புதிய நகல் யாப்பு என்ன சொல்கிறது?

0 622
  • வை. எல். எஸ். ஹமீட்

நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம்       “இலங்கை சமஷ்டித் தன்மை” உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி“ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது.

மறுபுறம் “ஒற்றையாட்சி“ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச் சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள மக்களை ஏமாற்ற ஒரு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் புதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகும்.

சமஷ்டி எவ்வாறு இந்த நகல் யாப்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பதைப் பார்க்கமுன் “ சமஷ்டியை” எவ்வாறு அடையாளம் காண்பது என்று பார்ப்போம்.

சமஷ்டியின் இரு பிரதான அம்சங்கள்

(1) Form (வடிவம் )

(2) Substance [சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை. உதாரணமாக சீனி வெள்ளை நிறத்தில் அல்லது சிவப்புக்கு அண்மிய நிறத்தில் பளிங்குகள் போல் இருக்கும்; என்பது அதன் ‘ வடிவம்’ (form). சீனி A,B, C என்ற மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்; இது substance.]

சமஷ்டியைப் பொறுத்தவரை அதன் வடிவத்தைவிட அதன் substance யே முக்கியம்.

உதாரணமாக சீனி மேற்சொன்ன நிறத்தைவிட மங்கலாகவோ, சாற்று மாற்றமாகவோ இருக்கலாம். ஆனால் அதில் A,B,C என்ற மூலக்கூறுகள் இருந்தால் அது சீனிதான். அதேபோன்றுதான் சமஷ்டியும்.

வடிவம்

சமஷ்டியின் வடிவத்தைப் பொறுத்தவரை “ சமஷ்டி” என்று நேரடியாகவும் குறிப்பிடலாம். அல்லது அச்சொல்லைப் பாவிக்காமல் வேறுவிதமாக அதன் வடிவத்தைக் குறிக்கும் விதமாகவும் குறிப்பிடலாம்.

உதாரணமாக ‘ஊர்பள்ளித்தலைவரின் மூத்தமகன்’ என்றும் குறிப்பிடலாம் அல்லது ‘ காலிதீன்’ என்றும் குறிப்பிடலாம். இரண்டும் ஒருவரையே குறிப்பிடுகின்றது என்பது அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அந்தவகையில்தான் ‘சமஷ்டி’ என்ற சொல்லைக் குறிப்பிடாமல் வேறு சொற்களில் சமஷ்டியின் வடிவத்தை சரத்து 1 இல் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இது ஏற்கனவே இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வசனமாகும். இங்கு சிங்களவர்களை ஏமாற்ற “ஏக்கிய ராஜ்ய“ என்ற சொல்லைக் குறிப்பிட்டுவிட்டு அதற்கு ஒற்றையாட்சி என்ற அர்த்தத்தை மறைத்து சமஷ்டித் தன்மையின் குணத்தைக் கொடுத்திருக்கின்றார்கள். சிங்கள மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக ‘ஏக்கிய ராஜ்ய’ என்பது “ பிரிக்கப்படாததும் பிரிக்கப்பட முடியாததும் ஆகும்” என்று வியாக்கியானம் எழுதிவைத்திருக்கின்றார்கள்.

ஏக்கிய ராஜ்ய/ ஒற்றையாட்சி / Unitary State என்பதன் பொருள் “ ஒரு அரசாங்கம்” என்பதாகும். அதாவது, ‘ ஒற்றையாட்சி‘ அதாவது ஒரேயொரு ஆட்சி அல்லது அரசாங்கம்’ என்பதாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரேயொரு அரசாங்கமான மத்திய அரசாங்கம் மட்டுமே “ supreme” மீயுயர் தன்மையுடையது. மாகாணங்களில் இருப்பவை “subordinate” அதாவது மத்திய அரசாங்கத்திற்கு கீழ்பட்டவை.

நகல் யாப்பில், முன்னைய பதிவில் கூறியதுபோல் “ஏக்கிய ராஜ்ய“ என்பது மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது என்பதன்மூலம் மாகாண அரசாங்கங்களையும் மத்திய அரசாங்கத்தையும் ஒரே தரத்திற்கு கொண்டுவந்து இவையெல்லாம் சேர்த்துத்தான் “ ஏக்கிய ராஜ்ய” என்று கூறியிருக்கிறார்கள். எவ்வாறு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் சேர்ந்தது “ ஏக்கிய ராஜ்ய அல்லது ஒற்றையாட்சி“ ஆகும்.

எனவே, பெயர்தான் ஏக்கிய ராஜ்யவே தவிர அது ஒரு அரசாங்கமல்ல. மாறாக, சமாந்தரமான மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களைக் கொண்ட “சமஷ்டியாகும்”.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒரு மனைவி உள்ளவனை “ ஏக பத்தினி விரதன்” என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உள்ளவனை “ பன்முகன்” என்றும் குறிப்பிடுவதாக வைத்துக்கொள்வோம்.

இவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் பெயரை         “ ஏகபத்தினி விரதன்” என்று வைத்துவிட்டு அவனுக்கு “ பல துணைவியர்” இருப்பர் என்று எழுதியிருக்கிறார்கள். கவனமாக   ‘ மனைவி’ என்ற சொல்லைத் தவிர்த்து ‘ துணைவி’ என்ற சொல்லைப் பாவித்திருக்கிறார்கள். எனவே, சாதாரண மக்கள்    “ ஏக பத்தினி விரதன்” என்றுதானே எழுதியிருக்கிறார்கள். எனவே, அவனுக்கு ஒன்றுதான் மனைவி என நம்பிவிடுவார்கள். சர்வஜன வாக்களிப்பில் வாக்களித்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் பலர் அவ்வாறு நினைக்கத்தான் செய்கிறார்கள்.

பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத நாடு

“ஏக்கிய ராஜ்ய” என்பது பிரிபடாத , பிரிக்கப்பட முடியாத நாடு என்று எழுதிவைத்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி நாடுகளில் பிரிந்து செல்லுகின்ற உரிமை இல்லை. அதற்காக அவ்வாறு எந்த நாடுமே பிரியவில்லை என்று சொல்லவும் முடியாது.

மறுபுறம் சமஷ்டி நாடுகளுக்கும் இயற்கையாகப் பிரிந்து செல்லும் உரிமை இல்லை. ஆயினும் சில நாடுகளுக்கு இருக்கின்றன. சமஷ்டியில் இரு பிரதானவகை இருக்கின்றது. ஒன்று devolutionary federalism அதாவது, ஒரே நாடு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு அதிகாரம் பகிரப்படுவது. இரண்டாவது integrative federalism அதாவது, வெவ்வேறு நாடுகளாக இருந்தவை ஒரே நாடாக மாறி (ஆரம்பத்தில் அவை confederation ஆக மாறின) அதிகாரம் பகிரப்படுவது. (இது தொடர்பாக ஒரு வருடத்திற்குமுன் விரிவான ஆக்கம் எழுதியிருக்கின்றேன்).

இந்த வகைக்குப் பொதுவாக பிரிந்துசெல்லும் உரிமையுண்டு. யாப்புமூலம் தடுக்கப்படும் சந்தர்ப்பமும் உண்டு. முந்தியவகைக்கு பிரிந்துசெல்லும் உரிமை பொதுவாக இல்லை. ஆனாலும் பிரிந்த சம்பவங்களும் உண்டு. இவற்றிற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்புண்டு.

எது எவ்வாறாயினும் ஒன்றிற்கு பொருள் கூறுவது வேறு. அதன் குணாதிசயத்தைக் கூறுவது வேறு. இங்கு பொருளை மாற்றிக்கூறிவிட்டு, குணாதிசயத்தை பொருளாக கூறியிருக்கிறார்கள். அதாவது “ ஏக்கிய ராஜ்ய” என்பது பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத நாடு என்று எழுதியிருக்கிறார்கள்.

உதாரணமாக, ஏக பத்தினி விரதனுக்கு சொந்த வீட்டைப் பிரிந்து தனிக்குடித்தனம் போகும் உரிமை இல்லை. ஆனால், பன்முகனுக்கு சிலநேரம் அந்த உரிமை இருக்கின்றது எனக்கொண்டால் இவர்கள் ஷரத்து 1 இல் எழுதி இருப்பதை பின்வருமாறு குறிப்பிடலாம்.

இவன் ஒரு “ஏகபத்தினி விரதன், அவனுக்கு பல துணைவியர் உண்டு”. “ஏகபத்தினி விரதன்” என்பதன் பொருள் “ சொந்த வீட்டைப் பிரியாத, பிரிய முடியாதவன்” என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

இவ்வாறுதான் ஷரத்து 1 இல் சமஷ்டியை ஒற்றையாட்சியைக் குறிக்கும் “ஏக்கிய ராஜ்ய” எனும் பெயரில் புகுத்தி இருக்கிறார்கள். எனவே, சமஷ்டி எனும் சொல் இல்லாதபோதும் வடிவத்தில் அது சமஷ்டியே!

சமஷ்டியின் இரண்டாவது பிரதான அம்சம்:

Substance

சமஷ்டியின் வடிவம் அல்லது வெளித்தோற்றம் எவ்வாறு இருந்தபோதிலும் சமஷ்டி நிஜத்தில் பெறப்படுவது மத்திய பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தில் பிராந்திய சபைகளின் அதிகாரம் தொடர்பாக கட்டுப்பாடுகளை கொண்டுவருவதன் மூலமாகும்.

