முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?

0 1,105
  • எம்.எம்.ஏ.ஸமட்

இவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில்  பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள ஆரோக்­கி­யத்­துக்­கான விளை­யாட்­டுக்­களில் பொழுதைக் கழிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டா­தி­ருப்­ப­தனை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

இதற்குப் பிர­தான கார­ண­மாக இருப்­பது கல்விக் கடை­க­ளாகும். ஏனெனில், இப்­போ­தி­ருந்தே விடு­மு­றைக்­கால வகுப்­புக்­களை நடாத்­து­வதற்­கான கவர்ச்­சி­க­ர­மான விளம்­ப­ரங்­களை சில கல்விக் கடைகள் விளம்­ப­ரப்­ப­டுத்­தி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது.

பிள்­ளை­களின் பாட­சாலை பரீட்சை அடை­வு­களை அதி­க­ரிக்க வேண்டும். பிள்­ளை­களின் அறிவு மட்­டத்தைக் கூட்ட வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்து இல்­லை­யென்­ற­போ­திலும், தற்­கா­லத்தில் பிள்­ளைகள் தொடர்­பான பாட­சா­லை­க­ளி­னதும் பெற்­றோர்­க­ளி­னதும் செயற்­பா­டுகள் அத்­த­கைய இலக்­கு­க­ளுக்­கப்பால் போட்டா போட்­டி­க­ளுக்­கா­கவும் அடுத்­த­வர்­க­ளுக்­கா­கவும் கல்விக் கடை­களை நோக்கி பிள்­ளைகள் செல்­வ­தற்குத் தூண்­டப்­ப­டு­வ­தா­னது பிள்­ளைகள் அவர்­க­ளுக்­கான விடு­மு­றையின் வசந்­தத்தை  அனு­ப­விப்­ப­தி­லி­ருந்தும் தடுக்­கப்­ப­டு­வ­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கமும் விதி­வி­லக்­கல்ல. சம­கா­லத்தில் ஒவ்­வொரு முஸ்லிம் பெற்­றோரும் தமது பிள்ளை சிறந்த முறையில் கல்வி கற்க வேண்­டு­மென்ற அவா­வுடன் பிள்­ளை­களின் கல்­விக்­காகப் பெரும் தொகைப் பணத்தைச் செ­ல­வ­ழித்து வரு­கின்­றனர். அதிலும், ஆங்­கில மொழியில் தங்­க­ளது பிள்­ளைகள் கல்வி கற்க வேண்டும், ஆங்­கில மொழி  பேச வேண்டும் என்ற ஆங்­கில மொழி மோகம் அல்­லது ஆங்­கில மொழி மீதான வெறியில் பல பெற்­றோர்கள் பிள்­ளை­களை சர்­வ­தேச பாட­சா­லை­களில் அனு­ம­தித்து விட்டு கட­னா­ளி­க­ளாக மாறி­யி­ருப்­ப­தையும், இடை­ந­டுவில் அச்­சர்­வ­தேச பாட­சா­லை­க­ளி­லி­ருந்து பிள்­ளை­களை இடை­வி­லக்கி அரச பாட­சா­லை­களில் இணைத்து வரு­வ­தையும் தலை­ந­க­ரங்­களில் மாத்­தி­ர­மின்றி ஏனைய சில பிர­தே­சங்­க­ளிலும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளன.

இந்­நி­லையில், ஆங்­கில மொழி மீது அள­வு­க­டந்த ஆவல் கொண்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்தின் பெரும்­பா­லானோர்  குர்ஆன் அரு­ளப்­பட்ட அரபு மொழியை தமது பிள்­ளை­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுப்­பதில் அக்­க­றை­யற்­ற­வர்­க­ளா­கவே விளங்­கு­கின்­றனர். பெற்­றோர்கள் மாத்­தி­ர­மின்றி, இந்­நாட்­டி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­களும் அரபு மொழியை வளர்ப்­பதில் அக்­கறை காட்­டா­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆங்­கில மற்றும் இதர மொழி­களை மாண­வர்கள் கற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பையும், வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் முஸ்லிம் பாட­சா­லைகள், அரபு மொழி­யினை அப்­பா­ட­சா­லை­களில் கற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­காது இம்­மொ­ழி­யினை புறந்­தள்ளும் அல்­லது இம்­மொ­ழி­யினை வளர்க்­கத்­த­வறும்  செயற்­பாட்­டினால் கட்­டாய மொழிப் பாடங்­களில் ஒன்­றாக இருந்த அரபு மொழிப் பாடத்­தினை தொகுதிப் பாட­மாக (Basket subject) பின்­தள்­ளி­யி­ருக்­கி­றது.

