்கியுரிட்டி பெல்டின் இரகசிய வலையமைப்பினால் செயற்படுத்தப்படுவதாக பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அமீரக இராணுவமும் அவர்களது நேசநாடான யெமன் படையினரும் விசாரணை நடவடிக்கைகளின் போது மின்சார வயர்கள், மரத் துடுப்புக்கள் மற்றும் உருக்குக் கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக கடந்த செப்டம்பர் மாதம் குற்றம்சாட்டப்பட்டது.

சில வேளைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பாலியல் துஷபிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுதல் அல்லது தூங்க விடாது தடுத்தல் மற்றும் மிக மோசமான  நிலை காணப்படும் ஒடுக்கமான இடத்தில் போதிய காற்றோட்டமில்லாத நிலையில் அடைத்து வைக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்டள்ளோரின் குடும்பத்தினர் சுமார் ஒரு வாரமளவிலான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் காணமல்போயுள்ள தமது மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தையர்கள் தொடர்பான தகவல்களைக் கோருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.