மத்திய பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படாதபோது ‘ ஒற்றையாட்சி என்கின்றோம். தற்போது மத்திய பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையினால் மாகாணசபையின் எந்தவொரு அதிகாரத்தையும் மாற்றலாம்; மாகாணசபை முறையைக்கூட இல்லாமலாக்கலாம்.

பிராந்திய சபைகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு முழுமையான கட்டுப்பாடு இருக்கின்றபோது, அதனை முழுமையான சமஷ்டி என்கின்றோம்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட, அதாவது கட்டுப்பாட்டின் வீரியம் குறைகின்றபோது அந்த வீரியத்தின் தன்மைக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறன. இந்த இடைப்பட்ட வகைகளின் பொதுப்பெயராக (Quazi Federalism) என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. அதாவது முழுமையற்ற, இடைப்பட்ட அல்லது அரை சமஷ்டி என்று அழைக்கப்படலாம். ( இதற்கு தமிழில் நேரடியான சொல் இருந்தால் தயவுசெய்து தந்துதவுங்கள்)

இந்தக்கட்டுப்பாடு எவ்வாறு பெறப்படுகின்றது?

இந்தக்கட்டுப்பாடு இருவகையில் பெறப்படுகிறது.

(1) Procedural Limitation

(2) Substantive Limitation

Procedural Limitation

இது விதிமுறைகள் தொடர்பான கட்டுப்பாடு. அதாவது, நமக்குத் தெரியும், பாராளுமன்றத்தில் சில விடயங்களுக்கு 2/3 பெரும்பான்மை, சில விடயங்களுக்கு அறுதிப்பெரும்பான்மை (113) தேவை. ஏனைய விடயங்களுக்கு சாதாரண பெரும்பான்மை போதும்.

இங்கு பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படவில்லை, சட்டவாக்கமுறைதான் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஏனெனில் இந்த சகல பெரும்பான்மையும் பாராளுமன்ற எண்ணிக்கையான 225 இற்கு உட்பட்டதுதான். ஆளும் கட்சியிடம் 2/3 பெரும்பான்மை இருக்கின்றதா? என்பது அரசியல் பிரச்சினை.

Substantive Limitation

இது பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். அதாவது பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தை வெளியில் எடுத்து இன்னுமொரு தரப்பிற்கு வழங்குவதாகும்.

தற்போது குறிப்பிட்ட சில ஷரத்துக்களை திருத்துவதாயின் அல்லது புதிய யாப்பு கொண்டுவருவதாயின் 2/3 இற்கு மேலதிகமாக மக்கள் அனுமதியும் வேண்டும்.

இதன்பொருள் 225 பா. உ.களும் ஆதரவாக வாக்களித்தாலும் அச்சட்டமூலம் நிறைவேறாது. அது வெறும் procedure மாத்திரமே. மக்கள் சர்வஜனவாக்கெடுப்பில் அனுமதித்தால்தான் அது சட்டமாகும்.

அதாவது, இந்த விடயத்தில் பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் உண்மையான அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. இது substantive limitation எனப்படுகிறது. இந்த விடயத்தில் பாராளுமன்றத்திற்கு சுயமாக எதுவும் செய்யமுடியாது.

மாகாணசபை

தற்போதைய 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தையும் மாற்றவோ அல்லது மாகாணசபை முறைமை நீக்கவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது. தேவை 2/3 பெரும்பான்மை, அவ்வளவுதான். அது ஒரு procedural limitation மாத்திரமே. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படவில்லை. பாராளுமன்றம் மீயுயர்வானது; மாகாணசபை அதன்கீழானது; என்ற ஒற்றையாட்சித் தத்துவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுமானால் அங்கு substantive limitation வந்துவிடும்.

இப்பொழுது புதிய நகல் யாப்பில் பாராளுமன்றத்திற்கு மாகாணசபை தொடர்பாக substantive limitation கொண்டுவரப்பட்டுள்ளதா? என ஆராய்வோம்.

புதிய நகல் யாப்பின் சரத்து 145 இது பற்றிக் கூறுகின்றது. அதாவது மாகாணசபைகளுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரத்தை திருத்துவதற்காக, நீக்குவதற்காக அல்லது மாற்றுவதற்காக ஒரு சட்டமூலம் கொண்டுவரப்படுமானால் அது பாராளுமன்றத்தினதும் இரண்டாவது சபையினதும் (மேல் சபை) 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவதோடு சர்வஜன வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மாகாணசபை விவகாரத்திலும் பாராளுமன்றத்திற்கு substantive limitation கொண்டுவரப்படுகின்றது. அதாவது பாராளுமன்றம் சுயமாக செயற்படும் அதிகாரம் நிரந்தரமாக முடக்கப்படுகிறது. இந்த substantive limitation தான் சமஷ்டி என அழைக்கப்படுகிறது.