இந்­நிலை நீடிக்­கு­மாயின் எதிர்­கா­லத்தில் பாட­சாலைக் கலைத்­திட்டப் பாட விட­யங்­க­ளி­லி­ருந்து அரபு மொழிப் பாடம் விலக்கிக் கொள்­ளப்­ப­டலாம். இதற்கு வழி­வ­குத்­த­வர்­க­ளாக தற்­கால முஸ்லிம் பாட­சாலைச் சமூ­கங்கள் கரு­தப்­படும். ஏனெனில், முஸ்லிம் பாட­சா­லை­களில் அரபு மொழிப் பாட கற்றல் – கற்­பித்­தலில் காணப்­படும் அச­மந்­தப்­போக்­கா­னது இந்த வர­லாற்றுத் தவறு ஏற்­ப­டு­வ­தற்கு களம் அமைத்­துக்­கொ­டுக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

மொழி­ய­றிவும் பாட­சா­லை­களும்

இறை­வனால் படைக்­கப்­பட்ட பேசும் விலங்கே மனிதன். இந்த மனி­த­னுக்கு இறைவன் அளித்த அருட்­கொ­டை­களில் மிகப்­பெ­ரிய அருட்­கொடை கல்­வி­யாகும். இக்­கல்­வியைக் கற்­ப­தற்கும், கற்­பிப்­ப­தற்கும் உள்ள ஊட­கமே மொழி­யாகும்.  மொழி­ய­றிவு வீட்டுச் சூழ­லி­ருந்து ஆரம்­பித்­தாலும் அது வளர்க்­கப்­ப­டு­வது பாட­சா­லை­க­ளி­லாகும். ஏனெனில், பாட­சா­லைகள் அறி­வையும், ஆற்­ற­லையும், ஆளு­மை­யையும் வளர்க்கும் கேந்­திர நிலை­ய­மாகும். இந்தக் கேந்­திர நிலை­யத்­தி­னூ­டாக பல்­து­றைசார் அறி­வு­டையோர் சமூ­கத்­திற்குள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். ஒரு சமூ­கத்தின் மத்­தியில் துறை­சார்ந்தோர் சிறப்­புற்று வாழ அவர்­களின் பல்­மொ­ழி­ய­றிவு வரப்­பி­ர­சா­த­மா­க­வுள்­ளது.

ஒரு சமு­தா­யத்தின் பல தரப்­பட்ட வளர்ச்­சி­களும் ,நாக­ரி­கமும் அந்தச் சமு­தா­யத்தின் முக்­கிய அங்­க­மான மொழியின் ஆளு­மை­யிலும், பாவ­னை­யிலும் தங்­கி­யி­ருக்­கி­றது. மொழி என்­பது மனித உணர்வின் பன்­முகத் தேவை­களைச் செயற்­ப­டுத்தும் முக­வ­ராகத் தொழிற்­ப­டு­கி­றது. முகவர் என்­பவர் ஒரு விட­யத்தின் அடித்­த­ளத்­திலும், தொடர்­பு­க­ளிலும், மாற்­றங்­க­ளிலும் முக்­கிய புள்­ளி­யாகக் கரு­தப்­ப­டு­பவர். அவ்­வா­றுதான் மொழியும் மக்­களின் சாதா­ரண அடிப்­படைத் தேவைகள் தொடங்கி அம்­மக்கள் வாழும் சமு­தா­யத்தின் கலை, கலா­சார, அர­சியல், பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும் பங்­கெ­டுக்­கி­றது. இவ்­வாறு பங்­கெ­டுக்கும் மொழி­களைக் கற்­றுக்­கொள்­ளவும், கற்­பிக்­கவும் பாட­சா­லை­களே முக்­கிய தள­மாகச் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

ஒரு பிள்­ளையின் விருத்திப் படி­நி­லையில் 2 வயது முதல் 12 வயது வரை­யான காலப்­ப­கு­தி­யா­னது மொழி விருத்­திக்­கான கால­மாகும். 12 வயது முதல் 19 வயது வரை­யான கால­மா­னது ஆளுமை விருத்­திக்­கான கால­மாகும். இக்­கால எல்­லை­க­ளா­னது அப்­பிள்­ளையின் முன்­பள்ளி, ஆரம்ப மற்றும் இடை­நிலைப் பாட­சாலைக் கால­மா­க­வுள்­ளது. மொழி­வி­ருத்­தி­யையும், ஆளுமை விருத்­தி­யையும் பிள்­ளை­களில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாட­சா­லை­களே பொருத்­த­மான தள­மாகும். இதனால் பாட­சா­லைகள் அதன் பங்­க­ளிப்பை முறை­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவ­சி­மா­க­வுள்­ளது.

ஒரு மாண­வனின் ஆளுமை விருத்­தியில் பரம்­பரை, உடல், சமூக, கலா­சாரக் கார­ணிகள் அடங்­க­லாக உள­வியல் கார­ணி­களும் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றன. இவற்றில் சமூகச் சூழல் கார­ணி­க­ளாகக் கரு­தப்­படும் வீடு, பாட­சாலை, மொழி, சமூக வகி­பங்கு, சுய எண்­ணக்­கரு, சமூக அடை­யாளம், ஆளி­டைத்­தொ­டர்­புகள், வெகு­சனத் தொடர்­பு­சா­த­னங்கள், சமூக நிறு­வ­னங்­களும் அடங்கும்.

ஒரு மாண­வனின் ஆளுமை விருத்­திக்கு பங்­க­ளிப்புச் செய்யும் கார­ணி­களில் பிர­தான வகி­பங்­கு­வ­கிப்­பது பாட­சா­லையும் மொழியும், ஆளி­டைத்­தொ­டர்­பு­க­ளு­மாகும். இந்த மொழி­ய­றி­வையும் ஏனைய கார­ணி­க­ளையும் வளர்க்கும் தள­மாக பாட­சா­லைகள் செயற்பட வேண்­டிய நிலையில், அவ்­வா­றான பொறுப்­புக்­களை நிறை­வேற்றக் கூடிய எத்­தனை பாட­சா­லைகள் சம­கா­லத்தில் காணப்­ப­டு­கின்­றன? அதற்­கான ஆரோக்­கி­ய­மான பொறி­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா?  அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பாட­சாலை  முகா­மைத்­துவம் எத்­த­கைய ஒத்­து­ழைப்­புக்­களை ஆசி­ரிய சமூ­கத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­கி­றது? அல்­லது ஆசி­ரியர் சமூகம் எத்­த­கைய ஒத்­தா­சை­களை பாட­சாலை முகா­மைத்­து­வத்­திற்கு மனச்­சாட்­சி­யோடு வழங்­கு­கி­றது?

பாட­சா­லை­களை ஏணி­யாக்கி சுய­ந­லன்­களை வெற்றி கொள்­வ­தற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்ற முயற்­சி­களில் எத்­தனை சத­வீதம் அப்­பா­ட­ச­ாலை­களில் கல்வி கற்கும் மாண­வர்­களின் மொழி விருத்­திக்கும் ஆளுமை விருத்­திக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இதில் குர்­ஆனின் மொழி­யான அரபு மொழிப் பாட­மா­னது தொகுதிப் பாட விட­யமாக முஸ்லிம் பாட­சா­லை­களில் காணப்­ப­டு­வது கண்டு ஆசி­ரியர் சமூ­கத்தில் எத்­தனை சத­வீ­தத்­தினர் அம்­மொ­ழியை வளர்த்து பாது­காக்க முயற்சி எடுத்­துள்­ளனர்? என்ற கேள்­வி­க­ளுக்கு விடை காணப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