மாகாணசபையின் சட்டவாக்க அதிகாரத்திற்கான காப்பீடு

மேற்படி சரத்து 145 மாகாணசபையின் மொத்த அதிகாரத்திற்கான (சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிதித்துறை) காப்பீடு தொடர்பாக பேசுகின்றது. புதிய நகல் யாப்பின் சரத்து 132 மாகாணசபையின் சட்டவாக்க அதிகாரத்திற்கான மேலதிக காப்பீடு தொடர்பாக பேசுகின்றது.

இதன்பிரகாரம் மாகாணசபையின் நிரலில் ( Provincial List) குறிப்பிடப்பட்ட எந்தவொருவிடயம் தொடர்பாகவும் பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றுவதாயின் அதற்கு அனைத்து மாகாணசபைகளும் சம்மதிக்க வேண்டும். (ஒரு மாகாணசபை சம்மதிக்காவிட்டாலும் முடியாது) அல்லது 2/3 பெரும்பான்மையால் அதனை நிறைவேற்றுவதோடு அது சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டாலும் அதே விடயம் சம்பந்தமாக மாகாணசபை அதன்பிறகு சட்டமியற்றுவதை அது பாதிக்காது. அவ்வாறு சட்டமியற்றுனால் அந்த சட்டத்திற்கும் அதேவிடயம் சம்பந்தமாக மாகாணசபை இயற்றிய சட்டத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால் மாகாணசபையின் சட்டமே அந்த முரண்பாடுகளைப் பொறுத்தவரை செல்லுபடியாகும்.

அதாவது, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தி ஒரு சட்டத்தை பாராளுமன்றம் உருவாக்கினாலும் அதேவிடயம் தொடர்பாக மாகாணசபை உருவாக்குகின்ற சட்டம் அந்த பாராளுமன்ற சட்டத்தை மேவும். இங்கு சர்வஜன வாக்கெடுப்பே பெறுமதியற்றதாக மாறுகின்றது.

அதாவது, மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சுயமாக செயற்படும் அதிகாரம் முழுமையாக முடக்கப்படுகின்றது. மக்களின் அதிகாரம் அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களைத் திருத்துவதில் செல்லுபடியாகும். ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் சாதாரண சட்டங்களை ஆக்குவதில் செல்லுபடியாகாது.

உதாரணமாக கல்வி அதிகாரம் மாகாணங்களுக்குரியது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டால் பின்னர் கல்வி அதிகாரத்தை அல்லது ஒரு பகுதியை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்.

அதே கல்வி அதிகாரத்தின் கீழ் மத்திய அரசாங்கம் தேசிய பாடசாலை போன்று ஒரு புதிய பாடசாலைமுறைமையை அல்லது ஒரு புதிய கல்வித்திட்ட முறைமையை உருவாக்க ஒரு சாதாரண சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால் அனைத்து மாகாணசபைகளும் ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டும். அதன்பின் மாகாணசபை விரும்பினால் அவற்றிற்கு முரணான சொந்த பாடசாலை முறைமை அல்லது கல்வி முறைமையை அவர்களது சட்டத்தினால் உருவாக்கினால் அதுதான் செல்லுபடியாகும்.

எவ்வளவு உச்ச அதிகாரம் என சிந்தித்துப் பாருங்கள்.

இதனைத்தான் சுருக்கமாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட விடயங்களில் (reserved list) பாராளுமன்றம் supreme மீயுயர்தன்மையானது. மாகாணசபை தலையிட முடியாது. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மாகாணசபை supreme மீயுயர்வானது. பாராளுமன்றம் தலையிட முடியாது, எனப்படுகிறது. இதுதான் சமஷ்டியின் பிரதான அடையாளம்.

இரண்டும் சமாந்தர அரசாங்கங்கள். இதனால்தான் “ஏக்கிய ராஜ்ய” என்று சரத்து 1இல் கூறிவிட்டு அது “மத்திய மாகாண நிறுவனங்களை உள்ளடக்குகிறது” என்று கூறியிருக்கிறார்கள். அதாவது சமஷ்டியை சமஷ்டி என்ற சொல்லைத் தவிர்த்து வேறுவகையில் கூறியிருக்கிறார்கள்.

எனவே, இலங்கையில் தன்னாதிக்க அதிகாரம்கொண்ட ஒருவரில் இன்னொருவர் தலையிடமுடியாத பத்து அரசாங்கங்கள் இருக்கப்போகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.