ஏனெனில், சம­கா­லத்தில் பாட­சா­லைகள் அவற்றின் பங்­க­ளிப்பை முழு­மை­யாக வழங்­கத்­த­வ­று­வதன் விளை­வு­களை சமூ­கங்கள் சுமக்க வேண்­டிய நிலைக்­குத்­தள்­ளப்­ப­ட­லா­யிற்று. பாட­சா­லைகள் சிறந்த எதிர்­கால சமூ­கத்தை பாட­சா­லை­களில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தவ­று­கின்­ற­போது அதன் எதிர்­முனைத் தாக்­கங்­களை பல்­வேறு கோணங்­களில் சமூகம் எதிர்­நோக்க வேண்டி ஏற்­ப­டு­கி­றது. இவை தவிர்க்­கப்பட வேண்­டு­மாயின் மாணவ சமூகம் பயன்­மிக்க சமூ­க­மாக பாட­சா­லை­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­ட­வேண்டும்.

பல மொழி பேசும் சமூ­க­மாக இலங்கைச் சமூ­கங்கள் உள்­ள­தனால் அவ­ரவர் பேசும் மொழி­க­ளுக்கு ஏற்ப பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டதன் விளைவு ஒருவர் பேசும் மொழி மற்­ற­வ­ருக்கு விளங்­காத மந்­தி­ர­மா­கவே உள்­ளது. இந்த விளங்கா மந்­திரம் விளங்க வேண்­டு­மாயின், இலங்கைப் பாட­சா­லை­களில் மொழி­களைக் கற்­ப­தற்கும் கற்­பிப்­ப­தற்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

உல­கத்தில் உள்ள எந்­த­மொ­ழியும் மற்ற மொழி­யை­விட உயர்­வா­னதோ அல்­லது தாழ்­வா­னதோ இல்லை. ஆனால் ஒருவர் ஒன்­றுக்கும் மேற்­பட்ட மொழி­களைக் கற்­றி­ருந்தால் அது அந்த நப­ருக்கு பல வழி­க­ளிலும் உத­வி­யாக அமையும். அவ்­வாறு உதவக் கூடிய மொழி­களின் வரி­சையில் அரபு மொழியும் ஒன்­றாகும். ஆனால், அவ்­வா­றான மொழியை முஸ்லிம் பாட­சா­லை­களில் கற்­பிக்­கவும் கற்­கவும் ஆர்வம் காட்­டப்­ப­டா­தி­ருப்­பது அரபு மொழிப்­பாடம் கலைத்­திட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கி­றதா? தற்­கால முஸ்லிம் பாட­சாலைச் சமூகம் இந்த வர­லாற்றுத் தவறின் பாவத்தைச் சுமக்கப் போகி­றதா? என்ற கவலை முஸ்லிம் கல்விப் புலத்தில் காணப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் பாட­சா­லை­களும் வர­லாற்றுத் தவறும்

1978ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பாட­சாலைக் கலைத்­திட்­டத்தில் சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய பாட விட­யங்­களுள் இந்த அரபு மொழியும் ஒரு கட்­டாய பாட­மாக இருந்­துள்­ளது. அதற்குக் காரணம் அக்­கா­லத்தில் சகல மொழி­க­ளி­னதும் தேவைப்­பாடு காணப்­பட்­டதும் மொழி­களைக் கற்­கவும் கற்­பிக்­கவும் கொண்ட ஆர்­வம் என்று கருத்­திற்­கொள்­ளலாம்.

2016ஆம் ஆண்டின் கல்­வி­ய­மைச்சின் தர­வு­களின் பிர­காரம், இலங்­கையில் இயங்­கு­கின்ற ஏறக்­கு­றைய 10,162 பாட­சா­லை­களில் 4,143,330 மாண­வர்கள் கல்வி கற்­கின்­றனர். இன மற்றும் மொழி ரீதி­யாகப் பிரிக்­கப்­பட்ட பாட­சா­லை­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் நோக்­கு­கின்­ற­போது, 6,338 சிங்­கள மொழிப் பாட­சா­லை­களும் 2,989  தமிழ் மொழிப் பாட­சா­லை­களும் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் 6,338 சிங்­கள மொழியில் மாத்­திரம் கற்­பிக்­கப்­படும் பாட­சா­லை­களும், 2,989 தமிழ் மொழியில் மாத்­திரம் கற்­பிக்கும் பாட­சா­லை­களும் 66 சிங்­கள, தமிழ் ஆகிய இரு மொழி­க­ளிலும் கற்­பிக்கும் பாட­சா­லை­களும் உள்­ளன. அவ்­வாறு, 554 சிங்­கள, ஆங்­கில மொழியில் கற்­பிக்கும் பாட­சா­லை­களும் 168 தமிழ், ஆங்­கிலம் மொழியில் கற்­பிக்கும் பாட­சா­லை­களும் உள்­ள­துடன் 47 மும்­மொ­ழி­யிலும் கற்­பிக்கும் பாட­சா­லை­களும் உள்­ளன.

ஆனால், இரு மொழி, மும்­மொழிப் பாட­சா­லைகள் காணப்­பட்­டாலும் அப்­பா­ட­சா­லை­களில் மும்­மொ­ழி­க­ளையும் மாண­வர்கள் கற்­றுக்­கொள்­கி­றார்­களா என்றால் அதுதான் இல்லை. இரண்டாம் மொழி தமிழ்ப் பாடம் சிங்­கள மொழிப் பாட­சா­லை­களில் உள்­ள­து­போல இரண்டாம் மொழி சிங்­களப் பாடம் தமிழ் மொழிப் பாட­சா­லை­களின் கலைத்­திட்­டத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்தும் இப்­பா­ட­சா­லை­களில் இரண்டாம் மொழி சிங்­களப் பாடத்தை முறை­யாகக்  கற்­பிப்­ப­தற்கோ அல்­லது இரண்டாம் மொழி தமிழ் பாடத்தை கற்­பிப்­ப­தற்கோ ஆசி­ரியர் பற்­றாக்­குறை காணப்­ப­டு­கி­றது. இந்த ஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யா­னது மொழி­ய­றிவை விருத்தி செய்து கொள்ள ஆசைப்­படும் மாண­வர்­க­ளுக்­கான வாய்ப்பை  சம­கா­லத்தில் இல்­லாமல் செய்­துள்­ளது என்று கூறு­வதில் தவ­றேதும் இருக்­காது.

இந்­நி­லையில்,  100 மொழிகள் உலக மக்­களால் அதிகம் பேசப்­படும் மொழி­க­ளாக உள்­ளன. அதில் ஒரு மொழி­யாக அரபு மொழியும் உள்­ளது. இவ்­வா­றான அரபு மொழி­யினை கற்­ப­தற்கும் கற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் முஸ்லிம் பாட­சா­லை­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மை­யா­னது முஸ்லிம் பாட­சா­லைகள் அரபு மொழி­யினை வளர்க்க மறுக்­கி­றதா? அல்ல புறக்­க­ணிக்­கி­ற­தா? என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்து­கி­றது.

இலங்­கையின் 25 மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்கள் செறி­வா­கவும் செறிவு குறைந்தும் வாழ்­கின்­றனர். 2012 குடி­சனத் தொகை மதிப்­பீட்டுத் திணைக்­களப் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம், இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் 19,67,523 பேர் முஸ்­லிம்­க­ளாவர். அதில் அதி­கூ­டிய எண்­ணிக்­கை­யினர் கிழக்கு மாகா­ணத்­தி­லேயே செறி­வாக வாழ்­கின்­றனர். கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தில் 281,987 பேரும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 159,418 பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 134,065 பேரும் உள்­ளனர். மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் 274,087 முஸ்­லிம்கள் வாழ்­வ­தோடு ஊவா மாகா­ணத்தின் மொன­றா­கலை மாவட்­டத்தில் 9,809 முஸ்­லிம்­களும் தென் மாகா­ணத்தின் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 15,204 முஸ்­லிம்­களும் இவ்­வாறு அடர்த்­தி­யா­கவும் அடர்த்தி குறைந்தும் வாழ்­கின்­றனர்.

முஸ்­லிம்கள் வாழும் மாவட்­டங்­க­ளி­லெல்லாம் முஸ்லிம் பாட­சா­லை­களும் காணப்­ப­டு­கின்­றன. கல்­வி­ய­மைச்சின் 2017ஆம் வருட புள்ளி விப­ரங்­க­ளின்­படி தேசிய, மாகாணப் பாட­சா­லைகள் அடங்­க­லாக 936 முஸ்லிம் பாட­சா­லைகள் நாடு பூரா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் 45 தேசிய பாட­சா­லை­களும் அடங்கும். இவற்றில் மேல் மாகா­ணத்தில் 63 பாட­சா­லை­களும், மத்­திய மாகா­ணத்தில் 113 பாட­சா­லை­களும், தென் மாகா­ணத்தில் 38 பாட­சா­லை­களும், வட மாகா­ணத்தில் 60 பாட­சா­லை­களும் உள்­ள­துடன் வட மேல் மாகா­ணத்தில் 143 பாட­சா­லை­களும், வட மத்­திய மாகா­ணத்தில் 86 பாட­சா­லை­களும், ஊவாவில் 30 பாட­சா­லை­களும், சப்­ர­க­முவில் 42 முஸ்லிம் பாட­சா­லை­களும் உள்­ளன.

முஸ்லிம் பாட­சா­லை­களின் எண்­ணிக்­கையில் அதி­கூ­டிய பாட­சா­லைகள் காணப்­ப­டு­வது கிழக்கு மாகா­ணத்­தி­லாகும். கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தில் 158 பாட­சா­லை­களும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 76 பாட­சா­லை­களும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 127 பாட­சா­லை­களும் இயங்­கு­கின்­றன. இவை அனைத்தும் அரச பாட­சா­லை­க­ளாகும் இப்­பா­ட­சா­லை­களில் மத்­திய கல்­வி­ய­மைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள கலைத்­திட்­டங்­களே பின்­பற்­றப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு பின்­பற்­றப்­ப­டு­கின்ற பாட­வி­தா­னங்­களில் கட்­டாயப் பாட­வி­தா­னங்­களும், தெரிவுப் பாடங்­களும், தொகுதிப் பாடங்­களும் காணப்­ப­டு­கின்­றன. க.பொ.த. சாதா­ர­ண­தர வகுப்­பு­க­ளுக்­கான பாடத்­தொ­கு­தியில் 3ஆவது நிலைப் பாடத்­தொ­கு­தியில் அரபு மொழி உள்­ளது. 1978ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பாட­சாலைக் கலைத்­திட்­டத்தில் ஆரம்ப வகுப்­புக்­க­ளுக்­கான கட்­டாய பாடங்­களில் ஒன்­றாக இருந்த அரபு மொழி­யா­னது சம­கால பாட­சாலைக் கலைத்­திட்­டத்தில் 3ஆவது நிலைப் பாடத் தொகு­தியில் இணைக்­கப்­ப­ட்டி­ருக்­கி­றது. உல­க­ளா­விய ரீதியில் அரபு மொழிப் பயன்­பாட்டின் அவ­சி­யத்தின் புரிதல் புரி­யப்­ப­டா­ததன் நிமித்தம் அர­பு­மொ­ழி­யினை  கற்­பிப்­ப­திலும், கற்­ப­திலும் குறிப்­பாக முஸ்லிம் பாட­சா­லை­களில் அக்­க­றை­கொள்­ளப்­ப­டாமல் விடப்­பட்டமையே இந்த நிலைக்குக் கார­ண­மென சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

தற்­கா­லத்தில் பொரு­ளா­தார விருத்­தியை இலக்­காகக் கொண்டு பல முஸ்லிம் இளை­ஞர்கள் பாட­சாலைக் கல்வி நிறை­வ­டைந்த கையோடு 3 மாத மற்றும் ஆறு மாதக் கற்கை நெறி­களைப் பூர்த்தி செய்­ததன் பிற்­பாடு மத்­திய கிழக்கை நோக்கிப் பறக்­கின்­றனர். இவ்­வாறு பணத்­தே­ட­லுக்­காகச் செல்லும் இவர்கள் அர­பு­மொழி அறி­வின்­மை­யினால் பல சிர­மங்­களை இந்­நா­டுளில் எதிர்­நோக்­கு­வ­தாகத் தெரிய வரு­கி­றது. இந்த அவதி நிலை ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களில் ஒன்­றாக குறிப்­பாக முஸ்லிம் பாட­சா­லை­க­ளில் அரபு மொழி கற்­பிக்­கப்­ப­ட­வு­மில்லை மாண­வர்கள் முறை­யாக அம்­மொ­ழி­யினை கற்­க­வு­மில்லை என்­பது யதார்த்­த­மாகும்.

முஸ்லிம் பாட­சா­லை­களில் 19,170 ஆசி­ரி­யர்­களும், முஸ்லிம் அல்­லாத பாட­சா­லை­களில் 1,920 முஸ்லிம் ஆசி­ரிர்­களும் கற்­பித்தல் பணியில் உள்­ளனர். இவர்­களில் மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் பெற்­றோரும் உள்­ளனர். 5 முதல் 7 வருடம் வரை அரபுக் கல்­லூ­ரி­களில் மார்க்கக் கல்­வியைக் கற்று அர­பு­மொ­ழி­ய­றிவைப் பெற்­றுக்­கொண்ட மௌலவி­மார்­களும்; பாட­சா­லை­களில் மௌலவி ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­சி­ரி­யர்கள் மூலம் முஸ்லிம் பாட­சா­லை­களில் அரபு மொழியைக் கற்­பிப்­ப­தற்­கான முயற்­சிகள் எவ்­வ­ளவு தூரம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன? இந்த மௌலவி அல்­லது அரபு மொழி ஆசி­ரியர் நிய­மனம் பெற்ற ஆசி­ரி­யர்­களின் தொழில்­வாண்மை விருத்­திக்­காக இது­வ­ரை­கா­லமும் முறை­யான பொறி­மு­றை­யி­னூ­டாக பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு அவர்கள் பெற்­றுக்­கொண்ட தொழில்­வாண்மைப் பயிற்­சி­யி­னூ­டாக அர­பு­மொ­ழியினைக் கற்­பிப்­ப­தற்­கான முயற்­சிகள் முஸ்லிம் பாட­சா­லை­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னவா? அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் கல்வி அதி­கா­ரிகள் மேற்­கொண்­டுள்­ள­னரா? என்ற வினாக்­க­ளுக்கும் விடை காண வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­வேண்டும். முஸ்லிம் பாட­சா­லை­களை வளப்­ப­டுத்த வேண்டும்.

மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிக்க வேண்டும். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைக்கச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கருதி குழுக்களும், சங்கங்களும் உருவாக்கப்பட்டு மகாநாடுகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்படுகின்றபோதிலும், அவற்றின் யதார்த்த பூர்வமான செயல்வுருமிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?. அச்செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளனவா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஒரு சில நடவடிக்கைகள் அடைவுகளை அடையச் செய்திருந்தாலும் அவை முழுமையான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இருக்கிறதா?

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகளுக்கான பரிந்துரைகள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன.  அவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை நிறைவேற்றி வைப்பதற்கான முயற்சிகள் விளம்பரத்திற்காக முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கூடிக்கலையும் குழுக்களினாலும், சங்கங்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன?

குறைந்த பட்சம் பாடசாலைக் கலைத்திட்டத்தில் கட்டாய பாட வரிசையில் காணப்பட்ட அரபு மொழிப் பாடமானது கலைத்திட்டத்தின் 3வது தொகுதிநிலைக்குத் தள்ளப்பட்டது தொடர்பில் அவற்றுக்கான முன்னுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், பாடசாலைகளில் அரபுமொழி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்குமான ஆக்கபூர்வமான முயற்சிகள் இந்த குழுக்களினாலும், சங்கங்களினாலும் இதயசுத்தியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?

இவ்வாறான கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கப்படுவதற்கும், பாடசாலை பாடவிதானத்திலிருந்து அரபு மொழிப் பாடம் விலக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும், வளர்க்கப்படுவதற்கும் எதிர்வரும் புதிய வருட பாடசாலைத் தவணைகளிலிருந்தாவது முறையாக முயற்சிக்காவிடின் முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியைக் கற்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள் என்ற  வரலாற்றுப் பழியை தற்கால முஸ்லிம் பாடசாலைச் சமூகங்கள் மீது எதிர்கால சந்ததியினர் சுமத்துவதைத் தவிர்க்க முடியாது என்பதை முஸ்லிம் பாடசாலைச் சமூகங்கள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.